பயங்கரக் கனவு

சில நாட்களாக உமாகாந்தன் கல்லூரிக்கு வரவேயில்லை. பவானி அவனை வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் காத்திருந்து காணாமல் கலங்கினாள். கல்லூரி முழுவதும் தினம் ஒரு முறை சுற்றிவந்து தனது சித்திரக் கண்களின் வட்டக் கருவிழிகளைக் கள்ளத்தனமாகச் சுழல விட்டுத் தேடினாள். அகப்படவில்லை. நெடுமூச்சுக்கள் நெஞ்சை வாட்ட அவனது வகுப்புக்கேகூடப் போய் ஜாடையாகப் பார்த்தாள். ஊஹூம், அங்கேயும் அவன் இல்லை.

'ஏதாவது அவசர காரியமாக ஊருக்குப் போக நேர்ந்திருக்கும். நாளை அல்லது மறு தினம் வந்து விடுவார்' என்று சமாதானப் படுத்திக் கொண்டாள். 'லீவு லெட்டர் ஏதாவது வந்திருக்கிறதா?' என்று கல்லூரிக் காரியாலயத்தில் விசாரிக்க அவளுக்குச் சங்கோசமாக இருந்தது. 'நீ யார்? எதற்காகக் கேட்கிறாய்?' என்ற கேள்வி பிறந்தால் என்ன பதில் சொல்வது என்று குழம்பினாள்.

'ஒருவேளை அவருக்கு ஏதாவது உடம்பு அசௌக்கியமோ? கடுமையான ஜுரம் கண்டு படுத்த படுக்கையாக இருக்கிறாரோ?' என்று இரவெல்லாம் கற்பனைகளில் ஆழ்ந்து தூக்கம் பிடிக்காமல் தவித்தாள்.

ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு இந்த நிச்சய மற்ற நிலையை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது எனத் தீர்மானித்தவளாய் நேரே உமாகாந்தின் வீட்டுக்கே போய்ச் சேர்ந்தாள்.

அங்கே அவள் கேள்விப்பட்டது அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. ஆனால் வருத்தமாய் இருந்தது. அதே சமயம் பெருமையாகவும் இருந்தது. உமாகாந்தின் அப்பா அவளை வரவேற்றார். கல்லூரி முதல்வருக்கே தாம் கடிதம் எழுதியிருப்பதாகச் சொன்னார்.

"இருக்கலாம், ஸார்! ஆனால் மாணவர்களுக்கு அந்த விவரம் ஏதும் தெரியவர நியாயமில்லையே? அவர் ரொம்பப் 'பாப்புலர்'. அதனால் மாணவ மாணவியர் எல்லாருமே அவர் கல்லூரிக்கு வரக் காணோமே என்று கவலைப்படுகிறார்கள். விவரம் அறிந்துவர என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்."

"ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் எல்லோருக்கும் பெருமை தரக் கூடிய விஷயம் சொல்லப் போகிறேன். உமாகாந்த் கல்லுரிக்கு ஒழுங்காகப் போய் வந்தாலும் படிப்பில் சூரன் என்றாலும் புரட்சி உள்ளம் கொண்டவன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவன் குடும்பத்தினராகிய எங்களுக்கே தெரிவிக்காமல் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் சில ரகசிய வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறான். ஸி.ஐ.டி.க்கள் அதை அறிந்து கொண்டு விட்டனர். அவனை அரெஸ்ட் செய்து இரண்டே நாட்களில் மாஜிஸ்திரேட் முன்னால் சாட்சியங்கள் சமர்ப்பித்து உள்ளே தள்ளிவிட்டனர். ஆறு வருஷ தண்டனை. மேல் கோர்ட்டில் அப்பீலுக்குப் போகக் கூடாதென்று உமாகாந்த் என்னைத் தடுத்துவிட்டான்!" கருணாகரன் கண்களைக் கைக் குட்டையால் துடைத்துக் கொண்டார்.

"அழாதீர்கள், ஸார்! இப்படிப்பட்ட புதல்வனைப் பெற்றதற்காக ரொம்பப் பெருமைப்படலாம் நீங்கள்" என்றாள் பவானி. அவன் எழுதிய சரித்திர வியாசம் பற்றிச் சொன்னாள். அதைக் கேட்டு இலேசாகச் சிரித்தார் உமாகாந்தின் தகப்பனார் கருணாகரன்.

"செய்யக் கூடியவன்தான்" என்றார் பெருமிதத் தொனியில். "எனக்குச் சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை!"

"எங்கள் நிலையும் அதுதான் ஸார். மாணவர்களுக்கு என்றுமே உமாகாந்திடம் ரொம்ப மதிப்புண்டு. அவர்கள் அவர் சிறை புகுந்ததற்காக வருந்துகிறார்கள். அதே சமயம் அவரது துணிச்சல், வீரம், லட்சியப் போக்கு எல்லாம் எங்களை மேனி சிலிர்க்க வைக்கிறது." பவானி பொங்கிக் கொண்டு வந்த அழுகையைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

மாமா குணசேகரனிடம் தற்போது தனக்குத் திருமணத்தில் நாட்டமில்லை என்று உறுதியாகவும் இறுதியாகவும் கூறிவிட்டு மாடியில் தன் தனி அறைக்கு வந்து சேர்ந்த பவானி, உமாகாந்தனைக் குறித்த இந்தப் பழைய சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டாள்.

