விசித்திர வரவேற்பு

சமூக சேவா சங்கத்தின் டென்னிஸ் கோர்ட்டில் பவானியும் மாஜிஸ்திரேட் கோவர்த்தனனும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

கல்யாணம் அப்போது அங்கே வந்து, "மணி ஐந்தரையாகப் போகிறதே! ஒத்திகைக்கு நேரமாகிறதே!" என்றான்.

"ஒத்திகையை யெல்லாம் நீங்கள் நடத்துங்கள். பவானி அப்புறம் வருவாள்" என்றார் கோவர்த்தனன்.

"நோ, நோ! பவானி ரொம்ப பங்ச்சுவல். ஐந்தரை மணிக்கு ஒத்திகையென்றால் டாண்ணென்று அத்தனை மணிக்கு வந்துவிடுவாள்" என்றான் கல்யாணம்.

"வாட் நான்ஸென்ஸ்! இவளுக்கு எதற்கு ஒத்திகை? நடிக்கத் தெரியாதவர்கள்தாம் திரும்பத் திரும்ப ஒத்திகை பார்த்துக்கொள்ள வேண்டும். நாடகம் என்று அரங்கேறுகிறது என்று நேரம், தேதி சொல்லிவிட்டுப் போ. பவானி பங்ச்சுவலாக வந்து சேர்வாள்!"

"நீங்க கொடுக்கிற சர்ட்டிஃபிகேட்டைக் கேட்டுத்தான் இவளுடைய நடிப்பாற்றலை நான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. எனக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இவளை நான் அழைப்பது மற்றவர் நடிப்பை அபிவிருத்தி செய்ய."

"ஓ! கதாநாயகியாக நடிக்குமாறு அழைத்துவிட்டு இப்போ டைரக்‌ஷன் பொறுப்பையும் இவள் தலையிலே கட்டியாகிவிட்டதா? இன்னும் கதை, வசனம், பாட்டு, இசை எல்லாம் பவானிதானா? மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து திரை தூக்கி இறக்குவீர்களாக்கும்?"

இதற்குள் பவானி குறுக்கிட்டு, "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ என்னால் முடிந்த அளவு உதவுகிறேன். எல்லாருடைய ஒத்துழைப்பும் வேண்டும். நாடகம் வெற்றிபெற மாஜிஸ்திரேட் ஸாரின் ஒத்துழைப்பும் கூட அவசியம் தேவை" என்றாள்.

"நான் என்ன செய்யணும், சொல்லு" என்றார் மாஜிஸ்திரேட்.

"அபத்தமான முறையில் குற்றம் குறை சொல்லாமல், முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் அதுவே பெரிய உதவி" என்றான் கல்யாணம்.

"இப்போது நீதான் எங்கள் விளையாட்டுக்கு முட்டுக்கட்டை போட்டிருகிறாய்" என்றார் கோவர்த்தனன்.

"ஐ ஆம் ஸாரி கல்யாணம். இந்த ஸெட்டை முடித்துக் கொண்டு வந்துவிடுகிறேன். ஐந்தே நிமிஷம்" என்றாள் பவானி.

"சீக்கிரம் முடியணும் எனபதற்காக விட்டுக் கொடுத்து ஆடாதீர்கள்" என்றான் கல்யாணம். தொடர்ந்து அவள் பந்தைத் தட்டிய போதெல்லாம், "ஒண்டர் ஃபுல் ஷாட்", "பியூட்டி", "ஸ்பிளெண்ட்டிட்" என்றெல்லாம் உற்சாகப் படுத்தினான். மாஜிஸ்திரேட் ஆடியபோது மௌனம் சாதித்தான்.

மெய்யாலுமே பவானி பிரமாதமாகத்தான் ஆடினாள். ஆனால் எதிராளியின் பலத்துக்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. களைப்புடன் ஒரு 'ஷாட்' அடித்த சமயம் அது கோர்ட்டைவிட்டு வெகுதூரம் திசை தப்பிப் போய் விழுந்தது.

கல்யாணம் பலமாகக் கைதட்டி "எக்ஸலண்ட்" என்றான்.

"எதற்குக் கைதட்டுகிறீர்கள்? எனக்குத்தான் ஆட்டம் போய்விட்டதே" என்றாள் பவானி.

