கிணற்றில் கமலா!

கமலா அடுப்பு ஊதினாள். புகை வந்ததே தவிர நெருப்புப் பற்றவில்லை. "சனியனே! இரு, இரு! சண்டித்தனமா பண்ணுகிறாய்? என்றாவது ஒரு நாள் என்னிடம் நாலு நோட்டுக் கிடைக்காமல் போகாது. அப்போ கள்ளச் சந்தையிலே பாட்டில் கிரசின் வாங்கி அத்தனையையும் உன் தலையிலே அபிஷேகம் பண்ணி நெருப்பு வைக்கிறேன்" என்று கருவிக் கொண்டாள் கமலா, கண்களைக் கசக்கியபடியே.

"பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சே, சாப்பாடு ரெடியா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் விசு.

"விரட்டறதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லே. காலமே வந்து கொஞ்சம் கூடமாட ஒத்தாசை பண்ணப்படாதோ?" என்றாள் கமலா.

"எனக்கு 'ஹொம் ஒர்க்' இருந்தது."

"இல்லாட்டா உதவி பண்ணிக் கிழிக்கிறாயாக்கும்?"

"நான் ஏன் உதவணும்? நீ இழுக்கிற இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க நான் என்ன கல்யாணம் மாமாவா? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேனா?"

"தடி ராஸ்கல் ! உனக்குச் சோறு கிடையாது, போ! பழையதுதான்" என்று பொய்க் கோபத்துடன் சீறினாள் கமலா. அவன் கூறியதை அவள் மனம் வருடித் தந்து கொஞ்சியது.

"பழையதுதான் உடம்புக்கு நல்லது; அதோடு சட்டித் தயிரையும் வடுமாங்காயையும் எடு."

அவனை மகிழ்விக்க ஆடைத் தயிராக எடுத்துப் போட்ட கமலா, "ஏண்டா, கொஞ்ச நாளா கல்யாணம் மாமாவையே காணுமே? ஏன் வரதேயில்லை?" என்று கேட்டாள்.

"அவருக்குக் கல்யாணம்!"

"என்ன? எங்கே? எப்போது?" என்று பதறினாள் கமலா.

"நிஜக் கல்யாணம் இல்லை, அக்கா. நீ பயப்படாதே. நாடகத்திலேதான்!" என்றான் விசு.

"ஓ! ஏதோ பர்மா அகதி, அது இது என்றார்களே."

"ஆமாம், ஆமாம்! அந்த அது இதுக்காகத்தான் நாடகம்!" என்று கூறி எழுந்த விசு, புத்தகப் பையை இடது கரத்தில் தூக்கிக் கொண்டு, ஓடினான். "இரண்டு நிமிஷம் லேட்டானால்கூட அந்த இரட்டை மண்டை பெஞ்சு மேலே ஏற்றி விடுகிறது!" என்று அவன் தன் உபாத்தியாயரை முற்றத்திலிருந்து வாழ்த்துவது கமலாவின் காதுக்கு எட்டியது.

"பர்மா அகதி, பர்மா அகதி!" என்று முணு முணுத்துக் கொண்டாள் கமலா. "பர்மாவிலிருந்து வந்த அகதிகளுக்குத் தான் மவுசு. உள்ளூர் அகதியாக இருந்தால் யார் லட்சியம் பண்ணுகிறார்கள்?" என்று தன்னைத் தானே கோபத்துடன் கேட்டுக் கொண்டு குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொல்லைப்புறம் நடந்தாள். அதைப் புளி போட்டுத் தேங்காய் நாரினால் அழுந்த அழுந்தத் தேய்த்தாள். "பர்மா அகதி களாம், நாடகமாம், நாடகத்தில் ஒரு கல்யாணமாம். இந்த ஏழையின் ஞாபகம் அவ ருக்கு எங்கே வரப் போகிறது!"

அவளுக்குக் கோபம் வந்தது. குடத்தைக் கழுவியதோடு தண்ணீர் தீர்ந்து விட்டது. தாம்புக் கயிற்றில் குடத்தை மாட்டி, விருட்டென்று சுருக்கை இழுத்து ஆத்திரத்துடன் சரேலென்று கிணற்றில் இறக்கினாள். அந்த வேகத்தைச் சமாளிக்க முடியாமல் கயிறு ஜகடையிலிருந்து நழுவிச் சிக்கிக் கொண்டது.

"தரித்திரம்! நான் பெண்ணாய்ப் பிறந்ததே அடுப்புப் புகையுடனும் கிணற்று ஜகடையுடனும் போராடத்தான்" என்று அலுத்துக் கொண்டு கயிற்றைச் சரி செய்ய முயன்றாள்; எட்டவில்லை. கிணற்று மதில்மீது ஏறினாள். சாய்ந்தாள்.

அதே சமயம் வாசலில், "ஸார்! ஸார்!" என்ற குரல் கேட்டது. அது கல்யாணத்தின் குரல்தான் !

'ஐயோ! அவர் என்னை இந்தக் கோலத்தில் பார்த்துவிடக் கூடாதே' என்று எண்ணிய மாத்திரத்தில் கமலாவின் உடல் பதறியது.

மாசிலாமணி பதில் குரல் தராதது கண்டு அடுத்தாற்போல் கல்யாணம், "கமலா!" என்று அழைத்தபடி முற்றத்தைத் தாண்டி வந்தான்.

'கமலா' என்று அவன் அழைப்பது கேட்டதோ இல்லையோ, இவள் மேனியின் மயிர்க் கால்களெல்லாம் லட்சோப லட்சம் குரல்கள் - கல்யாணத்தின் குரல்கள் - 'கமலா' என்று அன்பும் உரிமையும் ததும்ப அழைக்கும் குரல்கள் - புகுந்தன. அந்த இன்ப ஹிம்சையைத் தாள முடியாமல் அவள் நடுங்கினாள். முதலில் ஏற்பட்ட கூச்ச பயம் அடுத்து உண்டான இன்ப வேதனை இரண்டும் அவளை உலுக்கி எடுத்து உள்ளே தள்ளி விட்டன!

கமலா கிணற்றுக்குள் 'தொபீர்' என்று விழுந்தாள். "ஐயோ!" என்று அவள் அலறுவது அதற்கு முன்பாகவே கேட்டது. அப்புறம் நிசப்தம்தான் !

(தொடரும்)