படம்

நிறைய உடுத்திக் கொண்டு

கல்யாணக் களைப்போடு

பத்துப் பேர். யார் மடியிலோ

அப்பா அழத் தொடங்கி.

வெள்ளை யடிக்கக் கழற்றிக்

கையில் வைத்துப் பார்த்தபோது

ஞாபகம் இல்லையாம் எதற்கென்று.

எடுத்துக் கொடுத்த ராமாச்சாரி

ஞானக் கிறுக்காய்த்

துணி துறந்து திரிந்ததும்,

அவன் வண்டியில்

கட்டிலும் சருவமும்

அக்காள் திரட்சிக்குச்

சீர் ஏற்றிப் போனதும்,

தள்ளி வைத்தபோது

அழைத்து வந்து

படைக்கும் வெய்யிலில்

இறங்கிய தளர்ச்சியும்,

முறைக் காய்ச்சலில்

அடங்கியவளுக்கு

மருந்து வாங்கித்

தெருமுனையில் வரும்போதே

குரல் எழுந்த சோகங்களும்

வெற்று மார்போடும்

வெறித்த கண்களோடும்

கொண்டு வைக்க வேண்டிக்

கூட்டமாய்ப் போனதும்

நினைவிருக்காம்.

யார் மடியில் அன்றைக்கு - எதற்கு?

இங்கே பக்கத்தில்

கண்கலங்கும் கிழவருக்கு

நினைவில்லையாம் அது ஒன்றும்.

(கணையாழி)