தலைகீழ் உலகம்!
ராமப்பட்டணம் அட்வொகேட், 'ஹோம் ரூல்' கோபாலகிருஷ்ணன் வீடு ஜே ஜே என்று இருந்தது. சென்னையிலிருந்து வந்த உற்றார் உறவினரும் தெரிந்த மனிதர்களும் மட்டுமின்றி முன் பின் தெரியாதவர்கள் கூட ஒருசிலர் அந்தப் பெரிய வீட்டில் முகாமிட்டிருந்தனர். முற்றத்தின் இரு புறமும் இருந்த நாலு பெரிய அறைகள் இவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன.
பின்பக்கம் கிணற்றில் வாளியில் நீர் இழுத்துக் கொட்டிக் கொண்டு குளித்தபிறகு தலையைத் துவட்டியபடியே அப்போது மிகப் பிரபலமா யிருந்த தியாகராஜ பாகவதர் பாடல் ஒன்றைப் பாடியவாறு முற்றத்துக்கு வந்தான் கல்யாணசுந்தரம். முற்றத்தின் இரு பக்கமும் இருந்த நாலு அறைகளையும் நோட்டம் விட்டான். அவற்றின் வாசலில் ஜப்பான் அறை, ஜெர்மன் அறை, அமெரிக்கா அறை, பிரிட்டிஷ் அறை என்று பெயர்கள் வர்ண சாக்பீஸால் எழுதப் பட்டிருந்தன. இவர்களுள் யாரை அழைத்துக் குசலம் விசாரிக்கலாம் என்று சற்று நேரம் யோசித்தவனாக நின்ற கல்யாணம், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக, "ஜப்பான் மாமா! பொழுது விடிந்து எழுந்தாச்சா? ராத்திரி நன்றாகத் தூங்கினீர்களா?" என்று குரல் கொடுத்தான். முற்றத்தின் இடது பக்க அறை ஒன்றிலிருந்து குள்ளமாக ஒருவர் வெளிப்பட் டார். "ஆகா! ஆனந்தமாகத் தூங்கினேன். லோகோபகாரிகளாக நீயும் உன் அப்பாவும் இருக்கிறபோது எனக்கு என்ன கவலை? கவலையே இல்லாததாலே தூக்கத்துக்கும் குறைவில்லை. ஆனா... ஒரு விஷயம் மட்டும் உன் காதிலே போட்டு வைக்கணும். கல்யாணம்! பக்கத்து அறையிலே இருக்கே ஒரு கடுவன் பூனை. அவன் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு!"
"ஏன்? என்ன நடந்தது?"
"நேற்று இரண்டணா கொடுத்து ஒரு வாரப் பத்திரிகை வாங்கிக் கொண்டு வந்து வைத்தேன். இன்று காலையில் காணோம். அவன்தான் எடுத்திருக்கணும். ஏன்னா அதிலிருந்த ஒரு விகடத் துணுக்கை இவன் பெண்டாட்டி கிட்டச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தான். விடுவேனா பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்."
"ஏன் ஜப்பான் மாமா, ஜெர்மன் மாமாவே அதைக் காசு கொடுத்து வாங்கி யிருக்கக் கூடாதா?"
"அந்தக் கஞ்ச மகாபிரபுவா வாங்குவான்? நேற்று சாயந்திரம் ஹோட்டலுக்குள் நுழையறான்; எதிரேயே நான் நிக்கறேன். உபசாரத்துக்குக்கூட 'வா'ன்னு சொல்லலையே!"
"இதோ பாருங்க, நீங்க சண்டை போடறது பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் ஜப்பான் மாமாவாகிய நீங்கள் பக்கத்து அறைவாசியான ஜெர்மன் மாமாவோடு சண்டை பிடிக்கக் கூடாது. இரண்டு பேருமா சேர்ந்து கொண்டு எதிரே இருக்கும் பிரிட்டிஷ் அமெரிக்க அறைகளில் உள்ளவர்களோடு யுத்தம் பண்ணுங்கள்; வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் சரித்திரத்தையே மாற்றி விடாதீர்கள்! என்ன, புரிந்ததா?"
