சிறைக் கைதியும் வீட்டுக் கைதியும்

ரங்கநாதன் வீட்டில் மாசிலாமணி தம்பதிக்கு ராஜோபசாரம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பவானியும் கமலாவும் அவர்கள் வழக்கமாகப் பலமுறை அமர்ந்து அளவளாவிய அதே மொட்டைப் பாறையில் மறுபடியும் சந்தித்துக் கொண்டார்கள்.

கமலா, இரவு சமையலுக்குத் தீப்பெட்டியும் மலிவாக ஏதாவது காய்கறியும் வாங்கி வர வேண்டியிருப்பதாகத் தம்பி விசுவிடம் கூறிவிட்டுப் புறப்பட்டிருந்தாள். "வீட்டை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். உள்பக்கம் தாளிட்டுக் கொள். ஜன்னல் வழியாக வெளியே பார்த்து இன்னார் என்று தெரிந்து கொண்ட பிறகே கதவைத் திறக்க வேண்டும். சமர்த்தாக இருந்தால் நான் வரும்போது சாக்லேட் வாங்கிக் கொண்டு வருவேன்" என்றெல்லாம் படித்துப் படித்துப் பலவிதமாகவும் சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தாள்.

பவானியோ கோர்ட் முடிந்ததும் காரில் ஏறியவள், வீட்டுக்குப் போகாமல், உமாகாந்தின் நினைவு இதயத்தை முழுமையாக ஆக்கிர மித்துக் கொள்ள ஏலமலைப் பாதையில் அதனை ஓட்டிச் சென்றாள். பஸ்ஸில் வந்து சேர்ந்திருந்த கமலா அந்தப் பாறையில் ஏற்கனவே அமர்ந்திருக்கக் கண்டு, "அடடே! நீ இங்கே எப்போது எதற்காக வந்து சேர்ந்தாய்?" என்று கேட்டாள்.

"வந்து பத்து நிமிஷங்கள் ஆயிற்று. என் தலைவிதியை நினைத்து அழுவதற்குத்தான் வந்தேன்" என்றாள் கமலா. "நீங்கள் எதற்கு வந்தீர்கள்?"

"நான் தலைவிதியை நினைத்து அழுபவர்களைத் தேற்றுவதற்கு வந்தேன்!"

"குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது என்று கேள்விப்-பட்டிருக்கிறீர்களா?"

"நான் அப்படி நடந்து கொள்கிறேன் என்கிறாயா? உன் மனத்தில் யார் இந்த எண்ணங்களை விதைத்தார்கள்? உனக்காக நான் கல்யாணத்தினிடம் எவ்வளவு தூரம் வாதாடியிருக்கிறேன், தெரியுமா?"

"பெரிய வக்கீலாயிற்றே, வாதாடாமல் இருப்பீர்களா? அவரும் ரொம்பப் பெரிய வக்கீல். எனவே, உங்கள் வாதத் திறமையில் சொக்கித்தான் போயிருப்பார்."

"கமலா! நீ இப்படியெல்லாம் பேசுவதானால் நான் உடனேயே திரும்பிப் போகிறேன்."

"ரொம்ப சரி, போய் வாருங்கள். நானும் விடைபெற்றுக் கொள்கிறேன்."

"நீ எங்கே போகப் போகிறாய்?"

"எமலோகப் பட்டணத்துக்கு!"

"இது என்ன உளறல் கமலா?"

"உளறுவது என்ன, வழக்கறிஞர்களின் ஏகபோக உரிமையா? நானும்தான் உளறி விட்டுப் போகிறேனே?"

"அப்படியானால் ரொம்ப சந்தோஷம். நிறைய உளறு. ஆனால் உளறியபடியே செய்து மட்டும் விடாதே!"

"செய்து பார்த்தால் மட்டும் நினைத்தது நிறைவேறி விடுகிறதா? கிணற்றில் விழுந்து சாக நினைத்தேன். முயன்றும் பார்த்தேன். கல்யாணம் வந்து காப்பாற்றி விட்டார். இங்கே பள்ளத்தாக்கில் விழுந்தாலாவது உயிர் போகுமா என்று பரீட்சித்துப் பார்க்க எண்ணினேன். நீங்கள் தடையாக வந்து சேர்ந்து விட்டீர்கள்."

