ஜின்னா தோற்றார்!

வந்தவள் பவானி. அவள் சற்று நின்று பார்த்துவிட்டுப் பெஞ்சில் அமர்ந்தாள். அப்படியும் முதலியார் தலை நிமிரவில்லை. தொண்டையைக் கனைத்துக் கொண்டு "வக்கீல் ஸார் ரொம்பப் பிஸியாக இருக்கறாப் போலிருக்கு" என்றாள் பவானி.

முதலியார் நிமிர்ந்து பார்த்துத் திடுக்கிட்டார்.

எழுந்து நின்று, "வரணும் வரணும்... நீங்க வந்ததை நான் பார்க்கவே இல்லை. என்ன சேதி? எப்போ வந்தீங்க? அடே நாற் காலி! பியூனைக் கொண்டாடா! சேச்சே! அடே பியூன் நாற்காலி கொண்டாடா!"

"வேண்டாம். பெஞ்சே சௌகரியமாயிருக்கு" என்றாள் பவானி.

"அந்த மடையன் பியூன் யாராவது வருகிற சமயம் பார்த்து எங்கேயாவது தொலைஞ்சு போயிடறான். குமாஸ்தாவுக்கு இன்றுதான் திவசம். அவனும் வரவில்லை.

"குமாஸ்தாவுக்கா ஸார் திவசம்? காலமாகி ரொம்ப நாள் ஆச்சோ?"

"இல்லை; இல்லை. குமாஸ்தாவின் தாயாருக்குத் திவசம். அது போனால் போகட்டும். எங்கே வந்தீர்கள்? என்ன விஷயம்?"

"ஒன்றுமில்லை ஸார்! சும்மாத்தான். புது கார் இப்பத்தான் வந்தது. ஒரு டிரைவ் போகலாம் என்று கிளம்பினேன். இந்த ஊரில் என்ன மெரீனாவா? மவுண்ட் ரோடா? என்ன இருக்கிறது. புதுக் காரைப் பெருமையுடன் ஓட்டிப் போக? பெரும்பாலும் கூடைப் புழுதி எழுப்புகிற கப்பி ரோடுதான். ஆகவே ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியார் வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ஜம்பம் அடித்துக்கொண்டு வரலாமே என்று தோன்றியது. புறப்பட்டு விட்டேன். உங்க மகன் கல்யாணத்திடமும் சொல்லியிருந்தேன். புதுக்கார் வரப்போகிறதென்று." "ஐஸீ." அவன் மெட்ராஸ் போயிருக்கான்."

"தெரியுமே! என்னிடம் சொல்லிக் கொண்டு தான் கிளம்பினார். அவரைப் பார்க்க நான் வரவுமில்லை. உங்க ஆசிர்வாதத்தைக் கோரித்தான் வந்திருக்கேன். இந்தப் பக்கத்தில் லீடிங் லாயர் நீங்க. இந்த ஊருக்கு வந்ததிலிருந்து நான் உங்களைச் சந்தித்துப் பேசினதே இல்லை. மரியாதைக்காவது வந்து பார்க்கணும் என்று ரொம்ப நாட்களாய் எண்ணம். இன்று புதுக் காரும் வரவே...."

"எதற்காக என்னைப் போய்ப் பிரமாதமாகப் புகழ்கிறீர்கள்?" என்றார் கோபால கிருஷ்ணன். "ஊர் முழுதும் பவானி என்ற பெயரைக் கேட்டாலே 'ஓஹோஹோ' என்கிறார்கள். கோர்ட்டுக்கு நான் வரும் போது சில சமயம் உங்களைச் சுட்டிக் காட்டி இன்னாரென்று என்னிடம் சக வக்கீல்கள் சொல்லியிருக்கிறார்கள்."

"நல்ல வார்த்தைகளாகத்தானே ஸார் பேசினார்கள் என்னைப் பற்றி? குற்றம் குறை ஒன்றும் கூறவில்லையே?"

"கிராஸ் எக்ஸாமினேஷனைக் கிளாஸா நீங்க நடத்தறதாக் கேள்விப் பட்டேன். அப்படிப்பட்டவர் என்னைத் தேடி வருவதென்றால் அது என் பாக்கியம்தான்" என்றார் கோபாலகிருஷ்ணன்.

"விளையாட்டுக்குக்கூட இப்படி நீங்க உங்களையே குறைத்துப் பேசிக் கொள்ளக் கூடாது. அனாவசியமாக என்னைத் தூக்கி வைக்கவும் வேண்டியதில்லை. நான் இந்தத் தொழிலுக்குப் புதுசு. உங்களைப் போன்றவர்கள் என்னை 'கைட்' பண்ணனும். அடிக்கடி ஏதாவது சந்தேகங்கள் சட்டப் பாயிண்டிலே தோன்றும். நீங்க கிளியர் பண்ணனும். உங்கள் மகளைப் போல் நினைத்துக் கொள்ளுங்கள். என்ன சரிதானா?"