ஜப்பான் அறை விருந்தினரைத் திரு திருவென்று விழிக்க வைத்து விட்டுக் கல்யாணசுந்தரம் ரேழிக்குப் பக்கத்தில் தன் தகப்பனாரின் காரியாலய அறையை அடைந்தான்.
அலமாரியைத் திறந்து சட்டையை மாட்டிக்கொண்டே, "அப்பா! உலகமே தலைகீழாக மாறிப் போச்சு" என்றான்.
காலைப் பத்திரிகையைச் சாவகாசமாக ராகம் போட்டுப் படித்துக் கொண்டிருந்த "ஹோம்ரூல்' கோபாலகிருஷ்ணன் சாய்வு நாற்காலியில் சற்று நிமிர்ந்து, "கவனித்தேன், காதில் விழுந்தது" என்றார்.
"அதைச் சொல்லவில்லை அப்பா. அலமாரிக்கு மேலே பாருங்கள்" என்றான் கல்யாணம்.
மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு பத்திரிகையை ஒரு உதறு உதறிவிட்டு, அண்ணாந்து நோக்கினார், கோபாலகிருஷ்ணன். அங்கே மெய்யாலுமே உலகம் தலைகீழாக இருந்தது."சே! அந்தக் 'குளோ'பைச் சரியாக நிமிர்த்தி வைடா. யார் செய்த விஷமம் இது?" என்றார் தந்தை.
"ஒருவரும் விஷமம் பண்ணவில்லை. அம்மா நேற்று ஒட்டடை அடித்தாள்.அப்போ அந்த ஒட்டடைக் காம்பு பட்டுக் கீழே விழுந்திருக்கும்.திருப்பி வைக்கிறப்போ உலக்கத்தையே கவிழ்த்து விட்டாள்! இதனால் என்ன விபரீதம் எல்லாம் நேரப் போகிறதோ?"
"இதோ இப்போதே விபரீதம் வந்து கொண்டே இருக்கிறது" என்றார் தம் மனைவி அறைக்குள் நுழைவதைக் கடைக் கண்ணால் நோக்கி விட்ட கோபாலகிருஷ்ணன்.
"விபரீதம் என்ன, பிரளயமே வந்தாலும் நீங்கள் மாற மாட்டேள், உங்கள் பிள்ளையும் மாற மாட்டான். நானும்தான் கேட்கிறேன்.இது என்ன வீடா,ஸவலை ராமசாஅமி முதலியார் சத்திரமா? வீட்டில் கால் வைக்க இடமில்லையே?இப்படி உங்கள் பிள்ளை அக்கிரமம் பண்ணுகிறான். நீங்களும் தட்டிக் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்."
"ஏன் உன் பிள்ளை இல்லையா? நீதான் கேளேன்!"
"நீங்கள்தான் அவனுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்து விட்டீர்கள்."
" நான் செல்லம் கொடுத்தேனா? உன் பேரே செல்லம். என் பேரில் பழியைப் போடுகிறாயே!"
"ஆமாம், எல்லாம் நான் சொல்கிறபடிதான் நடக்கிறதாக்கும்?"
"பின்னே, அப்பாவுக்கு 'ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன்'னு பேர் வந்ததே அதனால்தானே அம்மா?"
"நீ சும்மா இருடா. எனக்கு இன்றைக்கு இரண்டிலொன்று தெரிந்தாக வேண்டும். இங்கே டேராப் போட்டிருக்கிறார்களே இவர்களெல்லாம் இன்னும் எத்தனை நாட்கள் இங்கே இருக்கப் போகிறார்கள்?"
"யுத்தம் முடிகிற மட்டும்."
"யுத்தம் எப்போ முடியும்?"
