ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மகன் தேடும் தந்தைக்குச் சான்றோர் அருளிச் செய்தது
சிற்றில் அழைப்புமணி ஒலித்துக்
கேட்கிறாய் 'என் மகன் எங்கே?'
தெரியலை எனினும் கேள்.
இறுகக் கட்டி இலக்கியம் படி. இல்லை
சிசுமூத்திரம் நனைத்த புத்தகம் உலர்த்து.
மார்க்கெட் உள்ள கோயிலாய்ப் பார்த்து
மனைவியோடு போவதும் மற்றும்
காராபூந்தி கொறித்தபடிக்குக்
கேசட் வேதம் கேட்பதும் உத்தமம்.
மந்திர வித்தை புராண நாடகம்
வயிறு வலித்துச் சிரித்து மகிழ
சமூக நாடகம் சபாக் கழிவறையில்
தண்ணீர் இல்லை நினைவில் கொள்வாய்.
சாண எரிவாயு செலவு குறைக்கும்.
மாடு பிடிக்க வங்கிகள் வழங்கும்.
வாரபலனில் வாகன யோகமா?
ஓசி எல்மெட் அக்குளில் இடுக்கு.
எண்ணெய் குளித்தால் பகலில் உறங்கணும்.
பகலில் உறங்கினால் ராத்திரி முழிப்பாய்.
ராத்திரி முழித்தால் அப்புறம் ஒருநாள்
இன்னொரு வாரிசும் தேடலாம் சேர்த்து.

