Chapter 401

தலையலங் கானத்துச் செருவில் பொருத

நடந்த படையில் ஒருத்தன் வழியில்

வயிற்றுப் போக்கால் இறந்து பட்டான்.

விழுப்புண் இன்றித் துஞ்சிய சங்கதி

வெண்புறாக் காலில் விரைந்து பறந்தது.

குப்பைக் கோழிகள் மேயும் முன்றிலில்

அரவம் கேட்டு வௌியே வந்தவள்

ஈன்று அளித்த கடமை முடித்தவள்.

யவனக் கப்பலில் முத்தும் மிளகும்

ஏற்றி ஏற்றிக் களைத்துத் திரும்பித்

தகப்பன் உள்ளே உறங்கிக் கிடந்தான்.

ஆறுதல் சொல்லிக் கூட்டம் கலைந்தது.

அழுது முடித்துப் பெற்றவள் ஓய்ந்தாள்.

பார்ப்பார் போயினர் அரிசி பெற்று.

பல்கிப் பெருகின குப்பைக் கோழிகள்.

அரபிக் கப்பலில் குதிரை வந்ததால்

அடுத்த போருக்கு ஆள்சேர்த் தார்கள்.

('ழ' இலக்கிய இதழ்)