"ஹிட்லருக்குப் போன் போட்டுக் கேட்டுச் சொல்கிறேன்" என்றார் கோபாலகிருஷ்ணன்.தந்தை மகன் இருவர் முகங்களிலும் புன்னகை அரும்பியது.
"கேட்கிறதை உடனே கேளுங்களேன். அதுக்குக் கூட வேளை லக்னம் எல்லாம் பார்க்கணுமா என்ன?" என்று மேஜை மீது இருந்த போன் ரிஸீவரை எடுத்துக் கொடுத்தாள் செல்லம்.
கல்யாணம் குபீரென்று சிரித்தான்.ஆனால் அவன் தந்தைக்கு தம் மனைவியின் அறியாமையையும் வெகுளித்தனத்தையும் எண்ணியபோது நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது.
'ஹோம் ரூல்' என்று சொல்கிறோம். இயக்கம் கூட நடத்துகிறோம்.ஆனால் சராசரி இந்திய மக்கள் இப்படி அறியாமையில் மூழ்கி இருக்கும்போது வெள்ளைக்காரன் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்து விட்டு எப்படி வெளியேறுவான்? அப்படியே அவன் வெளியேறினாலும் கிடைக்கும் சுதந்திரத்தை மக்கள் எப்படிப் போற்றிக் காப்பாற்றப் போகிறார்கள்?' என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.
"அப்பா! அம்மாவுக்கு எல்லாம் விவரமாக விளக்கிச் சொல்லுங்கள். சாயந்திரம்வரை பொழுது போய் விடும். அதற்குள் நான் கிளப்புக்குப் போய் வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் கல்யாண சுந்தரம்.
"காலை வேளையில் என்னடா கிளப்?" என்றாள் செல்லம்.
"ஞாயிற்றுக் கிழமைதானே அம்மா? நாள் முழுவதும் நாடக ஒத்திகை நடக்கிறது. வரட்டுமா?"
அவள் பதிலுக்குக் காத்திராமல் அவன் புறப்பட்டு விட்டான்.
சமூக சேவா சங்கம் இயங்கிய கட்டடத்தின் வாசலில் காரை நிறுத்திவிட்டுக் கல்யாணம் கீழே இறங்கியதும் இறங்காததுமாக ஒரு பையன் ஓடோடி வந்தான். "ஸார்! மாஜிஸ்டிரேட்டுக்கு உங்களை ஒரு நிமிஷம் பார்க்க வேண்டுமாம்" என்றான்.
"அப்படியா? இதோ!" என்று கல்யாணம் கூறிவிட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடி நாற்காலியில் அமர்ந்திருந்த கோவர்த்தனனை நோக்கி நடந்தான். "குட் மார்னிங்" என்றதும், அவர், "உட்காருங்கள் மிஸ்டர் கல்யாணம். நாடகமெல்லாம் எந்த மட்டில் இருக்கிறது?" என்று விசாரித்தார்.
"ஐந்தாறு நாட்கள்தானே ஒத்திகை நடந்திருக்கிறது? இன்னும் ஒரு மாதமாவது ஆகும் அரங்கேற."
"கல்யாணம்! ஐ லைக் யூ. உங்க பரோபகார குணமும் ஊரு முழுக்கப் பிரசித்தி. அதை நான் வரவேற்கிறேன். சந்தோஷப் படறேன். இப்பக்கூடப் பர்மா அகதிகளுக்காக நிதி திரட்ட நாடகம் போடுகிறீர்கள். ரொம்ப 'நோபிள் மைண்ட்' இருந்தாத்தான் அப்படி யெல்லாம் உதவத் தோன்றும். அதை நான் பாராட்டறேன். நானே உங்க நாடகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தித் தரதாக்கூட முடிவு செய்திருக்கேன். என்னால் எவ்வளவு முடியுமோ ஹெல்ப் பண்ணறேன்."
"தாங்க்யூ ஸார்! தாங்க்யூ!" என்று கல்யாணம் குதூகலத்துடன் சொன்னான். "உங்க ஒத்துழைப்பு இருந்தால் எங்களுக்குப் பெரிய பலம்."
