மர்ம மங்கை

ராமப்பட்டணம் அனுமார் வீதியில் ஒரு கட்டிடத்தின் வாசலில் 'சமூக சேவா சங்கம்' என்று தமிழிலும் அதற்கு மேலே 'Social Service Club' என்று ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை எழுதி மாட்டி யிருந்தது.

பவானி இந்த இடத்துக்கு வந்ததும் சுற்றுச் சுவர் கேட்டருகே தயங்கி நின்றாள். கட்டிடத்தின் முன்புறம் டென்னீஸ் கோர்ட் டில் ஆடி விட்டு வியர்வையை ஒரு டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டே அப்பால் புல்வெளியில் போட்டிருந்த சாய்வு நாற்காலிகளை நோக்கி நடந்தார் மாஜிஸ்திரேட் கோவர்த்தனன்.

அப்போது அவர் பார்வை வீதி ஓரமாய் நின்று பெயர்ப் பலகையை அண்ணாந்து நோக்கிக் கொண்டிருந்த பவானி பேரில் விழுந்தது. உடனே, "உள்ளே வரலாமே?" என்றார். "அங்கத்தினர்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டோ என்னமோ என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன்." பவானி பேசியபடியே முன்னேறி அவரை நோக்கி நடந்தாள்.

நாற்காலி ஒன்றை அவளுக்காக இழுத்துப் போட்டு விட்டு, "அதற்கென்ன நீங்களும் அங்கத்தினராகி விட்டால் போகிறது" என்றார் கோவர்த்தனன்.

பையனை ஜாடை காட்டி அழைத்து, இரண்டு ஸ்பென்ஸர் லெமனேட் கொண்டுவரச் சொன்னார். கூடவே, "ஐஸ் போடலாமல்லவா?" என்று பவானியைக் கேட்டார்.

"எனக்குப் போடலாம்; உங்களுக்கு வேண்டாம்" என்றாள் பவானி. "இன்னும் வியர்வை கூட அடங்க வில்லையே?"

அந்தக் கரிசனம் அவரை ஒரு வினாடி திகைக்க வைத்தது. "தாங்க்ஸ்" என்றார் புன்னகையுடன். அவர் அவளை அப்போது பார்த்த பார்வையில் நன்றி உணர்ச்சிக்கும் அதிகமாக ஏதோ ஒன்று இருந்தது. அவள் யோசனைப்படியே பையனுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

"பெண்களை இந்தக் கிளப்பில் சேர்த்துக் கொள்கிறீர்களா?" என்று பவானி உரையாடலில் விட்டுப் போன இடத்துக்குத் திரும்ப வந்து சேர்ந்தாள்.

"இதுவரை சேர்த்துக் கொண்டதில்லை. ஏனெனில் எந்தப் பெண்ணூம் சேர முன்வர வில்லை."

"க்ளப்பின் விதிமுறைகளில் அதற்கு இடையூறு ஏதுமில்லையே?"

"இடையூறாக இருந்தால் விதிமுறைகளை மாற்றி விடுகிறோம்."

"என்ன அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டீர்கள்? மற்றவர்கள் சம்மதிக்க வேண்டாமா?"

"பவானிக்காக யாரும் எதையும் செய்வார்கள்!"

"இப்படிப் பேசினால் எனக்குக் கவலை அதிகரிக்கிறது."

"என்ன கவலை?"

"இத்தனை மதிப்பு என் மீது இந்த ஊர்க்காரர்கள் வைப்பதென்றால் அதற்குத் தகுதியுள்ளவளாக நான் விளங்க வேண்டுமே என்றுதான்."

"உங்கள் தகுதிக்கு என்ன குறைச்சல்? பி.ஏ.பி.எல். படித்திருக்கிறீர்கள். கோர்ட்டில் எல்லோரும் பிரமிக்கும்படி வாதாடுகிறீர்கள். சகஜமாக எல்லாருடனும் பழகுகிறீர்கள். அதேசமயம் கண்ணியத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்கிறீர்கள். இவ்வளவும் போதாதென்று பார்ப்பதற்கும் அழகா யிருக்கிறீர்கள்!"

பவானி தன் முகம் சிவக்காமல் இருக்க ரொம்பவும் பிரயாசைப்பட்டுத் தோற்றுப் போனாள். "இப்படிப் புகழ ஆரம்பித்தால் சகஜமாகப் பழக வேண்டாம் என்றே தோன்றிவிடும். இந்தக் கிளப்பில் சேர்வது பற்றியும் புனராலோசனை செய்ய வேண்டியதுதான்."

"புகழ்ச்சி பிடிக்காத ஒரு நபரை என் வாழ்க்கையில் இப்போதுதான் நான் முதல் தடவையாகப் பார்க்கிறேன். அது உங்கள் மதிப்பை மேலும் உயர்த்துகிறது" என்று கூறிய மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் 'லெமனே'டைத் தட்டிலிருந்து எடுத்து பவானியின் கரத்தில் கொடுத்தார். பிறகு, "நானும் இனி உங்களைப் புகழவில்லை; மற்ற அங்கத்தினர்களையும் எச்சரித்து வைக்கிறேன். கிளப்பில் சேராமல் இருந்து விடாதீர்கள். இந்தச் சூழ்நிலை கொஞ்சம் 'கலர்ஃபுல்' ஆக இருக்கட்டும்" என்றார்.

