சூழல்
என்மேல் எச்சமிட்டுப் போன
பறவைக்கு
நீலச் சிறகுகள்.
தொழிற்சாலைப் புகை சேராத
சுத்த வானிலும்
பறவைகள் இருந்தன.
கொடிக் கம்பத்தில்
அலகு தேய்க்கும் ஒன்று.
நாயர் கடையின் தகர அடைப்பைத்
தட்டிப் பார்க்கும் வேறொன்று.
பட்டுப் போன தொட்டிச் செடிகளில்,
சைக்கிள் ஸ்டாண்ட் விநாயகர் தோளில்,
கண்ணாடி உடைந்த ஆபீஸ் ஜன்னலில்,
எங்கும் பறவைகள்.
சங்கக் கட்டிடக் கூரையில் சிலவோ
தலைவர் போல நடைகள் பழகும்.
உச்சி வெய்யிலில் ஊர்வலம் வந்து
வெட்ட வௌியில் வியர்த்து நின்று
இன்னும் கொஞ்சம் உரைகள் கேட்டு
அடைத்த கதவைப் பார்த்துப் போகிறார்.
வெய்யில் தாழப் பறவைக் கூட்டமும்
விண்ணில் ஏறி மறைந்து போகும்.
இரைச்சலும் புகையும் இல்லா இடங்களில்
பறவைகள் இனியும் திரும்பி வரும்.
(கணையாழி)

