வளமான வாழ்வா? வறுமையா?

விருந்தினர் அறை, ஆபீஸ் அறை, சமையல் அறை, உக்கிராண அறை என்று கீழே பல அறைகளைக் காண்பித்துவிட்டு அவர்களை மாடிக்கு அழைத்துப் போனார் ரங்கநாதன். அங்கே பிரும்மாண்டமான கட்டில்கள் போடப்பட்டிருந்த இரண்டு படுக்கை அறைகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில், ஓர் ஓரமாகக் கனமான எஃகு அலமாரி ஒன்று இருந்தது. 'அதைத் திறந்து காட்ட மாட்டாரா? என்ற ஆவல் குறுகுறுப்பை அடக் கிக் கொள்ள முடியாதவளாகக் காமாட்சி அம்மாள் அதன்பால் அவர் கவனத்தை ஈர்த்துப் பேசினாள். "நல்ல கனமான இரும்பு பீரோவாகவே வாங்கிட்டீங்க போலிருக்கு. அருமையான யோசனைதான். மர அலமாரி யெல்லாம் எத்தனை நாளைக்கு உழைக்கப் போகிறது?"

"உழைக்கிறதாவது, உளுக்கிறதாவது? அதுவா பிரச்னை? இரண்டு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளை யாராவது மர அலமாரியில் வைத்துப் பூட்டுவாங்களா?" என்றார் ரங்கநாதன்.

காமாட்சிக்கு அப்போதே மூர்ச்சை போட்டுவிடும் போலாகிவிட்டது. நகைகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலைதான் அவளை மயங்கிச் சாயாமல் நிற்க வைத்தது.

"இருக்கும், இருக்கும். பரம்பரையாக வந்த நகைகளுக்கு அந்த மதிப்பு இருக்காதா?" என்றாள்.

"பரம்பரை நகைகளும் இருக்கின்றன. நானே செய்ததும் உண்டு. ஏதோ கல்யாணம் செய்து கொண்ட புதுசில் ஆசையாய்ப் பண்ணிப் போட்டு அழகு பார்த்தேன். அவள் என்னடா என்றால் இத்தனை ஐசுவரியத்தையும் அனுபவிக்க ஒரு வாரிசைக் கூடக் கொடுக்காமல் போய்விட்டாள். யாராவது தூரத்துத் தாயாதிக்காரர்கள்தான் வந்து அத்தனையையும் கொண்டு போவாங்க போலிருக்கு."

"என்னத்தைச் சொல்றது போங்க. ஆண்டவன் லீலையே இப்படித்தான். ஒன்று கொடுத்தா இன்னொண்ணு தரமாட்டான். சொத்து இருந்தா சந்ததி இல்லை. சந்ததி இருந்தால் சொத்து இல்லை!"

"நான் அப்படி நினைக்கவில்லை. பகவான் எனக்குச் சொத்தையும் கொடுத்து, சந்ததியையும் தரத்தான் உங்களைச் சென்னையிலிருந்து கிளப்பி ராமப்பட்டணத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தான்னு நம்பறேன்."

"நீங்க என்ன சொல்றீங்க?" என்றாள் காமாட்சி. அவளுக்கு ஆனந்தத்தில் அந்தரத்தில் மிதப்பது போல் இருந்தது. சுந்தரி கமலாவைக் கொடுத்துப் பதிலுக்கு இத்தனை சொத்துக்களை ஆண்டு அனுபவிக்கப் போகிறோமா? அப்படி ஓர் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதா மாசிலாமணி குடும்பத்துக்கு? விசுப் பயல் அவ்வளவு கொடுத்து வைத்தவனா?

"இன்னும் தெளிவா நான் எப்படிப் பேசறது? என் பெண்ஜாதி காலமாகிப் பத்து வருஷமாச்சு. அப்போ பாலியமாகத்தான் இருந்தேன். எத்தனையோ பேர் சொன் னாங்க. 'மறுபடியும் கல்யாணம் செய்து கொள்' என்று. பிடிவாதமாக மறுத்து விட்டேன். அந்த உத்தமி இருந்த இடத்திலே இன்னொருத்தியைக் கொண்டு வந்து வைக்க மாட்டேன்னு தீர்மானமா யிருந்தேன்..."

"அடடா! எத்தனை தங்கமான மனசு!" என்றாள் காமாட்சி.

