துயர அலைகள்!

கமலா காய்கறிப் பையுடன் வீட்டின் படியேறியபோது உள்ளே பெற்றோர் ஏதோ விவாதத்தில் ஈடுபட்டிருப்பது கேட்டது. தன் பெயரும் அடிபடவே கமலா சற்றுத் தயங்கினாள். ஒட்டுக் கேட்பது தவறு என்று மனம் இடித்துக் காட்டினாலும் அவளால் ஆவலை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஜன்னல் ஓரமாக நின்றாள்.

"அந்த மனுஷன் ரங்கநாதன் பாலைக் கொடுத்துக் கோலையும் காட்டுகிற மாதிரி நடந்து கொண்டார் பார்த்தியா?" என்றார் மாசிலாமணி. "பத்தாயிரம் பெறுமானம் உள்ள அட்டிகையை உன் கரத்திலே வைத்து விட்டு, ஐந்து நிமிஷம் ஆவதற்குள் வாடகையும் முன் பணமாக முன்நூறு ரூபாய் அனுப்பச் சொன்னாரே. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?"

"தெரியாம என்ன? 'உங்க பெண்ணை எனக்குக் கட்டிக்கொடுத்தால் எப்பேர்ப்பட்ட ஐசுவரியங்கள் காத்திருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். கூடவே உங்களுடைய ஏழைமை நிலையையும் புரிந்து கொள்ளுங்கள்' என்று சுட்டிக் காட்டினார்..... வாடகை கொடுக்க வக்கில்லாமல்தானே, இருக்கிறோம்.

"என்னதான் இருந்தாலும் பதினாறு வயதுப் பெண்ணை அறுபது வயசுக் கிழவனுக்கு எப்படி மணம் செய்து கொடுக்கிறது? ஊரிலே நாலு பேர் என்ன சொல்லுவாங்க?"

"ஊர்க்காரர்களுக்கு என்ன, எதை வேணுமானாலும் பேசுவாங்க. நாம் இப்படிக் கஷ்டப்படுகிறோமே ஊர்க்காரங்க வந்து ஒத்தாசை செய்கிறதுதானே?

நான் சொல்கிறேன் கேளுங்க. மூணு வயசிலே கமலாவை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சோம். பதின்மூன்று வருஷங்களாக அவளுக்காக நாம் படாத கஷ்ட நஷ்டங்களா? இப்போது நமக்குக் கஷ்ட காலம் வந்துவிட்டது. தினம் போது விடிந்தால் இன்றையச் சாப்பாட்டுக்கு என்ன வழி என்று யோசனை. அவ கஷ்டப்படாம நாம் வளர்த்தோம். இப்போ நம் கஷ்டம் அவளால் தீரணும்னு இருந்தால் தீரட்டுமே? ஆறு வீடு, நூறு காணி நிலம். பாங்கில் ரொக்கமாக மூன்று லட்சம்..... ஏங்க பணத்தையெல்லாம் ஒரே பாங்கியிலே போட்டு வைக்கிறாரே? திடீர்னு பாங்கு மூழிகிப் போயிடுச்சுன்னா?"

"சரியாப் போச்சு. நீ இப்போ அந்தக் கவலையிலே இறங்கிட்டியா? முடிச்சுப் போடறதைப் பற்றி முதலில் யோசித்து முடிவு செய்!"

"யோசனை என்ன வந்தது, யோசனை? சரின்னு சொல்ல வேண்டியதுதான். ஆனால் பல்லைக் காட்டிக்கிட்டு ஓடாமல் கொஞ்சம் கிராக்கி செய்து கொள்ளலாம். ரொம்பவும் அலட்சியம் பண்ணினாலும் ஆபத்து. சந்தர்ப்பம் கைநழுவிப் போய்விடும்."

"கமலாவைக் கேட்க வேண்டாமா, ஒரு வார்த்தை?"

"அவளை என்ன கேட்கிறது? பதின்மூன்று வருஷங்களாக அவளைக் கேட்டுக் கொண்டா எல்லாம் செய்தோம்? அப்படிக் கேட்க வேண்டும் என்றால் நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்க பேசாமல் இருங்க."

இந்தச் சம்பாஷனையை வெளித் திண்ணையில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த கமலாவுக்குத் தரையிலிருந்து பூமி நழுவிச் செல்வது போல் இருந்தது. துயரக் கடலின் ஆழம் காண முடியாத அடிவாரத்தை நோக்கி அவள் மூழ்கிச் சென்று கொண்டிருந்தாள்.

