அந்தப்புரத்தில் அரசிளங்குமரிகள்
"வாம்மா பவானி! இந்த ஊர் எல்லைக்குள் நுழைந்ததுமே மகா லட்சுமி மாதிரி எதிரே வந்து நின்றாய். உடனேயே ஜாகை வசதி கிடைத்தது. அந்தப் பிள்ளை கல்யாணம் தங்கக் கம்பி. ரொம்ப ஒத்தாசையாக இருக் கிறான்" என்று கூறிப் பவானியை வர வேற்றாள் காமாட்சி.
"இன்னும் உங்களுக்கு என்னென்ன உதவி வேணுமோ எல்லாவற்றையும் அவரையே கேளுங்கள்" என்றாள் பவானி.
"அப்படி ஒண்ணும் அதிகமாக உபகாரம் தேவையில்லை. விசுவைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, 'அவன் அப்பாவுக்கு ஓர் உத்தியோகத்தைப் பார்த்துக் கொடுத்து, இந்தப் பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணி வைச்சுட்டாப் போதும்."
"முதல் இரண்டு காரியங்களும் கஷ்டப் படலாம். மூன்றாவது முடிந்த மாதிரிதான். கட்டாயம் சுலபமாக நடந்துவிடும். கல்யாண சுந்தரம் இருக்கிறாரே அவரே பிரும்மச்சாரி தான். உங்கள் பெண்ணுக்குத் தகுந்த வரன்."
"ஆனால் அவர்கள் குடும்பம் பணக்காரக் குடும்பம் அது இது என்கிறார்களே."
"அதனால் என்ன? மிஸ்டர் கல்யாணசுந்தரத்துக்கு ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமே கிடையாது. தீவிர சோஷலிஸ்ட் அவர் அப்பா மட்டும் தடுக்கவில்லை என்றால் சொத்தை யெல்லாம் தானம் பண்ணி விடுவார். நாட்டில் ஏழைகள், பரம ஏழைகள் என்ற இரண்டே வகுப்பார்தாம் இருக்க வேண்டும் என்பது அவர் சித்தாந்தம். அந்த அளவுக்குச் சமூக சீர்திருத்த ஆர்வம் கொண்டவர். உங்கள் பெண்தான் என்ன சாமானியப்பட்டவளா, அவள், அழகு, சமர்த்து, அறிவு, படிப்பு..."
"கடைசியாகச் சொன்னது மட்டும் அக்காவிடம் கிடையாது. பூஜ்யம்" என்றான் விசு.
"தடிப்பயலே! சும்மா இரு. நீ ஒருத்தன் படித்துக் குப்பை கொட்டினால் போதும்" என்றார் மாசிலாமணி.
"உண்மையைச் சொன்னாலே எல்லோருக்கும் கோபம்தான் வரும்" என்றான் விசு.
"விசு! அக்கா எதுவரை படித்திருக்கிறாள்?"- பவானி கேட்டாள்.
"எட்டாவதோடு படிப்புக்குக் கொட்டாவி விட்டுவிட்டாள்."
"அதற்கு மேல் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று நிறுத்தி விட்டோம்" என்றார் மாசிலாமணி.
"நீ என்ன நினைச்சுண்டாலும் சரி பவானி. அந்த விஷயத்திலே நாங்க கொஞ்சம் கர் நாடகம்தான்" என்றாள் காமாட்சி.
"நினைக்கிறது என்ன? இதெல்லாம் அவரவர் மனசையும் சூழ்நிலை சந்தர்ப்பங்களையும் பொறுத்தது. கால மாறுத லுக்கு ஏற்ப நாளடைவில் மன மாற்றங்களும் நடக்கும். நிதானமாகப் படிப்படியாகத் தான் ஏற்படும். ஒரு விதத்தில் பார்த்தால் நீங்க கமலாவின் படிப்பை எட்டாவதோடு நிறுத்தியதே நல்லதுதான்"
"ஏன், எப்படி?" என்று மாசிலாமணி தம்பதி ஏகோபித்துக் கேட்டனர்.
"கல்யாணசுந்தரத்தின் தாயாருக்குப் படித்த பெண்களைக் கண்டாலே பிடிக்காது! அதிகம் படிக்காது, குடித்தனப் பாங்காக இருக்கும் நாட்டுப் பெண்ணாகத் தனக்கு வர வேண்டும் என்று அந்த அம்மாவுக்கு ஆசை."
இதைக் கேட்டுக் கொண்டே யிருந்த கமலாவின் மேனி சிலிர்ப்பதைப் பவானி ஓரக் கண்ணால் பார்த்துப் புன்னகை பூத்தாள். அவள் விடைபெற்றுச் செல்ல முற்பட்டபோது, "குங்குமம் கொடேன் கமலா!" என்றாள் காமாட்சி. ஏதோ கனவுலகிலிருந்து விடுபட்டவள் போல் திடுக்கிட்டுக் கமலா அவசரம் அவசரமாக எழுந்து போய்க் குங்குமச் சிழிழை எடுத்து வந்து நீட்டினாள்.
