கோபம் தணிந்தது
விசுவும் கமலாவிடம் தலைவாரிக் கொள்ளச் சீப்புக் கேட்டான். அவள், "இப்போ கொடுக்க முடியாது" என்றாள். "அப்புறம் அம்மாவிடம் சொல்லிவிடுவேன்!" "சீ பேசாமலிருடா." "அம்மா! கமலா அதற்குள் அலங்காரம் பண்ணிக் கொள்ள ஆரம்பித்து விட்டாள். எதற்காகத் தெரியுமா?"
"சீ, சும்மா இருடா!" என்றாள் கமலா கையை ஓங்கிச் சீப்பை அவன் மேல் கோபத்தில் விட்டெறிந்தாள்.
விசுவம் அதை லாகவமாகப் பிடித்துக் கொண்டு, "கொடுத்துட்டியே, எனக்குக் கிடைச்சுடுத்தே" என்றான். அவள் அவனைத் தாவிப் பிடிக்க வந்தபோது நழுவி வாசல் புறம் ஓடினான்.
அங்கே கல்யாணசுந்தரமும் வீட்டுச் சொந்தக்காரர் ரங்கநாதனும் வந்து கொண்டிருந்தனர். விசு ரங்கநாதன் மீது முட்டிக் கொண்டான்.
அவர், "இது என்ன அக்கிரமம்? வீடு திறந்திருக்கிறது; என் உத்தரவின்றி யாரோ என் வீட்டை ஆக்கிரமித்தது மட்டுமின்றி இப்படி என்னையே உள்ளே வர விடாமல் மோதி வதைக்கிறார்களே" என்றார்.
கல்யாணமும் வியப்படைந்தவனாக விசுவைப் பிடித்து நிறுத்திக் கொண்டு, "கதவு எப்படித் திறந்தது?" என்று கேட்டான்.
"எனக்கு மந்திரம் தெரியும் மாமா! 'ஓபன் ஸீஸேம்' என்றேன்! கதவு திறந்து கொண்டது."
"பார்த்தீர்களா பையனின் கெட்டிக்காரத்தனத்தை" என்று கல்யாணம் மெச்சிக் கொண்டான்.
"மாஜிக்காவது, மேதாவிலாசமாவது. சுத்தப் போக்கிரித்தனமா இருக்கிறதே. சொந்தக்காரன் அனுமதியின்றிப் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே போவதா? இதைச் சும்மா விடக் கூடாது! கேஸ் போடப் போகிறேன்."
"கண்டிப்பாகச் செய்யுங்கள். ஆனால் ஒன்று. வக்காலத்து என்னிடமே வர வேண்டும். உங்களுக்குத் தான் தெரியுமே. இந்த ஊருக்குப் பவானி வந்ததிலிருந்து மற்ற வக்கீல்களுக்குக் கேஸ் கிடைப்பதென்பதே குதிரைக் கொம்பாகி விட்டது."
"ஸார்! ஸார்! அதோ பாருங்கள். வாசற்படிக்கு மேல் என்ன எழுதியிருக்கிறது?" என்று விசுவநாதன் கை காண்பித்தான்.
அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் "வெல்கம்" என்று எழுதியிருந்தது. "இப்படி, 'நல்வரவு' என்று எழுதிவிட்டுத் தாத்தா கோபித்துக்கொள்ளலாமா?"
"ஏண்டா பயலே! என்னைப் பார்த்தால் உனக்குத் தாத்தாவாகத் தோன்றுகிறதா?"
"இல்லை, இல்லவே இல்லை. கொள்ளுத் தாத்தாவாகத்தான் தோன்றுகிறது."
"பையன் சுத்த வாலாக இருக்கிறான். குடும்பத்தில் மற்றவர்களும் இப்படித்தான் இருப்பார்கள். இவர்களை ஒருநாளும் குடி வைக்க முடியாது. இப்போதே கிளப்பிவிட்டு மறு காரியம் பார்க்கவேண்டும்" என்று கூறியவாறே உள்ளே நுழைந்தார் ரங்கநாதன்.
அவர் கால் நிலைப்படியில் தடுக்க, விழப் போனார். கல்யாணம் சட்டென்று அவரைத் தாங்கிக் கொண்டான்.
"பார்த்தீரா? இதற்குத்தான் வீட்டுக்கு எலெக்ட்ரிக் லைட் போடும் என்றேன். கேட்டீரா?" என்றான் கல்யாணம். "கொஞ்சம் இருங்கள். ஓர் அரிக்கேன் லாந்தர் இரவல் வாங்கிக்கொண்டு வருகிறேன்."
"வேண்டாம். இங்கேயே ஒரு லாந்தர் காமிரா அறையில் இருந்தது" என்று காமாட்சி அம்மாள் குரல் கேட்டது. "டேய் விசு! வந்து விளக்கை வாங்கிண்டு போடா."
"வேண்டாம், வேண்டாம். நான் வந்த வழியே திரும்பப் போகிறவன்தான். கல்யாணம், நீ இருந்து இவர்களைக் கிளப்பி விட்டு வந்து சேர்."
"அப்படிச் சொல்லாதீர்கள் சுவாமி. இந்தப் பையன் கொஞ்சம் துடுக்கு. இவன் தாயார் தகப்பனார் ரொம்ப நல்லவர்கள். இவனுக்கு அக்கா ஒருத்தி இருக்கிறாள். கல்யாணம் ஆக வேண்டிய பெண். அவளைப் பார்த்தால் உங்களுக்கே மனம் இளகிப் போகும்."
