ஜன்னல்

இருட்டை விதைத்திருக்கிறது.

கருப்புத் திரவமாய்

நிரம்பி வழிந்து

கம்பிகளைப் பற்றிய விரல்களையும்

அரிக்க ஊறும் இருட்டு.

கதவுகளை மூடிவை.

நேற்றுப் பார்த்த சூரியன்

இறந்து போயிருக்கலாம்.

காற்றைக் கூட

வண்ணச் சிறகுகளோடு பார்த்திருந்த

கனவுகள் கலைந்து போக,

சாவோலம் கேட்டுத் தூக்கம் கலைந்த

ராத்திரிகள் திரும்பாதிருக்கக்

கதவுகளை மூடிவை.

ஒப்பாரியிலும் ஒற்றுமைப் படாத

நாய்கள்

வாசல் நனைக்க வேண்டாம்.

சபிக்கும் ராப்பறவைகளின்

வசவுகள் கேட்காது

அறைந்து சாத்து.

மூச்சு முட்டட்டும்.

முட்டிமோதி இழைபிரிந்து

வௌியேறும் வரை

மூடியே இருக்கட்டும்.

கதவுகளை மூடு.

இல்லை, வௌியில் நின்று

எக்கி வேடிக்கை பார்க்காது

விலகிப் போ.

(கணையாழி)