வேறு நல்ல வரன்!
கல்யாணம் சென்ற பிறகு ரங்கநாத முதலியார் மாசிலாமணியைப் பார்த்து, "ஏன் சுவாமி, அந்தப் பிள்ளையாண்டான் சொல்லிவிட்டுப் போவது உண்மைதானா? உங்களுக்கு வேலை கிடைத்து விட்டதா?" என்றார்.
"உம்... உம்... ஐம்பது சதம் கிடைத்த மாதிரிதான்."
"அதென்ன ஓய், வாத்தியார் மாதிரி மார்க்குப் போட்டுப் பேசறீர்?"
"வாத்தியார் வேலைக்குத்தான் மனுப் போட்டேன். மனுப் போட்டதில் ஐம்பது சதவீத வேலை முடிந்தது. அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஐம்பது சதவீத வேலைதான் பாக்கி. ஆக ஐம்பது சதவீதம் வேலை கிடைத்த மாதிரிதானே?"
ரங்கநாத முதலியார் சிரித்தார்.
"இப்படிச் சிரித்து எரிச்சலைக் கிளப்புவதற்குப் பதில் சிபாரிசு செய்து என் மனசைக் குளிர்விக்கலாம்" என்றார் மாசிலாமணி. "இந்த ஊர்ப் பள்ளிக்கூட நிர்வாகக் கமிட்டியில் நீரும் அங்கத்தினராமே?"
"ஆகட்டும் சுவாமி, ஆகட்டும்! பேஷாகச் சிபாரிசு செய்கிறேன். ஆனால் பலன் இருக்குமென்று தோன்றவில்லை. சின்னப் பசங்க எத்தனையோ பேர் பி.ஏ., பி.டி. எல்லாம் பாஸ் பண்ணிட்டு மனுப் போட்டிருக்காங்க. உபாத்தியாயர் பயிற்சி பெறாத உமக்கு அதுவும் இந்த வயதில் எப்படி வேலை கிடைக்கும்? என்னைக் கேட்டால் உங்கள் கஷ்ட மெல்லாம் தீர ஒரு வழி சொல்வேன்...."
"பேஷாய்ச் சொல்லுங்கள். குருடனுக்க வேண்டியது கண்தானே. அதை யார் கொடுத்தால் என்ன?"
"ஏதோ கடவுள் உங்களுக்கு மூக்கும் முழியுமாகப் பார்க்க லட்சணமாக ஒரு பெண்ணைக் கொடுத்திருக்கிறார். அவளுக்குக் கூடிய சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்து விட்டால்.... அதுவும் நல்ல பணக்கார இடமாகப் பார்த்து விட்டால்..."
"அதைப் பற்றி நாங்க யோசிக்காமலா இருப்போம்? இப்போ வந்துவிட்டுப் போறானே கல்யாணம் அவனுக்குக் கொடுக்க லாம் என்றுகூட எண்ணி யிருந்தோம்."
"அழகுதான். கல்யாணமாவது கமலாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவாவது!"
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? அந்தப் பையன் இவளிடமும் எங்களிடமும் பிரியமாகத்தானே இருக்கிறான்? இவளும்...."
"தயவுசெய்து அந்தப் பேச்சையே இனிமேல் எடுக்காதீர்கள். ஏற்கனவே ஊரெல்லாம் ஒரே வதந்தியாக இருக்கு..."
"என்ன வதந்தி?"
"ஒரு வாலிபன் அடிக்கடி ஒரு யுவதியை வந்து பார்த்துக் கொண்டிருந்தால் என்ன வதந்தி பரவும்? எல்லாம் காதல், கல்யாணம் என்கிற வதந்திதான்."
"அப்போ நாங்க போட்ட கணக்குச் சரிதானே!"
"சுத்தத் தப்பு! அவன் ஒரு நாளும் கமலாவைக் கல்யாணம் செய்துகொள்ளப் போவதில்லை. என்னைக் கேட்டால் அவனை மறுபடியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கவே அனுமதிக்கக் கூடாது என்பேன்!"
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? இங்கே ஒரு தப்பும் நடந்துவிடவில்லை. நடப்பதற்கு நாங்கள் விடவும் மாட்டோம். நாங்கள் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்."
"அது தெரிந்துதான் நானும் சொல்கிறேன். இந்தக் கல்யாண சுந்தரம் இருக்கிறானே, சுத்தக் காலிப்பயல்! பவானி என்று ஒரு பெண் வக்கீல் வந்திருக்கிறாளே; எப்போது பார்த்தாலும் அவள் பின்னாலேயே சுற்றுகிறான். அவள் காலாலே இட்டதைத் தலையால் செய்யக் காத்திருக்கிறான். சீக்கிரம் அவர்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தாலும் நடக்கும் என்று ஊரிலே பேசிக் கொள்கிறார்கள்...."
"பார்த்தீர்களா! நான் சொன்னது சரியாய்ப் போயிற்று!" என்று காமாட்சி அம்மாள் தன் புருஷனிடம் சொன்னாள்.
"நாளைக்கு சர்ச்சில் ஜெயிக்கட்டும்; ஜப்பானும் ஜெர்மனியும் தோற்கட்டும். அல்லது பிரளயம் வந்து உலகமே அழிந்து போகட்டும். அப்போதும் நீ, 'பார்த்தீர்களா, நான் சொன்னது சரியாப் போயிறாறா?' என்பாய். நீ சொல்லாத விஷயமே கிடையாது. அது சரியாகப் போகாத நிலைமையும் இல்லை" என்றார் மாசிலாமணி. பிறகு ரங்கநாத முதலியாரை நோக்கி, "உங்கள் யோசனை தான் என்ன?" என்று கேட்டார்.
"வேறு நல்ல வரனாகப் பார்த்துக் கமலாவுக்குக் கல்யாணம் பண்ணிவிட வேண்டியதுதான்."
"நீங்களே பார்த்து இந்தப் பெண்ணுக்கு ஒரு வழி காட்டி விடுங்களேன். உங்களுக்கு புண்ணியமா யிருக்கும்" என்றாள் காமாட்சி.
"அதற்கென்ன பண்ணி விட்டால் போகிறது. நாளைக்கே நல்ல நாள்தான். ராகுகாலம் கழித்து நம் வீட்டுக்கு வாருங்கள். சாவகாசமாகப் பேசலாம்" என்று சொல்லி விட்டு ரங்கநாத முதலியார் சென்றார்.
அவர் போனதும் மாசிலாமணி தம் மனைவியைப் பார்த்து, "அடியே இனிமேல் அந்தக் கல்யாணம் இந்த வீட்டிலே கால் வைச்சால்...." என்று கறுவினார்.
"இந்தாங்க, உங்களால் நிறைவேற்ற முடியாத சபதம் எதையும் பண்ணாதீர்கள்! கல்யாணத்தின் காலை முறிக்க உங்களால் ஆகாது. வேணுமானால் இந்த நாற்காலியின் காலை முறிச்சு அடுப்பில் வைக்கிறதா சபதம் எடுத்துக்குங்க. நாற்காலி வீட்டின் சொந்தக் காரருடையதுதான். நம்முடையதில்லே!"
ரங்கநாத முதலியாருக்கும் தன் பெற்றோருக்கும் இடையில் நடந்த உரையாடலை யெல்லாம் உள் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த கமலா, முதலில் திடுக்கிட்டாள். பிறகு மௌனமாய் கண்ணீர் பெருக்கி அழத் தொடங்கினாள்.
(தொடரும்)