"ஆனா ஒண்ணு, மிஸ்டர் கல்யாணம்! கொஞ்சம் யோசித்துப் பாருங்க. இருபது ஆண்பிள்ளைத் தடியன்களுக்கு மத்தியிலே ஒரு பெண்ணை இழுத்து நிற்க வைச்சு, நடிக்கச் சொல்றது நல்லா இருக்கா? இட் இஸ் நாட் கரெக்ட். அது மட்டும் எனக்குப் பிடிக்கலை!"
"அழகுதான் போங்கள்!" என்று சிரித்தான் கல்யாணம். எங்க நாடகக் குழுவிலே இருபதே பேர் தான். ஆனா இந்தக் கிளப்பிலே இருநூறு பேர் அங்கத்தினர்கள். இருநூறு தடியன்களுக்கு மத்தியில் அவளை இந்தக் கிளப்பில் சேர அழைப்பு விடுத்த நீங்களே இருபது தடியன்களுக்கு மத்தியில் அவள் நடிக்கக் கூடாது என்று சொல்வது என்ன நியாயம்? நீங்கள் தினம் அவளுடன் டென்னிஸ் ஆடலாம். நான் தினம் அவளுடன் சேர்ந்து நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கக் கூடாதா?"
"கல்யாணம்! புரியாதது மாதிரி நடிக்காதீர்கள். நடிப்பெல்லாம் நாடகத்தோடு நிற்கட்டும். என்னுடன் அவள் டென்னிஸ் ஆடுவது வேறு; உங்கள் காதலியாக அவள் மேடை ஏறி நடிப்பது வேறு!"
"எப்படி வேறாக முடியும்? இரண்டும் இருவித விளையாட்டுத்தான். பொழுது போக்குத்தான்."
"கல்யாணம் நான் உங்களோடு வாதாட விரும்பவில்லை. நீங்க செய்வது நன்றாயில்லை. எச்சரிக்கிறேன். அப்புறம் உங்க இஷ்டம்!"
அவர் தம் கையிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கை விளையாட்டாக உதறினார். அதில் மறைவாகப் பொருத்தப் பட்டிருந்த விசை காரணமாக மேலுறை கழன்று எட்டப் போய் விழ இதுகாறும் உள்ளே மறைந்திருந்த மிகக் கூர்மையான ஒரு நீண்ட கத்தி பளபளத்தது.
அதன் முனையை ஒரு விரலால் கூர் பார்த்த கோவர்த்தனன், "என்ன அப்படி வியப்புடன் பார்க்கிறீர்கள் கல்யாணம்? நான் துப்பாக்கிகூட வைத்திருக்கிறேன். கைத்துப்பாக்கி, வேட்டைத் துப்பாக்கி எல்லாமே இருக்கின்றன. அவற்றுக்கு லைசென்ஸ்களும் வாங்கி வைத்திருக்கிறேன்!" என்றார்.
கல்யாணம் விருட்டென்று எழுந்தான். "மிஸ்டர் கோவர்த்தனன்! உங்களிடம் எனக்குள்ள மதிப்புக் குறையும்படி நடந்து கொள்ளாதீர்கள். ப்ளீஸ்!" என்று கூறி விட்டுத் திரும்பி நடந்தான்.
அவனை முந்திக் கொண்டு, காலைச் சூரிய ஒளியில் பளபளத்தவாறு கத்தி பாய்ந்து சென்று அவனுக்கு முன்னாலிருந்த ஒரு மரத்தில் பதிந்து அதிர்ந்தது! குறி அரையங்குலம் பிசகி யிருந்தாலும் கத்தி அவனைத் தாக்கியிருக்கும். கல்யாணம் பிரமித்துப் போனான்.
பின்னால் கோவர்த்தனன் கலகலவென்று சிரிப்பது அவன் காதில் விழுந்தது!
(தொடரும்)