"இன்னும் ஒரு நிபந்தனை."

"என்ன அது?"

"நீங்கள், போங்கள், வாருங்கள் என்று மற்றவர்கள் என்னிடம் பேசட்டும். ஆனால் உங்களைப் பொறுத்தவரை அந்த மரியாதையெல்லாம் என்னிடம் கூடாது." மாஜிஸ்திரேட் சிரித்தபடியே, "இது என் வயதுக்கு நீங்கள் தரும் சலுகையா? அல்லது பதவிக்கா?" என்று கேட்டார். "இரண்டுக்கும் மேலே நம் நட்புக்கு ஓர் அடையாளமாக!" கோவர்த்தனன் தாம் உறிஞ்சிக் கொண்டிருந்த லெமனேடை மேஜையின்மேல் வைத்து விட்டு, அவளை நேருக்கு நேர் பார்த்து, "உன்னை ஒரு மர்மமான பெண் என்று பலர் என் காதுபடக் கூறுவதில் உண்மை இருக்கிறது" என்றார். "உன் பேச்சிலும் மர்மம் இழையோடுகிறது." "அட ஆண்டவனே! நான் மர்மங்களை விடுவிக்கவே கல்வி கற்றேன். தொழிலும் பயிலுகிறேன். மர்மங்களை சிருஷ்டிக்க அல்ல. உங்களுக்குத் தெரியாததா?" "அது சரி, ஆனால் நீ திடுதிப்பென்று ராமபட்டணத்தில் எப்படி முளைத்தாய்? எங்கிருந்து வந்தாய்? ஏன் வந்தாய்? முதலிய பல விவரங்கள் மர்மமாகத்தானே உள்ளன?"

"யாருக்கும் ஒரு மர்மமும் இதில் தேவையில்லை. ஒரு பொதுக்கூட்டம் போட்டு வேண்டுமானால் பேசி விடுகிறேன்."

"பொதுக்கூட்டம் எதற்கு? ராமப் பட்டணம் அப்படியொன்றும் பெரிய ஊர் இல்லை. இங்கே வருகிறானே கல்யாணசுந்தரம் என்று ஒரு பையன் அவனிடம் சொன்னால் போதும். ஊர் முழுவதும் தமுக்கு அடித்து விட்டு வந்து விடுவான்."

பவானி மெளனமானாள். கல்யாணத்தை அவர் சற்று அலட்சிய பாவத்துடன் ஏளனமாகப் பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை.

"மர்மமான மெளனம்" என்றார் கோவர்த்தனன்.

"மெளனத்தில் மர்மம் இருக்கலாம். ஆனால் என்னைப்பற்றி ஒரு மர்மமும் இல்லை. நான் கல்கத்தாவிலிருந்து வந்தேன். இங்கே என் தாய்மாமனுடன் தங்கியிருக்கிறேன். அவர் ரிடையரானவர். மாமி காலமாகி இரண்டு வருஷங்களாகின்றன. சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டு காலம் தள்ளுகிறார். என் தகப்பனார் பாதுகாப்புத் துறையில் உயர் அதிகாரி. என்னையும் என் தாயாரையும் யுத்தத்தை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து இங்கே அனுப்பிவிடத் தீர்மானித்தார். ஆனால் என் தாயார் அவரை விட்டு வரப் பிடிவாதமாக மறுத்து விட்டாள். என்னை மட்டும் இருவரும் சேர்ந்து வற்புறுத்தி ரயிலேற்றி விட்டார்கள்."

இந்தச் சமயத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. பக்க வாத்தியங்களின் ஓசையும் எழுந்தது. பவானி புருவங்களை உயர்த்தி, "ஏக அமர்க்களமாய் இருக்கிறதே?" என்றாள். "ஆமாம், இந்தக் கல்யாணம் வந்து சேர்ந்ததிலிருந்து ஒரே பாட்டும் கூத்தும் தான். ஏதோ நாடகம் நடத்தப் போகிறார்களாம்; பண வசூல் செய்து ஏழைகளுக்கு உதவப் போகிறார்களாம். பேசாமல் பிரிட்ஜோ டென்னிஸோ ஆடி விட்டுப் போகாமல் இதெல்லாம் என்ன வேண்டிக் கிடக்கிறது?" "சமூக சேவா சங்கம் என்ற பெயருக்கு ஏற்பக் கல்யாணம் ஏதாவது செய்ய நினைத்திருப்பார். நியாயம் தானே?" என்ற பவானி, "உண்மையில் நான்கூட அவரைத் தேடிக் கொண்டுதான் இங்கு வந்தேன். உங்களைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்ததில் வந்த காரியமே மறந்து விட்டது. இதோ ஒரு நிமிஷத்தில் வந்து விடுகிறேன்" என்று கூறி வீட்டுக் கட்டிடத்தை நோக்கி நடந்தாள்.

கோவர்த்தனன் அவள் போவதை முகம் சிணுங்கப் பார்த்தாலும் அந்த நடையழகை ரசித்துக் கொண்டுமிருந்தார்.