கமலாவின் கள்ளம்!
சொட்டச் சொட்ட நனைந்திருந்த கமலா 'வெட வெட' வென்று நடுங்கிக்கொண்டு மிருந்தாள். பயத்தினால் அல்ல; அவளுக்கு நீந்தத் தெரியும். மேலும் கிணற்றில் மூழ்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது! அதிகமாக அதில் ஜலம் இல்லை. கிணற்றின் சுவரில் குடம் அடிபட்டுக் குடம் நசுங்கிப் போயிருந்தது. அதைக் கண்டு காமாட்சி அம்மாள் கூச்சல் போடத்தான் போகிறாள். ஆனால் கமலா நடுங்கியது அதற்காகவுமல்ல.
அப்படியானால் அவள் மேனியெல்லாம் குடுகுடுப்பாண்டியின் கை உடுக்கை போல் மாறிய தற்குக் காரணம் என்ன?
கல்யாணம் அவளைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருந்ததுதான்!
"ஐயோ!" என்று கமலாவின் குரல் கேட்ட மறு கணம் அவன் ஓடோடி வந்து கிணற் றுக்குள் இறங்கினான். "பயப்படாதே" என்று சொல்லி அவளைப் பற்றித் தூக்கி விட்டான். கிணற்றுப் படிகளைப் பிடித்துக் கொண்டு அவள் மேலே ஏறிவர உதவினான். இருவரும் வெளியே வந்த பிறகு தாம்புக் கயிற்றைச் சரிசெய்து குடத்தையும் இழுத்து வெளியே கொணர்ந்தான்.
'ஆபத்துக்குப் பாபமில்லை' என்ற கருத்தில் கல்யாணம் சற்றும் தாமதியாமல் கமலா கரையேற உதவியபோது, அவன் கரங்கள் அவள் தேகத்தைத் தீண்டிய இடங்கள் இப்போதும் அவளுக்கு இன்பலாகிரியை அளித்துக் கொண்டிருந்தன. அந்த இன்ப வேதனையே குற்ற உணர்வுடன்கூடிய பயமாகவும் மாறி அவளை உலுக்கி எடுத்தது.
தனக்கு நீந்தத் தெரியும் என்று அவள் ஏன் கூறவில்லை? தான் பயப்படவில்லை என்று அவள் ஏன் காட்டிக் கொள்ளவில்லை? கிணற்றுப் படிகளில் கால் வைத்துத் தன்னால் அவன் உதவி இன்றியே கரையேறிவிடமுடியும் என்று அவள் ஏன் அவனுக்கு உணர்த்தவில்லை?
அவன் வந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அதற்கேற்ப நடித்தாள். அவன் தன்னைத் தொட்டுத் தூக்க அனுமதித்தாள்.
ஆண் கரம் ஒன்று அவள் மீது படுவது இதுவே முதல் முறை. நான் அவனை மன மாரக் காதலிப்பது போலவே, அவனும் தன்மீது அன்பு கொண்டிருந்தால் அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள். இப்படி நடுங்கிப் பதறவும் நேர்ந்திருக்காது. கரையேறிய பிறகு அவனை ஏமாற்றி விட்டதாகக் கூறிச் சிரித்திருப்பாள். ஆனால் கல்யாணத்துக்குப் பவானியின் மீது இருந்த மோகம் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவன் தன்னைக் காப்பாற்றியது ஓர் உயிர் மற்றோர் மனித உயிரிடம் காண்பிக்கும் இயல்பான இரக்க உணர்வின் அடிப்படையில்தான். ஆனால் அவளோ அவனது ஸ்பரிசத்தை விரும்பிக் கள்ளத்தன மான முறையில் அதைப் பெற்றும் இருந்தாள். இந்தக் குற்ற உணர்வு காரணமாகத் தான் அவள் இப்போது நடுங்கிக் கொண்டிருந்தாள்!
கோயிலுக்குப் போயிருந்த காமாட்சி அம்மாளும் மாசிலாமணியும் திரும்பி வந்து சேர்ந்தார்கள்.
"கொல்லைப்புறம் ஏதோ சத்தம் கேட்கிறதே!" என்று சொல்லிக் கொண்டே காமாட்சி கிணற்றடிக்கு நடந்தாள்.