நன்றாகப் படித்துப் பெயர் பெற்ற விஞ்ஞானியாகவோ டாக்டராகவோ விளங்க வேண்டும் என்ற அவள் லட்சியக் கோட்டை அவள் எதிரேயே இடிந்து தகர்ந்து மண் மேடாகியது.

'படிப்பும் வேண்டாம். பதவியும் வேண்டாம். பணம், புகழ் எதுவும் வேண்டாம். கல்யாணத்தின் காலடியில் இருந்து அவனுக்குப் பணிவிடைகள் செய்யும் பாக்கியம் கிட்டினால் போதும்' என்ற அவளுடைய அளப்பரிய ஆசையில் கூடை கூடையாய் மண் விழுந்தது!

அம்மா தன்னிடம் சற்றுக் கடுமையாக நடந்து கொள்வதற்கு அவள் சுபாவம்தான் காரணம் என்று தான் இதுவரையில் நம்பி வந்தது அசட்டுத்தனம் என்பது புரிந்து போயிற்று. அவள் தன் அம்மாவே அல்ல; மாசிலாமணி தன் அப்பாவே அல்ல! தான் ஒரு அனாதை; கல்யாணம் ஏதோ நாடகம் நடத்துகிறாரே. பர்மா அகதிகளுக்கு நிதி திரட்ட என்று. அந்த அகதிகளைவிடக் கேவலமான ஜன்மா தன்னுடையது! 'நான் யாருக்குப் பிறந்தவளோ, எப்படிப் பிறந்தவளோ? குழந்தைப் பிராயத்தில் காணாமல் போனவளோ, அல்லது அவமானச் சின்னமேதானோ? இப்படிப்பட்ட நான், கல்யாணத்தின் கரம் பற்றுவது பற்றி நினைத்துக்கூடப் பார்த்திருக்கலாமா?

'என்னை வளர்க்கும் பணியில் கடந்த பதின் மூன்று வருஷங்களாக அடைந்து வந்த கஷ்ட நஷ்டங்களுக்குப் பிரதியாக இன்று என்னை அப்பாவும் அம்மாவும் விற்கத் தீர்மானித்து விட்டார்கள். ஆட்டைக் கொழுக்க வைத்துக் கசாப்புக் கடைக்காரனிடம் தள்ளுவதுபோல் என்னையும் ஒப்படைக்கத் தீர்மானித்துவிட்டார்கள். அவர்களை நொந்து கொண்டு என்ன பயன்? என் திருமணத்தை ஒரு வியாபாரமாகக் கருதாமல் இருக்க அம்மா என்ன, என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றவளா? இல்லையே?"

மாலை மாலையாகக் கண்ணீர் பெருக்கிப் பிரமை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்த கமலாவை விசுவின் குரல் உலுக்கி எழுப்பியது.

"அக்கா, அக்கா! உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன். கல்யாணம் மாமா கொடுத்து அனுப்பினார்!"

"என்னடா பரிசு?" கேவலுக்கிடையே வெளிப்பட்டன வார்த்தைகள்.

"முதல் நாள் அன்றே நாடகம் பார்க்க நாலு டிக்கெட்! இதோ பார்த்தியா? கணையாழியின் கனவு - அட்மிட் ஒன்! இது டிராமா நோட்டீஸ்!"

கமலா பார்த்தாள். விளம்பரத் தாளில் கல்யாணத்தின் படம். புன்னகை தவழும் சுந்தரமான முகம். அதன் அருகேயே கதாநாயகியாக நடிக்கும் பவானியின் சிரிப்புக் குமிழியிடும் அழகிய வதனம்!

அவள் மனக் கண்ணுக்கு மற்றொரு படம் தென்பட்டது. அது ஒரு திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.

மணமகள் கமலா. மணமகன் அறுபத் திரண்டே வயதான திருவாளர் ரங்கநாதன்!

கமலாவுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது. நாடக டிக்கெட்டுக்களையும் நோட்டீஸையும் விசுவின் கரத்திலிருந்து சரேலென்று பிடுங்கிச் சுக்குநூறாகக் கிழித்துத் தெருவில் பறக்க விட்டாள். அடுத்த கணம் தன் சக்தியெல்லாம் இழந்தவளாகத் திண்ணையிலேயே சரிந்து விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.

அவள் அழுகைக்கும் மேலாக நாடகத்துக்குப் போகும் வாய்ப்பை இழந்த விசு, 'ஸைரன்' அலறுவது போல் ஊளையிட ஆரம்பித்தான்.

(தொடரும்)