பவானி நெற்றிக்கு இட்டுக் கொண்டு புறப்பட்டபோது வாசல்வரையில் வழியனுப்ப வந்த கமலா, "அடிக்கடி வந்து கொண்டிருங்கள் அக்கா!" என்றாள்.
"வருகிறேன். ஆனால் இங்கே வரலாமா அல்லது ஏலமலைப் பாதையில் பத்தாவது மைல் கல்லில் மொட்டைப் பாறை ஒன்று இருக்கிறதே அங்கே சந்திப்போமா?" என்றாள் பவானி. "அங்கே யென்றால் மனம் விட்டுப் பேசலாம் இல்லையா?"
கமலா அதிர்ச்சி அடைந்தவளாக, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றாள்.
"அடி கள்ளி! எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறாயா? பூனை போலிருந்து கொண்டு புலி போல் பாய்கிறவளாயிற்றே நீ. நானே காரில்கூடத் தனியாகப் போகத் தயங்குகிறேன். அம்மாதிரி ஏகாந்தமான இடங்களுக்கு நீ பஸ்ஸில் ஒருவருக்கும் தெரியாமல் போய் விட்டு வருகிறாய்!"
"அக்கா! மெதுவாகப் பேசுங்கள். அம்மா காதில் விழுந்தால் தோலை உரித்து விடுவாள்."
குரலைச் சற்றுத் தாழ்த்திக் கொண்ட பவானி, "அடுத்த தடவை இரண்டு பேரும் இந்தக் காரில் சேர்ந்தே போவோம். பொழுதோடு போய்விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடுவோம். என்ன சொல்கிறாய்?" என்றாள்.
"சொல்ல என்ன இருக்கிறது? நான் எப்போதும் தயார். எனக்கென்ன கோர்ட்டா, ஆபீஸா? வெட்டிப் போது போக்கிக் கொண்டிருக்கிறேன்" என்று சற்றே ஆதங்கம் குரலில் எட்டிப் பார்க்கப் பேசினாள் கமலா. "ஆனால் அப்பா, அம்மா தான் சம்மதிப்பார்களோ என்னவோ?"
"நான் அழைத்துப் போகிறேன் என்றால் மறுக்க மாட்டார்கள். வரட்டுமா?" என்ற பவானி ஆயிரமாயிரம் வண்ணக் கனவுகள் காணக் கமலாவுக்கு வழிவகுத்து விட்டுக் காரில் ஏறிச் சென்றாள்.
மலை அரசனுடைய ராஜ்யத்தின் தலைநகர் போல விளங்கியது அந்தப் பகுதி. காப்பித் தோட்டங்களின் செயற்கை எழில் பல இடங்களில் மனோரம்மியமாக இருந்தது என்றால் அந்தப் பகுதிகளின் இயற்கை அழகு கொழித்துக் கொஞ்சியது. தலைநகரின் மையமான இடத்தில் ஓங்கி நின்ற அரண்மனையாக ஒரு மொட்டைப் பாறை. அரண்மனையா அது? இல்லை. அங்கு இப்போது குடியேறியிருந்த அரசிளங்குமரிகள் அந்தப்புரமாகவே மாற்றி விட்டிருந்தனர்! சரக்கொன்றை மரம் ஒன்று அவர்கள் மீது பொன் விதானம் விரித்திருந்தது. திரண்டு கொண்டிருந்த கரிய மேகங்கள் காரணமாய் வீரியம் குன்றிய மாலை நேரத்து வெய்யிலையும் அந்த விதானம் வடிகட்டி அனுப்பி அதே காரணத்தால் தனது தங்கத் தோற்றம் மேலும் தகதகக்கக் கண்டது.
