நெருப்பாக ஒரு நெடுமூச்சு
மாசிலாமணி முதலியார் தம் மனைவியிடம், "இந்த வீட்டுக்காரர் என்ன, நாம் ஒரு நாள் தங்கினாலும் ஒரு மாதத்து வாடகை கொடுத்தாக வேண்டும் என்று சொல்லி விட்டுப் போகிறாரே, இது என்ன அநியாயம்?" என்று அலுத்துக் கொண்டார்.
"அந்தப் பிள்ளை அவரைத் தூக்கி அடிப்பது போல் பேசுகிறான். 'ஒரு மாதமென்ன மூணு மாத வாடகை வேணுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்கிறான். இந்த மாதிரி ஊதாரியை நான் பார்த்ததே இல்லை" என்றாள் காமாட்சி.
"அவர் விளையாட்டுக்காக அப்படிச் சொன்னார் அம்மா!" என்றாள் கமலா.
இதற்குள் முன் பக்கம் சற்று நசுங்கிப் போன கோலத்தில் வாசலில் கார் வந்து நின்றது. கல்யாணமும் பவானியும் இறங்கி உள்ளே வந்தார்கள்.
"ஆமாம்; விளையாட்டாகத்தான் சொன்னேன்" என்றான் கமலா கூறியதைக் கேட்டுக் கொண்டே வந்த கல்யாணம். "ரங்கநாத முதலியார் கடுமையாகப் பேசுகிறாரே ஒழிய ரொம்ப நல்லவர். நீங்கள் இருக்கிற நாளைக்கு வாடகை கொடுங்கள் வாங்கிக் கொள்வார்."
பவானி, "உங்களுக்கு இங்கே எல்லாம் வசதியாக இருக்கிறதா?" என்று கேட்டாள். கல்யாணத்தைத் தேடிப் பிடித்து உங்களிடம் அனுப்புவதாகக் கூறிவிட்டு வந்தேன். ஆனால் இவரை நான் காண்பதற்கு முன் இவரே உங்களைப் பார்த்து விட்டார்."
"அப்படியொன்றும் வசதியான வீடு என்று சொல்வதற்கில்லை" என்றாள் காமாட்சி.
"இந்தப் பழைய வீட்டுக்கு எழுபத்தைந்து ரூபாய் வாடகையாமே?"
"அப்படித்தான் சொல்வார். கொடுத்ததை வாங்கிக்கொள்வார்" என்றான் கல்யாணம்.
"ஏன் மாமா! சுவரிலே ஆணியே அடிக்கப் படாதோ? அக்காவின் கண்ணாடியை மாட்டுவதற்குக்கூட ஆணி அடிக்கக் கூடாதோ?" என்றான் விசு.
"அதிகமாக அடிக்கக் கூடாது. ஒன்றிரண்டு அடித்தால் பாதகமில்லை."
"என்னமோப்பா நீ நல்ல பிள்ளையாய் இருக்கிறாய். நாங்கள் இந்த ஊரிலே இருக்கும் வரையில் நீதான் எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்."
"ஆகட்டும். உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால் இந்தப் பையனை அனுப்புங்கள். ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் வீடு என்று கேட்டால் சொல்லுவார்கள்."
"பிரமாதமா ஒண்ணும் வேண்டாம். நாலு எலெக்ட்ரிக் லைட் போட்டுக் கொடுத்து அம்மி, கல்லுரலுக்கு ஏற்பாடு பண்ணி, சமையல் அறையில் அடுப்பைக் கொஞ்சம் சரிப்படுத்தி விட்டால் போதும்."
"செய்துவிடலாம். நான் ரங்கநாதனிடம் பேசுகிறேன். முடித்துத் தருவார். தங்கமான மனுஷன்."
"அம்மா பசிக்கிறது" என்றான் விசு.
காமாட்சி மாசிலாமணி இருந்த பக்கம் திரும்பினாள். "ஏங்க, மார்க்கெட்டுக்குப் போய் ஏதாவது காய்கறி வாங்கிக்கொண்டு வருவதுதானே?" என்றாள். பிறகு, "அடி கமலா! ஏன் சும்மா நிற்கிறாய்? உள்ளே போய் அடுப்பு மூட்டு!" என்று அதட்டினாள்.
"விறகு இல்லையே அம்மா!" என்று நினை வூட்டினான் விசு.
கல்யாணம், "இன்று ராத்திரி சமையல் வைத்துக் கொள்ள வேண்டாம். ஹோட்டலிலிருந்து சாப்பாடு அனுப்பி விடுகிறேன்" என்றான்.
"நீ மகராஜனாய் இருப்பாய். அடி கமலா! காரியரைத் தேய்ச்சு வைச்சயா இல்லையா? எடுத்துக் கொடேன்."
பவானியும் கல்யாணமும் விடைபெற்றுப் போனார்கள். "ரொம்ப நல்ல பிள்ளை. இந்த மாதிரி நமக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்கக்கூடாதோ?" என்றாள் காமாட்சி.
"கிடைப்பான், கிடைப்பான். இவன் அப்பா இந்த ஊரிலேயே பெரிய வக்கீலாம்" என்றார் மாசிலாமணி.
இந்தச் சமயத்தில் கமலா மெல்ல நழுவிக் காமிரா உள்ளில் இருந்தபடி ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள். கல்யாணமும் பவானியும் சிரித்துப் பேசியபடி காரின் முன்புறம் அருகருகே அமர்வதைக் கண்டாள். கார் கிளம்பி விரைந்தது. நெடுமூச்சு ஒன்று அவள் நெஞ்சிலிருந்து அவளையும் அறியாமல் எழுந்தது. நெருப்பாக அவளைத் தகித்தது அது.
"இவன் தகப்பனார் பெரிய வக்கீலா யிருந்தால் என்ன? என் அப்பா கூடத்தான் தாசில்தார்" என்று காமாட்சி சொல்லிக் கொண்டிருந்தாள்.
"போதும்; போதும்! உன் பிறந்த வீட்டுப் பெருமையை ஆரம்பித்து விடாதே! அவ்வளவு லஞ்சம் வாங்கிச் சேர்த்தாரே காலணா மிச்சம் வைத்து விட்டுப் போனாரா? அத்தனையையும் அழிச்சு ஒழிச்சார்."
"ஐயய்யோ, அந்த உத்தமரைப் பற்றி அப்படிச் சொல்லாதீர்கள். பணம் காசைக் கையாலும் தொட மாட்டாரே!"
"லஞ்சம் வாங்குகிற எந்தப் பேர்வழி ஒத்துக் கொள்வான். தான் பணம் காசுக்கு ஆசைப்படுவதாக? அகப்பட்டுக் கொண்டால் வழக்காடக்கூட உண்டியல்தான் குலுக்குவான்."
"போதுமே அம்மா உன் பேச்சு! பேசாமல் படுத்துக் கொள்ளேன்" என்றாள் கமலா.
"இன்னும் சாப்பாட்டுக் கடையே முடியலையேடி?"
"அப்படியாவது அவா வாங்கி அனுப்பிச் சாப்பிடணுமா? அவரிடம் காசையாவது கொடுத்திருக்கக் கூடாதா? எனக்கு வேண்டாம் சாப்பாடு. எனக்குப் பிடிக்கவுமில்லை. பசிக்கவுமில்லை. போய்ப் படுத்துக்கறேன்" என்றாள் கமலா.
'இது என்ன இந்தப் பெண்ணுக்குத் திடீரென்று அலுப்பு வந்து விட்டது?' என்று புரியாமல் கணவனைப் பார்த்தாள் காமாட்சி.

