பவானி மந்திரம்!

மாடு படுத்துக் கொண்ட இடம் சாலையில் ஒரு மதகடியில். பின்னால் ஒரு பாரின் கார் வந்து நின்றது. அதை நம் கதாநாயகன்

கல்யாண சுந்தரம் பி.ஏ.பி.எல். ஓட்டிக் கொண்டு வந்தான். மாட்டு வண்டிக்குப் பின்னால் வந்து கார் நின்றது. மேலே முன்னேற முடியாததால் கோபத்துடன் 'ஹாரனை' அழுத்தினான் கல்யாண சுந்தரம். வண்டி நகருகிற வழியாக இல்லை.

"கொஞ்சம் கூட 'ரோட் சென்ஸே' கிடாயாது. எல்லாம் 'நான் சென்ஸ்' தான்" என்று உரக்கக் கூறியபடியே இறங்கி வண்டியை நோக்கி நடந்து வந்தான்.

"தமிழிலே திட்டுங்க சாமி" என்றான் வண்டிக்காரன்.

அவன் நிலைமையை உணர்ந்து பரிதாபப்பட்ட கல்யாணம், "ஏம்பா, மாடு படுத்துக்க இங்கேதான் இடம் பார்த்துதா?" என்றான்.

"அது மதகைக் கண்டுதா? பிளஷரைக் கண்டுதா? கொஞ்சம் மாட்டைத் தூக்கி விடுங்க சாமி" என்றான் வண்டிக்காரன்.

"தூக்கி விட்டுடுவேன். ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஸில்க் சட்டை அழுக்காகி விடுமோன்னுதான் பாக்கிறேன். இன்றைக்குத்தான் சலவை பண்ணி வந்தது."

"அது சரி" என்று அலுத்துக் கொண்டே வண்டிக்காரன் மாட்டை அவிழ்க்க ஆரம்பித்தான்.

இதற்குள் மாசிலாமணி கல்யாணத்தை நெருங்கி, "ஏன் ஸார்? ஹோம்ரூல் கல்யாணசுந்தரத்தின் மகன் கோபாலகிருஷ்ணன் வீடு இந்த ஊரில் எங்கே இருக்கிறது தெரியுமோ?" என்று கேட்டார்.

"தெரியாதே" என்றான் கல்யாணம்.

"அப்பா! மாற்றிச் சொல்லி விட்டீர்கள், 'கல்யாண சுந்தரத்தின் அப்பா கோபால கிருஷ்ணன் வீடு' என்று விசாரியுங்கள்" என்றாள் கமலா.

கல்யாணம் கமலாவைப் பார்த்தான். அவள் தன் தாயாருக்குப் பின்னால் மறைந்தும் மறையாமலும் நின்று கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய அழகிய, பெரிய, கரிய நயனங்கள் அவனுடைய சுந்தரமான முகத்தை வட்டமிடத் தவறவில்லை.

கல்யாணசுந்தரம் அந்தப் பார்வையில் சில விநாடிகள் கட்டுண்டவனாக நின்றான். பிறகு, "எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றான்.

"மதராஸிலிருந்து வருகிறோம். இந்த ஊரில் முன் பின் யாரையும் தெரியாது. அவரும் அவர் மகனும் ரொம்பப் பரோபகாரிகள் என்று கேள்விப்பட்டோம். அவர் வீட்டிலே இன்று இரவு தங்கிவிட்டு..."

"அவர் வீட்டிலே ஏற்கனவே நாலு குடும்பங்கள் வந்து தங்கியுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரி ஆறு பேர். வக்கீல் கோபாலகிருஷ்ணன் தம்முடைய கேஸ் கட்டுக்களை வைக்கக் கூட இடமில்லாமல் திண்டாடுகிறார்."

இதற்குள் காமாட்சி அம்மாள் ஓர் அடி முன்னால் வந்து, "ஏண்டாப்பா நீ யாரு?" என்றாள்.

"நான் தான் ஹோம்ருல் கோபாலகிருஷ்ணன் மகன் கல்யாண சுந்தரம்."

"நினைச்சேன். முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது."

"என்ன தெரிந்தது?"