"ஆட்டமும் போய்விட்டது. அத்துடன் பந்தும் போய்விட்டது. நாம் நாடக ஒத்திகைக்குப் போகலாம்."

மாஜிஸ்திரேட் மரத்தடி நாற்காலிகளைக் காண்பித்து, "ஒரு கப் டீ சாப்பிட்டுவிட்டுப் போகலாம், பவானி!" என்றார்.

"வேண்டாம், ஸார்! 'புரொட்யூஸருக்குக் கோபம் வந்துவிடும். அப்புறம் அடுத்த நாடகத்தில் எனக்கு 'சான்ஸ்' தர மாட்டார். கதாநாயகிக்கு வேறு யாரையாவது 'புக்' பண்ணி விடுவார்" என்று சிரித்துக் கொண்டே கூறிய பவானி, டர்க்கி டவலால் முகத்தை ஒற்றிக் கொண்டு கல்யாணத்துடன் நடந்தாள்.

மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் மரத்தடி நாற்காலியில் அமர்ந்தார். பையன் வந்த போது அவர் வழக்கம்போல் டீ அல்லது லெமனேட் 'ஆர்டர்' செய்யவில்லை. விஸ்கி சோடா கொண்டு வரச் சொன்னார்.

ஒத்திகை முடிந்து பவானி புறப்பட்ட போது கல்யாணம், "என்னை வீட்டில் விட்டு விட்டுப் போகிறீர்களா?" என்று கேட்டான்.

"ஏன் உங்க கார் என்ன ஆயிற்று?" என்றாள் பவானி.

"அதற்கு உங்க புதுக் கார் பக்கத்தில் வந்து நிற்க வெட்கமாயிருக்கிறதாம். காலையில் ஷெட்டை விட்டுப் புறப்படமாட்டேன் என்று ஒரே பிடிவாதம்!"

"பொய்! தனித்தனியே நாம் போனால் வம்பளக்க முடியாது. அதனால் உங்கள் காரை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள்."

"உண்மைதான் பவானி! உங்களுடன் தனியே மனம் விட்டுச் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தால்தான் இரவு எனக்குத் தூக்கமே வருகிறது" என்று கூறிய கல்யாணம் காரின் முன்புறம் போய் ஏறிக் கொண்டான்.

சமூக சேவா சங்கத்தின் வெளி மதிலைத் தாண்டியதும் பவானி கேட்டாள். "அந்தப் பெண் கமலா கிணற்றில் விழுந்து விட்டாளாம். நீங்கள் காப்பாற்றினீர்களாமே?"

"ஆமாம். அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?"

"மிஸ்டர் கல்யாணம், ராமப்பட்டணம் ரொம்பச் சின்ன ஊர். இங்கே நேதாஜி டில்லி செங்கோட்டையைப் பிடித்தார் என்பதாகப் பத்திரிகையில் செய்தி படிக்க நேர்ந்தால்கூட ஒருவித சலசலப்பும் இராது. கிணற்றில் விழுந்த கமலாவைக் கல்யாணம் காப்பாற்றினார் என்றால் பெரிய பரபரப்பு ஏற்படும். காட்டுத் தீ போல் அந்தச் செய்தி பரவும்!"

"அது சரி, நீங்க இப்போ எங்கே போகிறீர்கள்?" என்றான் கல்யாணம். பவானி மாற்றுத் திசையில் காரைத் திருப்புவதைப் பார்த்துவிட்டு.

"கமலாவின் வீட்டுக்குத்தான்."

"எதற்கு?"

"சரிதான். அந்தப் பெண் கிணற்றில் விழுந்து சாகப் போனவள். புனர்ஜென்மம் எடுத்திருக்கிறாள். அவளை நான் பார்த்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்ல வேண்டாமா?"

கல்யாணம் தலையாட்டிச் சம்மதித்தான்.

அங்கே அவர்களுக்கு ரொம்ப விசித்திரமான வரவேற்பு காத்திருந்தது. கமலாவைக் கண்ணிலேயே காணோம். வந்தவர்களைப் பார்த்துக் காமாட்சி அம்மாள், "என்ன இரண்டு பேருமாகச் சேர்ந்து எங்கே இப்படிக் கிளம்பினீர்கள்?" என்று பாதி கிண்டலாகவும் பாதி அலட்சியமாகவும் கேட்டாள்.

