மனையாள் ஆட்சி

ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியார் தம் அறையில் உட்கார்ந்து ஹைகோர்ட் வழக்குகள் அடங்கிய தடிமனான புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் சன்னக் குரலில் பலமாகத் தலையாட்டியபடி ஆபோகி ராகத்தை ஆலாபனை செய்து கொண்டும் இருந்தார்.

எதிரே ஒரு பட்டிக்காட்டான் பெஞ்சில் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். சற்று நேரம் இப்படியும் அப்படியுமாகப் புத்தகத்தைப் புரட்டிவிட்டு 'டப்'பென்று அதை மூடியதும் தூசி எழும்பி அவரைத் தும்ம வைத்தது. கைக்குட்டையைத் தேடி அது அகப்படாமல் மேல் துண்டில் மூக்கைச் சிந்தித் துடைத்துக் கொண்டார். நடுவிரலால் சரிந்திருந்த மூக்குக் கண்ணாடியைத் தூக்கி விட்டுக் கொண்டு எதிரேயிருந்த பட்டிக்காட்டானைப் நிமிர்ந்து பார்த்தார்.

"என்னங்க, சொல்லுது, புத்தகம்? நம்ம வழக்குகுச் சாதகமாகத்தானே பேசுது?" என்று கேட்டான் அவன்.

"உம்... ஒண்ணு ரெண்டு பாயிண்ட் பாதகமாக இருக்கு. மற்றப்படி பரவாயில்லை. எல்லாம் வாதாடற விதத்திலேதான் சமாளிக்கணும்."

"ஐயாவுக்குத் தெரியாதுங்களா?"

"அது சரி, நீ இந்நேரம் சொன்னதெல்லாம் சத்தியம்தானே?"

"ஆமாங்க, மாரியாத்தா மேலே ஆணையா சொல்றேன்."

"பின்னே, கேஸ் தானே ஜெயிச்சுடறது.ஏன் கவலைப்படறே?"

உள்ளே பாத்திரங்கள் 'தடார் புடார்' என்று உருளும் சத்தம் கேட்டது. ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் கண்களை மூடி ஆள் காட்டி விரலையும் கட்டை விரலையும் நெற்றி யில் வைத்துச் சதையைக் கிள்ளிப் பிடித்துக் கொண்டு பெருமூச்சுடன் கோபத்தையும் வெளியேற்றினார்.

பட்டிக்காட்டான் பேசினான். "கேஸ் தானே ஜெயிச்சுடும்னா ஜையாகிட்டே ஏனுங்க நான் வரேன்? சத்தியத்துக்கு அவ்வளவு மதிப்பு இருந்ததுன்னா கோர்ட்டு, ஜட்ஜு, வக்கீல் எல்லாரும் எதுக்குங்க? பேசப் போறயோ சாகப் போறயோ என்று சொன்னாப்பலே, வாயடி அடிக்கிறவனுக்குத்தான் இது காலமா இருக்குங்க."

"என்னப்பா, நீ அநாகரிகமாப் பேசறே! என்னுடைய பேச்சாற்றலால் வாதத் திறனால்தான் கேஸ் ஜெயிக்கணும்னு கொஞ்சம் கௌரவமா சொல்லேன். கேட்க நல்லா இருக்கும்."

"ஆமாங்க, அது தானுங்க; நீங்க நல்லா ஓங்கி அடிச்சுப் பேசணும்."

"அடிச்சும் பேசறேன். மேஜையிலே ஓங்கிக் குத்தியும் பேசறேன்."

"அந்த அம்மா பொம்பிளை வக்கீல் வாயைத் திறக்க முடியாதபடி அடிச்சுடணுங்க."

"என்ன? அட்வொகேட் பவானி வாதிக் கட்சியிலே பேசப் போகிறாளா?"

"ஆமாங்க."

"அப்படியானால் ஃபீஸ் நூறு ரூபாய் சேர்த்துத் தரணும், அப்பா! அந்த அம்மாவோடு 'ஆர்க்யூ' பண்ணினால் தொண்டைத் தண்ணி வத்திப் போயிடும். பத்துக் கேஸிலே பேசற பேச்சை ஒரு கேஸிலேயே பேசும்படியாகிவிடும்."

"அதுக்கென்ன நூறு ரூபாய் அதிகம் வாங்கிக்குங்க. கேஸ் மட்டும் ஜயிச்சால்....."

"கேஸ் ஜயிச்சால் எனக்குக் கனகாபிஷேகம் பண்ணிவிடுவாயாக்கும்? திரும்பிக் கூடப் பார்க்கமாட்டாய்...."

உள்ளே பாத்திரங்கள் உருளும் ஓசை அதிகரித்தது.

"சரி சரி, நீ போய் வா. எல்லாவற்றையும் நான் பார்த்துக்கறேன். நேரமாகிறது" என்றார் கோபாலகிருஷ்ணன். "இப்போ இங்கே மெய்யூர் ஜமீந்தார், பொய்யூர் மிட்டாதார், காட்டூர் பண்ணையார் எல்லாரும் வரப் போறாங்க, முக்கியமான கேஸ் விஷயமா, நீ போகலாம்." குடியானவன் எழுந்து, "நம்ம கேஸும் முக்கியம்தாங்க. அலட்சியமா இருந்துடாதீங்க" என்றான்.

