யாரை நம்புவது?
பவானியை அவள் வீட்டில் இறக்கிவிட்ட கல்யாணம், நேரே தன் இல்லத்துக்குத் திரும்ப மனம் இல்லாமல் மாசிலாமணி குடும்பம் இறங்கியிருந்த ஜாகைக்குப் போனான்.
ரங்கநாத முதலியாரின் அந்தப் பழைய வீட்டில் கமலா சுவரில் ஆணி அடிக்க முயன்று கொண்டிருந்தாள். விசுவம் சில படங்களை வைத்துக் கொண்டு நின்றான்.
கல்யாணத்தைப் பார்த்ததும் சற்று பயந்து போன விசு, "பாருங்கள் மாமா! ஆணி அடிக்கக் கூடாது என்று இந்த வீட்டுக்காரர் சொன்னாரில்லையா? அக்கா கேட்ககே மாட்டேனென்கிறாள்" என்றான்.
"ஒன்றிரண்டு ஆணிகள் அடித்தால் பாதகமில்லை. அவர் வந்து கேட்டால் என்பேரில்பழியைப் போடு. நான் தான் ஆணி அடித்ததாகச் சொல்லிவிடு.
"பொய்யா சொல்லச் சொல்கிறீர்கள்?"
"வேண்டாம். அதையே நிஜமாக்கிவிட்டால் போச்சு" என்றான் கல்யாணம்.
"நல்ல காரியம். நீங்களே ஆணி அடித்து விடுங்கள். அக்கா அப்பவே பிடித்து ஆணி அடிக்கிறாள், அடிக்கிறாள், இன்னும் ஒரு ஆணி கூட அடித்தபாடில்லை."
"இங்கே வா, உன் முதுகிலே நாலு அடி அடிக்கிறேன்" என்றால் கமலா.
கல்யாணம் அவளிடமிருந்து சுத்தியையும் ஆணிகளையும் வாங்கிக் கொண்டான். "உன்னால் முடியாது, நான் அடித்துத் தருகிறேன்" என்றான். ஸ்டூல் மீது ஏறி, "இதோ பார்த் தீர்களா? இப்படிப் பிடித்துக் கொண்டு இப்படி அடிக்க வேண்டும்" என்று கூறிய படியே அடிக்க ஆரம்பித்தான்.
பிறகு ஒவ்வொரு முறை அடிக்கும்போதும், 'இது மாஜிஸ்திரேட் பதவிக்கு விழும் அடி, இது அவருடைய மேனாட்டு மோகத்துக்கு விழும் அடி, இது அவர் பொறாமை மீது விழும் அடி. இது அவர் காதல் மேல் விழும் அடி' என்று மனசுக்குள் கூறிக் கொண்டே போடு போடென்று போட்டான். கடைசியில், 'இது அவர் தலைமீதே விழும் பலத்த அடி' என்று எண்ணியவாரு சுத்தியை வீசியபோது அது ஆணியைத் தாக்காமல், அவன் விரலை நன்றாகப் பதம் பார்த்து விட்டது.
கல்யாணம், 'ஆ' வென்று அலறியபடி கையை உதறினான்.
"ஐயோ! விரலில் ரத்தம்" என்றான் விசு. கல்யாணம் பல்லைக் கடித்தபடி வலியைப் பொறுத்துக் கொன்டு "பாதகமில்லை, வீடு போய்ச் சேர்ந்து மருந்து போட்டுக் கொள்கிறேன். இப்போதைக்கு ஒரு வெள்ளைத் துணி இருந்தால் தண்ணீரில் நனைத்துக் கட்டலாம்" என்றான்.
கதிகலங்கிப் பிரமித்துப் போய் நின்ற கமலா சுய நினைவு பெற்றவளாக நடுங்கும் குரலில் "இதோ கொண்டு வருகிறேன்" என்று கூறி ஓடிச் சென்று தனக்குப் பிடித்தமான பூப்போட்ட கைக்குட்டை ஒன்றை நனைத்து எடுத்து வந்தாள்.
"இங்கே கொடுங்கள். நானே கட்டிக் கொள்கிறேன்" என்றான் கல்யாணம்.
"இல்லை. ஒற்றைக் கையால் கட்டிக் கொள்ள வராது. நானே கட்டி விடுகிறேன்"என்றால் கமலா.
அவள் கட்டுப் போட்ட போது தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாள். கல்யாணமும் பரிவு மேலோங்க அவளைக் குனிந்து நோக்கினான்.
அந்தக் கண்களை அதிக நேரம் உரையாட அனுமதியாமல், விசுவம், "அழகாய்த்தானிருக்கிறது. காயம் பட்டது இடது கை, அக்கா வலது கையைப் பிடித்துக் கொண்டு கட்டுப் போடுகிறாளே" என்றான்.
"அடேடே! நான் கூட கவனிக்கவில்லை" என்றான் கல்யாணம்.
கமலா வெட்கமடைந்து நாணியவளாக அதே சமயம் இன்னொரு கரத்தையும் பற்ற வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ந்தவளாக, நிஜமாகவே காயம் பட்டிருந்த இடத்தில் கட்டுப் போட்டாள்.
இதையெல்லாம் அவள் பெற்றோர் சமையலறைக் கதவு ஓரமாக நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
மாசிலாமணி கனைத்துக் கொண்டே வந்து, "அடடா, மாப்பிள்ளை கையிலே என்ன?"என்றார், ஒன்றும் அறியாதவர் போல.
