இன்னொருவர் ரகசியம்
கமலாவை அவள் இல்லத்தில் விட்டு விட்டுப் பவானி வீடு திரும்பியபோது இருட்டி வெகு நேரமாகி விட்டிருந்தது. பவானியின் மாமா குணசேகரன் கவலையோடு வாசலிலேயே காத்திருந்தார். "என்னம்மா, கால தாமதமாகுமென்றால் வழக்கமாய்ச் சொல்லி விட்டுப் போவாயே? நெஞ்சைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறேன். பெற்றோரை விட்டு நூற்றுக்கணக்கான மைல்களுக்கு இப்பால் என் பொறுப்பில் வந்து சேர்ந்திருக்கிறாயே?" என்றார்.
"எதிர்பாராமல் தாமதமாகி விட்டது, மாமா! அந்தப் பெண் கமலா இருக்கிறாளே, அவளோடு மலைச்சாரலுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு சுவாரசியத்தில் பொழுது போனதே தெரியவில்லை. இருள்கிறது, கிளம்பலாம் என்று நான் எண்ணிய சமயம் அந்தப் பெண் 'ஓ' வென்று அழ ஆரம்பித்து விட்டாள். அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது."
"அட பாவமே! எதற்கு அழுதாள் குழந்தை?"
"குழந்தையா? நாலு குழந்தைகளுக்கு அவளே தாயாக இருக்கக் கூடிய வயசு!"
"இருக்கட்டுமே. பெற்றோருக்கு அவள் எப்போதும் குழந்தைதான். நீகூடத்தான் இருக்கிறாய். கல்யாண வயதாகவில்லையா உனக்கு? எனக்கு என்னமோ இன்னமும் குழந்தையாகவே தோன்றுகிறாய். அதனால் தான் உனக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஞாபகமே இன்று மாலை வரையில் ஏற்படவில்லை.
"அடடே! இன்று சாயந்திரம் மட்டும் போதி மரத்தின் அடியில் போய் அமர்ந்தீர்களாக்கும்!" என்று கூறிய பவானி சிரித்தாள்.
"ஞானோதயம் என்னை நாடி வந்தது. பவானி! மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் உருவில் வந்தது!"
"அதுதானே பார்த்தேன். இல்லாத போனால் உங்கள் தங்கமான மனத்தில் அசட்டு யோசனைகள் எல்லாம் உதயமாகுமா என்ன?"
"எது அம்மா அசட்டுத்தனம்? உன் திரு மணத்தைப் பற்றி நினைத்துப் பாராமலேயே கல்கத்தாவில் உன் பெற்றோரும் இங்கே நானும் காலத்தை ஓட்டுகிறோமே, அதுவல்லவா அசட்டுத்தனம்? அதைச் சுட்டிக் காட்டி மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் பொறுப்பை உணர்த்தியது எவ்வளவு புத்திசாலித்தனம்!"
"பலே! என் கல்யாணத்தில் அத்தனை அக்கறையா அவருக்கு! உம்... இன்னும் என்ன சொன்னார்?" உணர்ச்சிகளை மறைத்துக்கொள்ள முயன்ற பவானி, தோற்றுப் போனாள். அவள் முகம் 'ஜிவ்' வென்று சிவந்து போனது.
"சொல்ல வேண்டியதை யெல்லாம்தான் சொன்னார். 'பவானியின் படிப்புக்கும் ஆற்றலுக்கும் அறிவுக்கும் அழகுக்கும் யௌவனத்துக்கும் சாமர்த்தியத்துக்கும் ஏற்ற வரனாகப் பார்க்க வேண்டும்' என்றார். அதைவிட முக்கியம் வழக்கறிஞராகத் தொழில் நடத்தும் உனக்கு அந்தத் தொழிலில் தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டக் கூடிய கணவனாக அமைவது என்பதை ஞாபகப்படுத்தினார்."
