ரங்கநாதன் மனமாற்றம்.

கமலாவிடமும் அவள் தம்பி விசுவத்திடமும் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய கல்யாணத்தின் மனம் ஒரு நிலையில் இல்லை. 'நீங்கள் பவானியிடம் காதல் கொண்டிருக்கலாம்; பவானி அக்கா வேறு ஒருவர்மீது ஆசை வைத்திருக்கலாம்' என்று கமலா கூறியது திரும்பத் திரும்ப அவன் நினைவுக்கு வந்து அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. 'அது உண்மையாக இருக்குமா? அதனால்தான் தன் காதலை ஏற்கப் பவானி மறுத்துவிட்டாளா? கமலா கூறியது நிஜமாகத்தான் இருக்கும். இல்லாமலா 'வேண்டுமானால் அவள் வீட்டுக்கு இப்போதே போய்ப் பாருங்களேன்!' என்று கமலா ஒரு வேகத்தோடு கூறினாள்? கூடவே, 'பவானி அக்காவிடம் ஏதும் கேட்டுவிடாதீர்கள். இது பரம ரகசியம்' என்றும் கெஞ்சினாளே! சீச்சீ! இதிலெல்லாம் என்ன ஒளிவு மறைவு வேண்டிக் கிடக்கிறது? பவானி ஒருவனை விரும்பினால் அது பற்றி வெளிப்படையாகக் கூறி அவனை மணந்து கொள்வதுதானே? யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவனை வீட்டுக்குள் வைத்திருந்து உபசரிப்பதென்பது எவ்வளவு கேவலம்? இதைச் சும்மா விடக்கூடாது. பவானியைக் கேட்டுவிடத்தான் வேண்டும். ஆனால் எனக்கு எப்படி விவரம் தெரிய வந்தது என்று அவள் கேட்டால்? கமலாவை இதில் இழுப்பானேன்? வேறு ஏதோ காரணமாகப் பவானி வீட்டுக்குப் போவது போலவும் அங்கே அவள் காதலனை யதேச்சையாகச் சந்தித்துவிட்டது போலவும் நடிக்க வேண்டியதுதான்! என்னை பவானி மணந்து கொள்ளாவிட்டால் போகட்டும், பாதகம் இல்லை; அதற்காக அவள் ஓர் அந்நியனைத் தன் வீட்டில் ஒளித்து வைத்துக் கொண்டு கொஞ்சிக் குலாவுவதைச் சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது!'

பவானி கல்யாணத்தின் காதலை ஏற்காததால் அவன் மனம் விகாரப்பட்டுப் போயிருந்தது. பவானியின் ரகசியக் காதலனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று துடித்தான். 'உன் ரகசியம் அம்பலமாகி விட்டது பார்' என்று காண்பித்துக்கொள்வதில் தன் பழிவாங்கும் உணர்ச்சிக்குத் தீனி போட்டுக் குரூரத் திருப்தியடைய ஆசைப் பட்டான். ஆனால் இதனை யெல்லாம் அவன் உள்ளம் ஒப்புக்கொள்ளவில்லை. வேறு ஏதோ நல்ல சமாதானங்களைக் கற்பித்துக் கொண்டது!

'என்ன காரணத்தைக் கூறிக் கொண்டு இப்போது அவள் வீட்டுக்குச் செல்வது?' என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதே போல ரங்கநாத முதலியாரிடமிருந்து அழைப்பு வந்தது! ஸ்தல யாத்திரை கிளம்பியிருந்த அவர் பாதியிலேயே திரும்பி வந்திருந்தார். வந்ததும் வராததுமாகக் கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்று ஓர் ஆளிடம் சொல்லி அனுப்பினார். கல்யாணமும் பரபரப்படைந்தவனாக அவர் பங்களாவுக்குப் போய்ச் சேர்ந்தான்.

