உனக்கும் காதலா?

ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து பவானி வெளியே வந்தபோது தன் காரில் டிரைவர் ஆசனத்தில் யாரோ உட்கார்ந்திருப்பது சாலை விளக்கின் மங்கிய ஒளியில் அவளுக்குத் தெரிந்தது. காரைப் பூட்டாமல் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு போனது தவறு என்று தோன்றியது. கூடவே அனுமதி இன்றிக் காருக்குள் ஏறி அமர்ந்திருக்கும் நபர்மீது கோபமும் பொத்துக் கொண்டு வந்தது. ஒரு வக்கீலின் வாதத் திறமைகளை யெல்லாம் காட்டி அவனுடன் சண்டை பிடிக்கும் நோக்கத்துடன் அவள் பரபரப்பாக அடியெடுத்து வைத்தாள். ஆனால் காரை நெருங்கியபோது அது சிறுவன் விசு என்பதையும் அவன் புதுக் காரைத் தான் ஓட்டுவதாகக் கற்பனை செய்து கொண்டு "டிர்ர்ர்....டிர்ர்!" என்று சத்தப்படுத்தியபடியே ஸ்டியரிங்கை அசைப்பதையும் கண்டாள். அவளுக்குக் கோபிக்க மனம் வரவில்லை. என்றாலும் விளையாட்டாக "யாருடா அவன், காரிலே விஷமம் பண்ணுகிறது! போலீஸைக் கூப்பிடட்டுமா?" என்று அதட்டினாள்.

"ஓ, பேஷாகக் கூப்பிடு, பவானி அக்கா! சாலையின் வலது பக்கம் வண்டியை நிறுத்தியிருக்கிறாயே, வந்து பார்க்கட்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர். பத்து ரூபாய்தான் ஃபைன். பவானி பி.ஏ. பி.எல். லின் வாதத் திறமை ஒன்றும் அங்கே பலிக்காது!" என்றான் விசு.

"அட போக்கிரி! ரூல்ஸ்ஸெல்லாம் நல்லாத் தெரிந்து வைத்திருக்கிறாயே!" என்றாள் பவானி.

"அது மட்டுமில்லே. கார் ஓட்டவே எனக்குத் தெரியும். ஆனால் சாலை தெரிந்தால் கால் எட்டாது. மற்றப்படி கியர், பிரேக், கிளச் சப் ஜாடா கச்சிதமா எனக்குத் தெரியும்."

"பலே பேஷ்! கெட்டிக்காரன் தான். நகரு சொல்கிறேன். உன்னை வீட்டில் விட்டு விட்டுப் போகட்டுமா?"

"சரி அக்கா." அவன் நகர்ந்து கொண்டான். "ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு வரட்டுமா?"

"ஐய்யய்யோ! புது கார்! எங்கேயாவது மோதிவிட்டால்?"

"ஒன்றும் ஆகாது பவானி அக்கா! நீயும் பிடிச்சுக்கோ, நானும் பிடிச்சுக்கிறேன். கொஞ்ச தூரம், என்ன? ப்ளீஸ்!"

"ஆல்ரைட், அதோ அந்த இரண்டாவது விளக்குக் கம்பம் வரைதான்" என்ற பவானி காரைக் கிளப்பினாள். விசு அவள் அருகே] ஆசனத்தின் மீதே மண்டியிட்டு ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டான்.

"அது சரி, நீ இங்கே எப்படி வந்து சேர்ந்தாய்?" - பவானி கேட்டாள்.

"கல்யாணம் மாமாதான் என்ன உதவி வேண்டுமானாலும் தம்மை வந்து பார்க்கும்படி சொல்லியிருக்கிறாரே. அதனால் தான் வந்தேன். "நீங்க காரை விட்டு இறங்கி உள்ளே போவதைப் பார்த்தேன். புதுக் கார் ஜோரா இருக்கு அக்கா."