"பவானிக்கு வரப் போகும் கணவன் குறைந்த பட்சம் ஒரு மாஜிஸ்திரேட்டாக இருக்க வேண்டும். அவன் வாலிப மிடுக்குடன், அழகனாக, அறிவாளியாக, அனுசரித்துப் போகிறவனாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருபாரே?"
"சொன்னார் பவானி."
"அதாவது..."
"அதாவது தன்னையே மாப்பிள்ளையாக ஏற்கலாம் என்று சங்கோஜத்தை விட்டுக் கூறினார் பவானி. ஏனம்மா உன் அபிப்பிராயம் என்ன?"
"நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்? வாக்குக் கொடுத்துவிடவில்லையே?" என்று கலவரமடைந்தவளாகக் கேட்டாள் பவானி.
"அப்படியெல்லாம் செய்வேனா பவானி? நீ என்ன பட்டிக்காட்டுப் பெண்ணா? உன் விருப்பத்தைத் தெரிந்துகொள்ளாமல் ஒப்புதல் அளிப்பேனா?"
"நல்ல வேளை!" என்று பெருமூச்செறிந்தாள் அவள்.
"நல்ல நாளும் வேளையும் பார்க்க வேண்டியதுதான்" என்றார் குணசேகரன். "மாஜிஸ்திரேட் ரொம்ப நல்லவர். கௌரவமான உத்தியோகம். ஹைகோர்ட் ஜட்ஜ் வரை பதவி உயரலாம். உன்னை மனமார விரும்புகிறார் என்று நிதரிசனமாய்த் தெரிகிறது. நிச்சயமாய் நீ தொழில் நடத்துவதற்கு முட்டுக்கட்டை போட மாட்டார். இதைவிட நல்ல வரன் எங்கே கிடைப்பான்? ஒவ்வொருத்தர் பெண்ணைப் பெற்று விட்டு மாப்பிள்ளை தேடி நாயாய் அலைகிறார்கள். இங்கேயோ முதல்தர மாப்பிள்ளை நம் வீடு தேடி வந்திருக்கிறார். ஒரு வார்த்தை "சரி" என்று சொல். உடனே உன் பெற்றோருக்குத் தந்தி அடித்து வரவழைக்கிறேன்."
"மாமா! மேன்மைதங்கிய பிரிட்டிஷ் அரசரின் மகத்தான தபால் தந்தி இலாகாவுக்கு ஒன்றே முக்கால் ரூபாய் நஷ்டம். நீங்கள் தந்தி அனுப்பப் போவதில்லை" என்றாள் பவானி.
"ஏன் அம்மா? மாஜிஸ்திரேட் கோவர்த்தனனிடம் என்ன குறையைக் கண்டாய்?"
"அவருக்கு ஒரு குறையும் இல்லை. மன்மதன் போலிருக்கிறார் என்று சர்ட்டிபி கேட் வழங்க வேண்டுமா? நான் தயார். ஆனால் எனக்குத்தான் திருமணத்தில் நாட்டம் இல்லை."
"ஏன் அப்படிச் சொல்கிறாய் பவானி? ஒரு வேளை.... அந்தப் பையன் கல்யாணம்."
"மாமா! கல்யாணத்தையும் என்னையும் சம்பந்தப்படுத்திக் கோவர்த்தனன் ஏதாவது பிதற்றியிருந்தால் அதை மறந்து விடுங்கள். எனக்கும் அவருக்கும் இடையே தொழில் ரீதியாகவும் சமூகப் பணியாற்றுவதிலும் உள்ள தொடர்பு தவிர வேறு பிணைப்பு எதுவும் கிடையாது. நீங்கள் ஏதாவது கூறப்போக அது அந்தப் பெண் கமலாவின் காதில் விழுந்து விட்டால் போதும். மேலே பாய்ந்து பிடுங்கிவிடுவாள் உங்களை."