கமலா வெடவெடத்து நிற்பதோ கல்யாணம் ஈரம் சொட்ட நிற்பதோ அவள் கண்ணில் படவில்லை. முதலில் குடம்தான் அவள் கவனத்தைக் கவர்ந்தது!
"அடி பாவி! குடியைக் கெடுத்தியே! வேணுமென்றே நசுக்கினாயா? படிப்புத்தான் வரலை, வீட்டுவேலைகளையாவது உருப்படியாகச் செய்வாய் என்று பார்த்தால் அதிலும் பூஜ்யம்தானா?" என்றாள். கமலா அழ ஆரம்பித்தாள்.
கல்யாணத்துக்கு கோபம் கோபமாக வந்தது. பற்களை நறநறவென்று கடித்தான்.
இதற்குள் மாசிலாமணி, "இந்தா என்ன நடந்ததென்று விசாரியாமலேயே எதற்கு இப்படி எரிந்து விழுகிறாய்?" என்று கேட்டார். "கமலா ஏன் உன் உடம்பு நனைத்திருக்கிறது? எப்படி குடம் நசுங்கியது?" என்றார்.
"கிணற்றிலே விழுந்துட்டேன் அப்பா!"
"ஐயய்யோ! கிணற்றிலே விழுந்து விட்டாயா?" என்று அலறினாள் காமாட்சி. " 'காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொடுக்காமல் பெண்ணை வீட்டிலே வைத்துக்கொண்டிருந்தார்கள். அவள் வாழ்க்கை வெறுத்துக் கிணற்றிலே விழுந்தாள்' என்று எங்களுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தரத் திட்டம் போட்டாயா? நீயாகவே வந்து விழுந்துவிட்டாயா?"
"இல்லை! அவளாக விழவில்லை; நான்தான் பிடித்துத் தள்ளினேன்!" என்றான் கல்யாணம் ஆத்திரத்துடன்.
இது என்ன அநியாயம்?" என்று தம்பதியர் இருவரும் ஏககாலத்தில் கேட்டனர்.
"அவர் விளையாட்டுக்கு அப்படிச் சொல்கிறார் அப்பா! இவர்தான் என்னைக் கிணற்றிலிருந்து கரையேற்றிக் காப்பாற்றினார்" என்றாள் கமலா.
கல்யாணம் நடந்த கதையை விவரித்தான். எல்லாவற்றையும் கேட்டு விட்டுக் காமாட்சி அம்மாள், "நல்ல வேளை சரியான சமயத்தில் வந்து காப்பாற்றினாய். இல்லாதபோனால் எப்பேர்பட்ட அபாண்டமெல்லாம் எங்கள் மேல் ஊரார் சுமத்தி யிருப்பார்களோ! இவளுக்கு கல்யாணமாகாததால் மனக் கசப்படைந்து நானே இவளைக் கிணற்றில் பிடித்துத் தள்ளிவிட்டதாகக்கூடக் கதை கட்டி விடுவார்கள்" என்றாள்.
'பெண் கிணற்றில் விழுந்து சாகாமல் பிழைத்தது பெரிதாகப் படவில்லை. தன்மீது அபவாதம் விழாமல் தப்பியதுதான் முக்கியமாகத் தோன்றுகிறது இந்த அம்மாளுக்கு!' - கல்யாணத்துக்குக் காமாட்சியின் பேச்சு வியப்பளித்தது; கமலாவின் மீது அவனுக்குப் பரிவு அதிகரித்தது.
இந்தச் சமயம் வீட்டுக்கார ரங்கநாத முதலியார் வந்து சேர்ந்தார். வரும்போதே "இரண்டு மாத வாடகை பாக்கி. கொடுக்க முடியவில்லை என்றால் வீட்டைக் காலி பண்ண வேண்டியதுதான்" என்று கூறியபடியே வந்தார்.
"நல்ல ஆளய்யா நீர்! கூரை பற்றி எரியும் போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதையாக இருக்கிறது உமது போக்கு" என்றான் கல்யாணம்.
"கூரை எரிகிறதோ இல்லையோ என் வயிறு பற்றித் திகுதிகுவென்று எரிகிறது, கல்யாணம்! உன் பேச்சைக் கேட்டு இவர்களை இங்கே குடி வைத்தேன் பார்!"
