பாங்குக் கொள்ளை!
போர்ட்டிகோவில் காருக்குப் பக்கத்தில் நின்ற இருவரும் கோவர்த்தனனுக்கு சல்யூட் செய்தனர்.
"என்ன விஷயம்?" என்றார் கோவர்த்தனன் வராந்தாவில் நின்று.
இருவரும் பாக்கெட்டுகளிலிருந்து அடையாளச் சீட்டுக்களை எடுத்து நீட்டியவாறே "ஸி.ஐ.டி." என்றனர்.
அடையாளச் சீட்டுக்களைப் பார்க்க அவசியமில்லை என்பது போல் கரம் அசைத்துவிட்டு, "என்ன வேணும்?" என்றார் கோவர்த்தனன்.
"கல்கத்தா சென்ட்ரல் ஜெயில்லேயிருந்து ஒரு கைதி 'எஸ்கேப்' ஆகிவிட்டான் ஸார்! சென்னைக்கு அவன் வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு ஃபோட்டோவும் மெஸ்ஸேஜும் அனுப்பி வைச்சாங்க. மெட்ராஸில் அலர்ட்டாகி அலசியதிலே இந்தப் பக்கம் அவன் வந்து தலைமறைவாகி யிருக்கலாம்னு துப்புக் கிடைச்சுது.
"ஸோ? அரெஸ்ட் வாரண்ட் வேணுமா? நாளைக்கு கோர்ட்டுக்கு வாங்க."
"நோ ஸார். ஏற்கனவே வாங்கி வைத்திருக்கிறோம்."
"பின்னே? ஆசாமியைக் கண்டுபிடிச்சீங்களா இல்லையா?
" இன்னும் இல்லை ஸார். போட்டோவைக் காட்டி விசாரிச்சுக்கிட்டு வருகிறோம். அவர்களில் சிலர்...."
"என்ன சொல்றாங்க?"
"அந்தப் படத்தைப் பார்த்தால் உங்களைப் போலவே இருப்பதாகச் சொன்னாங்க."
"நான்ஸென்ஸ்! என்ன விளையாடறீங்களா? இல்லே குடிச்சுட்டு வந்தீங்களா? என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. கெட் அவுட்!"
"எக்ஸ்கியூஸ் மி ஸார்! கோபப்படாதீங்க. அவங்க பேச்சுக்கு நாங்க மதிப்புக் கொடுக்கலைதான். ஆனாலும் டியூட்டியைச் செய்தாகணுமே!"
கோவர்த்தனனுக்கு எரிச்சலாக வந்தது. இன்று ஒரே கடமை வீரர்கள் மயம். பவானி நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதால் ஒத்திகைக்குப் போக வேண்டியது தன் கடமை என்கிறாள். வீட்டுக்கு வந்தால் மணி குடிக்கக் கூடாது என்று எச்சரிப்பது தன் கடமை என்கிறான். போதாக் குறைக்கு இந்த ஸி.ஐ.டி.க்கள் வேறு கடமையைச் செய்ய வந்து விட்டார்கள்! "சரி, டியூட்டியைச் செய்தாச்சுல்ல? என்னைப் பார்த்தாச்சு. நான் அவனைப் போலில்லை யல்லவா? நீங்கள் கிளம்பலாம். எனக்கு வேலை இருக்கு."
"ஸாரி ஸார். அவங்க சொன்னதிலே அவ்வளவா தப்பில்லைன்னுதான் உங்களைப் பார்த்ததும் தோன்றுகிறது. அந்த ஃபோட்டோ கிட்டத்தட்ட உங்களைப் போலவேதான் இருக்கு. உங்களுக்கு மீசை இல்லை, கண்ணாடி போட்டிருக்கிங்க, கொஞ்சம் 'யங்' காத் தெரியறீங்க. ஆனால் இவற்றால் ஒற்றுமைகளை மறைக்க முடியவில்லையே?"
கோவர்த்தனனுக்குத் திடும்மென்று உடல் நெடுக ஒரு மின்னல் பாய்ந்தது போல் இருந்தது. நிலை வாசலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, "எங்கே கொடுங்கள் அந்தப் படத்தை" என்று கேட்டு வாங்கிப் பார்த்தார். அவர் கரம் லேசாக நடுங்கியது. தலையைச் சுற்றவும் ஆரம்பித்தது. அது மது அருந்தியதன் விளைவா அல்லது இந்தப் படத்தைப் பார்த்ததனால் உண்டான கலக்கமா? உடலின் பதற்றத்தையோ மனத்தின் உளைச்சலையோ அவர்களிடம் காட்டிக் கொள்ளாதிருக்கப் பெரு முயற்சி செய்து இயல்பாக நடப்பது போல் அடியெடுத்து வைத்து, அவர் வராந்தாவில் இருந்த பிரம்பு நாற்காலிகளுள் ஒன்றில் அமர்ந்தார். படத்தை ஒரு முறைக்கு இரு முறையாகப் பார்ப்பது போலும் யோசிப்பது போலும் சற்று நேரத்தைக் கடத்தினார். பிறகு "பாங்க் ராபரியா?" என்றார்.
ஸி.ஐ.டி.க்கள் வியப்படைந்தனர். "ஆமாம் ஸார்! பாங்குக் கொள்ளைதான். உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார் அவர்களில் ஒருவர்.
