எதிர்த் தந்திரம்!

ராமப்பட்டணத்திலிருந்து பஸ் புழுதியைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டது. ஆனால் கிளம்பிய வேகத்தில் அதனால் வெகுதூரம் போய்விட முடியவில்லை. ஊர் எல்லையைத் தாண்டியதுமே உள்ள குறுகிய பாலத்தைக் கடக்க முடியாமல் நின்றுவிட்டது. காரணம் பாலத்தில் ஒரு மாட்டு வண்டி மையத்தில் நின்றிருந்ததுதான். அதிலிருந்து கோபாலகிருஷ்ணன் ஒரு பெட்டி, கூஜா சகிதம் இறங்கினார்.

பஸ்ஸைநோக்கி நடந்து வந்து அதில் ஏறியபடியே, "என்னை ஏமாற்றிவிட்டுப் புறப்படலாம் என்று பார்த்தீர்களா? அதெல்லாம் இந்த ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனிடம் பலிக்காது. தம்பிங்களா!" என்றார்.

அப்புறம் ஜன்னல் வழியாகத் தலையை நீட்டி,"ஆறுமுகம்! வண்டியை வீட்டுக்குத் திருப்பி ஓட்டுடா! பஸ் போகட்டும்!" என்று உரக்கக் கத்தினார்.

"அம்மாவிடம் கல்யாணமும் நானும் இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி விடுவோம்னு சொல்லு..... துணைக்கு வேணும்னா மதுரவல்லி வீட்டோடு வந்து இருக்கட்டும்."

"சரிங்க" என்றான் ஆறுமுகம். பஸ் தொலைவில் வருவதைப் பார்த்துவிட்டுப் பாலத்தை அடைத்துச் சற்றுமுன் வண்டியை நிறுத்தியவன், இப்போது பஸ்ஸுக்கு வழி விட்டு 'ஜல் ஜல்' என்று சதங்கை ஒலிக்கச் சென்றான்.

"போகட்டும், போகட்டும்! ரைட்!" என்றார் கோபாலகிருஷ்ணன். பஸ் மீண்டும் நகரத் தொடங்கியதும், "ஏண்டா, கல்யாணம்! நல்ல பிள்ளைக்கு அடையாளமா சொல்லிக்காமல் கிளம்பி விட்டாயாக்கும்"என்றார்.

"எப்படிப்பா, உங்களுக்கு விஷயம்தெரிஞ்சுது?"

"நீதான் சங்கத்தின் காண்டீன் பையனை உன் அம்மாவிடம் ரகசியமா அனுப்பி வைச்சியே? அவன் உன் அம்மாவின் உருட்டல், மிரட்டல் பேச்சு காதில் விழுந்தவுடனே அவள் தான் வீட்டு எஜமானனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, உன் உத்தரவுப்படி எஜமானியம்மாளைத் தேடி நேரே என்னிடம் வந்துவிட்டான்! ஒரு பெட்டியிலே உனக்கு இரண்டு சட்டை வேஷ்டி வைத்துக் கொடுக்குமாறு கேட்டான். 'எதுக்குடா' என்றேன்."

"உடனே எல்லாவற்றையும் உளறிக் கொட்டி விட்டானா?" என்று கல்யாணம் பதற்றமும் கோபமுமாகக் கேட்டான்.

"பின்னே? ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணனின் குறுக்கு விசாரணையில் யாராவது தப்ப முடியுமா, என்ன? அவன் காப்பி ஆற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த போதுதான் நீங்க உங்க திட்டத்தை உருவாக்கினீங்களாம்!"

"என்னப்பா, சொன்னான்?"

"நீங்க இப்போ செய்து கொண்டிருக்கும் காரியத்தைத்தான் விவரித்தான். 'திருநீர்மலையில் ரங்கநாத முதலியார் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கிறார். ஆனால் கல்யாணம் ஸாருக்கு எப்படியோ விஷயம் அம்பலமாகி விட்டது. நண்பர்களோடு போய் அவரை அதிசயத்தில் ஆழ்த்தப் போகிறார்' என்றான்."

