சமாதியிலிருந்து கோயில் வரைக்கும்

கோவணச் சாமியார் கிழட்டுத் தளபதி,

பாளையக் காரன் தடவி அலுத்த

பழைய வைப்பாட்டி, வைப்பாட்டி வளர்த்த

சினைப்பசு, கிளிக்குஞ்சு, திண்ணைமாமா -

உள்ளே யாரோ ஊர் மறந்தாச்சு.

கோடையில் ஒருநாள் தரிசுக ளூடே

மேற்கி லிருந்து நடந்து வந்த

ஒருத்தன் சொன்னதால் வெள்ளை யடித்துக்

கோயில் புதுக்கினர் கிராமம் செழிக்க.

சாலியா புரத்துச் சந்தைக் கடையில்

ஆடும் மாடும் அரையில் ரோகமும்

மலிவாய் வாங்கி விளம்பர வைத்தியன்

மருந்து விழுங்கும் பெரிய்ய பண்ணை

செய்து வைத்தார் லிங்கப் பிரதிட்டை.

வாரிசு இல்லாக் குருக்களின் விதவை

எரவா ணத்தில் செருகி இருந்த

செல்லரித்த புத்தகம் படித்து

மந்திரம் சொன்ன கிழப் பூசாரி

பழகிக் கொண்டான் தீட்டுப் பார்க்க.

நூறு வருசம் பின்னால் நடந்தால்

சமாதி மூலம் தௌிவாய்த் தெரியலாம்.

பத்து வருடம் முன்னால் நகர்ந்தால்

கோயில் மகிமை புத்தகம் போடலாம்.

இப்பச் செய்ய என்ன இருக்கு?

சாலியா புரம் சந்தைக்குப் போகலாம்.

(கணையாழி)