"ஆனால் இப்பத்தான் கொஞ்ச நாட்களாக மனசு சஞ்சலப்படுகிறது. இவ்வளவு சொத்தையும் கட்டி ஆள ஒருத்தரும் இல்லையே என்று கவலைப்படுகிறது. தர்மத்துக்கு எழுதி வைச்சுடலாம். பெரிய காரியமில்லே. இருந்தாலும் நமக்கு வேணும்கிறவங்க நாலு பேர் இருந்து, அவங்க நாம் சம்பாதிச்சதை யெல்லாம் அனுபவித்தால் அதிலே கிடைக்கிற நிம்மதி அலாதிதான்."

"இப்போகூட உங்களுக்கு அப்படி என்ன வயசாகிவிட்டது? ஐம்பது இருக்கலாம். ஆனால் நாற்பதுதான் மதிக்கத் தோன்றும். ஜாம் ஜாம் என்று கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டியதுதான்!"

"அறுபத்திரண்டு ஆகிறது. ஆனால் நீங்க சொன்ன மாதிரி நாற்பது இல்லே, முப்பத்தெட்டுன்னு மதிப்புப் போட்டவங்களும் உண்டு. அது கிடக்கக் கல்யாணம் என்ற எண்ணமே எனக்கு இதுவரையில் ஏற்பட்டதில்லை. இப்பத்தான் அதுவும் உங்க பெண் கமலாவைப் பார்த்த பிறகுதான்... மனசை விட்டுச் சொல்கிறேன்... நீங்க தப்பா நினைக்கக் கூடாது. உங்களை நான் கட்டாயப் படுத்தவில்லை. நீங்க நன்றாக யோசித்துச் சொன்னால் போதும்!"

"ஆகட்டும் யோசிக்கிறோம்" என்றார் மாசிலாமணி.

"யோசிக்கிறது என்ன, யோசிக்கிறது. சற்று முன்னால் நீங்கள் சொன்னீங்க, 'எங்களைச் சென்னையிலேயிருந்து கிளப்பி இங்கே ஆண்டவன் கொண்டு வந்து சேர்த்தான்' என்று. அது ஆயிரத்தில் ஒரு வார்த்தை. மெய்யாலுமே இது கடவுள் சித்தம்தான். இல்லாத போனால் எப்படி இவர் சொந்த ஊரான கிராமத்துக்குப் போய், இவர் அண்ணாவுடன் தங்க வேண்டிய வங்க இங்கே வந்து சேர்ந்திருப்போம். சொல்லி வைத்தாற் போல் இந்த ஊர் அருகில் வரும் போது பஸ் ஏன் ரிப்பேராக வேண்டும். அதுதான் போகட்டும். அந்தப் பிள்ளை கல்யாணம் எங்களைப் பார்த்து விட்டு, நேரே உங்க வீட்டிலேயே கொண்டு வந்து ஏன் இறக்கினான்?

காலியாக இருக்கிற வேறு யார் வீட்டுக்காவது அழைத்துப் போயிருக்கக் கூடாதா? இதையெல்லாம்தான் தெய்வ சங்கல்பம் என்று சொல்கிறது.

"அவசரப்பட வேண்டாம். கமலாவையும் கலந்து ஆலோசியுங்கள். கணவரையும் கேட்டுக் கொள்ளுங்கள்" என்றார் ரங்கநாதன். "கமலாவின் சம்மதம் இல்லாத போனால் பிரயோஜனமில்லை. அவளைக் கட்டாயப் படுத்த நான் ஒப்ப மாட்டேன். ஆனால் ஒன்றுமட்டும் சொல்கிறேன். எனக்கு இந்த ஊரிலே ஆறு வீடுகள் இருக்கின்றன; நாலு காணி நன்செய் நிலம். பாங்கில் ரொக்கமாக மூன்று லட்சம். அப்புறம் இந்த வீடு, இதிலுள்ள ஐசுவரியங்கள் - இவ்வளவையும் ஆள ஒரு கிருகலட்சுமி இல்லையே என்று எனக்கு ரொம்பக் குறை. அதையும் இப்போ சமீபத்தில்தான் உணர ஆரம்பித்திருக்கிறேன். இருந்தாலும் கமலாவின் சம்மதமில்லாமல் எதுவும் நடக்கக் கூடாது."

