வசீகரப் பார்வை

மாசிலாமணி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடக்குமென்றாலும் ஒருவரோடு ஒருவர் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப் பட்டிருந்தனர். கமலாவின் ஆசைகள் லட்சியங்கள் வேறாக இருந்தாலும் பெற்றோரை எதிர்த்துக் கொண்டு எதையும் செய்யக் கூடிய பெண் அல்ல அவள்.

சென்னையில் அவர்கள் குடித்தனத்தைக் காலி செய்துவிட்டு நாலு வீடுகளுக்கு அப்பால் ஓர் இல்லத்தில் ஓர் அறையை மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் எல்லாச் சாமான்களையும் போட்டுப் பூட்டி விட்டு, அத்தியாவசியமானதும் விலையுயர்ந்ததுமான உடைமைகளுடன் மட்டும் புறப்பட்டிருந்தார்கள்.

அவர்களைப் போலவே ஏராளமான குடும்பங்கள் பட்டணத்தை விட்டுக் கிளம்பியிருந்தன. எனவேதான் பஸ், ரயில் முதலியவற்றில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாயிருந்தது. ஜப்பானியர் குண்டு வீசப் போகிறார்கள் என்ற பீதியில் பஸ், ரயிலில் மட்டுமின்றிக் குதிரை வண்டியிலும் ரேக்ளாவிலும் ஏன் கால்நடையாகக் கூடச் சென்றவர் உண்டு.

'வருகிறேன்' என்று அண்ணா வேதாசலத்துக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டு விட்டுப் புறப்பட்டு விட்டார் மாசிலாமணி. ஆனாலும் உள்ளூர அவருக்குக் கவலைதான். கிராமத்தில் வரவேற்பு எப்படி இருக்குமோ? குடும்பத்தோடு போய் டேரா போட்டால் மன்னி என்ன சொல்லுவாளோ? நாலு நாளா, ஒரு வாரமா, மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கூட ஆகலாம், யுத்தம் முடிவதற்கு. ஏதோ சேமித்து வைத்த பணம் கொஞ்சம் இருக்கிறது. அண்ணா முதலில், 'இதெல்லாம் எதுக்குடா' என்று மறுதளித்தாலும் பின்னர் மன்னியின் போதனைக்கு இணங்கப் பணத்தை வாங்கிக் கொள்வார். நிச்சயம். ஆனால் அதுவும் எத்தனை நாளைக்கு வரும்? கமலாவின் கல்யாணத்தைப் பற்றிச் சற்று முன் பேசினேனே, அதை எப்படி நடத்தப் போகிறேன்?

இப்படி எத்தனையோ பெரிய கவலைகள் அவரை ஆட்கொண்டிருந்த போதிலும் அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இப்போது ஓர் உடனடிக் கவலை முதல் கவலையாக விசுவரூபம் எடுத்தது. இரவு எங்கே தங்குவது என்ற பிரச்னைதான் அது. பஸ் மேலே நகராது. அடுத்த பஸ் எப்போது வருமோ தெரியாது. வந்தாலும் அதில் இடமிருக்காது. நிற்பதோ நெடுஞ்சாலை. நேரமோ பிற்பகல்.

"அப்பா, 'குடும்பம் திண்டாடித் தெருவில் நிற்கிறது' என்பார்களே, அது என்ன என்பது புரிந்து விட்டது" என்றாள் கமலா சிரித்துக் கொண்டே.

அதைக் கேட்டு விட்டு, இவர்களைப் போலவே குழப்பத்தில் ஆழ்ந்திருந்த பயணியர் சிலரும் சிரித்தார்கள். ஆனால் காமாட்சி அம்மாளுக்குக் கோபம்தான் பொத்துக் கொண்டு வந்தது.

"பேச்சுதான் வாய் கிழியும். உருப்படியா ஒரு யோசனை தேறாது" என்றாள்.

"சாதாரணமாக என் யோசனையை யாரும் கேட்பதோ, மதிப்பதோ இல்லை. அதனால் நானும் சொல்வதில்லை. ஆனால் இப்போ நீயே கேட்பதால் சொல்கிறேன்" என்றாள் கமலா. "அப்பா! இப்படி வாங்களேன்" என்று பெற்றோரைச் சற்று ஒதுக்குப் புறமாக அழைத்துப் போனாள்.

அவள் பேசியதைக் கேட்டு விட்டு, "அடி என் தங்கமே! முதல் தடவையாக ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கே" என்றாள் காமாட்சி.

மாசிலாமணி விசுவை அழைத்துக் காதோடு ஏதோ கூறினார். விசு, விடுவிடென்று அவர்கள் வந்த வழியாகவே திரும்பி நடக்கலானான்.

சற்று நேரம் கழித்து அவன் ஒரு கட்டைமாட்டு வண்டியில் வந்தான். அதில் மாசிலாமணி குடும்பம் ஏறிக் கொண்டது. ரிப்பேரான பஸ்ஸினால் நிர்க்கதியாக விடப்பட்ட பயணிகள் சிலர் பொறாமைக் கண்களோடு பார்த்துக் கொண்டிருக்க அந்தக் குடும்பம் மாட்டு வண்டியில் பயணத்தைத் தொடர்ந்தது.

