இரக்கமற்ற இரவுகள்
அன்றிரவு பவானிக்குத் தூக்கமே வரவில்லை. அன்று மட்டும்தானா? இது போன்ற எத்தனையோ இரவுகள் அவளிடம் இரக்கமின்றி நடந்து கொண்டு வதைத்திருக்கின்றன.
மாறனின் மலர்க் கணைகளால் தாக்குண்டவர்கள் இப்படி உரக்கமின்றித் தவிப்பது சகஜம் என்று அவள் படித்திருக்கிறாள். அது உண்மைதான். அவள் விஷயத்தில். உமாகாந்தனும் இப்போது எங்கோ கண்காணாத இடத்தில் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால் வியப்பில்லை.
ஆயினும் அதே மன்மதன் பல சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டு மலர்க் கணைகளுக்குப் பதில் அரும்பு அம்புகளை ஏவிவிடுவதாக அவளுக்குப்பட்டது. அதுதான் ஒருதலைப்பட்சமான காதலாகப் பரிணமித்துப் பல குழப்பங்களுக்கும் துயரங்களுக்கும் மக்களை ஆளாக்குவதாக அவள் தர்க்கரீதியாக ஒரு முடிவுக்கு வந்தாள். தன்னைச் சுற்றியுள்ளவர்களையே அவள் எண்ணிப் பார்த்தாள். 'எவ்வளவு விசித்திரமான நிலை! கமலாவுக்குக் கல்யாணத்தின் மீது காதல். கல்யாணமோ என்னை அடைய ஆசைப்படுகிறார். மாமா குணசேகரன் தன் மருமாள் மாஜிஸ்திரேட்டைத் திருமணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். கோவர்த்தனனுக்குக் கொஞ்சம் இடமளித்தால் போதும். அவர் என்னை விழுங்கி ஏப்பம்கூட விட்டு விடுவார்! அத்தனை மோகம் அவருக்கு என் மீது! ஆனால் நான் மனமார நேசிப்பதோ உமாகாந்தனை. அவரோ எங்கே இருக்கிறார், என்று திரும்புவார் என்பதொன்றும் தெரியவில்லை!'
இந்தச் சிக்கல்கள் எப்படித் தீரப் போகின்றன என்று நினைத்தபோது பவானிக்குச் சிரிப்பு வந்தது. கூடவே உமாகாந்த் இந்த நிமிஷத்தில் எங்கு, எத்தனை கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணத்தில் மனம் வேதனைப்பட்டது.
உள்ளத்தை முறுக்கிப் பிழியும் இந்தத் துயரத்தை யாரிடமாவது சொல்லிக்கொண்டு ஆறுதல் பெறக்கூட அவளால் முடியவில்லை. 'கமலாவுக்கும் எனக்குமிடையே இது விஷயத்தில் எவ்வளவு வித்தியாசம்! கமலா கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் மனம் விட்டு வாய்விட்டுத் தன் ஆசைகளை என்னிடம் வெளியிட்டாளே. அப்படி என்றால் யாரிடமாவது பேச முடிந்ததா? பதிலுக்குக் கமலா விடம் என் அந்தரங்கங்களைச் சொன்னேனா? கல்லூரிப் படிப்பும் வழக்கறிஞராகத் தொழில் நடத்துவதும் அந்த அளவுக்கு ஒரு போலி கௌரவத்தை வளர்த்து வார்த்தைகளுக்கு வரம்பு கட்டுகின்றன!
'கமலாவைப் போலவே நானும் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியிருக்கலாமோ?
சேச்சே! கல்லூரிப் படிப்பு இல்லாதிருந்தால் உமாகாந்தை என்னால் எப்படி சந்தித்திருக்க முடியும்? அவர் காதலைப் பெறும் பாக்கியத்தை எப்படி அடைந்திருக்க முடியும்? அந்த ஆனந்தமான ஆண்டுகளை எண்ணும் போதே மேனி சிலிர்க்கிறதே! இப்போது அவரைப் பிரிந்து துயருற்றாலும் என்றாவது ஒரு நாள் அவரை மீண்டும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையே எத்தனை இனிமையான ஓர் அனுபவமாகவும் இருக்கிறது! கல்கத்தாவில் அவருடன் நெருங்கிப் பழகிய அந்த இரண்டு ஆண்டுகளைத் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொணர்ந்தே இருபது வருஷங்களை ஓட்டி விடலாமே!'
இத்தனைக்கும் அவள் பி.ஏ. படித்த அந்த இரண்டு ஆண்டுகளிலும் உமாகாந்துடன் அடிக்கடி கொஞ்சிக் குலவி மகிழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவன் அருகில் இருக்கிறான். அதே கல்லூரியில்ல் எம்.ஏ. வகுப்பில் சரித் திரப் பிரிவில் படிக்கிறான். தன்னை விரும்புகிறான். தன்னைச் சந்திக்க நேரும்போதெல்லாம் சிரித்துப் பேசுகிறான் என்ற சூழலே போதுமானதா யிருந்தது.
