காதலை வளர்த்த கார்!

பவானியைத் தெரியாதவர்கள் ராமப்பட்டணத்தில் யாரும் கிடையாது. அவளிடம் பேசிப் பழகாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவளை, அவள் அங்கு வந்த நாளிலிருந்தே அனைவரும் அறிவார்கள்.

எனவே அந்த வாலிபர்களுக்கு வாயடைத்துப் போயிற்றென்றால் அது, 'யார் இந்தப் பெண்? என்று புரியாததால் அல்ல. 'பவானி இங்கே எப்படி வந்தாள்? எதற்காக? என்று புரியாதது ஒரு காரணம். 'எவ்வளவு நேரமாக இங்கு நிற்கிறாள். தாங்கள் தர்க்கம் புரிந்ததையும் நாடக ஒத்திகை நடத்தியதையும் எவ்வளவு தூரம் பார்த்திருப்பாள்? அப்படி பார்த்திருந்தால் தங்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருப்பாள்?' என்றெல்லாம் சிந்தனைகள் அடுக்கடுக்காக எழுந்ததால் வியப்பும் வெட்கமும் ஒருங்கே அடைந்தது மற்றொரு காரணம்.

சில வினாடிகள் பொறுத்துப் பிரமிப்பிலிருந்து விடுபட்ட ஒருவன், "வாருங்கள், உட்காருங்கள்" என்று ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அதனைக் கைக்குட்டையால் துடைத்தான். அவ்வளவுதான். அத்தனை இளைஞர்களும் திக்பிரமையிலிருந்து விடுபட்டவர்களாக அவளை உபசரிக்கத் தொடங்கினார்கள்.

"டேய் பையா! காண்டீனில் பாதம் அல்வா பாக்கியிருக்கா? இல்லை எல்லாவற்றையும் விழுங்கித் தொலைத்து விட்டார்களா? போய்ப்பாரு!" என்று அதட்டல் போட்டான் ஒருவன். இன்னொருவன், "இழவு இந்த அறையில் ஃபானே இல்லை. வெந்து புழுங்குகிறது. அந்தக் கிழம் கட்டைகள் சீட்டாடுவதற்கு எதற்கு டேபிள் ஃபான்? சீட்டுப் பறக்கும். அதைப் போய் எடுத்து வருகிறேன்" என்று கூறிவிட்டு விரைந்தான். மூன்றாவதாக ஒருவன் ஆரஞ்சு கலர் ஒன்றை உடைத்துக் கண்ணாடி டம்ளரில் ஊற்றினான்.

நாற்காலியில் அமர்ந்த பவானி, "உங்கள் உபசரிப்புக்கெல்லாம் ரொம்ப தாங்ஸ். ஆனால் நீங்கள் சிரமப்பட வேண்டாம். எனக்கு ஒரு சின்ன உதவிதான் தேவை. மிஸ்டர் கல்யாண சுந்தரத்தைப் பார்க்க வந்தேன். அவர் இங்கே இல்லை என்று தெரிகிறது. அவர் வந்தால் ஒரு செய்தி சொல்லி விட்டால் போதும்" என்றாள்.

அவன் வந்தால் சொல்வது என்ன. அவனே வந்தாச்சு! வாடாப்பா கல்யாணம்! உன்னைத் தேடிக் கொண்டு அதிர்ஷ்ட தேவதையே வந்திருக்கிறது!" என்று சுரம் இறங்கிய குரல் ஒன்று ஒலித்தது.

பவானி திரும்பிப் பார்த்தாள். "என் பாக்கியம்! என்னைத் தேடி வந்தீர்களா?" என்று கல்யாணம் கேட்டபடியே அவளை நெருங்கினான்.

"உங்களைப் போன்ற ஒரு பரோபகாரி நண்பராகக் கிடைத்தது என் பாக்கியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள் பவானி.

"மிஸ்டர் கல்யாணம்! இப்போது கூட ஓர் உதவி கோரித்தான் வந்தேன். எனக்காக அல்ல. இந்த ஊருக்குப் புதிதாக ஒரு குடும்பம் வந்திருக்கிறது. ஊர் எல்லையில் மதகடியில் அவர்கள் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். 'கல்யாண சுந்தரம் என்று இந்த ஊரில் இருக்கிறார். ரொம்ப நல்லவர். உங்களுக்கு நிச்சயம் உதவுவார். நான் போய் அவரை அனுப்புகிறேன்' என்று சொல்லி விட்டு வந்தேன். மாலை நேரத்தில் இங்கே தான் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை. வாசலில் மாஜிஸ்திரேட்டைப் பார்த்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்ததில் வந்த காரியம் மறந்து தாமதமாகி விட்டது. நன்றாக இருட்டியும் விட்டதே! அவர்கள் அங்கே தவித்துக் கொண்டிருப்பார்கள்!"