கூடவே சமீபத்திய மர்மமான நிகழ்ச்சிகளின் மீதும் அவள் சிந்தனை திரும்பியது. உமாகாந்தனுக்கும் மாஜிஸ்திரேட் கோவர்த்தனனுக்கும் இடையே உள்ள விசித்திரமான உருவ ஒற்றுமையை அவள் எண்ணிப் பார்த்தாள். கோவர்த்தனன் கண்ணாடி போட்டிருக்கிறார். மீசை கிடையாது. உடை, விஷயங்களில் வேற்றுமை உண்டு. எல்லாம் சரிதான் ஆனாலும் முகத்தில் உமாகாந்தனின் ஜாடை நிறைய இருக்கத்தான் செய்கிறது. கோவர்த்தனன்பால் தான் ஈர்க்கப்பட்டிருப்பதற்கும் நெருங்கிப் பழகி நட்பை வளர்த்துக் கொள்வதற்கும் அது ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

"இந்த மலைச் சாரல்களில் ஸி.ஐ.டி.கள் தப்பி ஓடிய கைதி ஒருவனைத் தேடுகிறார்கள். அவர்கள் கரத்தில் இருந்த புகைப் படத்தைப் பார்த்தேன். கோவர்த்தனன் போலவே இருந்தது. மாஜிஸ்திரேட் ஒரு வேஷதாரி. மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டு மீசையையும் எடுத்துவிட்டார் என்றாலும் அந்தப் படத்தில் இருந்தது கோவர்த்தனனே தான்' என்று அழுத்தம் திருத்தமாக அன்று கல்யாணம் கூறியதை அவள் எண்ணிப் பார்த்தாள்.

அன்று அவள் எப்படிப் பதறிப் போனாள்? கோவர்த்தனனிடம் அவள் ஏற்கனவே உமாகாந்தனின் சாயலைக் கண்டிருந்தாள். ஆகவேதான் அப்படிக் கலவரம் அடைந்திருந்தாள். சிறையிலிருந்து தப்பி ஓடி வந்திருக்கும் அந்தக் கைதி உமாகாந்தனாகவே இருப்பானோ என்ற வலுவான சந்தேகம் ஏற்பட்டது. 'அவர் ஒருவேளை நான் இங்கிருப்பதை அறிந்து கொண்டு இந்த வட்டாரத்தில் ஒளிந்து வாழ்கிறாரோ? என்னை ரகசியமாக ஓரிடத்தில் சந்திக்கச் சமயம் பார்த்திருக்கிறாரோ' என்றெல்லாம் கற்பனை செய்தாள். அதனால்தான் கல்யாணத்திடம் ஸி.ஐ.டி.க்களைச் சந்தித்து, புகைப்படத்தைப் பார்த்தது முதலான விவரங்களை யாரிடமும் கூறக் கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டு கையடித்துச் சத்தியமும் பெற்றுக் கொண்டாள் பவானி.

இப்போது எண்ணிப் பார்த்தபோது எல்லாமே அசட்டுத்தனமான முடிவுகளாக அவளுக்குத் தோன்றியது. 'ஆறு ஆண்டு தண்டனை முடிய இன்னும் இரு ஆண்டுகள் இருக்கின்றன. இந்தச் சயமயத்தில் போய் உமாகாந்தன் சிறையிலிருந்து தப்பி ஓடி வருவாரா? அவரைப் போன்றவர்கள் சிறை செல்வதைத் தியாகம் என்றும் கௌரவம் என்றும் கருதுபவர்கள் ஆயிற்றே? திருட்டுக் குற்றம் புரிந்தவன் தப்பி வர முயலலாம். தியாக வேள்வி நடத்துபவன் சிறையின் துயரங்களுக்கு அஞ்சுவானா? கல்யாணம் பார்த்த புகைப்படம் உமாகாந்தனாய் இருக்கவே முடியாது. வேறு யாராவதுதான் இருக்க வேண்டும்.

'அப்படி ஒரு வேளை உமாகாந்தான் தப்பி வந்தது உண்மையானால் தேசபக்தர்களின் நோக்கில் அது தகாத காரியமாகிவிடுமே? அத்தகைய காரியத்தில் அவரை இறங்கத் தூண்டியது எது? சிறைச்சாலை அளித்த துயரங்களா?' அல்லது காந்தீய மார்க்கங் களில் அவர் நம்பிக்கை இழந்தது காரணமா? சிறைக்கு வெளியே இருந்தால்தான் தேசத்துக்கு அதிகமாகத் தொண்டாற்ற முடியும் என்று அவர் கருத ஆரம்பித்துவிட்டாரா? இவையெல்லாம் இல்லையென்றால் வேறு என்ன? பவானியைப் பார்க்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசையா?'