"அலட்சியமா இருப்பதா? சேச்சே! உன் கேஸிலே கோர்ட்டே கிடுகிடுத்துப் போகிற மாதிரி பேசப் போகிறேன்.

"எல்லாம் இங்கிலீஷிலேயே பேசுங்க.... தமிழிலே கிமிழிலே பேசிடாதீங்க...."

"ஆகட்டும், போ!"

குடியானவன் சுவரில் கோட் ஸ்டாண்டில் இரண்டு தலைப் பாகைகள் மாட்டியிருப்பதைப் பார்த்தான். ஒன்று சாதாரணத் தலைப்பாகை; ஒன்று சரிகைத் தலைப்பாகை.

"ஏனுங்க, நம்ம கேஸுக்கு இந்த இரண்டு தலைப்பாகைகளிலே எதை வைச்சுக்கிட்டு வருவீங்க?"

"சாதா தலைப்பாகையைத்தான் வைச்சுப்பேன். ரொம்ப ஸ்பெஷல் கேஸுக்குத்தான் சரிகைத் தலைப்பாகை. அதை வைச்சுண்டு வந்து பேசணும்னா பீஸ் இன்னும் ஐம்பது ரூபாய் அதிகமாகும்!"

"என்னங்க. இப்படி ஒரே போடாகப் போடறீங்க? இருபத்தைஞ்சுகூடத் தரேன். வைச்சுக்குங்க!"

உள்ளே பாத்திரங்களின் சத்தம் இன்னும் அதிகமாகியது.

கலவரம் அடைந்த கோபாலகிருஷ்ணன், "சரி, சரி; உனக்காக ஃபீஸ் அதிகம் வாங்கா மலே சரிகைத் தலைப்பாய் வைச்சுண்டு வரேன். நீ கிளம்பு, சீக்கிரம்" என்றார்.

"சரிங்க, போய் வரேன். ஆனால் மறந்து போய்த் தலைப்பாகையை மாத்திடாதீங்க!"

குடியானவன் போனதும் ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன் கல்யாணி ராகத்தைச் சித்திரவதை செய்து கொண்டே ஒரு கேஸ்கட்டை எடுத்து முடிச்சை அவிழ்க்க ஆரம்பித்தார்.

செல்லம்மாள் கரண்டிக் கரத்துடன் உள்ளே நுழைந்தவள் சற்று நேரம் அசையாமல் நின்றாள். கோபாலகிருஷ்ணன் தலையை நிமிர்த்தவில்லை.

"நான் என்ன மரமா? தூணா? மனுஷியாத் தென்படலையா?" என்றாள் செல்லம். "உங்க பேரில் தப்பில்லை. உங்களைத் தேடி வந்து எங்கப்பா என்னைக் கொடுத்தாரே அவரைச் சொல்லணும்!"

"ஓ! நீங்களா, வாங்கோ அம்மா, வாங்கோ. உட்காருங்கோ. என்ன வழக்கு. என்ன நடந்ததுன்னு விவரமா சொன்னால் சட்டப் பாயிண்ட் சாதகமா பாதகமான்னு யோசிக்கலாம்."

"எனக்கு எப்பவும் எதுவும் பாதகம்தான். இந்த வீட்டுக் குடித்தனத்தைச் சமாளிக்க இனிமேல் என்னால் முடியாது. ஐந்து குடும்பங்களும் சேர்ந்து படுத்தற பாட்டைத் தாங்காமல் தவிசுப் பிள்ளை ஓடிப் போயிட்டான். மூன்று நாளைக்கு ஒரு புது வேலைக்காரி தேட வேண்டியிருக்கு."

"அதனாலே ஓடிப் போக முடியாத வேலைக் காரியா ஒருத்தியைத் தேடறே. மகனுக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆகணுங்க்றே!"

"வருகிறவள் என்னை ஓட ஓட விரட்டாமல் இருந்தால் போதாதாக்கும். நீங்களும் உங்க பிள்ளையும்தான் அந்த ராங்கிக் காரியை எப்படியாவது இந்த வீட்டோடு தருவிச்சுக்கிறதுன்னு திட்டம் போட்டிருக்கேளே!"

"நான் ஒரு திட்டமும் வகுக்கலை செல்லம். கல்யாணம் ஆசைப்படறான்னு தெரியறது. மறுத்துச் சொல்ல எனக்கு மனமில்லை. உன் சம்மதமில்லாமல் நடந்துடுமா என்ன?"

இந்தச் சமயம் பார்த்துக் கல்யாணம் உள்ளே நுழைந்தான்.

"வாடாப்பா, நுறு ஆயுசு" என்றார் கோபாலகிருஷ்ணன்.

