பிரியா விடை!

பவானிக்குப் புதிதாகக் கார் சென்னையிலிருந்து வந்து சேர்ந்தது. அவள் ஏற்கனவே கார் ஓட்டப் பழகி லைசென்ஸும் பெற்றிருந்தாளாதலால் அது வந்து சேர்ந்ததுமே எங்கேயாவது புறப்படத் தீர்மானித்தாள். எங்கே போவது என்று எண்ணிய மாத்திரத்தில் ஏலமலைப் பாதையில் மறுபடியும் உயரே ஏறிச் செல்ல வேண்டும் என்று தோன்றியது.

அந்த மலையில் ஆங்காங்கே உள்ள குக்கிராமங்களில் இன்னமும் சி.ஐ.டி.க்கள் வந்து விசாரிக்கிறார்களா? அவர்கள் தேடும் நபர் இன்னார் என்று கண்டுபிடித்து விட்டார்களா? தோல்வி அடைந்து திரும்பி விட்டார்களா? அல்லது ஒருவேளை தாங்கள் தேடும் நபர் மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் தான் என்று முடிவுக்கு வந்து அவரைக் கைது செய்யத் தயங்கி மேலிடத்து உத்தரவு பெறத் திரும்பி யிருக்கிறார்களா? இப்படியெல்லாம் பலவிதக் கேள்விகள் பவானியின் உள்ளத்தில் எழுந்தன. அவற்றுக்கு விடையை அந்தக் கிராமங்களில் விசாரித்தால் அறியலாம் எனவும் எண்ணினாள். பதில்களைத் தெரிந்து கொள்ளும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் அவளால் முடியவில்லை.

கல்யாணத்தையும் பின்னோடு அழைத்துச் சென்றால் நல்லது. பேச்சுத் துணையாக இருக்கும். ஆனால் கல்யாணம் ஹைகோர்ட்டில் நடந்து வந்த ஒரு வழக்கு விஷயமாக அவன் அப்பாவின் ஆணையை ஏற்றுச் சென்னை சென்றிருந்தான். புறப்படுவதற்கு முன் பவானியிடம் வந்து விடைபெற்றுக் கொண்ட காட்சியை இப்போது எண்ணினாலும் பவானிக்குச் சிரிப்பு வந்தது.

பிரிவாற்றாமையால் காதலி வருந்துவாளோ என்று கலங்கிய காதலன் போல, "கவலைப் படாதீர்கள், இரண்டே நாட்கள்தான். உடனே திரும்பி விடுவேன். உங்கள் நினைவாகவே இருப்பேன்" என்று அவன் திரும்பத் திரும்பக் கூறினான்.

பவானி, "எதற்கு இத்தனை சமாதானம் சொல்கிறீர்கள்? நான் உங்களைப் பிரிந்து தவித்து உருகிவிடப் போவதில்லை" என்றாள்.

கல்யாணத்துக்கு முகம் வாடிவிட்டது. "சேச்சே, நான் அதற்குச் சொல்லவில்லை. நாடக ஒத்திகையெல்லாம் தாமதமாகிறதே, அதை எண்ணித்தான் கவலைப் பட்டேன்" என்று சமாளித்தான்.

பவானிக்குப் பாவமாக இருந்தது. ஆறுதலாகப் பேசினாள். "பாதகமில்லை, நீங்கள் இல்லாவிட்டாலும் இருப்பதாகவே பாவித்து ஒத்திகைகளைச் சரியாக நடத்துகிறோம். அரங்கேற்றம் குறித்த நாளில் ஜாம் ஜாம் என்று நடக்கும். ஒரு குறையும் வராது."

"சரி. அப்போ நான் போய் வரட்டுமா? உம்... வருகிறேன்....சீக்கிரம் திரும்பிவிடுகிறேன்..... வரட்டுமா?" தயங்கித் தயங்கி நின்றான் கல்யாணம். லேசில் கிளம்ப மாட்டான் போலிருந்தது.

