புதையல் கிடைத்தது!
என் வீட்டில் சோதனை நடந்தது! ஏக அமர்க்களம்!
அமரர் கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைத் திரு சுந்தா எழுதத் தொடங்கிய போது என் தகப்பனார் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் கொண்டு வந்து தருமாறு கோரினார்.
அவ்வளவுதான். பலமாகச் சோதனை நடத்தினேன். சுவர்களில் ஏதாவது ரகசிய அறைகள் உள்ளனவா என்றுகூடத் தட்டிக் கொட்டிப் பார்த்தேன். தோட்டத்தைக் கொத்தியதில் எடை சற்று குறைந்தது!
அலமாரிகள், மேஜை இழுப்பறைகள் எல்லாவற்றையும் குடைந்து பார்த்ததில் புத்தகங்கள், குறிப்புக்கள், கடிதங்கள், புகைப்படங்கள், நாளிதழ் செய்தித் தொகுப்புக்கள் என்று பலப்பல கிடைத்தன. அவற்றுடன் ஒரு புதையலும் அகப்பட்டது! சோதனை மாபெரும் வெற்றி!
திரைப்படம் ஒன்றுக்காக அமரர் கல்கி அவர்கள் தமது இரு சிறுகதைகளை இணைத்து நாவல் உருக்கொடுத்து எழுதியிருந்த மூன்று நோட்டுப் புத்தகங்களே அந்தப் புதையல். முதலில் நாற்பது பக்கங்களில் எழுதிய கதையை இரண்டாவது முறையாக மேலும் விரிவுபடுத்தி 185 பக்கங்களில் வளர்த்திருந்தார்.
அதைக் கண்டதும் படித்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சியைக் கல்கி நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாகக் கதையைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
இந்த நாவல் உங்களுக்கு அளிக்கப்போகிற ஆனந்தத்துக்குக் கல்கியை வாழ்த்துங்கள். குறைகள் ஏதும் தென்பட்டால் அது என்னைச் சேர்ந்தது; மன்னித்துவிடுங்கள்.
கி. ராஜேந்திரன் இணை ஆசிரியர், கல்கி.