"அதற்கு என்ன ரொம்ப சரி!"

"இப்போ கூடப் பாருங்க. உங்க அட்வைஸ்ஸைக் கேட்டுக் கொண்டு போகலாம் என்று தான் வந்தேன். ஒரு விஷயமா."

"சொல்லுங்கள்."

"'ஏ' வந்து 'பி' யைக் கத்தியால் குத்தினால் அது கொலை முயற்சி. ஆனால் சும்மா கத்தியைக் காட்டிப் பயமுறுத்தினால்...?"

"சட்டப்படி அதுவும் தப்புத்தான். ஆனால் 'மோடிவ்' நிரூபிக்கப்படணும். சும்மா விளையாட்டாப் பேசிக்கிட்டிருந்தோம்னு சொல்லி 'ஏ' தப்பிக்கப் பார்க்கலாம். கத்தியால் மிரட்டி விரும்பத் தகாத இன்ன காரியத்தை 'ஏ' சாதித்துக் கொண்டான் என்பதாக நிரூபிக்கணும்."

"'ஏ' சொல்கிறார், ''பி' என்னை எஸ்டேட் ஆட்களை விட்டு அடிக்கப் போவதாகப் பயமுறுத்தினான். அதனால் தான் நான் கத்தியைக் காட்டி அவனை மிரட்டினேன்' என்று."

"என்ன இதெல்லாம்? உங்க நாடகத்திலே வருகிற காட்சியா? கல்யாணம் எழுதின நாடகத்திலே நீங்க சஸ்பென்ஸ் சேர்க்கறீங்களா?"

"இல்லை சார்! என் வாழ்க்கையே ஒரு பெரிய சஸ்பென்ஸாக இருக்கு."

"யார் உங்களை மிரட்டுகிறார்கள்? என்ன விஷயம்?"

"எதுவுமே எனக்கு நிச்சயமாகத் தெரியலே. உறுதிப்படுத்திக் கொள்ள முடியாததால் எந்த ஒரு நபர் மீதும் குற்றம் சுமத்தவும் தயக்கமாயிருக்கு. ஆனால் மனம் மட்டும் கிடந்து அடித்துக் கொள்கிறது. ஏதோ விபரீதம் நேரப் போகிறது அதுவும் என் காரணமாக நிகழப் போகிறது என்று.."

ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன் அவளை உற்றுப் பார்த்தார். "நீ ரொம்பக் குழப்பம் அடைந்திருக்கிறாய்" என்றார்.

"அப்பாடா, புரிந்து கொண்டுவிட்டீர்களே" என்றாள் பவானி. "என் மனசோடு ஒப்பிடும்போது ஜின்னாவின் முஸ்லீம் லீக் கொள்கைகள் கூட ரொம்பத் தெளிவானதாகத் தோன்றும். அத்தனை குழப்பம்!"

"ஐயோ பாவம்."

"ஆமாம், ஸார்! ஜின்னாவை நினைச்சாலே ரொம்பப் பரிதாபமாகத்தான் இருக்கு" என்று சிரித்துக் கொண்டே கூறிய பவானி.

கோபாலகிருஷ்ணனை நோக்கி அடுத்த கேள்விக் கணையை வீசினாள்; "ஸார்! இன்னொன்று கேட்கிறேன். ஒரு நபரை உத்தமர் என்று நமக்கு மிக நன்றாக, உறுதியாகத் தெரியும். ஆனால் அவர் பெரிய குற்றம் புரிந்து விட்டதாக நிதர்சனமாகச் சாட்சியம் இருக்கிறது. அந்தச் சமயத்தில் ஒரு வக்கீலின் கடமை என்ன? சாட்சியத்தின்படி நடப்பதா? அல்லது மனச்சாட்சிப்படி நடப்பதா?"

ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் தலையைச் சொறிந்து கொண்டார். "நடந்ததை நடந்தபடி விவரித்தால் தேவலாம். இப்படி மர்மமாகக் கேட்டால் என்ன பதில் சொல்வது?"

"சரி, அது வேண்டாம். இதற்குப் பதில் கூறுங்கள். ஒரு மனுஷன் அவ்வளவாக நல்ல சுபாவம் உள்ளவன் இல்லை. அவனோடு பழக வேண்டாம் என்று அறிவு எச்சரிக்கிறது. ஆனால் மனம் அறிவுக்குக் கட்டுப் படாமல் எதனாலோ அவன்பால் ஈர்க்கப் படுகிறது. ஆனால் அதைக் காதல் என்றும் கூறுவதற்கில்லை. ஏதோ போன ஜன்மத்தில் விட்டுப்போன தொடர்பு இப்போது புதுப்பிக்கப்படுவது போல் ஒரு பிரமை. இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் ஒரு பெண் எப்படி நடந்து கொள்வது?"

