ஹிமகிரி எஸ்டேட்

ஏலமலையில் கோபாலகிருஷ்ண முதலியாரின் எஸ்டேட் பங்களா மிகவும் வசதியாக இருந்தது. சாப்பாட்டுக் கூடம் தவிர, இரண்டு மூன்று பெரிய அறைகள், பங்களாவைச் சுற்றிப் பெரிய தோட்டம் எல்லாம் இருந்தன.

கையோடு டிபன் காரியரில் கொண்டு வந்திருந்த இட்டிலி தோசைகளையெல்லாம் ஒரு கை பார்த்து விட்டுக் குணசேகரன் கட்டிலில் கட்டையைக் கிடத்திக் குறட்டைவிடத் தொடங்கி விட்டார். உண்ட மயக்கம்.

கல்யாணம் எஸ்டேட் விவகாரங்களில் மூழ்கி மேஸ்திரிகள் மூன்று நான்கு பேர்களை விசாரிப்பதும் கட்டளைகள் இடுவதும் கணக்குப் பார்ப்பதும் பணத்தை எண்ணுவதுமாக இருந்தான்.

பவானி தோட்டத்தில் மெள்ள வளைய வந்தாள். அதில் ஒரு பக்கமாகக் கல்யாணத்தின் 'டப்பா' கார் நின்றது. 'இது இத்தனை உயரம் ஏறி வந்ததே அதிசயம்தான்' என்று எண்ணினாள் பவானி. 'இவ்வளவு பெரிய எஸ்டேட்டுக்கும் பங்களாவுக்கும் சொந்தம் கொண்டாடுகிற செல்வந்தர்கள் அந்தப் பழைய மாடல் காரை விற்க மனமின்றி வைத்திருப்பது விசித்திரம் தான். உயிரற்ற பொருள்களிடம் கூட நாளடைவில் சில சமயம் பாசம் வளர்ந்து விடும் போலும். ஜடப் பொருள்களிடம் கூட அன்பு செலுத் தும் கல்யாணமா அடியாட்கள் அனுப்பிக் கையைக் காலை முறித்துவிடுவதாக மாஜிஸ்டிரேட் கோவர்த்தனனை மிரட்டி யிருப்பார்? நம்பவே முடியவில்லையே! என்றாலும் காதல் கீதல் என்று அசட்டுத்தனமாக ஏதாவது எண்ணிக் கொண்டால் சில அபத்தக் காரியங்களையும் அதன் விளைவாகச் செய்யலாம்தான். யோசித்தபடியே நடந்து தோட்டத்தைக் கடந்து பிரதான சாலைக்கு வந்துவிட்ட பவானி திரும்பிப் பங்களாவை நோக்கினாள். கல்யாணம் காரியங்களை முடித்துக் கொண்டுபடி இறங்கித் தன்னை இங்குமங்கும் திரும்பித் தேடுவதைக் கண்டாள். அவன் பார்வையில் படுமாறு நின்று கரம் அசைத்தாள். பங்களா வாசலில் நின்ற காரைத் தட்டிக் கொடுத்துவிட்டு அவன் இவளை நோக்கி நடந்தான். எப்படியோ இரண்டு மூன்று தடவை குளிர்ந்த நீரைக் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்ட அது, கடமை முடிந்த திருப்தியுடன் நிற்பதாகத் தோன்றியது.

"என்ன யோசனை? இங்கு வந்து நிற்கிறீர்கள்?" என்றான் கல்யாணம் நெருங்கி வந்து.

"உங்களைக் கணவனாக அடையப் போகிறவள் பாக்கியசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தப் பழைய காரிடம் இத்தனை அன்பு செலுத்துகிறவர் மனைவியை எவ்வளவு பிரியமாக நடத்துவீர்கள்?"

"மனைவி பழகிப் பழசான பிறகு அவளிடம் எனக்கு அன்பு பெருக்கெடுக்கும் என்கிறீர்களா? அல்லது ஒரு கிழவியைப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள் என்கிறீர்களா?"

"இரண்டுமில்லை. இத்தனை பெரிய எஸ்டேட்டை நன்றாகக் கட்டி ஆளக் கூடிய திறன் படைத்தவளாகத் தேடிப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்கிறேன்.

"எஸ்டேட்டுக்கு எஜமானியாவதா முக்கியம்? கணவனின் மனத்தை அன்பினால் ஆளும் சாமர்த்தியமுள்ளவளாக இருப்பதல்லவா விசேஷம்?"

"ஆளுநரையே ஆள்வதற்கு அபாரத் திறமை வேண்டும். நீங்கள் கலகலப்பாகப் பேசும்போதே காரியவாதியாகவும் இருக்கிறீர்கள். இங்கே வந்ததும் வராததுமாக எஸ்டேட் விவகாரங்களில் இறங்கி விட்டீர்களே!"

"இல்லாதபோனால் இங்கே சில ஆசாமிகள் நம்மையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார்கள். எஸ்டேட்டில் வேலை செய்பவர்களில் நல்ல மாதிரியானவர்களும் உண்டு. பொல்லாதவர்களும் உண்டு.

"பொல்லாதவர்களை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் வேலைக்கு?"

"அப்படிப்பட்ட சிலரும் நிர்வாகத்துக்குத் தேவைதான். மற்றவர்களுக்கும் பயம் இருக்கும். ஒழுங்காக வேலை செய்வார்கள். ஆனால் அந்தக் குண்டர்களிடம் நாம் ஏமாந்து விடக் கூடாது. தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள்."

"குண்டர்கள் என்றால்....?"

"ஆயிரம் ரூபாய்க்காக ஆறு தலைகளைச் சீவிவிடக்கூடிய முரடர்களும் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள்!"

