நாள்தோறும்

பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த,

பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க,

காப்பி தந்து, காய் நறுக்கி, காலையில் சுட்டடுக்கத்

தோசைக்கு அரைத்து, முகம் கழுவி, வாசலில்

விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து,

சமைத்து, பரிமாறி, தரை துடைத்து,

பாத்திரம் ஒழித்துப் போட்டு,

பசங்களைப் படுக்கையில் விட்டு,

மேயப் பாக்கி இல்லாப் பேப்பரோடு

காத்திருக்கும் கணவன் கண்காட்ட

வரேன் என்று தலையசைத்து இருட்டில்

மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில்

வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து,

வாசல் கதவடைத்து, கூடத்து விளக்கணைத்து

வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்

வானம் பார்த்தாள். பெய் என்றாள்.

(முன்றில்)