ரங்கநாத முதலியாரின் மனப் போக்கில் பெரிய மாறுதல் காணப்பட்டது. அவர் இரண்டொரு க்ஷேத்திரங்களுக்குத்தான் போனாராம். அதற்குள் ஞானோதயம் ஏற்பட்டு விட்டதாம். மேலே யாத்திரையைத் தொடராமல் திருப்பி விட்டாராம். மதுரை மீனாட்சிக்குத் தீபாராதனை நடக்கும் சமயம் மனத்தில் உதித்த யோசனையை நிறைவேற்றிவிட்டுப் பிறகுதான் யாத்திரையை மீண்டும் தொடரப் போகிறாராம்!

"அப்படி என்ன புரட்சிகரமான எண்ணம் உதயமாகி விட்டது உங்களுக்கு?" என்று கேட்டான் கல்யாணம். "சொல்கிறேன் கேள். கமலா எவ்வளவு சின்னப் பெண்! எனக்குப் பெண்ணாகவே இருக்கக் கூடியவள் இல்லையா?'

"இல்லை, பேத்தியாகவே விளங்கக் கூடியவள்" என்றான் கல்யாணம்.

"ரொம்பச் சரி. அப்படித்தான் எனக்கும் தோன்றியது. என்னுடைய பேத்திக்குச் சமதையாக எண்ண வேண்டியவளை நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைத்தது எவ்வளவு பெரிய பாவம்! ஆனால் அதையே நான் புண்ணியமென்றுகூட நான் கருதினேன். அந்தக் குடும்பத்துக்கு நன்மை செய்யவே அவளைத் திருமணம் செய்து கொள்வதாக என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்."

"அவர்களது ஏழைமை நீங்கும் என்று கணக்குப் போட்டிருப்பீர்கள். ரொம்பப் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதாக நினைத்திருப்பீர்கள்."

"அதுமட்டுமில்லை கல்யாணம்; அந்தப் பெண்ணைப் படிக்க வைப்பதாகச் சொன்னேன். டாக்டருக்குப் படித்து மேல்நாடுகளுக்குக்கூட அவள் பயற்சி பெறச் செல்லலாம் என்று ஆசை காட்டினேன். அவள் திரும்பி வந்ததும் இங்கே ஒரு தர்ம ஆஸ்பத்திரி தொடங்க உதவுவதாகவும் கூறினேன். ஆக மொத்தம் அவளை மணந்து கொள்வதன் மூலம் அவளுக்கு மட்டுமின்றி இந்த ஊருக்கே பெரிய சேவை புரிவதாக என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்."

"மதுரை மீனாட்சியைப் பார்த்ததும் இதெல்லாம் தப்புக் கணக்கு என்று புரிந்துவிட்டதாக்கும்!"

"அதற்கும் மேலே கூட ஓர் உண்மை பளிச்சிட்டது."

"என்ன அது?"

"உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் இந்த ஊருக்கும் நான் நன்மை புரிய விரும்பினால்..."

"விரும்பினால்....?"

"அந்த நல்ல காரியங்களைக் கமலாவை மணந்து கொள்ளாமலேயே நான் நிறைவேற்றலாமே என்று மீனாட்சி என்னிடம் சொன்னாள்!"

"தேவலாமே! கெட்டிக்காரக் கடவுள்தான்! சரியான போடு போட்டிருக்கிறாள்" என்றான் கல்யாணம்.

"ஆமாம் அப்பா, ஆமாம்! மீனாட்சியல்லவா? என் அகக் கண்களைத் திறந்து விட்டாள். எனக்குப் புத்தி வந்தது. கமலாவைக் கல்யாணம் செய்து கொண்டால் நல்ல காரியங்களைச் செய்வது. இல்லாத போனால் இல்லை என்று இருக்கக் கூடாது; கமலாவைக் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து கொண்டேன்!"

"பலே! பலே! ரங்கநாதன் ஸார்! நான்மட்டும் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தால் ஓர் அவசரச் சட்டம் உடனே பிறப்பிப்பேன்! இந்த நாட்டின் பணக்காரர்கள் யாரும் மதுரை மீனாட்சியைத் தரிசனம் பண்ணக் கூடாது என்று உத்தரவு போடுவேன்!"

"அடப் பாவமே! ஏனப்பா அப்படி?"

