பிரமிக்க வைத்த பவானி

சமூக சேவா சங்கத்தின் கட்டிடத்துக்குள் இரண்டு மூன்று அறைகள் இருந்தன. பெரிய கூடம் ஒன்றில் சீட்டாடுவதற்காகப் பல மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஓர் அறையில் புத்தக அலமாரிகள், சில மேஜை நாற்காலிகள், வேறு ஒரு அறையில் பிலியர்ட்ஸ் டேபிளைச் சுற்றிச் சிலர் ஜோக் அடித்துச் சிரித்தபடியே பந்துகளைக் குச்சியால் தட்டிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாகப் பின்புறம் இருந்த ஓர் அறைதான் மிக முக்கியமானது. அதுதான் அங்கத்தினர்களுக்கு டிபன், காப்பி தயாராகும் சமையலறை. ராமப்பட்டணம் சோஷியல் சர்வீஸ் கிளப்பின் ரவா கேசரியும் உருளைக்கிழங்கு போண்டாவும் சுற்று வட்டாரத்தில் ஏழெட்டு மைல்களுக்கு ரொம்பப் பிரசித்தி. சோஷியல் சர்வீஸ் கிளப் என்பதில் 'சர்வீஸ்' என்ற பதத்தை மறந்து விட்டு சோஷியல் கிளப்பாக அது பிரமாதமாக நடந்து வந்தது.

கல்யாணசுந்தரம் அதில் சேர்ந்த பிறகு சமீப காலமாகப் புரட்சி கரமான சில மாறுதல்களைப் புகுத்தி யிருந்தான். அவனுக்கு இளம் அங்கத்தினர்களிடையே ஆதரவும் இருந்ததால் நூலகத்தில் ஆங்கில நாவல்களுடன் பல தமிழ்ப் புத்தகங்களும் வந்து சேர்ந்தன. அவற்றில் சில துப்பறியும் அல்லது சமூக நாவல்கள். வேறு பல 'இந்தப் புரட்சி', 'ஏழை அழுத கண்ணீர்', 'உலகம் உருப்படுவது எப்படி?', 'எரிமலை', 'அக்னி ஆறு' முதலிய பல பயங்கரப் பெயர்களைக் கொண்டிருந்தன.

இவற்றுள் ஒன்றைப் பாதி படித்துக் கொண்டிருந்த வாலிபன் ஒருவன் பட்டென்று அதை மூடிவிட்டு, "இந்த உலகம் ஒருநாளும் உருப்படப் போவதில்லை" என்ற மகத்தான உண்மையைப் பளிச்சென்று சொன்னான்.

"உலகத்தின் பேரிலே உனக்கு என்னப்பா அவ்வளவு கோபம்?" என்றான் இன்னொருவன்.

"எனக்கு என்ன கோபம்? எனக்குக் கோபமே வராது. உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த உலகத்திலே ஏழை- பணக்காரன், முதலாளி - தொழிலாளி; மேல்சாதி - கீழ்சாதி, ஆண்சாதி - பெண்சாதி இப்படிப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிற வரையில் இந்த உலகம் உருப்படப் போகிறதே இல்லை."

"அது சரிதானப்பா, இந்த வித்தியாசங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? அதை நீ சிந்தனை செய்து பார்த்தாயா?" என்று மூன்றாவதாக ஒருவன் கேட்டான்.

"சிந்திப்பது என்பதுதான் நம்மில் யாரிடமுமே கிடையாதே? அதனால் தானே இந்தக் கதிக்கு வந்திருக்கிறோம்."

"அடிப்படையான காரணம்தான் என்ன? சிந்தித்திருக்கிற நீதான் சொல்லேன்."

"மதந்தான் அப்பா, காரணம்! மதந்தான். ஹிந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம், யூத மதம். இவற்றுக்குள்ளே குட்டி குட்டி மதங்கள்! சைவம் - வைஷ்ணவம் - புரோடஸ்டண்ட் - ரோமன் கத்தோலிக். இப்படி மத வேறுபாடுகளாலேதான் இந்த உலகம் நாசமாய்ப் போகிறது!"

"மதத்தைச் சொல்லப் போய்விட்டாயே? அதற்கும் அடிப்படையான காரணம் என்ன என்பதை நீ சிந்தித்தாயா?"

"நீ தான் சொல்லு!"

"கடவுள் அப்பா, கடவுள்! இந்த உலகத்திலிருந்து கடவுளையே ஒழித்துக் கட்டிவிட்டால் இந்த உலகத்தில் மதம் இல்லை, சாதி இல்லை, ஏழை பணக்காரன் இல்லை....."

"நீ இல்லை, நான் இல்லை, உலகமே இல்லை! ஏதோ உன்னுடைய மூளையிலேதான் முதன் முதலில் இந்த அபூர்வமான யோசனை உதித்திருக்கிறது என்று நினைக்காதே! இரணிய கசிபு காலத்திலிருந்து எத்தனையோ பேர் கடவுளை ஒழித்துக் கட்டியாகி விட்டது."

"நிறுத்துங்க அப்பா, உங்கள் வெறும் பேச்சை! பேசிப் பேசி என்ன பிரயோஜனம்? பேச்சைக் குறையுங்கள்; காரியத்தில் செய்து காட்டுங்கள்!"

"நாங்களா வேண்டாம் என்கிறோம்? காரியத்தில் ஏதாவது செய்து காட்டத்தான் இங்கே கூடியிருக்கிறோம். அந்தக் கல்யாண சுந்தரம் இன்னும் வந்து தொலையலையே?"

"கல்யாணம் வரும் வரை நாம் காத்திருப்பானேன்! நாம் ஆரம்பித்தால் அவன் வருகிற போது வந்து சேர்ந்து கொள்கிறான்."

"சரி, ஆரம்பித்து விடுவோம்."

சிலர் தபலா, ஆர்மோனியம் முதலிய வாத்தியக் கருவிகளைக் கொணர்ந்தார்கள். சுருதி கூட்டிக் கொண்டு கடவுள் வணக்கப் பாட்டைப் பாட ஆரம்பித்தார்கள்.

திடீரென்று ஒருவன் பெஞ்சு மீது ஏறி நின்று கொண்டு, "ஆ! ஏழைகள்! ஏழைகள்! ஏழைகள் படும் பாட்டை நினைத்து என் ரத்தம் கொதிக்கிறது! இதயம் வெடிக்கிறது! என் தொண்டை காய்கிறது! அடே, பையா! ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா!" என்றான்.

"அடசீ! கேட்டதுதான் கேட்டாய். சோடாவாகக் கேட்கக்கூடாதோ? நாடக ஒத்திகைக்கென்று வாங்கி வைத்திருக்கிற சோடாக் கலரை யார் குடிச்சுத் தீர்ப்பது?"

இந்தச் சந்தர்ப்பத்தில் அறை வாசலில் வந்து நின்ற பவானி, "நாடக ஒத்திகை ரொம்பத் தீவிரமாக நடக்கிறது போலிருக்கிறதே" என்றாள்.

அறையிலிருந்த வாலிபர்கள் அனைவரும் அழுத்தம் திருத்தமாய் ஒலித்த அந்தப் பெண் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பவானியைப் பார்த்ததும் பிரமித்துப் போய் நின்றார்கள்.