இப்படி நினைத்ததுமே பவானிக்கு மேனியெங்கும் சிலிர்த்தது. அவளுடைய வாளிப்பான உடல் நெளிந்து புரண்டதில் படுக்கை விரிப்பு கசங்கியது. நாணத்தில் சிவந்த முகத்தை மறைத்துக் கொள்ள அவள் தலையணையைத் தஞ்சம் புகுந்தபோது அது படாதபாடு பட்டது!

அவள் மெல்ல மெல்ல முகத்தைத் திருப்பிக் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த டிரெஸ்ஸிங் டேபிள் நிலைக் கண்ணாடியில் தன் முகத்தையும் முடிந்தவரை தன் உருவத்தையும் பெருமிதம் பொங்கப் பார்த்துக் கொண்டாள். "உமாகாந்த்! இத்தனை அழகும் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது. சீக்கிரம் வாருங்கள். அள்ளிக் கொள்ளுங்கள்" என்று மிருதுவான குரலில் சொன்னாள்.

அவள் கரம் தயக்கத்துடனேயே நீண்டு டிரஸ்ஸிங் டேபிளின் சிறிய இழுப்பறை ஒன்றைத் திறந்தது. அதில் மேலாக இருந்த கைக்குட்டைகள், உள்ளாடைகளுக்கு அடியேயிருந்த ஓர் உறையைக் கள்ளத்தனமான பாவனையோடு வெளியே எடுத்தது. மெல்ல அதனைப் பிரித்த விரல்கள் உள்ளேயிருந்த ஒரு புகைப் படத்தைச் சிறிது சிறிதாக வெளியே உறுவின. அறையின் கதவு தாளிடப்பட்டிருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக் கொண்டு அப்புகைப்படத்தைத் தன் அதரங்களில் ஒற்றி எடுத்தாள், பவானி. பிறகு அதனை அப்படியே தன் நெஞ்சில் தவழவிட்டுக் கொண்டு தூங்கிப் போனாள்.

தூக்கத்திலே ஒரு விசித்திரமான கனவு கண்டாள், பவானி. அந்தக் கனவிலும் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து உமாகாந்தன் நின்று, "பவானி ! பவானி !" என்று அழைத்தான். அவள் எழுந்திருக்காதது கண்டு அவனுக்குக் கோபம் வந்தது. "ஹூம், உனக்காகத்தானே, உன் பிரிவாற்றாமையால்தானே நான் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்தேன். இப்படி என்னை அலட்சியம் பண்ணுகிறாயே! என்னை ஸி.ஐ.டி.க்கள் துரத்தி வருகிறார்கள். சீக்கிரம் எனக்கு அடைக்கலம் தந்து மறைத்து வைத்துக் காப்பாற்று. தூங்கியது போதும். விழித்தெழு !" என்றான்.

பவானி விழித்துக் கொண்டாள். ஆனால் எழுந்திருக்க அவளால் முடியவில்லை. இரண்டு ஸி.ஐ.டி.க்கள் சற்றுத் தொலைவில் தெரிந்தார்கள்.

அவர்கள் உமாகாந்தனைச் சுட்டிக் காட்டியபடி ஓடி வந்தார்கள். உமாகாந்தன் "பவானி! பவானி!" என்று அவள் நெஞ்சக் கதவை ஒங்கித் தட்டினான். பவானி எழுந்து இதய வாசலைத் திறக்கத்தான் முயன்றாள். முடியவில்லை! அவளை எழுந்திருக்கவே விடாமல் அவள் தோள்களை அழுத்திப் பிடித்தன இரு கரங்கள். அவள் முகத்தை இரு அகன்ற சிவந்த கண்கள் வெறித்து நோக்கின. அந்தக் கண்களும் கரங்களும் மாஜிஸ்திரேட் கோவர்த்தனனுடையவை. அந்தக் கண்கள் பெரிதாகிப் பெரிதாகி அவளையே விழுங்கப் பார்த்தன. பவானி தன்னை விடுவித்துக் கொண்டு உமாகாந்தனின் உதவிக்குப் போக முயன்று போராடினாள்; பலிக்கவில்லை. ஸி.ஐ.டி க்கள் இருவரும் விலங்குகளோடு உமாகாந்தனை அணுகி விட்டனர். "பவானி! காப்பாற்று" என்று அலறினான் உமாகாந்தன். அவள் இதய வீட்டின் வெளியே இருந்தவாறு, "உமாகாந்த்!" என்று இயலாமைக் குரலில் விளித்தாள் பவானி, உள்ளே கட்டிலில் கிடந்தவாறு. பவானி திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். அவள் மேனியெல்லாம் வியர்த்துக் கொட்டிக் காற்றில் சலசலக்கும் அரச இலை மாதிரி நடுங்கிக் கொண்டிருந்தது.

நெஞ்சின் மீதிருந்த உமாகாந்தின் படத்தை எடுத்துப் பார்த்தவாறே இரவெல்லாம் விசித்து விசித்து அழுதாள்.