"அதற்குள் அவரை மாப்பிள்ளையாக்கி விட்டீர்களா? நன்றா யிருக்கிறதே" என்றாள்காமாட்சி அம்மாள்.
"அடேடே தவறிச் சொல்லி விட்டேன்."
"பரவாயில்லை. நெருப்பு என்றால் வாய் வெந்துவிடுமா?" என்றான் கல்யாணம்.
"அதற்கில்லை தம்பி; இந்தப் பெண்ணுக்கோ கல்யாண வயதாகி விட்டது. இந்தக் காலத்தில் பெண்களை அதிக நாட்கள் கல்யாணம் இல்லாமல் வைத்துக் கொள்ளக் கூடாது. இந்த வருஷமே எப்படியும் கல்யாணம் செய்துவிட நினைத்தோம். அதற்குள் இந்தப் பாழும் ஜப்பான் யுத்தம் வந்து எங்களை ஊரை விட்டே கிளப்பி விட்டது."
"அதனால் என்ன? கமலாவுக்கு மாப்பிள்ளை அகப்படுவதுதானா கஷ்டம்? அவளுடைய குணத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும்...."
"அழகுக்கும்" என்று விசு எடுத்துக் கொடுத்தான். கல்யாணம் தொடர்ந்து: ".....எத்தனையோ பேர் நான் நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். உங்களுக்குக் கவலையே வேண்டாம். கமலாவுக்கு நல்ல வரனாகப் பார்த்துக் கல்யாணம் செய்து வைப்பது என் பொறுப்பு."
கமலா அவனைப் பார்த்த பார்வையில் கோபம் மேலோங்கி யிருந்ததா? துயரம் பொங்கி வந்ததா என்று கூற முடியாது. ஆனால் ஓரிரு கணங்களே நீடித்த அந்தப் பார்வை கல்யாணத்தின் அந்தராத்மாவையே ஊடுருவி ஒரு குலுக்குக் குலுக்கி விட்டதென்னவோ உண்மை. அவள் 'விருட்'டென்று திரும்பி உள்ளே சென்றாள்.
"கல்யாணப் பேச்செடுத்தாலே இந்தப் பெண்ணுக்கு ஒரே சங்கோஜம்" என்று காமாட்சி கூறியது கல்யாணத்துக்கு ஏதோ கனவில் கேட்பது போலிருந்தது.
மறுநாள் காலை பவானி டென்னிஸ் உடையில் மாஜிஸ்திரேட்டைச் சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தாள். "என்ன சரித்திரக் கதைகளில் வருகிற கதாநாயகன் மாதிரி எனக்காக வாளேந்திப் போரிடவே ஆரம்பித்து விட்டீர்களாமே?" என்றாள்.
"என்ன சொல்கிறாய் நீ?" என்று கோவர்த்தனன் ஒன்றும் தெரியாதவர் போல் வினவினார்.
கல்யாணம் கூறியதை யெல்லாம் பவானி விவரித்ததும், "அடப் பாவமே! அந்தத் தறுதலை அப்படியா சொன்னான்? பெரிய கில்லாடி தான்!" என்றார்.
"சே! அவரை அப்படி யெல்லாம் ஏசாதீர்கள்" என்றாள் பவானி.
"பின்னே கதையை அப்படியே தலை கீழாக மாற்றிவிட்டால் என்ன அர்த்தம்? பவானி! அவன் நேற்று மாலை என்னிடம் வந்து என்ன சொன்னான் தெரியுமா? நீ தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாய் என்றால் சொல்கிறேன்."
"பாதகமில்லை சொல்லுங்கள்."
"அவனுக்கு உன்மீது காதலாம். ஆனால் நீயோ என்மீது உயிரையே வைத்திருக்கிறாயாம். அதனால் அவனை லட்சியம் பண்ணவே மாட்டேன் என்கிறாயாம். ஆக, அவன் கண்களுக்கு நான் பெரிய வில்லனாகக் காட்சியளிக்கிறேன்!"
"அழகுதான்!" என்று கூறிச் சிரித்தாள் பவானி. "அப்புறம்?"
"இவன் அப்பாவுக்கு இங்கே பக்கத்தில் உள்ள ஏலமலையில் ஹிமகிரி எஸ்டேட் என்று இருக்கிறது. அங்கே வேலை செய்கிற ஆட்களை விட்டு என் கையைக் காலை முறித்துப் போட்டு விடப் போவதாக மிரட்டினான்!"
"ஐயைய்யோ!"
"எனவேதான் கத்தியை உருவிக் காட்டியும், துப்பாக்கி லைசென்ஸ்கூட இருப்பதாகக் கூறியும் அவனை நான் பயமுறுத்தி வைக்க வேண்டியதாயிற்று" என்றார் கோவர்த்தனன்.
"சேச்சே! அவ்வளவு மோசமானவரா கல்யாணம்? பார்த்தால் சாது போல் இருக்கிறாரே?"
"அவன் வெறும் பயந்தாங்குளிதான்... ஆனால் பணத் திமிர் படைத்தவன். காசை விட்டெறிந்தால் அடியாட்கள் பக்க பலமாக நிற்பார்கள் என்ற தைரியம்" என்றார் கோவர்த்தனன்.
பவானி அங்கு வந்தபோது அவளுக்கிருந்த உற்சாகம் இதற்குள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது. மிகச் சுலபமாக அவள் டென்னிஸில் கோவர்த்தனனிடம் தோற்றுப் போனாள்.
(தொடரும்)