"அவ்வளவுதானா, அப்பா?"

"இவ்வளவு போதாதா? இன்னும் என்ன? ரங்கநாத முதலியார் என் ஆப்த நண்பர். அவருக்கு நான்தான் வக்கீல். அப்படியிருந்தும் அவர்தான் எனக்கு விஷயத்தைத் தெரிவிக்காமல் ஏமாற்றினார் என்றால் நீயுமா அப்பாவுக்குத் தெரியாமல் கம்பி நீட்டப் பார்க்கணும்?"

நிம்மதிப் பெருமூச்சு விட்டான் கல்யாணம். "அதற்கில்லை, அப்பா! உங்க நன்மையை உத்தேசித்துத்தான் நான் கூற வில்லை. உங்களுக்கு விஷயம் தெரியவந்தால் வராமலிருக்க உங்க மனசு கேட்காது. ஆனால் பஸ் பயணம் சிரமம். உட்கார்ந்தபடியே போகணும். அதுவும் இரவு நேரம். கண் விழித்தால் உடம்புக்கு ஆகுமா?"

"உன் கரிசனம் கிடக்கட்டும். கல்யாணம். சரீரத்துக்காகப் பார்த்துச் சிநேகத்தை விட்டு விட முடியுமா? எத்தனை வருஷப் பழக்கம் எனக்கும் ரங்கநாதனுக்கும்!"

"நீங்க வந்ததே நல்லதாப் போச்சுப்பா" என்றான் கல்யாணம், ஈனஸ்வரத்தில்.

"ஆமாம். எல்லோருமே திடும்மென்று போய் நிற்கிறோம். அதனால் மத்தியானச் சாப்பாடு எப்படியானாலும் இரவு விருந்து பிரமாதமாய் அமையணும்னு போனதுமே சொல்லிவிடலாம். லட்டு மலை, பாதாம்கீர் ஆறு, சாம்பார் சமுத்திரம்! கல்யாணம் உனக்குப் பாதாம்கீர் ரொம்பப் பிடிக்குமே!" என்று கூறிச் சிரித்தார் கோபாலகிருஷ்ணன்.

கல்யாணத்துக்கு அப்போதே விளக்கெண்ணெயை விழுங்கியது போலிருந்தது. அவன் நண்பர்கள் யாரும் பேசவில்லை. என்ன செய்வது? எப்படி நடந்து கொள்வது என்ப தொன்றும் புரியாமல் யோசித்துக் களைத்துப் போய் உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு, கோபாலகிருஷ்ணன் தலையும் ஆடிவிழ ஆரம்பித்தது. மனம் பதைக்கக் கண் விழித்து அமர்ந்திருந்தவன் கல்யாணம் ஒருவன்தான்.

நண்பர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் தான் ஒரு கையாலாகாதவனாக அவமானப்பட்டு நிற்பது போல் உணர்ந்தான். 'நினைத்த காரியம் என்ன? நடப்பது என்ன? அப்பாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கல்யாணத்தை நிறுத்துவது எப்படிச் சாத்தியம்? அவர் அதட்டலுக்கு எல்லோரும் அடங்கிப் போய் விட வேண்டியதுதான். யாருக்குமே தைரியம் வராது! அப்புறம் அப்பாவே குறிப்பிட்டது போல் லட்டு மலைக்கும், பாதாம்கீர் ஆறுக்காகவுமே ஆசைப் பட்டு இந்த இளைஞர் பட்டாளம் கல்யாணத்துக்குச் சென்றதாகும். பின்னால் இந்தத் தோல்வியைச் சுட்டிக் காட்டி நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்யும்போது அதை எப்படிப் பொறுத்துக் கொள்வது? அதுதான் போகட்டும், அத்தனை தூரம் மார் தட்டிப் பேசிவிட்டு வந்தாயே, பவானியிடம்! அவள் முகத்தில் இனி எப்படி விழிப்பது?' நினைக்க நினைக்கக் கல்யாணத்தின் மனம் பதறியது.

மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ஒரு சின்ன ஊரில் பஸ் நின்றது. டிரைவரும் கண்டக்டரும் டீ சாப்பிட்டு வர இறங்கினார்கள். கல்யாணம் பஸ்ஸுக்குள் நோட் டம் விட்டான். கோபாலகிருஷ்ண முதலியார் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். கல்யாணம் பஸ்ஸை விட்டு இறங்கி டிரைவர், கண்டக்டரைப் பின்தொடர்ந்தபோது அவனுடன் அவன் நண்பர்கள் இருவர் மட்டுமே வந்தார்கள். மற்றவர்கள் அரைத் தூக்கத்திலோ ஆழ்ந்த உறக்கத்திலோ இருந்தனர்.

டீ அருந்திக் கொண்டிருந்த டிரைவர், கண்டக்டரைத் தனியே அழைத்தான் கல்யாணம். அவர்களிடம் அந்தரங்கமாகச் சில வார்த்தைகள் பேசினான் இரு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து இருவர் பாக் கெட்டிலும் மடித்துச் செருகினான். பஸ்ஸுக்கு அனைவரும் திரும்பிய பின்னர் இளைஞர்களிடையே சங்கிலித் தொடர்போல் ஒரு செய்தி அந்தரங்கமாகப் பரவியது.

திருநீர்மலையை அடைய இன்னும் பதினைந்து மைல் தூரம் இருக்கும்போது பஸ் 'திடும்' மென்று நின்று விட்டது. டிரைவர் கிளப்பிக் கிளப்பிப் பார்த்தார். ஊஹூம்! அவர் ஜம்பம் சாயவில்லை.

"எல்லோரும் கொஞ்சம் கீழே இறங்கித் தள்ளறீங்களா?" என்றார் திரும்பிப் பார்த்து.

"அப்பா! நீங்கள் இறங்க வேண்டாம். நாங்கள் வாலிபர்கள் இறங்கித் தள்ளுகிறோம்"என்றான் கல்யாணம்.

"அழகுதான்! எனக்கு அப்படி என்ன வயசாகி விட்டது? நானும் ஒரு கை கொடுக்கிறேன்" என்று கொட்டாவி விட்டுக் கொண்டே இறங்கினார் கோபாலகிருஷ்ணன்.

எல்லோரும் பஸ்ஸை தள்ளினார்கள். பஸ் புறப்பட்டது. நகர்ந்தது! "ஸ்டாப்! ஸ்டாப்!" என்று கத்திக் கொண்டே இளை ஞர்கள் அதன் பின்னால் ஓடினார்கள். பஸ் நகர்ந்து கொண்டிருக்கும்போதே அதில் தொத்திக் கொண்டு ஏறினார்கள். பஸ் நிற்கவே யில்லை. வாலிபர்கள் ஓடி வந்து ஏறிக் கொள்ளும் வேகத்தில் நகர்ந்துக் கொண்டே யிருந்தது. "அப்பா சீக்கிரம் வாங்க! சீக்கிரம்!" என்று கூறியபடி கல்யாணமும் ஓடினான். பஸ்ஸில் பாய்ந்து ஏறிக் கொண்டான்.

கோபாலகிருஷ்ண முதலியார் பத்தடி ஓடினார். அதற்கு மேல் அவரால் முடியவில்லை; இரைத்தது."ஹோல்டான்! ஹோல்டான்!" என்று கத்தினார். பஸ் டிரைவர் அவர் கூச்சலை லட்சியம் செய்யாமல் வேகத்தை அதி கரித்தார். வாலிபர்கள் அனைவரும் பஸ்ஸில் இருந்தார்கள். வயோதிகர் மட்டும் வீதியில் நின்றார்!

(தொடரும்)