பூட்டு திறந்தது!
பூட்டிக் கிடந்த ஒரு பழைய வீட்டின் வாசலுக்கு வந்து சேர்ந்ததும் கல்யாணசுந்தரம் காரை சாலை ஓரமாய் நிறுத்தினான். "இதுதான் வீடு. ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி யிருக்கிறது. மதராஸ்காரர்கள் வந்து தங்குவது என்றால் சாமானியமா?" என்றான்.
"ராமப்பட்டணமே அதிர்ஷ்டம் பண்ணியிருப்பதாகச் சொல்லுங்கள். சென்னையிலே யிருந்து இந்த ஊருக்கு ஏகப்பட்ட பேர் வந்து டேரா போட்டிருப்பதாகக் கூறினீர்களே!" என்ற மாசிலாமணி, கார்க் கதவைத் திறக்கத் தெரியாமல் தவித்தார். அதே போல் பின் ஸீட்டில் காமாட்சி அம்மாளும் யாரேனும் கதவைத் திறந்துவிடக் காத்திருந்தாள். விசு, "கார்க் கதவைத் திறக்கக் கூடவா தெரியாது?" என்று பெரிய மனுஷ தோரணையில் கேட்டு விட்டுச் சட்டென்று இறங்கி, படீரென்று தன் பக்கத்துக் கதவைச் சாத்தினான்.
கல்யாணத்தின் காதில் அந்த ஓசை நாராசமாக விழுந்தது. முகத்தைச் சுளுக்கிக் காதுகளைப் பொத்திக் கொண்டு, "அப்பனே, உனக்குக் கார் கதவைத் திறக்கத் தெரிகிறது; ஆனால் சாத்தத் தெரியவில்லை. கொஞ்சம் மெதுவா மூடு. என்னதான் வெள்ளைக்காரர் தயாரித்த காரானாலும் இந்தப் போடு போட்டால் தாங்காது" என்று கூறியபடியே இறங்கினான். இதற்குள் விசு மற்றவர்கள் இறங்கக் கதவுகளைத் திறந்தான். கல்யாணம் டிக்கியைத் திறந்து விட்டு விட்டுக் காரின் கூரைமேல், காரியரில் இருந்த சாமான்களை இறக்க ஆரம்பித்தான்.
மாஜி சென்னைவாசிகள் ரொம்பக் கரிசனத்தோடு, "நீங்கள் சிரமப்பட வேண்டாம். நாங்க இறக்கிக் கொண்டு போய் வைக்கிறோம்" என்று உபசாரமாகச் சொன்னார்களே ஒழிய கல்யாணசுந்தரம் காரியம் செய்வதை யாரும் தடுக்கவில்லை. பெட்டியை ஒரு கையிலும் ஒரு பெரிய கூடையை மற்றொரு கையிலும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்த கல்யாணம், பளு தாங்காததால் கூடையை திண்ணையின் மேல் 'ணங்' கென்று வைத்தான்.
"ஐயோ போச்சு! போச்சு! ஊறுகாய் ஜாடி யெல்லாம் உடைஞ்சிருக்கும். இதற்குத்தான் அவரைத் தூக்கச் சொல்லாதே. நீ எடுத்துக்கோ என்று சொன்னேன், கேட்டியா?" என்றாள் காமாட்சி அம்மாள் கமலாவைப் பார்த்து.
"பாதகம் இல்லை அம்மா! இவர் கார்க் கதவை விசு உடைத்ததற்கும் இவர் நம் ஊறுகாய் ஜாடிகளை உடைத்ததற்கும் சரியாய்ப் போய் விட்டது" என்றாள் கமலா.
அவள் ஒரு பெட்டியையும் படுக்கையையும் தூக்கிக் கொண்டு வாசல் பக்கம் வந்து கொண்டிருந்தாள்.
"இப்படிக் கொடு" என்று கை நீட்டினான் கல்யாணம். "படுக்கையை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். பெட்டி என்ன தான் சீமையிலே தயாரானதானாலும் உங்களுடைய தகலடித் தாக்குதலைத் தாங்காது" என்றாள் கமலா.
அவன் சிரித்துக் கொண்டே படுக்கையை வாங்கிக் கொண்டு போய்ப் படியேறித் திண்ணையில் தொப்பென்று போட்டுவிட்டு வேகமாய்த் திரும்பிய சமயம் கமலா கடைசிப்படி ஏறிக் கொண்டிருந்தாள். அவன் மீது இடித்து விடாதிருக்க அவள் இப்பால் நகர அவனும் அதே நேரத்தில் அதே திசையில் நகர, இவள் உடனே எதிர்ப் பக்கம் பாய அவனும் அதையே செய்ய... இப்படி மூன்று நாலு தடவைகள் தடுமாறும்படியாகிவிட்டது.
"இது என்ன, இவா இரண்டு பேரும் வீட்டு வாசல்லே பால்ரூம் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டா?" என்றான் விசு, தான் பார்த்த ஓர் ஆங்கிலப் படத்தை நினைவுக்குக் கொணர்ந்தவனாக.
"அசடு! தத்துப் பித்தென்று பேத்தாதே" என்று காமாட்சி அம்மாள் அதட்டினாள்.
கமலா வெட்கமடைந்தவளாகப் படிகளை விட்டு இறங்கி ஓரமாய் ஒதுங்கி நின்றாள்.
"சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்திருங்கள். வீட்டுச் சொந்தக்காரரிடம் சாவி வாங்கிக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கல்யாணம் மறுபடி காரில் ஏறி அதைக் கிளப்பிக் கொண்டு போனான்.