"என்ன உதவி இப்போ தேவைப்பட்டது கல்யாணத்திடம்?"

"கிணற்று ஜகடைக்கு கிரீஸ் போடணுமாம். கீங் கீங் என்று சத்தம் போடறதாம். அக்காவுக்கோ எனக்கோ எட்டலை. கிணற்று மதில் மேல் ஏறி நிற்கப் பயம். அதனால் கல்யாணம் மாமாவை அழைத்துக்கொண்டு வருமாறு கமலாக்கா சொன்னாள். இங்கே வந்தா அந்தச் செல்லம் மாமி வள்ளுன்னுவிழுந்து விரட்டறா. பேர்தான் செல்லம் வெல்லம் என்று."

"இன்னும் இரண்டு நாட்களிலே வந்துவிடுவார் கல்யாணம் மெட்ராஸிலேருந்து, சொல்லி அனுபறேன்" என்றாள் பவானி.

"இரண்டு நாளென்ன இருபது நாட்கள் கழித்து வேணுமானாலும் வரட்டும், ஒன்றும் அவசரமில்லை" என்றான் விசு. "கிணற்று ஜகடை கீங் கீங் என்று கத்தினால் கத்திட்டுப் போகட்டும். யாருக்கு நஷ்டம் அல்லது கஷ்டம்?"

"அது சரி" என்று சிரித்தாள் பவானி. "சரியாக உட்கார், ஊர்வலம் போனது போதும். வேகமாய் விடலாம் வண்டியை."

விசு ஸ்டீரிங்கிலிருந்து கரத்தை எடுத்து விட்டு அமர்ந்தான்.

"கஷ்டமோ நஷ்டமோ இல்லை என்றால் கிரீஸ் போட எதற்குக் கல்யாணம் மாமாவைக் கூப்பிட வந்தாய்?" என்றாள் பவானி.

"ஐய்யய்யே இதுகூடப் புரியலையா உனக்கு? கமலா அக்காவுக்குக் கல்யாணம் மாமா மேலே லவ்! அவரை அடிக்கடி பார்க்கலைன்னா இவளுக்குப் பித்துப் பிடித்த மாதிரி ஆயிடும். அதனால் தான். ஆணி அடிக்கணுமா கல்யாணம் மாமாவைக் கூப்பிடு. துணி உலர்த்தக் கம்பி கட்டணுமா கல்யாணம் மாமாவைக் கூப்பிடுன்னு என் பிராணனை வாங்கறா."

பவானிக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. வியப்பாகவும் இருந்தது. "இந்தா விசு! நீ சின்னப் பையன். இப்படி யெல்லாம் பேசக் கூடாது" என்றாள்.

"கமலா அக்காவுக்குக் கல்யாணம் மாமா மேலே லவ் என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வரது? உங்களுக் கும் கல்யாணம் மாமா மேலே லவ்வா?" என்றான் விசு.

"ஏய், அசடு! சினிமா டிராமாவிலே எதையாவது பார்த்துவிட்டு உளறாதே! சமர்த்தா இருக்கணும், புரிந்ததா?"

"சரி" என்றான் விசு.

இதற்குள் வீடு வந்து விட்டது. விசு கீழே இறங்கிக் கோபத்தோடு வேகமாகப் படாரென்று கதவைச் சாத்தினான். பவானிக்குத் தூக்கி வாரிப் போட்டது! அவனை அதட்டியதற்குப் பழி வாங்கி விட்டானே! புத்தம் புதுக் கார். கதவு கழன்று விழாததே அதிசயம்தான்.

ஒரு பக்கம் கோபமும் ஒரு பக்கம் அவன் போக்கிரித்தனத்தை நினைத்துச் சிரிப்பும் பொங்க அவள் கீழே இறங்கினாள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன் இம்முறை கார் இடதுபுறமாக நிற்கிறதா என்று பார்த்துக் கொண்டு சரியாகப் பூட்டிக் கொள்ளவும் செய்தாள்.