"'த்சொ. த்சொ த்சொ" என்று சத்தம் எழுப்பியபடி தலையை அசைத்தார் கோபால கிருஷ்ணன். "உனக்காக நான் ரொம்பப் பரிதாபப்படுகிறேன் பவானி!"

"ஏன் ஸார்? எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. பைத்தியம் பிடிக்காமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் வந்து சற்று நேரம் பேசினேன். பெரிய கிரிமினல் லாயர் என்று பெயரெடுத்தவர் ஆயிற்றே. எனக்குத் தெளிவு பிறக்கிற மாதிரி ஏதாவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். கடைசியில் பார்த்தால் உங்கள் மூளையையும் குழப்பியதுதான் மிச்சம் என்று தோன்றுகிறது.

"உன்னை என் மகள் போல் நினைத்துக் கொள்ளச் சொன்னாய். சரி என்றேன். வார்த்தை மீற மாட்டேன். ஆனால் உனக்கு என்னைத் தகப்பனாக ஏற்கும் மனப் பக்குவம் இன்னும் வரவில்லை. அதனால்தான் குறிப்பிட்டுக் கூறாமல் குயுக்தியாகப் பேசுகிறாய். உனக்கு எப்பொது மனம் விட்டுப் பேசத் தோன்றுகிறதோ சொல்லு. கேட்கிறேன். என்னால் முடிந்த யோசனைகளைக் கூறி உதவிகளையும் செய்கிறேன். இதற்கு அதிகமாக நான் என்ன சொல்ல முடியும்?"

"அது போதும் ஸார் எனக்கு" என்ற பவானி எழுந்து விடை பெற்றுக்கொண்டாள். அவள் நன்றி கூறவில்லை. ஆனால் கலங்கி நீர் ததும்ப நின்ற கண்களை அவரிடமிருந்து மறைத்துக்கொள்ள அவள் பிரயாசைப் படாததே நன்றியை உணர்த்தியது.

பவானி சென்றதும் செல்லம்மாள் மறுபடியும் தன் கணவன் அறைக்குள் நுழைந்து, "என்னங்க, யாரோ ஒருத்தி வந்திருந்தாளே அவள் பெண்தானே?" என்றாள்.

"ஏன், அதிலே உனக்கு என்ன சந்தேகம்?"

"அந்தப் போடு போட்டாளே! பெண் என்றால் இப்படியா இருப்பார்கள்?"

"பின்னே எப்படி இருப்பாள்? அவளுக்கு என்ன குறை? அழகாய், இலட்சணமாய் நாகரிகமாய் இருக்கிறாள். படித்து பி.ஏ. பி. எல். பட்டமும் வாங்கி யிருக்கிறாள். எல்லோரும் உன்னைப்போல் கர்நாடகமாக இருக்கணுமா என்ன?"

"சரியாய்ப் போச்சு; நீங்க பேசறதைப் பார்த்தால் இந்த வீட்டிலேயே அவளைத் தங்கவைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!"

"ஏன், அப்படிச் செய்தால் என்ன? அவள் கூட 'என்னை உங்கள் பெண்ணாகப் பாவித்துக் கொள்ளுங்கள்' என்றுதான் சொன்னாள். மருமகப் பெண்ணாகக்கூட ஏற்கலாம். ஆனால்....."

"போதும், வேறெ வினையே வேண்டாம். ஏற்கனவே இந்த வீட்டில் நீங்க அப்பா பிள்ளை இரண்டு பேர் வக்கீல் வேலை பார்த்து என்னைப் பேச விடாமல் அடிக்கிறீங்க. மருமகளும் வக்கீலாக வந்து விட்டால் நான் ஊமையாகி விடவேண்டியதுதான்."

"அப்படி நடந்தால் தேவலாமே. ஆனால் என் கவலை வேறு. ஏற்கனவே அவள் இந்த ஊருக்கு வந்த பிறகு அநேகமாக எல்லாக் கட்சிக்காரங்களும் அவகிட்டதான் போறாங்க. இந்த வீட்டுக்கே அவள் வந்து குடியேறி தன் பெயரையும் எழுதித் தொங்க விட்டால் இப்போ எனக்கு வந்துகொண்டிருக்கிற ஒன்றிரண்டு கேஸ்களும் அவகிட்டத்தான் போகும்" என்று கூறி ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் இடி இடியென்று சிரித்தார்.

"என்ன சிரிப்பு? எனக்குப் பிடிக்கவேயில்லை!" என்று தோளில் முகவாயை இடித்துக்கொண்டு உள்ளே போனாள் செல்லம்.

(தொடரும்)