"ரொம்பப் பழங்காலத்து வீடு" என்றாள் காமாட்சி அம்மாள்.
"வீடு என்று கிடைத்தால் போதாதா? இதுவே சைதாப்பேட்டையில் இருந்தால் ஐம்பது ரூபாய் வாடகை கேட்பார்கள்." என்றார் மாசிலாமணி முதலியார்.
"இப்போது யார் வாடகை கொடுக்கிறார்கள். எல்லாரும்தான் ஜப்பான்காரனுக்குப் பயந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறார்களே" என்றாள் கமலா.
"நாம் மட்டும் பயப்படாமல் என்ன செய்தோமாம்?" என்றான் விசு.
"நாம் எங்கேடா பயந்தோம்? பீதியல்லவா அடைந்தோம். ஒரே கிலி!" என்றாள் கமலா.
விசுவினால் சும்மா உட்கார்ந்திருக்க முடிய வில்லை. கதவருகே போய்ப் பூட்டைப் பிடித்து இழுத்தான். பூட்டு திறந்து கொண்டது.
"பார்த்தீர்களா! ஒரு 'மாஜிக்' செய்தேன். பூட்டுத் திறந்து கொண்டது. வாருங்கள்! வாருங்கள்!" என்றான் விசு.
எல்லோரும் உள்ளே போனார்கள். காமாட்சி அம்மாள் விடுவிடு என்று வீட்டைச் சோதித்து விட்டு வந்து, "சமையலறை கொஞ்சம் கூட வசதியாய் இல்லை. அம்மி, கல்லுரல் ஒன்றும் கிடையாது. அடுப்பு இடிந்து கிடக்கிறது. நான்தான் சொன்னேனே ரொம்பப் பழங்காலத்து வீடு" என்றாள்.
கமலா கணப்பொழுதும் வீணாக்காமல் பின்கட்டில் அகப்பட்ட ஒரு துடைப்பத்தைக் கொணர்ந்து முற்றத்தை ஒட்டினாற்போலிருந்த இடத்தைத் துப்புரவாகப் பெருக்கினாள். மேஜை நாற்காலிகளைத் துடைத்தாள். சாமான்களை அவளும் விசுவுமாக உள்ளே எடுத்து வந்து வைத்தார்கள்.
இன்னும் சில நிமிஷங்களில் நன்றாக இருட்டிவிடும் என்று உணர்ந்தவளாக அவசரம் அவசரமாகக் கொல்லைப்புறம் சென்று கிணற்றிலிருந்து ஒரு குடம் நீர் இழுத்து முகம் கழுவினாள். மறுபடியும் உள்ளே வந்து முகத்தைத் துடைத்துப்பவுடர் போட்டுக் கொண்டாள். முற்றத்தில் மட்டுமே இருந்த வெளிச்சத்தில் நெற்றிக்கு இட்டுக் கொண்டாள்.
ஸ்விட்ச் இருக்கிற இடமே தெரியவில்லையே?" என்று காமாட்சி அம்மாள் சுவர்களில் தேடினாள்.
"விளக்கு இருந்தால்தானே ஸ்விட்ச் இருக்கும்? வீட்டுக்கு மின் இணைப்பே கிடையாது" என்றார் மாசிலாமணி.
"அட கடவுளே! போயும் போயும் இப்படிப்பட்ட வீடுதானா கிடைத்தது உங்களுக்கு?"
"வாயை மூடிக் கொண்டு இரு. இன்று ராத்திரி தங்குதற்கு இடம் கிடைத்ததே அதைப் பார்க்கலை? புகார்களை அடுக்க ஆரம்பித்து விட்டாள்!" என்றார் மாசிலாமணி.
"நீங்கள் எதற்கு என்மேல் எரிஞ்சு விழறேள்? அந்தப் பிள்ளையாண்டான் நல்ல மாதிரியா இருக்கான். அவனிடத்திலே சொன்னால் எல்லாம் சரிப்படுத்தித் தருவான். ஒரு நாள் இரண்டு நாள் இருந்தாலும் எதற்காக அசௌகரியப்பட்டுக் கொண்டு இருக்கணும்?"
"ஆமாம்! இரண்டு நாட்களுக்காக விளக்கு மட்டுமா போட்டுத் தருவா? வெள்ளை அடிச்சு, ரிப்பேர் பார்த்தும் தருவா. கேட்டுப் பாரு" என்றார் மாசிலாமணி.
"ஏன் இரண்டு நாட்களோடு போவானேன்? ஊருக்கு ஒரு கடிதாசு எழுதிப் போட்டால்போச்சு. உங்க அண்ணா, 'தம்பி வரக் காணுமே' ன்னு உருகவா போகிறார்?"
மாசிலாமணியும் ஏறத்தாழ அவளைப் போலவேதான் அப்போது சிந்தித்துக்கொண் டிருந்தார். 'கிராமத்துக்குப் போய் அண்ணாவுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்பதற்காகவே கடவுள் இங்கே நம்மைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறாரோ?" என்று நினைக்கத் தொடங்கி யிருந்தார். என்றாலும், "அதையெல்லாம் போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். எடுத்த எடுப்பிலேயே அவர்களைப் பயமுறுத்தி விடாதே" என்று மனைவியை எச்சரித்து வைத்தார். "இரவு தங்குவதற்கு மட்டும்தான் இடம் கேட்டு இங்கே வந்திருக்கிறோம். அதை மறந்து விடாதே" என்றார்.