அன்றைக்கே அவன் லட்சியவாதி. கதர் தான் உடுத்துவான். சுதந்திர இயக்கத்தில் இயன்ற அளவில் பங்கேற்பான். "படிப்புக்குக் குந்தகம் ஏற்படாத அளவில் நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று அவனது பெற்றோர்களுக்கு மேலாக அவளும் வற்புறுத்துவாள்.
"பொய்யான சரித்திரத்தை எழுதி வைத்திருக்கிறார்கள் ஆங்கிலேயர். இதைப் படித்துப் பட்டம் பெற்றுத்தான் என்ன லாபம்?" என்று கேட்பான் உமாகாந்த். "சரித்திரத்தை ஒரு நாள் நான் மாற்றி எழுதிக் காட்டுகிறேன், பார்!" என்பான்.
அப்படி மெய்யாலும் ஒரு சந்தர்ப்பம் நிகழவே செய்தது! காலாண்டுப் பரீட்சையின் விடைத் தாள்களைத் திருத்திக் கொடுத்திருந்தார் பேராசிரியர். அதைக் கொண்டுவந்து பவானியிடம் காட்டினான் உமாகாந்தன். அவன் முகத்தில் குறும்புப் புன்னகை தவழ்ந்தது. பெரிய கோழி முட்டை சிவப்பு மையால் போட்டிருந்தார் பேராசிரியர். திகைத்தாள் பவானி. அவளால் நம்பவே முடியவில்லை. அறிவுச் சுடரை உள்ளடக்கியதால் ஒளிரும் நெற்றியுடன்கூடிய உமாகாந்தன் சைபர்மார்க் வாங்குவதா? இலேசாக நடுங்கிய கரங்களால் ஒரு வரி பேராசிரியர் எழுதியிருந்தார்; "எக்ஸலண்ட் இங்கிலீஷ் பட் ராங் ஹிஸ்டரி!" அவளுக்குப் புரிந்துவிட்டது! உமாகாந்தன் ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்த பாடப் புத்தகங்களின்படி பரீட்சை எழுத வில்லை. உண்மைச் சரித்திரத்தை எழுதியிருக்கிறான். ஆங்கிலேயரின் ஆளுகையால் இந்தியா அடைந்த நன்மைகளை எழுதவில்லை. இந்தியா அந்த நன்மைகளை எப்படியும் காலக்கிரமத்தில் தானாகவே பெற்றிருக்கும் என்று வாதாடி யிருந்தான். அவர்கள் கொணர்ந்த சீர்திருத்தங்களில் எதுவுமே அவர்கள் இந்த நாட்டை அடிமைப்படுத்திய தீமைக்கு ஈடாகிவிடாது. ஆங்கிலேயரின் வீரத்தை அவன் வாழ்த்தவில்லை. அவர்களது ஆணவத்தையும் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் விவரித்திருந்தான். வியாபாரம் பண்ண வந்தவர்கள் நாடாளும் ஆசை கொண்ட விந்தையை விளக்கியிருந்தான். அவனது ஆங்கில அறிவு அத்தனையையும் பயன்படுத்தி அற்புதமாக எழுதிய கட்டுரை!
" 'பிரமாதமான ஆங்கிலம் என்று நீங்கள் தட்டிக் கொடுத்திருப்பது சரி; ஆனால் இதைத் தவறான சரித்திரம் என்று எப்படி நீங்கள் சொல்லலாம்? என்று பேராசிரியரிடம் வாதாடினேன். அவர் வெலவெலத்துப் போய்விட்டார் !" உமாகாந்தன் கூறி விட்டுச் சிரித்தான்.
"அவர் கடமையைச் செய்தார்" என்றாள் பவானி கலவரத்துடன். அவன் கரங்களைப் பற்றிக் கொண்டு, "காலாண்டுப் பரீட்சை இது; பாதகமில்லை. இறுதிப் பரீட்சையில் இப்படி எழுதி மோசம் போய் விடாதீர்கள். வாழ்க்கையின் இரண்டு ஆண்டுகள் வீணாகி விடும்!" என்று கெஞ்சினாள்.
"அது எனக்குத் தெரியாதா, பவானி? இதைவிடப் பிரமாதமாக ஆங்கிலேயரின் ஆற்றல்களை மெச்சி எழுதி டிஸ்டிங்க்ஷன் வாங்குவேன்! பேராசிரியரிடமும் அந்த வாக்குறுதியை அளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்!" என்றான் உமாகாந்தன் அவள் விரல்களைச் சமாதானமாக வருடியவாறு.
என்றாலும் அந்த வாக்குறுதியை நிறை வேற்ற அவனால் முடியாமலே போயிற்று!
(தொடரும்)