"தந்தையே! அன்னையே! இந்த அறியாச் சிறுவனைப் பற்றித் தாங்கள் யாது இயம்பிக் கொண்டிருந்தீர்கள்? யான் அறிந்து கொள்ளலாமா?"

"இது என்னடா, நாடக டயலாக்கா?"

"ஆம், எந்தையே, அடியேனுக்குத் தாங்கள் இடும் கட்டளை யாது? பகருங்கள்!"

"ஒண்ணும் பெரிய விஷயமில்லே! உன் அம்மாவைத் திருப்திப்படுத்த நீ ஒரே ஒரு கல்யாணம் பண்ணிக்கனும். அவ்வளவுதான்."

"நாடகம் முடியட்டும். அப்புறம்தான் திருமணம் பற்றிய சிந்தனை!" என்றான் கல்யாணம்.

"ஏண்டா, இன்றைக்குக் கோர்ட்டுக்காவது வருவாயா?"

"எல்லாம் நாடகம் முடிந்த பிற்பாடுதான்."

"ஏண்ட, நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?"

"கதையா? சொல்லுங்கோ. வேறு வழியில்லை. கேட்டுக்கறேன்."

"நம்ம பக்கம் பட்டிக்காட்டான் ஒருவன் ஹைகோர்டிலே அப்பீல் போட்டுவிட்டு அதற்காக ரயிலேறினானாம். ரயிலில் நிறைய இடம் இருந்ததாம்...."

"பொய்! பொய்! ரயிலிலாவது இடம் இருக்கவாவது?"

"இருந்தது என்று வைத்துக் கொள்ளேன். பட்டிக்காட்டான் நின்று கொண்டே இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு பயணி, 'ஏம்பா, நிற்கிறாய்? இடம் இருக்கே, உட்காருவது தானே' என்றான். அதற்கு அந்தப் பட்டிக் காட்டான், 'நாளைக்குப் பட்டணத்திலே கேஸு. அது முடியும் வரை உட்கார மாட்டேன்' என்றானாம்!"

"அவன் வைராக்கியத்துக்குத் திருடப் போகணும். நீங்களாயிருந்தால் இடம்தான் இருக்கேன்னு சப்ளிக்க உட்கார்ந்துடுவேள்" என்றாள் செல்லம்.

பிறகு கல்யாணத்தைப் பார்த்து, "நாடகம் என்னிக்கிடா? எங்களை அழைச்சுண்டு போவியோ இல்லியோ?" என்றாள்.

"அழைத்துப் போவதா? சரிதான்! உங்களுக்கு வர வழி தெரியாதா? ஐந்து, பத்து ரூபாய் டிக்கெட்டெல்லாம் விற்றுப் போச்சு. பதினைந்தோ இருபத்தைந்தோ கொடுத்து நாடகம் பாருங்கள். இது ஒரு நல்ல காரியத்துக்கு நிதி திரட்ட நடக்கும் நாடகம்; தெரியும் இல்லையா?"

"ஏங்க, போவோமா? ஐம்பது ரூபாய் செலவாகுமேன்னு யோசிக்காதீங்க. கல்யாணம் நடிப்பதைப் பார்க்க வேணாமா?"

"பேஷாய்ப் போய்ப் பார்; உன் பிள்ளை நடிப்பதை. நான் வரவில்லை."

"ஏன்? ஏன்?" என்று தாய், மகன் இருவரும் ஏககாலத்தில் கேட்டனர்.

"பின்னே என்ன? எனக்கும் ஒரு வேஷம் கொடுடான்னு ஆன மட்டும் கேட்டுப் பார்த்தேன். மாட்டேன்னுட்டான். எனக்கு நடிப்பு வராதாம்! நேற்றுப் பிறந்த இந்தப் பசங்களுக்குத்தான் வருமாம்!"

"அந்த வரைக்கும் கல்யாணம் புத்திசாலிதான்" என்று கூறிச் செல்லம் மகனுக்குத் திருஷ்டிகழித்தாள்.

"நீதான் மெச்சிக்கணும்! பிள்ளையாம் பிள்ளை, அணிப்பிள்ளை! தென்னம்பிள்ளை! எனக்கு நடிக்கத் தெரியாதாம்! இவன் கண்டான்! நான் மட்டும் மேடையேறி மனோஹரனா நடிக்க ஆரம்பித்தால்...."

"கொட்டகையே காலியா யிருக்கும்" என்று முடித்தான் கல்யாணம்.

கோபாலகிருஷ்ணன் சளைக்கவிள்ளை. மனோஹரன் டயலாக் பேச ஆரம்பித்தார்.

"உங்க பேரிலே யாரும் கொலைக்குற்றம் சுமத்தி கேஸ் கொண்டு வரமாட்டேங்கறாளே, அதுதான் அதிசயம்! காலையில் கர்நாடக சங்கீதக் கொலை. மத்தியானம் மனோகரா வசனக் கொலை" என்று கூறியபடியே காதைப் பொத்திக் கொண்டு உள்ளே சென்றாள் செல்லம்.