"நன்றாயிருக்கிறது. இதைப் பற்றி அவளைக் கேட்கப் போவானேன்? அவள் சிறு பெண். அவளுக்கு என்ன தெரியும். பாவம்! நாம்தான் நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் ஒரு நல்ல முடிவுக்கு வந்து விட்டால் அவளும் பேஷாகச் சரி என்கிறாள். மாட்டேன் என்றா சொல்லப் போகிறாள்?"

"அப்படி இல்லை, அம்மா. இந்தக் காலத்திலே பெண்கள் தங்கள் உரிமைகளை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியே அவர் களுக்குத் தெரியவில்லை என்றாலும் ஊரிலே இருக்கிற விடலைப் பயல்கள் - சமூக சேவை அது இது என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்களே அவர்கள் - சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது கிளப்பி விட்டு அவள் மனசைக் கலைத்து வேடிக்கை பார்ப்பார்கள் .... இருக்கட்டும் வந்தது வந்தீர்கள். இந்த நகைகளை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போங்கள். நீங்க கலை உள்ளம் கொண்டவர்கள். சிறந்த வேலைப் பாட்டை ரசிக்கக் கூடியவர்கள். அதனால் காட்டுகிறேன். என் பெருமையை உணர்த்துவதற்காக இல்லை."

"ஆமாமாம். சிறந்த கலை வேலைப்பாடு என்றால் நான் உயிரையே விட்டு விடுவேன்" என்றாள் காமாட்சி.

அவர் பீரோவைத் திறந்தபடியே, "இந்தக் காலத்தில் பெண்களின் இஷ்டமின்றி ஒரு காரியமும் செய்வதற்கில்லை" என்றார்.

பீரோவுக்குள் தகதகத்த நகைகளை அகன்று விரிந்த கண்களால் பார்த்துத் திகைப்பினைமென்று விழுங்கியபடியே, "ஏன் இஷ்டமில் லாமல் இருக்கணும்? எல்லாவற்றையும் என்னிடம் விட்டு விடுங்கள். உங்க இஷ்டம் போலவே நடத்தி விடுவோம். உங்க இஷ்டந்தான் கமலாவின் இஷ்டமும்" என்றாள் காமாட்சி.

ரத்தினமும் வைரமும் மாறி மாறிப் பதித்த ஓர் அட்டிகையை எடுத்து உள்ளங்கையில் வைத்து எடை பார்ப்பதுபோல் கரத்தை அசைத்த ரங்கநாதன், "நம்ம இஷ்டத்திலே என்ன இருக்கு? எல்லாம் ஆண்டவன் விருப்பம் எப்படியோ அப்படி நடக்கும்" என்றார்.

"உங்களைப் போன்ற நல்ல இதயம் படைத்தவர்களின் இஷ்டத்துக்கு மாறாக ஆண்டவனின் விருப்பம் இருக்குமா என்ன? ஒருநாளும் இராது!" என்றாள் காமாட்சி, வியர்த்த உள்ளங்கையைப் புடவையில் தடவியபடி.

"அடுத்த முறை நம்ம வீட்டுக்கு வரும் போது கமலாவையும் அழைத்துக் கொண்டு வாங்க. அவள் இதைப் போட்டுக் கொண்டு வரட்டும்" என்று ரங்கநாதன், தயாராக நீண்ட காமாட்சியின் கரத்தில் அட்டிகையை வைத்தார்.

இரும்புப் பீரோவைப் பூட்டியானதும், சரியாகப் பூட்டியிருக்கிறதா? என்று காமாட்சி ஒரு தடவை அழுத்திப் பார்த்தாள். ரங்கநாத முதலியாரின் சொத்தையெல்லாம் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இப் போதே வந்து விட்டது போல!

மூவரும் கீழே இறங்கிச் சென்று மாசிலாமணி தம்பதி விடை பெறும்போது "வாடகை..." என்று கணக்குப்பிள்ளை ஞாபகப்படுத்தினார். மெலிந்த குரலில், "ஆமாம், மறந்தே போய் விட்டதே. இரண்டு மாச வாடகை, இரண்டு மாத அட்வான்ஸ் ஆக, முந்நூறு ரூபாயை அனுப்பி விடுங்கள். அதை வாங்க வில்லை யென்றால் நம் கணக்குப் பிள்ளைக்குத் தூக்கமே வராது" என்றார் ரங்கநாத முதலியார்.

தலையாட்டிப் பொம்மை போல் தலையை ஆட்டி விட்டுக் கணவனும் மனைவியும் கிளம்பினர்.