"தவிப்பதா? நான் இருக்கும் போதா? அதுவும் நீங்கள் பிரியப்பட்டுச் சொன்ன பிறகா? நோ, நோ! அவர்களுக்கு ஜாகை பார்த்துக் கொடுத்து விட்டுத்தான் வருகிறேன்!"

"நிஜமாகவா? ஆல்ரெடி?"

"எஸ், உங்கள் விஷயத்தில் நீங்கள் 'எள்' என்பதற்கு முன் எண்ணெயுடன் நான் நிற்பேன்."

"என்னால் நம்பவே முடியவில்லையே?"

"நம்பிக்கை பிறக்கணும்னா என்னுடன் வாங்க. அழைத்துக் கொண்டு போய்க் காட்டுகிறேன். இங்கே ஒத்திகைக்கு எல்லாரும் காத்திருப்பார்கள். சொல்லி விட்டுப் போகலாம் என்று தான் வந்தேன். திரும்பி அவர்கள் தேவைகளை விசாரிக்க வருவதாகக் கூறிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். கம், லெட் அஸ் கோ!"

"ஓ.கே." என்றாள் பவானி மகிழ்ச்சியுடன். "ஒத்திகை நடந்து கொண்டிருக்கிற சமயத்தில் குறுக்கிட்டதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று தன்னைச் சுற்றிக் குழுமி நின்ற வாலிபர்களிடம் கூறி, கரம் கூப்பி விட்டு வாசலை நோக்கி நடந்தாள்.

"நீங்கள் ஒத்திகையைத் தொடர்ந்து நடத்துங்க. நான் நாளைக்கு வந்து சேர்ந்து கொள்கிறேன்" என்று கல்யாணமும் நண்பர்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

"ஆமாம், கல்யாணம் இப்போ வேறு ஒரு நாடகத்துக்கு ஒத்திகை பார்க்க வேண்டியிருக்கு. 'காதல் கல்யாண நாடகம்!" என்று ஒருவன் கூறியதும் மற்றவர் கொல்லென்று சிரித்ததும் கல்யாணத்தின் காதுகளுக்கு எட்டியது.

'முட்டாள்! காதல் கல்யாண நாடகமா இது? வாழ்க்கையே அல்லவா?' என்று தனக்குள் நண்பனைக் கடிந்துரைத்து முணுமுணுத்தவாறே பவானியைப் பின் தொடர்ந்தான் கல்யாணம்.

காரில் அவளுக்கு பின் கதவைத் திறந்து விடுவதா? முன் கதவையா? என்று கல்யாணம் சற்றுத் தயங்குவதற்குள் பவானிதானாகவே முன்கதவைத் திறந்து அமர்ந்து கொண்டாள். கார் கிளம்பி வாசல்கேட்டை நோக்கிச் சென்ற போது மாஜிஸ்திரேட் இன்னும் அதே இடத்தில் அதே நாற்காலியில் அமர்ந்திருக்கக் கண்டாள் பவானி. காரிலிருந்தபடியே, "வருகிறேன் ஸார்! குட் நைட்" என்று கூறி விடை பெற்றாள். கோவர்த்தனன் கரம் அசைத்தாரேயொழிய அவ்விருவரும் சேர்ந்து போவதைப் பார்க்க அவர் மனம் எரிமலையாகக் கொந்தளித்தது.

இந்தப் பயணத்துக்குச் சீக்கிரம் முடிவு ஏற்பட வேண்டாம் என்று கருதியவனாகக் கல்யாணம் மெல்ல காரை ஓட்டினான். மாசிலாமணி குடும்பத்தைச் சந்தித்துக் குடிவைத்த விவரங்களையெல்லாம் சாங்கோ பாங்கமாகக் கூறினான்.

அவனுடைய பிறருக்கு உதவுகிற குணத்தைப் போற்றிய பவானி, "இந்த நாடகத்தைக்கூட ஏழை எளியோருக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நடத்தப் போகிறீர்களாமே? என்று அரங்கேறுகிறது? தேதி நிச்சயமாகி விட்டதா?" என்று கேட்டாள்.

"தேதி என்னமோ நிச்சயித்து விட்டோம். ஆனால் கதாநாயகி வேஷத்துக்குத்தான் ஆள் இல்லை. ஆண் பிள்ளையைப் பெண் வேஷம் போட்டுக் கொள்ளச் சொல்வது முட்டாள்தனம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதில் 'ரியாலிடி' கொஞ்சமும் இருப்பதில்லை. உருக்கமாக அமைய வேண்டிய காட்சிகூட நகைச்சுவையாகி விடுகிறது. கதாநாயகி வேஷம் ஏற்க யாராவது ஒரு பெண்மணி முன்வந்தால் நாடகம் 'ஸக்ஸஸ்'; இல்லையேல் 'ஃபெய்லியர்'!"