"பின்னே என்ன ஸார்? எல்லாரும் உங்களைப் போல் மீனாட்சியைத் தரிசனம் பண்ணப்போய், அவளும் எல்லாச் செல்வந்தர்களின் அகக்கண்களையும் திறந்து விட்டாளானால், அப்புறம் என்னைப் போன்ற சமூகப் பணியாற்ற ஆசைப்படுகிறவர்களின் கதி என்ன ஆவது? எங்களுக்கு வேலையே இல்லாமல் போய் விடும் அல்லவா? சமூகப் பணி, சீர்திருத்தம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, வயிற்றுப்பாட்டுக்கு ஒழுங்காகச் சம்பாதிக்கிற வழியைப் பார்க்க வேண்டிய தாகிவிடுமே!"

"விளையாட்டு இருக்கட்டும் கல்யாணம். நான் கமலாவை என் மகளாகத் தத்து எடுத்துக் கொண்டு என் செல்வத்தில் பெரும் பகுதியை அவளுக்கு எழுதி வைப்பது என்று தீர்மானித்து விட்டேன். நீ அவளை அவசியம் கல்யாணம் பண்ணிக் கொள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் உடனே குழந்தை குட்டி, குடும்பக் கவலை என்று ஏற்படுத்திவிடாதே! அவளைப் படிக்க வை. என் மகள் டாக்டராகாவிட்டாலும் நாலு டாக்டர்களை வேலை வாங்குகிற அளவுக்குச் சாமர்த்தியமும் அறிவும் பெற்றாக "விளையாட்டு வேண்டாம், இதிலிருந்து விளையப் போகும் ஒரு வினையையே சொல்கிறேன். என் அம்மாவுக்கு நான் கமலாவைக் கலயாணம் பண்ணிக் கொள்வதில் விருப்பமில்லை. நூறு குற்றங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இப்போது நீங்கள் கமலாவுக்குச் சொத்து எழுதி வைத்துவிட்டதாகத் தெரிந்தால் உடனே திருமணத்துக்குச் சம்மதித்துவிடுவாள். 'கமலாவைப் போன்ற கண்ணான பெண் கிடைப்பாளோ!' என்று பெருமைப் பட்டுக்கொள்வாள். ஆனால் ஊரார் என்ன பேசுவார்கள்? பணத்துக்கு ஆசைப்பட்டுப் பண்ணிக் கொள்கிறார்கள் என்றுதானே சொல்வார்கள்?"

"ஊராருக்கு என்ன? நான் கமலாவைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால் என்னைத் திட்டித் தீர்த்திருப்பார்கள். நீ பண்ணிக்கொண்டால் அதற்கும் ஓர் உள்நோக்கம் கற்பித்து உன்னை ஏசுவார்கள். நீ ஊரார் வாய்க்குப் பயந்து வாழப் போகிறாயா? ஊருக்கும் உனக்கும் உகந்தது என்று தோன்றுவதைச் செய்யப் போகிறாயா?"

"மதுரை மீனாட்சி பேரில் பாரத்தைப் போட்டுவிட்டு மேலே ஆகவேண்டியதைக் கவனிக்க வேண்டியதுதான்!" என்றான் கல்யாணம்.

"பலே! அப்படிச் சொல்லுடா சிங்கக் குட்டி!" என்று ஆமோதித்தார் ரங்கநாதன். "அப்படியானால் ஒன்று செய். இப்போதே போய்ப் பவானியிடம் அவளை நான் உடனே பார்க்க விரும்புவதாக்க் கூறி அழைத்து வா. சட்ட பூர்வமாக எல்லாம் ஒழுங்காக நான் செய்ய வேண்டும். நீ எனக்கு மாப்பிள்ளையாக வரப் போவதால் இந்த விஷயத்தில் உன் அப்பாவின் உதவியை நான் கோருவது சரியாகாது" என்றார் ரங்கநாதன்.

இந்தக் கோரிக்கையை அவர் வெளியிடவே காத்திருந்தவன் போல் கல்யாணம் "இதோ இப்போதே போகிறேன்; பவானியைக் கையோடு அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.