Chapter 32
கோலவடிவு முடங்கிக் கிடந்தாள்.
அந்தப் பழைய காலத்துத் தேக்குக் கட்டிலில் புதிய கால சகுந்தலையாக குப்புறக் கிடந்தாள்... முகத்தைப் பக்கவாட்டில்
வைத்தால் எதையும் பார்க்க வேண்டியதிருக்கும் என்பதுபோல், நெற்றி, கட்டில் மேட்டில் படும்படி கிடந்தாள்... பச்சைக் கீரை போல் முதுகில் படர்ந்த அவள் முடி, அந்த ஆடிக்காற்றில் அவள் உணர்வுகளைப் போல் தனித்தனியாக அல்லாடியது. பிடரியிலும் தோளிலும் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தது. கண்களை மூடி அவற்றையும் கைகளால் மறைத்துச் செத்தவள் போல் கிடந்தாள்.
அவளை ஒரு பொருட்டாகக் கருதாமல் அலங்காரியும் துளசிங்கமும் போனபோது, தன்னை ஒரேடியடியாக விட்டு விட்டுப் போகிறார்களோ என்ற பயத்தில் அவர்கள் பின்னால் ஓடப்போனாள்.. பிறகு சொந்த ஊரில் பட்ட அசிங்கத்தை இந்த ஊர் தெருவிலும் பட வேண்டாம் என்று நினைத்து அந்த வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்தாள். திண்ணைப் படிக்கட்டில் உட்கார்ந்து முன் கைகளில் முகம் ஊன்றி, கைகள் வழியாக கண்ணீர் விட்டாள். அவளையே பகவதி பாட்டி பார்த்துக் கொண்டு நின்றாள். இமைகளுக்குள் சிறைப்பட்ட கண்கள் கொட்ட கொட்டப் பார்த்தாள். அந்த பார்வை தாளமாட்டாது கோலவடிவு புறக்கடைக்குப் போனாள். அங்கே நின்ற முருங்கை மரத்தில் சாய்ந்தாள்... ரயில் பெட்டிகள் மாதிரியான கம்பளிப் பூச்சிகள் அவள் உடம்பில் ஊர்ந்தன..... அவளுக்கு உணர்வேதும் இல்லை.... முகத்தை மரத்திலே இடித்து இடித்து நெற்றிப் பொட்டில் தனக்குத்தானே குங்குமம் வைத்துக் கொண்டாள். உடம்புக்குள் நெருப்புப் பற்றி எரிந்தது. முதுகுப் பகுதி அனலாய்க் கொதித்தது. இருதயம் சுடலைமாடன் கோயில் மேளம் போல் அடித்துக் கொண்டது. கண்கள் நெருப்பாய் எரிந்தன. காதுக்குள் பயங்கர இரைச்சல்.... கண்ணைத் திறக்க முடியவில்லை. தலையைச் சுமக்க முடியவில்லை.
நெஞ்சுக்குள் நினைக்க முடியவில்லை... வாயைத் திறக்காமல் மூச்சுவிட முடியவில்லை... இந்த உலகில் தானாய்ப் பிறந்து தானாய் வளர்ந்து தான் தோன்றியாய் போனது போன்ற பீதி.... துளசிங்கம் கோரப் பற்களோடு சிரிப்பது போன்ற பிரமை. அலங்காரி, மனிதத் தலைகளை கழுத்திலும் இடுப்பிலும் தொங்கப் போட்ட நீலியாய் நிற்பது போன்ற கற்பனை.
கோலவடிவு தன்பாட்டுக்குப் பேசிக்கொண்டாள். தனது பேச்சை, தானே காதில் வாங்காததுபோல் அந்த அறைக்குள் சுற்றிச் சுற்றி வந்து பேசிக் கொண்டாள். “மாட்டிக்கிட்டேனே.... வசமா மாட்டிக்கிட்டேனே... அலங்காரி என்னை ஏமாத்திட்டாளே. என் தங்கச்சி இந்த கோலவடிவு மாதிரியான்'னு சொல்லிட்டாரே.... சொல்லிட்டாரே.... எனக்கு வேணுந்தான்... இன்னும் வேணுந்தான்..."