"மேடை ஏறி நடிக்க இந்த ஊரில் எந்தப் பெண் முன்வருவாள்? வீண் ஆசை" என்றாள் பவானி.

"அதனால்தான் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாயிராமல் பெரிய நகரத்திலிருந்து வந்தவர்களாகப் பிடித்துப் போடலாம் என்று யோசனை பண்ணுகிறேன். சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களே என்பதால் உடனே இல்லா விட்டாலும் இரண்டு நாட்கள் கழித்துக் கேட்டுப் பார்க்க உத்தேசம். அந்தப் பெண் கமலாவும் பார்க்கச் சுமாராக இருக்கிறாள். மேடை ஏறி நடிக்கச் சம்மதிப்பாள் என்று தோன்றுகிறதா உங்களுக்கு?"

"சிவசிவா! அவள் பெண் ஜன்மமாகிய என் முன்னால் நின்றே இரண்டு வார்த்தை பேச வில்லையே. அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். அவளாவது, மேடை ஏறி நடிக்கவாவது?"

இந்தப் பதிலையே பவானி கூற வேண்டும் என்று எதிர்பார்த்த கல்யாணம் திருப்தி அடைந்தவனாக, "அப்படியானால் ஒன்று செய்யுங்கள்; நீங்களே கதாநாயகி பாகத்தை ஏற்று நடித்து விடுங்கள்" என்றான்.

"அதற்கென்ன? செய்து விட்டால் போகிறது!" என்றாள் பவானி.

இவ்வளவு சுலபமாக அவள் சம்மதித்து விடுவாள் என்று எதிர்பாராத கல்யாணம் திடுக்கிட்டதால் கார் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. பவானி பதற்றமடைந்து "ஸ்டெடி, ஸ்டெடி" என்று எச்சரித்தபடியே ஸ்டியரிங்கைப் பற்றக் கரத்தை நீட்டினாள். அவள் சாய்ந்த போது அவள் தோள்கள் கல்யாணத்தின் தோள்களை உரசின. அவளுடைய நீண்ட அழகிய விரல்கள் கல்யாணத்தின் விரல்களைத் தீண்டியதில் அவற்றின் மிருதுத் தன்மையை அவன் உணர்ந்தான்.

அவ்வளவுதான்! கல்யாணத்தின் உடம்பெல்லாம் சிலிர்த்து நெளிந்தது. ஸ்டியரிங்கைப் பற்றியிருந்த அவன் கரங்கள் மட்டும் நிதானத்துடன் இருக்குமா என்ன?

கார் பாம்புப் பாதை வகுத்து பிறகு அதிலிருந்து பிரிந்து போய்ச் சாலையோரக் குப்பைத் தொட்டி ஒன்றின் மீது 'ணங்' என்று மோதிக் கொண்டு நின்றது.

"ஐயோ!" என்று அலறியபடியே கரங்களில் முகம் புதைத்துக் குனிந்து கொண்டாள் பவானி.

அவள் மறுபடியும் கண் திறந்து நிமிர்ந்து பார்த்த போது, தெரு விளக்கின் மங்கிய ஒளியில் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டாள். கல்யாணம் கீழே இறங்கிக் கார் எந்த அளவுக்குச் சேதம் அடைந்திருக்கிறது என்று பார்த்துத் திருப்தியுடன் தலையசைத்து விட்டு அதன் 'பானெட்' டின் மேல்குனிந்து அதனை முத்தமிட்டான்.

பிறகு திரும்பி வந்து மீண்டும் பவானிக்குப் பக்கத்தில் அமர்ந்தான். "ஒண்டர்ஃபுல், ஒண்டர்ஃபுல்! நாடகத்தில் நான்தான் கதா நாயகன்! வேறு யார் போட்டிக்கு வந்தாலும் விடப் போவதில்லை" என்றான்.

"காருக்கு ரொம்ப சேதமோ?" என்று கவலையுடன் கேட்டாள் பவானி.

இடது பக்க மட்கார்டில் பலத்த சேதம். சொட்டை விழுந்திருக்கிறது. பெரிதாக. ஆனால் நான் அதை ரிப்பேர் செய்யவே போவதில்லை. திஸ் இஸ் மை லக்கி டே!

அதன் நினைவாக அந்தப் 'பெண்' டை அப்படியே வைத்திருக்கப் போகிறேன்.

பவானி குபீரென்று அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

வான வில்லின் வண்ணங்களையும் மல்லிகை மணத்தையும் பட்டின் மென்மையையும் ஜல தரங்க நாதத்தையும் ஒருங்கே ஒரே சமயத் தில் உணர்ந்தான் கல்யாணம்.

(தொடரும்)