"நல்ல வேளையாகப் போயிற்று" என்றாள் பவானி. பிறகு, "கமலா, இப்படி நீ கோழையாகி விடாமல் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளப் போராட வேண்டும்" என்றாள். "அர்த்தமுள்ளதாக மட்டும் இல்லை அக்கா, லட்சிய வாழ்வாகவே அமையப் போவதாகக்கூட எண்ணினேன். சிறுமியாக இருந்தபோதிலிருந்தே எது எதற்கெல்லாமோ ஆசைப்பட்டேன். எல்லாம் பகற்கனவாக முடிந்து போயிற்று."

"அந்தக் கதைகளைத்தான் சொல்லேன், கேட்போம்" என்றாள் பவானி.

"அக்கா! ஒரு நாள் நாங்கள் கடற்கரைக்குப் போயிருந்தோம். காற்று வாங்கத்தான். ஆனால் அங்கே நாங்கள் எதிர்பாராதவாறு காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. ஒரு பிரசங்கி - அவர் பெயர் கூட இந்தப் படிப்பறிவற்ற மூடத்துக்கு நினைவில்லை - சுதந்திரம் சீக்கிரமே வரும் என்றும் அதற்கு முன்பாகவே அதனை வரவேற்க நம்மை நாமே தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். சமூக மாறு தல்கள் பல ஏற்பட வேண்டும் என்றார். பெண்களுக்குச் சம உரிமைகள் தரப்பட வேண்டும். தீண்டாமை ஒழியவேண்டும், ஜாதி வித்தியாசங்கள் போக வேண்டும். விதவா விவாகங்கள் நடக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார். அவற்றுள், 'பெண்கள் ஆண்களுக்குச் சமமாக மட்டுமின்றி அவர்களைவிடச் சிறந்தவர்களாகவே பல துறைகளில் பிரகாசிக்க வேண்டும்' என்று அவர் கூறியது என் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது. சரோஜினி தேவி, விஜயலட்சுமி பண்டிட், அன்னி பெசண்ட், ராஜகுமாரி அமிர்தகௌர் என்று அவர் பல பெயர்களை அடுக்கினார்.

அந்த நிமிஷத்தில் நான் பெரிய படிப்புப் படித்து விஞ்ஞானியாகவோ, டாக்டராகவோ நாடு போற்றும் நிலையில் உயரப் போவதாகக் கற்பனை செய்து கொண்டேன். அதெல்லாம் வெறும் கற்பனையாகி விட்டது. எனக்குப் படிப்பு வரவில்லை என்பதால் எட்டாவதுடன் நிறுத்திவிட்டதாக அம்மா சொல்வாள். அது உண்மையில்லை அக்கா. நான் எல்லாவற்றிலுமே நூற்றுக்கு நூறு வாங்கி விடவில்லை. ஆனால் நான் மக்காகவும் இருந்ததில்லை. 'வயதுக்கு வந்த பெண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவ தாவது' என்று சொல்லி அம்மா தடை விதித்து விட்டாள். 'பெண்ணுக்கு எதற்குப் படிப்பு? குடும்பப் பாங்காக இருக்கத்தான் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் முக்கியம்' என்றெல்லாம் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற படி பேசுவாள். அக்கா! நீங்களே சொல்லுங்கள், நான் உங்களைப் போல் பிரகாசிக்கா விட்டாலும் படித்துப் பட்டம் பெற்றிருந்தால் அவர் என்னை இப்படி அலட்சியப்படுத்து வாரா?" கமலா நாத் தழுதழுக்கக் கேட்டாள்.

"இப்போதுகூட கல்யாணம் உன்னை அலட்சியப்படுத்தவில்லையே?" என்றாள் பவானி." நீ கல்லூரியில் படித்திருந்தால் இன்றுள்ளதை விட அதிகமாக உன்னிடம் அவருக்கு மதிப்பு உண்டாகலாம். ஆனால் காதல், கல்யாணம் என்பதெல்லாம் வேறு விஷயம் அல்லவா?"

"வாஸ்தவம்தான், அக்கா! அவரை அடைய எனக்கு இந்த ஜன்மத்தில் கொடுத்து வைக்கவில்லை. அவ்வளவுதான். என் தலைவிதி வேறுவிதமாக இருந்திருந்தால் நான் நிர்மூடமாக இருந்த போதிலும் அவர் என்னைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பார், இல்லையா?"