"சென்று வாருங்கள்! வென்று திரும்புங்கள். வெற்றித் திலகமாக நெற்றித் திலகமிட்டு அனுப்பி வைக்கட்டுமா?" என்றாள் பவானி நாடக பாணியில். டயலாக் குக்கு ஏற்ப நடிக்கவும் செய்தாள் வேடிக்கையாக.

கல்யாணத்துக்குச் சற்று முன் ஏற்பட்ட தாபம் தீர்ந்து உச்சி குளிர்ந்து விட்டது. "சாமானிய கேஸ் இல்லை இது. பெறப் போவது மாபெரும் வெற்றி. உங்கள் வாழ்த்து என் நெஞ்சுடன் இருக்குமாதலால் நான் வெல்வதும் உறுதி" என்று உற்சாகமாகக் கூறிச் சென்றான்.

அதையெல்லாம் இப்போது நினைத்துச் சிரித்துக் கொண்டாள் பவானி. 'கல்யாணம்தான் ஊரில் இல்லை. அவர் அப்பாவையாவது பார்த்து வைத்தால் என்ன?' என்று அவளுக்குத் திடும்மென்று தோன்றியது. 'அவர் வீட்டுக்கு இதுவரையில் போனதே இல்லையே நான். இந்த ஊருக்கே பெரிய மனிதர்; பிரசித்தி பெற்ற வழக்கறிஞர். மரியாதைக்காகவாவது ஒரு தடவை போய்ப் பார்க்க வேண்டாமா? ஏலமலைக்கு இன்னொரு சமயம் போய்க் கொண்டால் போகிறது. இருள் கவிகிற நேரத்தில் மலை ஏறுவதை விடப் பகல் போதில் செல்வது நல்லது. தக்க துணையுடன் போவதும் உசிதம்தான். கோர்ட் விடுமுறை நாளில் மாமாவையும் அழைத்துக்கொண்டு போகலாம். இப்போது ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியாருக்கு நமது மரியாதைகளைச் சமர்ப்பித்து விட்டு வருவோம்.'

எண்ணத்தை உடனே செயலாக்கத் துணிந்து கிளம்பினாள் பவானி. புது கார் பாங்காக ஓடியது. உள்ளத்தைக் குடைந்து கொண்டிருந்த கவலைகலை மீறி ஓர் உற்சாகம் பிறந்தது அவளுக்கு.

ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் தம் ஆபீஸ் அறையில் உட்கார்ந்து கேஸ் கட்டுக்களைப் படித்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் உன்னிப்பாகப் படித்த பிறகு அந்தத் தாள்களை முன்னும் பின்னுமாகப் புரட்டி நோட்டம் விட்டபடியே தமக்குத் தாமே பேசிக் கொள்ளவும் ஆரம்பித்தார்.

"சட்டம் ஒரு கழுதை என்று சொல்கிறது சரியாகத்தான் இருக்கிறது. கீழ்க் கோர்ட்டு தீர்ப்பு இரண்டு வருடக் கடுங்காவல். அப்பீல் கோர்ட்டிலே தீர்ப்பு குற்றமே ருசுவாக வில்லை; கேஸ் டிஸ்மிஸ்! ஹைகோர்ட்டிலே தீர்ப்பு மறுபடியும் அடியிலிருந்து விசாரணை நடத்தணும்! எப்படி இருக்கிறது. கதை? சட்டத்தைக் கழுதை என்று சொல்வதிலே என்ன தப்பு?..."

இத்தருணத்தில் காலடி ஓசை கேட்கவே நிமிர்ந்த கோபாலகிருஷ்ணன், "அடேடே! நீயா, பூஜை வேளையிலே கரடி நுழைந்த மாதிரி...." என்றார்.

அவர் மனைவி அழைக்குள் முன்னேறியவாறே, "ஆமாம், கழுதை, கரடி, குரங்கு இன்னும் என்னென்ன சொல்லணுமோ சொல்லுங்கள்....." என்றாள்.