"அவள் என்ன நாயா? புலியா?"
"இரண்டும்தான். கல்யாணம் அவளை ஏற்றால் நன்றியுள்ள நாயாக வாழ்நாளையெல்லாம் அவனுக்கு அர்ப்பணிப்பாள். கல்யாணத்தை அவளிடமிருந்து பிரிக்க முயல்கிறவர் மீது புலியாகப் பாய்வாள். கல்யாணமே அவளை வெறுத்து ஒதுக்கி விட்டால் தற்கொலை செய்து கொண்டு சாவாள்?
"சற்றுமுன் சொன்னேனே. என் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது தீர்த்தாள் என்று. அதற்குக் காரணம் அவளுக்குக் கல்யாணசுந்தரத்தின் மீதுள்ள ஆசைதான். அவர் என்னடா என்றால் அவளை லட்சியம் பண்ணுவதே கிடையாது. சதா நாடகம், சமூக சேவை என்று அலைகிறார்."
"நாடகம், சமூக சேவை என்று மட்டும்தான் அலைகிறானா கல்யாணம்? உன் பின்னாலும் சுற்றுகிறான். இல்லையா?" என்றார் குணசேகரன்.
"மாமா! நீங்கள் பொல்லாதவர்! எல்லோரையும் சரியாக அளந்து வைத்திருக்கிறீர்கள். அந்தக் கணிப்பு எனக்குக் கல்யாணத்தினிடம் ஈடுபாடு இல்லை என்பதையும் உங்களுக்கு உணர்த்தியிருக்குமே?"
"அதைப் புரிந்து கொண்டிருக்கிறேன் பவானி. அதனால் தான் கோவர்த்தனன் இங்கு வந்து என்னிடம் பேசிவிட்டுப் போனதிலிருந்து நம்பிக்கையும் மகிழ்ச்சியுமாக நீ வீடு திரும்பக் காத்திருந்தேன். ஆனால் அந்த ஆசைக்கு நீ அணை போடுகிறாய். இன்னும் ஒரு தடவை யோசித்துப் பார் பவானி. கோவர்த்தனன் உன்மீது உயிரையே வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. டென்னிஸ் ஆட வழக்கம்போல் நீ வரவில்லை என்றதும் உனக்கு என்னவோ ஏதோ என்று பதறித் துடித்துக் கொண்டு வீடு தேடி விசாரிக்க வந்துவிட்டார் என்றால் அவர் அன்பு எத்தனை ஆழமானதாக இருக்க வேண்டும்?"
"சேலம் மாவட்டக் கேணியைத் தோற்கடிப்பதாக அத்தனை ஆழம் இருக்குமா?" என்றாள் பவானி சிரித்துக் கொண்டே. குணசேகரன் அவள் ஹாஸ்யத்தை ரசிக்காதது கண்டு, "எனக்குக் கோவர்த்தனன் பேரில் கோபதாபமோ வெறுப்போ ஏதும் இல்லை, மாமா! எனக்குத் திருமணத்தில் இப்போதைக்கு விருப்பமில்லை. அவ்வளவுதான். ஒன்று மட்டும் உங்கள் திருப்திக்காகச் சொல்லி வைக்கிறேன். என்றைக்காவது நான் கல்யாணம் பண்ணிக் கொள்வது என்று தீர்மானித்தால் கோவர்த்தனன் போன்ற ஒருவரைத்தான் மணந்து கொள்வேன். சரிதானா?"
"ஊஹூம், எனக்குப் புரியவில்லை, பவானி!" என்றார் குணசேகரன். "கோவர்த்தனனே 'இதோ நான் தயார்' என்னும்போது கோவர்த்தனன் போன்ற வேறு ஒருவரைத் தேடுவானேன்?"
"அதைப் பற்றிப் பேச எனக்கு உரிமை இல்லை, மாமா! அது இன்னொருவர் ரகசியம்!" என்றாள் பவானி.