"விதி, உன் விஷயத்தில் என்ன நிர்ணயித்திருக்கிறதோ, யாருக்குத் தெரியும்? இப் போதுகூட என்ன குடிமுழுகிப் போய்விட்டது? உன் பெற்றோரிடம் வந்து உன்னை மேலே படிக்க வைக்குமாறு நான் வாதாடுகிறேன். கல்யாணத்தினிடமும் மறுபடியும் பேசிப் பார்க்கிறேன்."

"வீண் வேலை அக்கா. என் பெற்றோர் சம்மதிக்கப் போவதும் இல்லை; அவர் மனம் மாறப் போவதும் இல்லை. பேசாமல் அவரை மணக்க நீங்கள் சம்மதித்து விடுங்கள். அவர் மகிழ்ச்சியைக் கண்டாவது நான் ஆறுதல் பெறுகிறேன் !"

"அது சரி, அப்போது என் துயரத்தைக் கண்டு யார் வேதனைப்படுவது?" என்றாள் பவானி.

கமலா விரக்தியாகச் சிரித்தாள். பிறகு, "அக்கா! முதன் முதலாக நான் உங்களை ராமப்பட்டணம் வீதியில் சந்தித்தபோது என்ன நினைத்தேன், தெரியுமா?" என்று கேட்டாள்.

"என்ன எண்ணினாய்? அம்மாமி வயதாகி யும் இத்தனை அலங்காரமா என்று தானே?" என்றாள் பவானி புன்னகையுடன்.

"இல்லை, அக்கா. உங்கள் அழகையும் அலங்காரத்தையும் அப்புறம்தான் நான் கவனித்தேன். முதலில் என் நெஞ்சைக் கவர்ந்தது உங்களிடம் விகசித்த அறிவொளிதான்.

'என்னுடைய நிறைவேறாத ஆசைகள் அத்தனையையும் நிறைவேற்றிக் கொண்ட பெண்ணொருத்தி இதோ இருக்கிறாள்" என்று என் மனம் உடனே உணர்ந்தது. உங்களிடம் எனக்கு மதிப்பு மிகுந்தது. உயர்ந்த படிப்பு, நல்ல உத்தியோகம், பெரிய பெரிய வக்கீல்களுடன் துணிந்து மோதுகிற வாதத் திறன், அத்துடன் அழகு, யௌவனம், அலங்காரம் இதையெல்லாம் பார்த்தபோது எனக்குப் பொறாமையாகக் கூட இருந்தது!

"ஆனால் அக்கா உங்களிடம் வெட்கத்தை விட்டுச் சொல்வதற்கு என்ன? கல்யாணத்தைச் சந்தித்த வினாடியில், படிக்கவில்லையே, பெரிய உத்தியோகம் பார்க்கவில்லையே என்ற என் ஏக்கங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. 'படிப்பாவது, பதவியாவது? யாருக்கு வேண்டும்? இவ்ருக்குப் பணிவிடை செய்துகொண்டு இவர் காலடியிலேவிழுந்து கிடக்கிற பாக்கியம் கிடைத்தால் போதாதா?' என்று தோன்றியது. இந்த மாறுதலை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை!"

"இதில் ஒன்றும் அதிசயம் இல்லை, கமலா! காதல் இதை விடப் பெரிய தியாகங்களுக்கெல்லாம் நம்மைத் தயார்படுத்தக் கூடியதுதான்" என்றாள் பவானி.

"அது எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்களோ கல்யாணத்தை விரும்பவில்லை. அப்படியானால் வேறு யாரைக் காதலித்து அவருக்காக என்ன தியாகத்தைச் செய்தீர்கள்?"

"அதைப் பற்றி நான் பேசுவ தற்கில்லை, கமலா. அது இன்னொருவர் ரகசியம்" என்றாள் பவானி.

"அப்படியானால், அக்கா! உங்கள் நிலைமை என்னுடையதைவிட மோசமானதுதான். நானாவது மனம் விட்டுப் பேசி உங்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்களால் அதுவும் முடியவில்லையே?"

"ஆக, உன்னைவிடத் துரதிர்ஷ்டசாலிகள் உலகில் இருக்க முடியும் என்று தெரிகிறதல்லவா?

அப்படியிருக்கும்போது மனம் தளர்ந்து போய் உயிரை விடுவது பற்றியெல்லாம் யோசிக்கலாமா? வா, போகலாம்" என்று பவானி எழுந்திருந்தாள். குனிந்து கமலாவுக்குக் கைகொடுத்து அவளையும் நிற்க வைத்தாள்.