"அப்படியானால் மாஜிஸ்டிரேட் சொன்னதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம் என்று சொல்லுங்கள்!"

"கோவர்த்தனனா? என்ன சொன்னார்?"

"'எஸ்டேட்டில் உள்ள ஆட்களை அனுப்பிக் கையைக் காலை முறித்துப் போட்டுவிடுவேன்' என்று அவரை மிரட்டினீர்களாமே?"

"அடப் பாவமே! அப்படியா சொன்னார்? பெரிய கஜப் போக்கிரியாக இருக்கிறாரே? இவனுக்கெல்லாம் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் வேறு தருகிறார்களே அதைச் சொல்லுங்கள்!"

"மிஸ்டர் கல்யாணம்! நீங்கள் கோவர்த்தனனையோ அவர் வகிக்கிற பதிவியையோ இளக்காரமாகப் பேசுவது தவறு. ஏற்கெனவே ஒரு தடவை உங்களை எச்சரித்திருக்கிறேன். அவரும் மனிதர்தாம். சில குறைகள் அவரிடமும் இருக்கலாம். ஆனால் அதனால் அவர் தம் பதவிப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற மாட்டார் என்று நினைப்பதற்கில்லை."

"நான் எதுவும் சொல்லவே வேண்டாம். கூடிய சீக்கிரம் அவர் சாயம் தானாக வெளுத்து விடும். அப்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்."

"நீங்கள் இருவருமே ஏதோ அசட்டுப் பொறாமைக்கு ஆளாகி ஒருவரை யொருவர் ஏசிக்கொள்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது."

"அவருக்கு என்மீது பொறாமையோ என்னவோ எனக்குத் தெரியாது. அதனால்தான் ஒருவேளை என்மீது வீண்பழிகள் சுமத்துகிறார் போலிருக்கிறது. இருக்கலாம். ஆனால் அவரைப் பற்றி நான் ஏற்கனவே உங்களிடம் கூறியது - அதாவது கத்தியைக் காட்டி விரட்டினார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதோடு வேறு ஒரு விஷயமும் எனக்கு இப்போது தெரிய வந்திருக்கிறது."

"ஆரம்பித்து விட்டீர்களா? புதிதாக ஒரு கதையை?"

"நீங்கள் நம்ப மாட்டீர்கள்; வேண்டுமென்றே நான் மீண்டும் வீண் பழி சுமத்துவதாகக் கருதுவீர்கள். அதனால் உங்களிடம் அது பற்றிப் பேசவே வேண்டாம் என்றுதான் சற்று முன்வரை கூட எண்ணினேன். ஆனால் இப்போது 'என்னிடம் உங்களுக்கு மதிப்புக் குறைந்து போனாலும் பாதகமில்லை; உங்களை அவரிடமிருந்து காப்பாற்றி எச்சரிக்க வேண்டியது என் கடமை' என்று தோன்றுகிறது. நான் ரேடியேட்டருக்குத் தண்ணீர் தேடி வழியில் தென்பட்ட ஒரு கிராமத்துக்குள் நுழைந்தேன் அல்லவா? அப்போது..."

"அப்போது...." பவானியால் ஆவலை அடக்கிக் கொள்ள முடியவில்லை.

"அங்கே இரண்டு ஸி.ஐ.டி. க்கள் கிராம மக்களிடம் ஒரு ஃபோட்டோவைக் காட்டி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சிறையிலிருந்து தப்பியோடிய கைதியாம். இந்தப் பக்கம் வந்து தலைமறைவாய் இருக்கலாம் என்று சந்தேகப் படுகிறார்களாம்."

"அந்தப் ஃபோட்டோவை நீங்களும் பார்த்தீர்களா?"

"பார்த்தேன். அந்தப் படத்தில் இருந்தவன் ஏறத்தாழ நம் மாஜிஸ்டிரேட் போலவேதான் இருந்தான். கோவர்த்தனன் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்ளும் வேறு சில ஜாடை மாற்றங்களைச் செய்துகொண்டு மிருக்கிறார். ஆனால் நான் ஏமாறவில்லை. அந்தப் படத்தில் இருந்தது அவரேதான்!"

"இல்லை. இவ்வளவு நெருக்கத்தில் வந்துவிட்டார்கள்; அவர்களாகவே தெரிந்து கொண்டு விடுவார்கள் என்று எண்ணினேன். இன்னொரு காரணமும் உண்டு." "என்ன?"

"மாஜிஸ்திரேட் உங்கள் நண்பர். உங்கள் மதிப்பில் இன்னமும் விழுந்து விடாமல் நிமிர்ந்து நிற்பவர். எனவே உங்களையும் கலந்தாலோசித்துக் கொண்டு....."

"மிஸ்டர் கல்யாணம்! எனக்கு நீங்கள் பெரிய உபகாரம் செய்ய வேண்டும்" என்றாள் பவானி பரபரப்புடன்.

"சொல்லுங்கள், காத்திருக்கிறேன்" என்றான் கல்யாணம்.

"இந்த விஷயத்தை ஒரு ஜீவனிடமும் நீங்கள் பிரஸ்தாபிக்கக் கூடாது. கையடித்துச் சத்தியம் செய்வீர்களா?"

"உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்றால் இதோ இப்போதே செய்கிறேன்" என்று கல்யாணம் அவள் வலக் கரத்தைத் தன் இடக் கையால் பற்றிப் பின்னர் தன் வலக்கரத்தையும் அவள் உள்ளங்கையோடு இணைத்தான். இணைத்த கரத்தை எடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. பவானிக்கு தன்னை விடுவித்துக் கொள்ளச் சக்தி இல்லை. "தாங்க்யூ மிஸ்டர் கல்யாணம், தாங்க்யூ" என்றபோது அவள் குரல் கரகரத்தது. உடல் துவண்டது.

(தொடரும்)