வௌி

சைக்கிள் படிக்கும் சிறுவன் தவிர

மைதானத்தில் யாரையும் காணோம்.

தூங்கும் மரத்தின் வெள்ளைப் பூக்கள்

சிதறிய தரையில் முள்ளால் எழுதிய

பெயர்கள் மற்றும் உருளைக் கற்கள்.

கிடந்த வாக்கில் சக்கரம் சுழலச்

செங்குத் தாகவோர் வெறுமை நின்றது.

குதிரைகள் வந்தன. முதலில் ஒன்று

வெறுமை தகர்த்து வெட்ட வௌியில்

சாம்பல் பூசி மெல்ல நடந்தது.

அழியும் முன்னர் மற்றொன் றாங்கே

மேலும் அந்நிறம் பூசிச் சென்றது.

செம்மண் பரப்பில் நீளநட்ட

சாம்பல் தளத்தின் எல்லைகள் விரிய,

இன்னும் வந்த குதிரைகள் எல்லாம்

வேகம் கொண்டு வௌியை நிறைத்தன.

சாம்பல் பூசிய காற்றும் அதிர,

அடிப்படைப் பரப்பும் காலில் மறைய,

புதிய தளத்தில் இயக்கம் மிகுந்தது.

ஒதுங்க நினைத்தேன். ஓடலானேன்.

முதுகில் விசிறும் ஈர வால்களும்

முகத்தில் எழுத முற்படும் கால்களும்

தவிர்த்து விரையப் பரப்பு நீண்டது.

சைக்கிள் சிறுவன் போய்விட் டிருந்தான்.

வியர்வைத் துளிகளில் சாம்பல் உதிரத்

திரும்ப நோக்கினேன். இருட்டு மழையில்

தொலைப்புலம் எல்லாம் மசங்கித் தெரிய

வண்டுகள் ஒலிக்கும் நிசப்தம் கிழித்து.

(கணையாழி)