"முதலியார் ஸார்! நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். இந்த மனுஷனுக்கு ஒரு வாரமாக உடம்பு சரியில்லை. வேலை கிடைத்தும் கூடப் போக முடியவில்லை. இந்தப் பெண்ணோ கிணற்றில் விழுந்து விட்டாள்."
"ஐயையோ! ஏன்! ஏன்?"
"உங்களால்தான்!"
"இது என்ன வீண் பழி? நான் இந்த வீட்டுக்கு வந்தே ரொம்ப நாளாயிற்றே.இரண்டு மாசத்துக்குப் பிறகு இன்றுதானே வருகிறேன். வாடகையைக் கொடுத்து அனுப்பி யிருந்தால் இப்போதுகூட வந்திருக்க மாட்டேனே!"
"அதுதான் நீங்கள் செய்த தவறு" என்றான் கல்யாணம். "ஏதடா, அயலூரிலிருந்து மனிதர்கள் வந்து நம் வீட்டில் தங்கியிருக்கிறார்களே, அடிக்கடி வந்து பார்த்துக் கவனித்துக் கொள்வோம் என்று தோன்றாதோ ஒரு மனுஷனுக்கு?"
"நீதான் கவனித்துக் கொள்கிறாயே என்று இருந்துவிட்டேன்." "அதன் விளைவைப் பாருங்கள். பாவம், இவள் கிணற்றில் விழ நேர்ந்தது!"
"அதெப்படி நான் இங்கு வராததற்கும் அவள் கிணற்றில் விழுவதற்கும் என்ன சம்பந்தம்?"
"நீங்கள் அடிக்கடி வந்து பார்த்திருந்தால் தண்ணீர் இழுக்க இவள் படும் சிரமத்தை உணர்ந்திருப்பீர்கள். ஒரு பம்பு செட் வைத்துக் கொடுத்திருப்பீர்கள். குழாயைத் திறந்தால் ஜலம் வந்திருக்கும். இவள் கிணற்றில் நீர் இழுக்கப் போயிருக்க மாட்டாள். கிணற்றுக்குள் விழுந்திருக்கவும் மாட்டாள்!"
"வாஸ்தவம்தான். நாளைக்கே நான் ஏற்பாடு பண்ணி விடுகிறேன்" என்ற ரங்கநாதன் கமலாவைக் கனிவு ததும்பப் பார்த்தார்.
"பாவம்! கமலா ஈரத்தோடு நிற்கிறாளே! உடம்பு வெட வெடவென்று நடுங்குகிறதே. போம்மா, போ! உள்ளே போய் வேறு புடவை மாற்றிக்கொள்" என்றார். கல்யாணம் ரங்கநாத முதலியாரை அணுகி அவர் காதோடு பேசினான்: "வேறு மாற்றுப் புடவை இருக்கோ என்னமோ யார் கண்டது? இந்தச் சமயத்தில் நீர் வாடகையை வசூல் பண்ணுகிறேன் என்று வேறு வந்துவிட்டீர்."
ரங்கநாத முதலியார் உடனே மாசிலாமணியைப் பாரத்து, "பாவம், உங்கள் நிலைமையை யோசித்தாலும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. இன்னும் ஒரு மாசம் தவணை தருகிறேன். அதற்குள் மூன்று மாத வாடகையையும் சேர்த்துக் கொடுத்து விடுங்கள்!" என்றார்.
"அதற்கென்ன கூட இரண்டு மாச அட்வான்ஸும் சேர்த்துத் தருகிறேன்" என்றார் மாசிலாமணி தைரியம் அடைந்தவராக.
கல்யாணம் அந்தக் குடும்பத்துக்கு அடுத்தடுத்து மூன்று உதவிகளைச் செய்துவிட்ட திருப்தியுடன் புறப்பட்டான். கமலாவைக் காப்பாற்றியாகி விட்டது; பம்பு செட்டுக்கு ஏற்பாடு செய்தாகி விட்டது; வாடகை கொடுக்க ஒரு மாச அவகாசம் பெற்றுத் தந்தாகி விட்டது! "நான் வருகிறேன்; வீட்டுக்குப் போய் உடை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று கூறிப் பிரிந்தான்.