"நான் சம்பவம் நிகழ்ந்தபோது கல்கத்தாவில்தானே இருந்தேன்?" என்றார் கோவர்த்தனன் "எனக்கு இந்தக் கேஸ் நன்றாகத் தெரியும். நான் லா பிராக்டிஸ் ஆரம்பித்து நன்றாக முன்னுக்கு வந்து கொண்டிருந்த சமயம். எங்கள் வக்கீல்கள் வட்டாரத்திலே ஒரே ஸென்ஸேஷன். இவன் கொள்ளையடிச்சான், அகப்பட்டுக் கொண்டு கம்பி எண்ணினான் என்பதால் இல்லை. அது சகஜம். இந்தப் பயலோட அப்பா ஊரிலே பெரிய மனுஷன். செல்வாக்குள்ளவன். பொது ஜனங்களுக்கு ஒரு விவரமும் தெரிய வராதபடி நியூஸ் பேப்பர் ஆபிஸ் முதலாளிங்களுக்கெல்லாம் ஃபோன் பண்ணி விஷயத்தை அப்படியே அமுக்கிட்டான். அதுதான் எங்களைப் பொறுத்த மட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. புரியுதா?"
"எஸ் ஸார்!"
"வழக்கறிஞர் வட்டாரத்திலே அதிகமாக இவனைப் பற்றிப் பேச மற்றொரு காரணம் இவன் ஒரு தீவிர சோஷலிஸ்டு, புரட்சி இயக்கத்துக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே பாங்கைக் கொள்ளையடித்தான் என்பது என்ன நான் சொல்ற்து சரிதானா?"
ஆமாம் ஸார். மெட்ராஸுக்கு வந்த மெஸ்ஸேஜிலே அப்படித்தான் கண்டிருக்கிறது." "பெரிய கிரிமினல் அப்பா இவன். எப்பேர்ப்பட்ட கில்லாடியா யிருந்தால் சிறையிலிருந்து தப்பி வந்திருப்பான்! சீக்கிரமே பிடிச்சு மறுபடியும் உள்ளே தள்ளலேன்னா சமூகத்துக்கே ஆபத்து. அண்டர் கிரௌண்ட் இயக்கத்துக்கு ஆதரவா இவன் என்ன வேணுமானாலும் செய்வான். கொலைக்குக் கூடத் தயங்க மாட்டான். நீங்க என்ன இப்படி அலட்சியமா இருக்கீங்க?"
"இல்லை ஸார்! எங்களால் முடிந்த்ததையெல்லாம் செய்துக்கிட்டுத்தான் இருக்கிறோம்."
"அப்படிச் சொல்லிப் பிரயோஜனமில்லே! இப்ப எங்கிட்ட எதுக்கு வந்தீங்க? இவனைக் கண்டு பிடிக்க முடியல்லேன்னு ஒப்பாரி வைக்கவா? யூ மஸ்ட் ஃபைண்ட் ஹிம். அதுவும் சீக்கிரமாப் பிடிக்கணும். இல்லேன்னா போலிஸ் இலாகாவுக்கே அவமானம். நானே உங்களைப் பற்றி புகார் பண்ணும்படி யிருக்கும். இப்போ யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. தெரியுமல்லவா? யுத்த முயற்சிக்கு இந்த அண்டர் கிரௌண்ட் பேர்வழிங்க பெரிய முட்டுக்கட்டை என்பதைப் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்களா!"
"ஆமாம் ஸார்; தெரியும் ஸார்."
"என்னய்யா தலையாட்டிப் பொம்மை மாதிரி எதைச் சொன்னாலும் 'ஆமாம் ஸார், எஸ் ஸார்'னு பேசறீங்களே யொழிய காரியத்திலே ஒண்ணையும் காணோம்?" படத்தை அவர்கள் பக்கமாகக் கோபத்துடன் வீசினார் கோவர்த்தனன். ஒருவர் குனிந்து பொறுக்கிக் கொண்டார்.
"இன்னும் ஒரு வாரத்துக்குள் எனக்கு நிலைமை பற்றி ரிப்போர்ட் பண்ணுங்க. இல்லாத போனால் நான் கவர்னருக்கு இதுபற்றி எழுதும்படி இருக்கும்."
"அதற்கு அவசியம் நேராது ஸார். அவசரப்படாதீங்க. நாங்க எப்படியும் கண்டு பிடிச்சுடறோம்."
"யாரோ உளறினான் என்பதற்காக நான்தான் இந்தக் கைதியா என்று சோதித்துப் பார்க்க வந்தீங்களா?அப்படி நீங்க வந்ததும் ஒரு விதத்தில் நல்லதாப் போச்சு. டிபார்ட்மெண்ட் எவ்வளவு மோசமா செயல்படுகிறது என்பதை எனக்குப் புரிய வைச்சீங்க. ஏம்பா அசப்பிலே பார்த்தா ஒரே மாதிரியா அமையறது ஆண்டவன் படைப்பிலே உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதா? எத்தனை வருஷ சர்வீஸ் உங்களுக்கு?"
"பதினைஞ்சு வருஷம்."
"எனக்குப் பன்னிரண்டு."
"அவ்வளவு சர்வீஸ் ஆனவங்க மாதிரி தெரியலையே. நடத்தையிலே அனுபவத்தின் சுருசுருப்போ திறமையோ காணுமே."
"இன்னும் கஷ்டப்பட்டுத் தேடறோம் ஸார்!" செய்யுங்க. உங்கள் முயற்சியின் பலனை எனக்கு ஒரு வாரத்துக்குப் பிறகு வந்து சொல்லுங்க."
அவர்கள் போன பிறகு உள்ளே வந்த கோவர்த்தனன் சோடா கலப்பதற்காக விஸ்கியைக் கோப்பையில் ஊற்றப்போனார். சட்டென்று மனம் மாறியவராக ஒரு வாய் பாட்டிலோடு கவிழ்த்துக் கொண்டார் எரிச்சலுடன் தொண்டையில் மது இறங்கியபோதிலும் அவரது மன எரிச்சலை விட அது அதிகமாகத் தெரியவில்லை.
(தொடரும்)

