நீரில் மிதந்த விழிகள்
சற்றுத் தூரம் போகும் வரை இருவரும் பேசவில்லை. பிறகு இருவரும் ஒரே சமயத்தில், "ஏன் இவர்கள் இவ்வளவு மோசமானவர்களாக..." என்று பேச்சை ஆரம்பித்தார்கள். உடனேயே இருவரும் மற்றவர் பேச அனுமதித்து வாக்கியத்தைப் பாதியில் நிறுத்திக் கொண்டார்கள். மீண்டும் இருவரும் ஒரே சமயத்தில், "என்ன சொன்னீர்கள் ?" என்று கேட்டார்கள்.
இதையடுத்து இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது. பலமாகச் சிரித்த பவானி, ஒருவாறு அது ஓய்ந்ததும், "சிரிக்கவே கூடாது, நான். அந்தப் பெண்ணைப் பார்த்தால் அத்தனை பரிதாபமாக இருக்கும்போது நான் சிரிப்பதே பாவம்" என்றாள். அப்புறம் முதலில் கேட்க ஆரம்பித்துப் பாதியில் நிறுத்திய கேள்வியை மீண்டும் கேட்டாள். "ஏன் இப்படி இவர்கள் இவ்வளவு மோசமாகத் திடீரென்று நடந்து கொண்டார்கள்?"
"விட்டுத் தள்ளுங்கள், அநாகரிகமான ஜனங்கள். படிப்புக் கிடையாது, நாகரிகம் கிடையாது, நல்ல மனிதர்களோடு பழக்கம் கிடையாது. தெரிந்த லட்சணம் அதுதான்" என்றான் கல்யாணம்.
"அதொன்றுமில்லை. நேற்று வரை நல்லபடியாகத்தானே நடந்து கொண்டார்கள்?"
"தரித்திரமும் கஷ்டமும் இப்போது அதிகமாகிவிட்டது. அது காரணமாயிருக்கலாம்."
"இந்தக் குடும்பத்தைப் பார்த்தால் எனக்கு 'ஐயோ பாவம்' என்றிருக்கிறது. நீங்கள் ஏதும் உதவி செய்யக் கூடாதா?"
"ஓரளவுக்குத்தான் உதவலாம். எவ்வளவுதான் செய்ய முடியும்? ஒரு குடும்பத்தை என்றென்றைக்கும் தாங்குவது சாத்தியமா? அவரவர் காரியத்தை அவரவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்."
"எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது."
"என்ன யோசனை?"
"நீங்கள் அந்தப் பெண் கமலாவைக் கல்யாணம் செய்து கொண்டுவிட்டால் அவர்கள் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும்."
"என்ன விளையாடுகிறீர்கள்?"
"விளையாட்டு என்ன வந்தது? உங்களுக்கோ இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அந்தப் பெண்ணோ கஷ்டப்படுகிறாள். ஒவ்வொரு சமயம் அந்த அம்மாள் கமலாவை நடத்துவதைப் பார்த்தால் சொந்தத் தாய் இல்லையோ, மாற்றாந் தாயோ என்றுகூடத் தோன்றுகிறது."
"நானும் அப்படி நினைத்ததுண்டு. ஆனால் தரித்திரத்தின் கொடுமைதான் அப்படியெல்லாம் பேசச் சொல்கிறது என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்."
"ஏதாவது இருக்கட்டும். நான் சொன்ன படி நீங்கள் செய்தால் நல்லது. கமலாவும் ரொம்ப நல்ல பெண். கண்ணுக்கு லட்சணமாய் இருக்கிறாள். உங்கள் தாயாருக்கும் அதிகமாகப் படிக்காத, குடும்பப் பாங்கான பெண் தான் நாட்டுப் பெண்ணாக வரவேண்டும் என்று ஆசை. போதாக்குறைக்கு அவளை நீங்கள் கிணற்றிலிருந்து எடுத்துக் காப்பாற்றியிருக்கிறீர்கள்!"
"அதனாலே என்ன? ஒரு பெண்ணைக் கிணற்றிலிருந்து எடுத்துக் காப்பாற்றிய குற்றத்துக்காக நான் கழுத்திலே கல்லைக் கட்டிக் கொண்டு கடலிலே விழ வேண்டுமா?"
