விடியல்

தூக்குச் சட்டிகள் மூலையில் வைத்து

விளக்கு நிழலில் கோடுகிழித்துச்

சிறுமிகள் விளையாடினார்கள்.

வர்ண முகங்கள் சிரிக்கும் சுவரில்

பழைய பந்தெறிந்து

சிறுவரும் ஆடினர்.

சுவர்க் கோழிகள் சேர்ந்து ஒலிக்க

உறங்கிக் கிடந்த உறவின ரெல்லாம்

காலைப் பனிகருதிப் போர்த்திக் கொண்டனர்.

தெறித்து விழுந்த பந்துகள் விலக்கிக்

கண்கள் மூடித் தாண்டிய சிறுமி

கோட்டை மிதிக்க வண்டி வந்தது.

சில்லுகள் துணியில் முடித்துத்

தூக்குச் சட்டிகள் கையில் சுமந்து

ஏறிக் கொண்டார்கள்.

ஒரு சின்னக் கனவில்

கைகால் முளைத்த தீப்பெட்டிகள்

தலையில் கந்தகம் தடவச்

சிலிர்த்த சிறுவன் அழத் தொடங்குமுன்

நகரம் வந்தது.

(கணையாழி)