"எப்படி என் யோசனை?" என்றாள் கமலா. அவள் வருகிற வழியில் ஒரு கட்டை வண்டியைப் பஸ் கடந்து செல்வதைக் கவனித்திருந்தாள். அதில் சுமை ஏதும் ஏற்றி இருக்க வில்லை. அது பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு கிராமம் அல்லது நகரத்துக்குத்தான் போய்க் கொண்டிருக்க வேண்டும். பஸ் ரிப்பேராகிக் காத்திருந்த நேர்ந்த சமயத்தில் அது அவர்களை நோக்கிக் கணிசமாக முன்னேறி இருக்கும். கிட்டத்தில் வந்து விட்டால் பஸ்ஸில் வந்த பயணிகளுக்கிடையில் அதில் ஏறுவதற்கு ஏகப் போட்டி இருக்கும். எனவே தம்பி விசுவைத் தாங்கள் வந்த பாதையிலேயே திரும்பிப் போகச் சொல்லிச் சாலையில் ஒரு வளைவுக்கு அப்பால் அந்த வண்டியைப் பிடித்து முன்பணமும் கொடுத்து அதில் ஏறிவரச் சொல்லலாம் என்பதுதான் கமலாவின் யோசனை. அந்த வண்டி போய்ச் சேர்கிற கிராமம் அல்லது நகரத்தில் இரவுப் பொழுதைக் கழித்து விட்டால் பிறகு மறுநாள் பயணத்தைத் தொடர வேறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

கமலா திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. கட்டை வண்டிப் பயணம் வசதிக் குறைவாக இருந்தாலும் விசுவுக்கும் கமலாவுக்கும் புதிய அனுபவமாக, உற்சாகமளிப்பதா யிருந்தது. மாலை நேரத்துச் சூரியன் செக்கச் சிவந்த பந்தாகச் சுற்றிலும் மஞ்சள் நிற ஒளி வட்டத்துடன் தகதகக்கும் அழகைக் கமலா ரசித்தாள். இருபுறமும் வயல்களில் நடவு முடிந்து சிறிது காலமே ஆகியிருந்ததால் இளம் பச்சை நிறப் பயிர் பூங்காற்றில் அலைஅலையாக அசைவது மனோரம்மியமான காட்சியாக விளங்கியது. ஆங்காங்கே மூன்று நான்கு வெண் நாரைகள் ஜிவ்வென்று சேர்ந்தாற் போல் பறந்து வந்து ஒய்யார அழகுடன் வயல்களில் இறங்கின

"டைவ் பாம்பர் மாதிரி இறங்குகிறது பார்த்தியாடா" என்றார் கமலா தம்பி விசுவிடம். அவன் அவளை லட்சியம் பண்ணாமல் வண்டிக்காரனிடம், "நான் கொஞ்ச தூரம் ஓட்டி வருகிறேனே" என்று கயிற்றைப் பிடித்துக் கொள்ள அனுமதி கோரி கெஞ்சிக் கொண்டிருந்தான்.

மகிழ்ச்சிக் கிளுகிளுப்பெல்லாம் ராம பட்டணம் எல்லையை நெருங்கியதும் முடிந்து போயிற்று. துரதிருஷ்டவசமாக வண்டி மாடுகளில் ஒன்று படுத்துக் கொண்டு விட்டது. வண்டிக்காரன் மாட்டை எழுப்பப் பார்த்தான். முடியவில்லை.

"சாமி! மாடு இனிமேல் நடக்காது! அதோ இருக்கிறது ஊர். கூப்பிடு தூரம் தான். வாடகையை முழுசாகக் கொடுத்து விட்டு, இறங்கிப் போங்க" என்றான்.

"இறங்கி நடப்பது பெரிய காரியம் இல்லையப்பா. இத்தனை சாமான்களையும் எப்படிச் சுமப்பது?" என்றார் மாசிலாமணி. "இங்கே ஜாகை வசதியெல்லாம் எப்படி? சத்திரம் சாவடி, ஓட்டல் கீட்டல் ஏதாவது உண்டா?"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஊருக்கு வரணும்னு சொன்னீங்க. ஏத்திக் கிட்டு வந்தேன். இப்ப இறங்குங்க. இந்தப் பக்கமா முதலாளி ஐயா வந்தால் கோவிப்பார்" என்றான் வண்டிக்காரன்.

காமாட்சி அம்மாள் எல்லோருக்கும் முன்னதாக இறங்கி சாலையோரம் நின்றாள். சாமான்களைத் தகப்பனார் வண்டியிலிருந்தபடி எடுத்துத் தர கமலாவும் விசுவுமாகப் பிடித்து மெல்லக் கீழே இறக்கி வைத்தார்கள்.

வண்டிக்காரன், "தே, ஏ, உம், தே! எளூந்திருங்கறேன்!" என்று மாட்டை அதட்டியும் தாஜா பண்ணியும் பார்த்துக் கொண்டிருந்தான்.