"சேச்சே! அப்படிச் சொல்வேனா? 'சம்சார சாகரத்தில் கமலாவுடன் கரம் கோத்துக்கொண்டு இறங்குங்கள்' என்றுதான் சொல்கிறேன்."
"இதோ பாருங்கள்! கமலா வேணுமானால் மறுபடியும் என் எதிரேயே கிணற்றில் விழட்டும். நான் காப்பாற்றாமல் கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறேன். ஏதோ மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டதற்காக எனக்கு இத்தனை பெரிய தண்டனையைக் கொடுக்காதீர்கள்!"
"கல்யாணம் என்றால் உங்களுக்கு அவ்வளவு வெறுப்பா? எனக்குத் தெரியாமல் போச்சே. எனக்கும் கல்யாணத்தின் பேரில் வெறுப்புத்தான்!"
"என்னது? உங்களுக்கு என் மேலே வெறுப்பா?" என்றான் கல்யாணம் பொய்க் கோபத்துடன்.
பவானி சிரித்தாள். "இல்லை, இல்லை! உங்களைப் போலவே எனக்கும் திருமணத்தின் மீது வெறுப்பு' என்று சொல்லி இருக்க வேண்டும்."
"உங்கள் நிலைமை எப்படியோ, எனக்கொன்றும் திருமணத்தின் மீது வெறுப்பில்லை. என் பெயரே கல்யாணம் என்றிருக்கும்போது தாலி கட்டத் தயங்குவேனா? என் மனசுக்கு உகந்த பெண்ணாயிருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நியாயமான நிபந்தனைதான்.... உதாரணமாய் நாம் இரண்டுபேரும்தான் இருக்கிறோம்.... சும்மா ஓர் உதாரணத்துக்கு..... பேச்சுக்குச் சொல்கிறேன்."
"பேச்சுக்குக்கூடச் சொல்ல வேண்டாம். எனக்குக் கல்யாணம் என்றால் ரொம்ப வெறுப்பு. அதை மறக்காதீர்கள்" என்றாள் பவானி.
கல்யாணம் அவள் குரலில் எட்டிப்பார்த்த கடுமையைப் புரிந்து கொண்டு மௌனமானான். இதற்குள் அவன் வீடு வந்து விட்டது. கதவைத் திறந்து கொண்டு இறங்கப் போனவனை, "மிஸ்டர் கல்யாணம்" என்ற கனிவான அழைப்பு தடுத்து நிறுத்தியது.
"என்ன சொல்லுங்கள்!"
"கமலா கிணற்றில் விழுந்தாளே, எப்படி?"
"தாம்புக் கயிறு ஜகடையில் சிக்கிக் கொண்டதாயும் அதை விடுவிக்கக் கிணற்று மதில் மீது தான் ஏறியதாகவும் தடுமாறி விழுந்ததாகவும் சொன்னாள்."
"சுத்தப் பொய்!"
"என்னது!"
"ஆமாம் அது சுத்தப் பொய்யாகத்தான் இருக்க வேண்டும். நான் சொல்கிறேன். அவள் உங்கள் குரலை வாசலில் கேட்டுவிட்டு வேண்டுமென்றே, "ஐயோ!" என்று அலறியபடி கிணற்றுக்குள் குதித்திருக்கிறாள்!"
"உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"பாம்பின் கால் பாம்பறியும்! பெண் மனத்தைப் பெண்ணால்தான் புரிந்து கொள்ள முடியும். உங்களால் காப்பாற்றிக் கரை சேர்க்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டு விழுந்திருக்கிறாள். கல்யாணம் உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு ஏமாற்றம் அளிக்காதீர்கள்!"
கல்யாணம் கீழே இறங்கிக் கதவைச் சாத்தினான். பிறகு குனிந்து ஜன்னல் வழியே பவானியைப் பார்த்தான். பூரண சந்திரனின் பாலொளி அவள் முகத்தை மற்றொரு சந்திரனாகப் பிரகாசிக்கச் செய்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்த மதிவதனத்திலிருந்து தன் விழிகளைப் பெயர்க்காமல் பேசினான்: "கமலாவைப் போலவே நானும்தான் ஒருவர் மீது உயிரையே வைத்திருக்கிறேன். ஆனால் அந்த ஒருத்தி கமலாவாக இல்லையே நான் என்ன செய்ய?" என்று கேட்டான்.
நான்கு விழிகள் நீரில் மிதந்தன.
(தொடரும்)