"உங்க பெண் கிணற்றில் விழுந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன்...." என்று பவானி ஆரம்பிப்பதற்குள்,

"ஆமாம், விழுந்து விட்டாள். அப்படியே போயிருந்தால் தேவலாம். ஒரு கவலை விட்டிருக்கும். ஏழைகளுக்கெல்லாம் பெண்ணும் பிறக்கக் கூடாது. பிள்ளையும் இருக்கக் கூடாது" என்றாள் காமாட்சி.

"என்னடி வந்தவர்களை 'வா' என்று சொல்லாமல் ஏதேதோ உளறுகிறாய்" என்றார் மாசிலாமணி.

"கமலா எங்கே?" என்றாள் பவானி.

"உடம்பு சுகமில்லை. காமிரா அறையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறாள்."

"ஒன்றுமில்லை. தலைவலியும் குளிர் காய்ச்சலும்தான். நாளைக்குச் சரியாகிவிடும்" என்றார் மாசிலாமணி.

"டாக்டர் என்ன சொல்கிறார்?"

"டாக்டர் எங்கே வந்து பார்த்தார்? அவர் வருவதானால் சும்மா வருவாரா? பணத்துக்கு எங்கே போகிறது?"

"ஒரு வார்த்தை விசுவிடம் சொல்லி அனுப்பியிருந்தால் நான் அழைத்து வந்திருப்பேனே?" என்றான் கல்யாணம்.

"வேண்டாம், வேண்டாம்! எதற்கு உங்களுக்குச் சிரமம்? ஏற்கனவே நாங்கள் உங்களுக்கு ரொம்பத் தொந்தரவு கொடுத்து விட்டோம். எனக்குத் தெரிந்த சுக்கு திப்பிலி வைத்தியம் பண்ணுகிறேன். சரியாகிவிடும்."

"பவானி! வாருங்கள், போகலாம்" என்றான் கல்யாணம் அவன் அங்கே ஒரு வினாடி தமதிக்கவும் விரும்பவில்லை.

"ஆமாம், ஆமாம். புறப்படுங்க, உங்களுக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டு, டென்னிஸ் கோர்ட்டு, நாடகக் கோர்ட்டு என்று ஏகப்பட்ட வேலை" என்றாள் காமாட்சி.

"கல்யாணம்! நீங்க காருக்குப் போங்க. நான் ஒரு நிமிஷம் கமலாவைப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்" என்றாள் பவானி. பிறகு காமாட்சியின் அனுமதிக்குக் காத்திராமல் காமிரா அறைக்குள் போய்த் தரையில் பாயில் படுத்திருந்த கமலாவை அணுகினாள்.

"கமலா, இப்போ எப்படி இருக்கிறது?"

"எனக்கு ஒன்றும் இல்லை" என்றாள் கமலா நறுக்கென்று. பவானி அவள் கழுத்தில் கரம் வைத்தாள், ஜுரம் இருக்கிறதா என்று பார்க்க. சரேலென்று அதை உதறிவிட்டுக் கமலா தலையையும் சேர்த்து இழுத்துப் போர்த்திக் கொண்டு சுவர் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

"கமலா! என்னிடம் உனக்கு என்ன கோபம், திடீரென்று?"

"எனக்கு யார் மீதும் ஒரு கோபமும் இல்லை. என்னைப் படைத்த கடவுளிடம்தான் எனக்குக் கோபம்."

"கமலா! உன் மனசை யாரோ ஏதோ சொல்லிப் புண்படுத்தியிருக்கிறார்கள். என்னுடன் உனக்குப் பேசப் பிடிக்கவில்லையானால் வேண்டாம். நான் வருகிறேன். ஆனால் நான் எப்போதும் உன் நலனை நாடுகிறவள்; என்னிடம் நீ கோபப்படுவதில் அர்த்தமில்லை. இதை இப்போது நீ புரிந்து கொள்ளா விட்டாலும் சீக்கிரமே உணர்வாய்!"

மளமளவென்று இதைச் சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பிய பவானி, மாசிலாமணி தம்பதியைத் திரும்பிக்கூடப் பாராமல் வாசலுக்குச் சென்றாள். காரில் ஏறிக் கொண்டு அதைக் கிளப்பினாள்.