"நல்ல பிள்ளை, உபகாரி என்று தெரிந்தது. என்னமோ அப்பா நீதான் கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கணும். வயசுப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டோம். இன்று இராத்திரி தங்க இடம் பார்த்துக் கொடுத்தாலும் போதும்."

காமாட்சி அம்மாளுக்குப் பின்னால் மறைவாக நிற்பது போல் பாவனை செய்தபடி அதன் மூலமே தன்பால் கவனத்தை ஈர்த்த கமலாவை இரண்டாவது தடவையாகப் பார்த்தான், கல்யாணம். கொஞ்சம் யோசித்தான்.

"இந்த ஊரிலே இப்போது வேறு எது கிடைத்தாலும் கிடைக்கும். தங்க இடம்தான் கிடைக்காது. மதராஸ்காரர்களில் பாதிப் பேர் இந்தச் சின்னப் பட்டணத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்."

"அப்படிச் சொல்லக் கூடாது அப்பா! நீதான் ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டும்."

"ஆகட்டும் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்த சிநேகிதர் ஒருவர் வீடு காலியாக இருக்கிறது. வடக்கு வீதியிலே தேரடி சமீபமாக வந்து சேருங்கள். அங்கே சந்திக்கிறேன்" என்று கூறிய கல்யாணம் காரை நோக்கி நடந்தான்.

"பவானி அக்கா சொன்னது சரியாகத்தான் இருக்கு. ரொம்பப் பரோபகாரிதான்" என்றாள் கமலா.

"என்னது! பவானி சொன்னாளா?" சட்டென்று திரும்பிக் கமலாவைப் பார்த்துக் கேட்டான் கல்யாணம்.

கமலா திடுதிப்பென்று அவன் நேருக்கு நேர் தன்னிடம் பேசவே பதறியவளாகத் தாயாரின் பின்னால் மறைந்து கொண்டாள்.

"ஆமாம், அந்தப் பெண் பவானிதான் சொன்னாள். அதனால்தான் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிய வந்தது" என்றார் மாசிலாமணி.

"ஏன் ஸார்! அதை முன்னாலேயே சொல்லக் கூடாது! வாங்க, வாங்க! வந்து காரிலே ஏறுங்க" என்று உபசாரம் செய்தான் கல்யாணம்.

"நடந்தே போயிடலாமே, அம்மா. எதுக்காக அவருக்குச் சிரமம்?" என்றாள் கமலா. பவானியின் பெயரைக் கேட்டதுமே கல்யாணத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை அவளால் ரசிக்க முடியவில்லை.

"பேசாமே அந்த கறுவடக டின்னைத் தூக்கிக் கொண்டு வா, கமலா! இருட்டிக் கொண்டு வருகிறது பார்" என்று உத்தர விட்டாள் காமாட்சி.

ஆளுக்கொரு பொருளாகச் சுமந்து கொண்டு போய்க் கார் டிக்கியிலும் கூரைக் காரியர் மேலும் ஏற்றினார்கள். காருக்குள் அமர்ந்து கொண்டார்கள்.

வண்டிக்காரன் இதற்குள் மாட்டை அவிழ்த்து வண்டியை நகர்த்திச் சாலையோரம் விட்டிருந்தான்.

கல்யாணசுந்தரம் டிரைவர் ஆசனத்தில் அமரக் கதவைத் திறக்கப் போனபோது, அவன், "சாமி சாமி! வாடகை!" என்று கத்தினான்.

கல்யாணசுந்தரம் ஐந்து ரூபாய் நோட்டை அலட்சியமாய் எடுத்துக் கொடுத்துப் "போ" என்றான்.

காருக்குள்ளிருந்தபடி இதைப் பார்த்த காமாட்சி அம்மாள், "இது என்ன இந்தப் பிள்ளை இப்படி ஊதாரிச் செலவு பண்ணுகிறானே" என்று கமலாவிடம் கிசுகிசுத்தாள்.

"மாமா பெரிய பணக்காரர் போலிருக்கு" என்றான் விசுவம்.

'பணக்காரனா இருந்தால் போதுமா? இப்படி வாரி வழங்க மனசு வந்து விடுமா என்ன? எல்லாம் பவானி என்கிற அந்தப் பெயர் செய்கிற மாயா ஜாலவேலை என்று கமலாவின் அந்தராத்மா கூறியது.

(தொடரும்)