காரில் திரும்பும்போது சற்றுநேரத்துக்குப் பிறகு, திடீரென்று நினைத்துக் கொண்டவள் போல் பவானி கேட்டாள். "அது சரி, என் துணைகூட இல்லாமல் நீ இங்கே அடிக்கடி வருகிறாயா என்ன? ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ! உனக்குத் தெரியுமோ, என்னமோ, இந்தப் பக்கத்தில் தப்பி ஓடிய கைதி ஒருவன் வளைய வருகிறானாம். சில சி.ஐ.டி.கள் அவனைத் தேடிக் கொண்டிருகிறார்களாம். கல்யாணம் அவர்களிடம் அந்தக் கைதியின் புகைப்படம் இருப்பதைக்கூடப் பார்த்திருக்கிறார். அந்தக் கைதியிடம் நீ அகப்பட்டுக் கொண்டால் என்ன ஆவது?...."

"ஆவது என்ன அக்கா? அந்தக் கைதியைப் பார்த்து, 'ஏ, கைதியே! உன்னைப் போல் ஓர் அசடு கிடையாது; சிறையிலிருந்து தப்பி வந்தால் சுதந்திரம் என்று நினைத்தாயா? இப்போது சி.ஐ.டி.க்களுக்குப் பயந்து பதுங்கிப் பதுங்கி வாழ்வதிலே என்ன சுதந்திரம் இருக்கிறது?' என்று கேட்பேன். பிறகு நானும் ஒரு கைதிதான் என்று என்னை அவனுக்கு அறிமுகம் செய்து வைப்பேன். 'நீ ஜெயில் கைதி, நான் வீட்டுக் கைதி. நீ அரசாங்கச் சிறையிலிருந்து தாற்காலிகமாகத் தப்பி இங்கு வந்தாய். நான் வீட்டுச் சிறையிலிருந்து தாற்காலிகமாகத் தப்பி இங்கு வந் திருக்கிறேன்' என்பேன். ஒரு கைதி மற்றொரு கைதியிடம் காண்பிக்க வேண்டிய நியாமமான பரிவையும் அன்பையும் அவனிடம் நான் காட்டுவேன்."

"அப்படியானால் போலீஸிடம் அவனைக் காட்டிக் கொடுத்துவிட மாட்டாய்?"

"சேச்சே, ஒரு நாளும் மாட்டேன். அது இனத் துரோகம்!"

"அப்படியானால் ஒன்று செய், கமலா! அந்தக் கைதியைக் காண நேர்ந்தால் அவனுக்கு உதவுவதாகச் சொல்லு. அவன் மறை விடத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு என்னிடம் வா. இருவருமாக அவனுக்கு நம்மால் இயன்ற உபகாரத்தைச் செய்யலாம்."

"ஐயையோ! உங்களை வேறு இதில் எதற்கு இழுத்து மாட்டி வைக்க வேண்டும், அக்கா? கைதிக்கு உதவுவது குற்றமாயிற்றே!"

"நான் ஒரு வக்கீல் என்பதை மறந்து விட்டாயா, கமலா? சட்டபூர்வமாகவேகூட அவனுக்கு நான் உதவ முடியும். ஒருவேளை அவன் நிரபராதியாக இருந்து அவனுக்கு என்னால் விடுதலை பெற்றுத் தரவும் முடிந்தால் நான் எவ்வளவு புகழும் பிராபல்யமும் அடைவேன்! அது என் முன்னேற்றத்துக்கு ரொம்பவும் வசதி செய்யும் இல்லையா?"

"அடேடே, ஆமாம்! எனக்கு இது " என்று பதறினாள்.

பவானி சிரித்துக் கொண்டே, "பரவாயில்லை; நிதானமாக ஒவ்வொன்றாக எல்லா அசட்டுத் தனங்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டு மொத்தமாகச் சொல்லு!" என்றாள்.

கமலா, விசுவிடம் நான் மார்க்கெட்டுக்குப் போவதாகக் கூறி விட்டு வந்ததைச் சொன்னாள். "வெறும் பையை உதறிக் கொண்டு போனால் என் குட்டு வெளிப்பட்டுவிடும், அக்கா!"

பவானி காரைத் திசை திருப்பினாள். "மார்க்கெட்டுக்குப் போவோம். காய்கறி வாங்கிக் கொண்டு வா. பிறகு உன்னைத் தெரு முனையில் இறக்கி விட்டுவிட்டு நான் கம்பி நீட்டுகிறேன்" என்றாள்.