"அடேடே உன்னைச் சொல்லலேடி பழ மொழியைச் சொன்னேன்.....இருக்கட்டும். இப்போ நீ எதற்காக வந்தே? நான்தான் ரொம்ப வேலையாக இருக்கேன்னு தெரியுமே? உன் பிள்ளையானால் டிராமா, காலட்சேபம்னு போயிடறான். ஒரு நிமிஷம் வீட்டிலே இருந்து உதவ மாட்டேன் என்கிறான். அவனை ஹைகோர்ட் கேஸ் விஷயமாக மெட்ராஸுக்கு அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. ஆயிரம் சால்ஜாப்பு சொன்னான். எனக்கு மெட்ராஸுக்கும் ராமப்பட்டணத்துக்குமாக அலைய முடிகிறதா சொல்லு. ஏதுடா அப்பாவுக்கு வயதாகி விட்டதே. நாம் கொஞ்சம் கேஸ்களைப் பார்த்து உதவி பண்ணுவோம் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை."

"உங்களுக்கு என்ன அப்படி வயதாகி விட்டது?" என்றாள் செல்லம்.

"போன வருஷம் ஐம்பது; இந்த வருஷம் நாற்பத்தொன்பது அவ்வளவுதான். உன் இளமைத் தோற்றத்துக்கு ஏற்ப நான் வருஷா வருஷம் வயசைக் குறைச்சுண்டுதானே வரணும்?"

"போதும் பரிகாசம்! கல்யாணம் என்றைக்குத் திரும்பி வருகிறான் என்று கேட்கத்தான் வந்தேன். இனிமேல் இந்த வீட்டில் ஒரு நிமிஷம் கூட என்னால் இருக்க முடியாது. வந்திருக்கிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல என்னால் முடியவில்லை. உங்கள் பிள்ளைக்கு ஒரு கல்யாணத்தையாவது இதற்குள் பண்ணி வைத்திருந்தால்..."

"வைத்திருந்தால் என்ன? மாமியாரும் மருமகளும் ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டிருப்பீர்கள். உங்கள் கேஸிலே வாதாடறதுக்குத்தான் அப்பா பிள்ளை இரண்டு பேருக்கும் பொழுது சரியாக இருக்கும்."

"இப்போ மாத்திரம் புரட்டி விடுகிறீர்களாக்கும்? பொழுது விடிந்துஒரு கட்சிக்காரனைக் கூடக் காணோம்."

"நீயே போய் ஊரெல்லாம் சொல்லி விட்டு வருவாய் போலிருக்கே? என்றாவது ஒரு நாள் இப்படித்தான் இருக்கும்."

இத்தருணத்தில் வாசலில் ஹாரன் சத்தமும் தொடர்ந்து கார் என்ஜின் ஒரு முறை உறுமிவிட்டு ஓயும் சத்தமும் கேட்டது.

"பார்த்தாயா? நீ சொல்லி வாய் மூடுவதற்குள் கட்சிக்காரர் யாரோ வருகிறார்!"

வாசலிலிருந்து "ஸார்!" என்று குரல் கேட்டது.

"நீ உள்ளே போ சீக்கிரம்" என்றார் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன். "காரிலே யாரோ பெரிய மனிதர்கள் வந்து இறங்கியிருக்கிறார்கள்"

"எதற்கு இப்படி விரட்டறேள்? பெண் பிள்ளைக் குரல் மாதிரி இருக்கே!"

"இருக்கட்டுமே! அதனால் என்ன? பெண்ணுக்கு வக்கீலை நாட வேண்டிய பிரமேயமே இருக்காதா? இடத்தைக் காலி பண்ணு. சீக்கிரம். உம்!"

செல்லம்மாள் திரும்பித் திரும்பி இரண்டு தடவை பார்த்துக் கொண்டே வேண்டா வெறுப்பாக உள்ளே போனாள். முதலியார் மிகக் கவனமாகக் கேஸ் கட்டைப் படிக்கத் தொடங்கினார்!