அருகிலேயே ஓர் அர்ச மரம் சாமரம் வீசுவதுபோல் அசைந்தாடிச் சலசலத்தது. ராமப்பட்டணத்தை யொட்டியிருந்த பெரியதோர் ஏரி மீதாகத் தவழ்ந்து வந்த மலையமாருதம் இருவர் மேனியையும் குளிர்வித்தது. அடிமரத்தில் ஒய்யாரமாகச் சாய்ந்திருந்த அவ்விருவரும் அரசிளங்குமரிகளா அல்லது வனதேவதைகளேதானா? கமலா தன்னிடமிருந்த சொற்ப ஆடைகளிலேயே மிகவும் புதிதான ஒன்றை அணிந்திருந்தாள். இதை ஒரு விசேஷதினமாகக் கருதி வழக்கத்தை விடச் சிரத்தையுடன் ஒப்பனைகளையும் கவனித்துச் செய்துகொண்டிருந்தாள். பவானி இந்தப் பயணத்துக்காக விசேஷ சிரத்தை ஏதும் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் காட்டவில்லை என்றாலும் சாதாரணமாகவே அவள் நவீன நாகரிகங்களிலும் அன்றைய நாகரிகத்தை அறிந்தவள். ஒன்று பச்சைக் கிளி என்றால் மற்றது மாடப் புறா. ஒன்று மஞ்சள் சாமந்தி, மற்றது இளஞ்சிவப்பு ரோஜா. ஒன்று கும்மிக் கீதம், மற்றது இங்கிலீஷ் டியூன்! ஒருத்தி அல்லி ராணி, மற்றொருத்தி கிளியோபாத்ரா! ஏகந்தச் சூழல் அளித்த சுதந்திர உணர்வு அவர்களை ஏதோதோ மனோராஜ்யங்களில் பறக்கச் செய்தது. அதே சமயத்தில் ஒருவித நெருக்கத்தையும் பிணைப்பையும் அவ்விருவரிடமும் உண்டாக்கி அடிமைப்படுத்தவும் செய்தது.
"மழை வருமோ?" என்றாள் கமலா.
"வரலாம். இம்மாதிரி சில்லென்று காற்று வீசும்போது உன் பக்கத்தில் நான் இருந்து என்ன பிரயோசனம்? கல்யாணம் அல்லவா இருக்க வேண்டும்?" என்றாள் பவானி.
"அக்கா! உண்மையாகத்தான் பேசுகிறீர்களா? அல்லது என்னை ஏமாற்றுகிறீர்களா? அனாவசியமாக என் ஆசைகளை வளர்த்து விட்டால் அது மோதிச் சிதறும்போது என் இதயமும் சுக்கு நூறாக உடைந்து போகும்.
"கமலா! கல்யாணம் உன்னை ஏற்றுக் கொள்வார் என்று என்னால் சத்தியம் செய்து தரவா முடியும்? ஆனால் கல்யாணம் உன்னை மனைவியாக அடையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பேன். அவர் உன்னை மறுக்க எந்தக் காரணமும் எனக்குத் தோன்றவில்லை.
நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் உங்கள் இல்வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இனிமையாகத் தங்கு தடையின்றி ஓடும். உங்களை இணைத்து வைக்க நான் என்னால் முடிந்ததை யெல்லாம் செய்வேன்."
"அன்று நீங்கள் வீட்டுக்கு வந்து என் ஆசைக்குத் தூபம் போட்டுவிட்டுப் போனதிலிருந்து நான் இந்த உலகத்திலேயே இல்லை,அக்கா!"
"கல்யாணத்துடன் கரம் கோத்துக் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாயாக்கும்! என்னவெல்லாம் விளையாடினீர்கள்? எல்லாவற்றையும் ஒன்று விடாமல் இப்போது சொல்லியாக வேண்டும் எனக்கு!"
"மகிழ்ச்சிக் கடலில் மிதந்தேன். திடீரென்று அதுவே துயரக் கடலாகவும் மாறியது. அதில் மூழ்கிப் போனேன்."
"துயரமா? என்ன துயரம் உனக்கு?"
"இத்தனை அன்பான ஓர் அக்காவைத் தெய்வமாகப் பார்த்து என்னிடம் அனுப்பி வைத்திருக்கும்போது அவளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவள் மீது சந்தேகித்துக் கோபதாபப் பட்டும் பொறாமையால் வெந்துருகியும் பலவிதமாகச் சபித்தோமே என்று என்னை நானே நொந்து கொண்டு அழுது தீர்த்தேன்!"
இப்படிக் கூறி வரும்போதே கமலா மீண்டும் பொல பொலவென்று கண்ணீர் உகுத்தாள்.
"அசடே! எதற்கு என்னைச் சபித்தாய்? ஏன் இப்போது அழுகிறாய்? நிறுத்து, சொல்கிறேன்" என்று அதட்டும் பாவனையில் பேசிய பவானி தன் புடவைத் தலைப்பால் கமலாவின் முகத்தை ஒற்றினாள்.
"நீங்களும் அவரும் சேர்ந்து சேர்ந்து காரில் போவது வருவதைப் பார்த்தும் பேசிப் பழகுவதைக் கண்டும் பொறாமைப் பட்டேன். அக்கா! என் நல்வாழ்வைப் பறித்துக்கொண்டு போக வந்த பரம விரோதியாக உங்களை எண்ணினேன். மனசுக்குள் உங்களைச் சபித்தேன். தாறுமாறாகத் திட்டினேன். அக்கா! என்னை மன்னிப்பீர்களா?" என்று கேட்ட கமலா பவானியின் மடியில் விழுந்து முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழலானாள்.
(தொடரும்)