காமாட்சி அம்மாளைத் தவிர மற்றவர்கள் காரியமாக இருந்ததால் நவநாகரிகமாக உடையணிந்த ஒரு பெண்மணி அந்த வழியாகப் போவதை அவர்கள் பார்க்கவில்லை. காமாட்சி அம்மாள் மட்டும் அவளை நிறுத்தி, "ஏண்டி பெண்ணே! இந்த ஊரில் இராத் தங்க இடம் கிடைக்குமா?" என்று கேட்டாள்.

அவள் குரல் ஒலித்ததும் மற்ற மூவரும் திரும்பிப் பார்த்தனர்.

அந்தப் பெண் மிகவும் அழகான யௌவன மங்கை என்பதை முதல் பார்வையிலேயே கண்டாள் கமலா. அடக்கமான ஆனால் நாகரிகமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்து தொங்கிய 'ஹாண்ட் பாக்' மடித்து வைத்திருந்த சிறு குடை, நீரோட்டம் போன்று நெளிநெளியான பட்டைக் கோடுகளை உடைய மெல்லிய ஆறு கெஜ சேலை. சிறிதளவு குதிகாலை உயுர்த்திக் காட்டிய ஸாண்டல்ஸ். இடது கரத்தில் கைக்கடிகாரம். வலக் கரத்தில் ஒரே ஒரு தங்க வளையல். கழுத்தில் டாலருடன் ஒற்றை வடச் சங்கிலி. காதில் நவீன மோஸ்தர் தோடு, பின்னிப் பிச்சோடா போட்ட கேசம். காதருகே சுருண்டு தொங்கிய மயிரிழைகள், பவுடர் பூசிப் பளிச்சென்ற முகம், நெற்றித் திலகம், மைதீட்டிய விழிகள், எடுப்பும் எழிலும் மிக்க தோற்றம் எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்ட கமலா, தன்னுடைய பயணக் களைப்பு மிக்க கசங்கிய கோலத்தையும் கர்நாடக பாணியையும் கூடவே எண்ணிப் பொருமினாள்.

'இவள் ஏதோ உத்தியோகத்தில் இருக்கிறாள்' என்பது உடனே புரிந்து போயிற்று கமலாவுக்கு. கரத்தில் அவள் மடித்துப் போட்டிருந்த கறுப்புக் கோட்டு அவளை ஒரு வக்கீல் என்று காட்டிக் கொடுத்து விட்டது.

'அடேயப்பா! இந்த முகம்தான் எத்தனை களையானது! இந்த விழிகள்தாம் எவ்வளவு வசீகரமானவை! இவள் வழக்காடவே வேண்டாம். கோர்ட்டுக்குள் வந்து நின்று கண்களைச் சுழற்றி நாலு புறமும் ஒரு பார்வை பார்த்தால் போதும். கேஸ் ஜெயம்தான்!" என்று எண்ணினாள் கமலா.

'ஆனால் அப்படிப்பட்ட வெற்றியை விரும்புகிறவளாகவும் இவள் தோன்றவில்லை. அறிவுக் களையும் இந்த முகத்தில் விகசிக்கிறது. இந்தக் கண்களின் பிரகாசமும் ஒளிரும் நெற்றியும் தேர்ந்த ஞானத்தின் விளைவுகள்.'

இவ்வாறு முடிவு கட்டிய கணத்தில் தான் எப்படியெல்லாம் சுதந்திரமாக இருக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டும் என்று விரும்பினாளோ அப்படியெல்லாமும் அதற்கு மேலும் தன் எதிரே நிற்கும் இந்தப் பெண் விளங்குகிறாள் என்று கமலாவுக்கு நிதர்சன மாகப் புரிந்தது. அதனால் மகிழ்ச்சியும் பொறாமையும் ஒரே சமயத்தில் தன் நெஞ்சை நிரப்புவதை அவள் உணர்ந்தாள். அந்தப் பெண்ணுடன் இன்னும் நெருங்கிப் பழகி, நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. கூடவே, 'இவளுடன் என்ன பேச்சு' என்று மனம் வினவியது.

"அம்மா, என் பெயர், 'ஏண்டி பெண்ணே'யில்லை. பவானி. இந்த ஊரில் இராத் தங்க இடம் வேண்டுமென்றால் ஹோம்ரூல் கோபால கிருஷ்ணன் வீட்டுக்குப் போங்கள்" என்றாள் அந்தப் பெண்.

"ரொம்பப் பரோபகாரியோ?"

"அவர் பராபகாரியோ என்னமோ, அவர் மகன் கல்யாணசுந்தரம் ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்லவர். பிறருக்கு உதவவென்றே பிறந்தவர். நிச்சயம் உங்களுக்கு இடம் தேடிக் கொடுப்பார்" என்ற பவானி கமலாவைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.

அந்தப் புன்னகை நட்பின் அறிகுறியாகவும் தோன்றியது. ஏளனமாகவும் பட்டது கமலாவுக்கு. (தொடரும்)