"எனக்கே மனம் இளகிப் போகும் என்றால் என்ன அர்த்தம்? நான் அவ்வளவு கல் நெஞ்சக்காரன் என்கிறாயா?"
"இல்லை இல்லை. எதைச் சொன்னாலும் தப்பாக எடுத்துக் கொள்கிறீர்களே?"
"தப்பும் எடுக்கலை. தாரையும் எடுக்கலை. இன்னும் அதற்குக் காலம் வரவில்லை."
இரண்டு பேரும் உள்ளே போனார்கள். "தாத்தா நல்ல சுபமான வார்த்தையாச் சொல்லிண்டு உள்ளே நுழையறார்" என்றான் விசு.
மாசிலாமணி முற்றத்தின் பக்கத்திலிருந்த பழைய சாய்வு நாற்காலியில் விச்ராந்தியாக விசிறிக் கொண்டு அமர்ந்திருந்தார். "வாருங்கள், வாருங்கள்" என்றார்.
"இது வேறேயா? என் வீட்டுக்குள்ளே நான் வருவதற்கு 'வாருங்கள் வாருங்கள்' என்று எனக்கே உபசாரமா?"
"வந்தவர்களை வாருங்கள் என்று அழைப்பது நம் நாட்டுப் பண்பாடு. அதனால்..."
"சொந்தக்காரர் அனுமதி இல்லாமல் பூட்டை உடைச்சு வீட்டுக்குள் நுழையறதும் நம் நாட்டுப் பண்பாடோ?"
கல்யாணம் இப்போது குறுக்கிட்டு, "இந்தவீட்டின் சொந்தக்காரர் ரங்கநாத முதலியார் என்று சொன்னேனே இவர்தான்... ரொம்ப நல்ல மனிதர் பரோபகாரி...." என்றான்.
"நிறுத்தப்பா உன் வர்ணனையை. நான் நல்லவனுமில்லை. பரோபகாரியு மில்லை! நல்லவர்களுக்கு நல்லவன்; பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவன்!"
"மன்னிக்கணும். சத்தியமா நாங்க பூட்டை உடைக்கலை. இந்தப் பயல் போய்ப் பூட்டைத் தொட்டான்..."
"நான் தொடக்கூட இல்லை. கிட்டப் போனேன். அது தானாகத் திறந்துகொண்டது" என்றான் விசு.
காமாட்சி அம்மாள் தூண் மறைவிலிருந்தபடியே பேசினாள்: "அஸ்தமிக்கிற வேளையிலே நாங்க இந்த ஊரிலே வந்து அகப்பட்டுக் கொண்டோம். கல்யாணம் ஆக வேண்டிய வயசிலே இந்தப் பெண் வேறே இருக்கிறாள். இவளையும் அழைத்துக்கொண்டு இனிமேல் இந்த இருட்டிலே நாங்கள் எங்கே போகிறது? அடி பெண்ணே, கமலா! மாமாவுக்கு நமஸ்காரம் பண்ணடி!"
"வேண்டாம்; வேண்டாம்! நமஸ்காரமும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு ரங்கநாதன் கமலாவை பார்த்தார்.
பிறகு, கல்யாணத்தை நோக்கி, "என்னமோ வந்து விட்டார்கள். இரவு நேரத்தில் இவர்களை வீட்டை விட்டுப் போகச் சொல்ல மனமில்லை" என்றார்.
"இப்படி நீங்கள் சொல்வீர்கள் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். இல்லா விட்டால் இவர்களை இவ்வளவு நம்பிக்கையுடன் இங்கே அழைத்து வந்திருப்பேனா? உங்களுடைய பரோபகார குணம்...."
"சரி! சரி! இப்படியே முகஸ்துதி பண்ணி வாடகைக்கு நாமத்தைப் போட்டு விடப் பார்க்காதே. ஒரு நாள் தங்கினாலும் ஒரு மாத வாடகை!"
"ஒரு மாத வாடகை என்ன? மூன்று மாத வாடகையே வாங்கிக் கொள்ளுங்கள். இவர்களும் அவ்வளவு அவசரமாகக் கிளம்பப் போவதாகத் தெரியவில்லை."
"மாதம் எழுபத்தைந்து ரூபாய். காலணா குறைக்க முடியாது. சுவரிலே ஆணி கீணி அடிக்கக் கூடாது. சிம்னி விளக்கை எரிய விட்டு புகை அடையச் செய்யக் கூடாது. அடிக்கடி ஒட்டடை அடித்துச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்."
"அதற்கெல்லாம் நான் பொறுப்பு; வாருங்கள் போகலாம்" என்று கல்யாணம் ரங்கநாதனை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
கமலா விசுவிடம், "அந்த மாமாவுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லுடா" என்றாள்.
விசு வாய் திறப்பதற்குள்ளாகக் கல்யாணம் கமலாவைத் திரும்பிப் பார்த்து, "இப்படிப் போகிற போக்கில் தாங்க்ஸ் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பெரியவரை அவர் வீட்டில் இறக்கி விட்டுத் திரும்பி வந்து சாவகாசமாகக் கேட்டு வாங்கிக்கொள்கிறேன்" என்றான்.
கமலாவின் நெஞ்சு கிளுகிளுத்தது.
(தொடரும்)