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ஒருத்தியை அவள் போக்கிலே விடவேண்டும் என்று தெரிந்திருந்த பகவதி பாட்டி, சும்மாவே இருந்தாள். மஞ்சள் வெயில் மங்கலாக அடித்தபோது, பாட்டி தட்டுத் தடுமாறி ஒரு தட்டோடு பெரிய வீட்டுக்குள் வந்தாள். கைகளால் தடவித் தடவிக் கட்டிலுக்கு வந்தாள்.... தட்டைத் தரையில் வைத்து விட்டு முடங்கிக் கிடந்தவளை தூக்கப் போனாள்.... முடியவில்லை .... கோலவடிவின் உடம்பைத் தடவித் தடவிக் கைகளை முகத்தருகே கொண்டுபோய் தலையை வருடிவிட்டாள்... 'அம்மா' என்று கன்றுக்குட்டி கத்துவதுபோல் கோலவடிவு வீறிட்டு எழுந்தாள். அந்த பாட்டியை அம்மாவாக அனுமானித்து அப்படியே கட்டிக் கொண்டாள். அவள் அம்மா அல்ல என்று உணர்ந்ததும் பாட்டியை விட்டாள். ஆனால் பாட்டியோ அவளை விடவில்லை. பட்டரைச் சட்டம் போன்ற அந்த இளம் உடம்பைத் தன் பூஞ்சை உடம்பில் போட்டுத் தாங்கிக் கொண்டாள். அந்த அனுசரணையில் கோலவடிவு விம்மி வெடித்தாள்... ஏதோ ஒரு சத்தம் வந்ததே தவிர, அது அழுகையா கூக்குரலா அல்லது அவலமா என்று அடையாளம் காண முடியவில்லை. பாட்டி தனக்குப் பாதியாகவும், கோலவடிவுக்குப் பாதியாகவும் சேர்த்து அழுதபடியே சொன்னாள்.
"மோசம் போயிட்டியேம்மா.... மோசம் போயிட்டியே... நாடு நகரமெல்லாம் வழக்காளின்னு பேரு வாங்குன மவராசனுக்கு மவளா பிறந்துட்டு, இப்படி பண்ணிட்டியே. அவள் அலங்காரி, பெத்த மவளேயே கூட்டிக் கொடுக்கப்போனவள். இவன் துளசிங்கம் - என் போன், பொண்ணுவள ஆடுமாடா நினைக்கவன்."
பாட்டி பேச்சை நிறுத்திவிட்டு கோலவடிவின் மோவாயை நிமிர்த்தினாள்.
"ஏதாவது சாப்புடும்மா... உடம்பு தாங்காதும்மா... இஷ்டம் இருக்கோ இல்லியோ எப்படியும் உயிர் போவது வரைக்கும் வாழ்ந்துதானே ஆகணும்...? இந்த ஒடம்ப வச்சுதான ஆகணும்...? ஒன் நிலம் தெரிஞ்சே சாதத்தை குழைய சமைச்சேன்... இந்தாம்மா சாப்புடு கொஞ்சம்... கொழஞ்ச சோறுதான்..."
பாட்டி, தாலாத் தட்டைத் தேடிக் கண்டுபிடித்து, ஒரு கவளத்தை எடுத்துக் கோலவடிவின் வாயருகே கொண்டு போனாள். அவளோ பாட்டி கையைப் பிடித்துக் கொண்டாள்.
“எனக்கு நஞ்சு இருந்தா கொடு பாட்டி.... நஞ்சு இருந்தா கொடு.. இனிமே நான் வாழப்படாது...”
"எத்தனையோ பொம்புளயளுக்கு யோசன சொன்னவள் நான். ஒனக்கு என்ன சொல்லன்னே தெரியலியே... வேணுமுன்னால் ஒங்க அய்யாவோட சித்தி மவன் வீடு பக்கத்து வீடு , அங்க கொண்டு ஒன்ன விடட்டுமா?"
"நான் ஒனக்குப் பாரமா போயிட்டனா பாட்டி...."
"அப்டி சொல்லாதடி என் செல்லக்குட்டி, இந்த துளசிங்கம் பய பிறந்தது இதே வீட்லதான். ஒன்னை இப்பிடி பண்ணாத கோலமுல்லாம் பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா அவன் பிறந்த உடனேயே வாய்க்குள்ள நெல்ல போட்டு கொன்னுருப்பேன்."
"இப்போ என்னையாவது கொல்லு பாட்டி.... நான் உலகத்துல இருக்கப்படாது....."
"ஏன் இருக்கப்படாது....? அலங்காரி மாதிரி பொம்புளயளே இருக்கும்போது, நீ ஏன் இருக்கப்படாது.... இப்ப எதுவுமே நடந்துடல.... எழுந்திரு.... ஒன்ன நானே பழனிச்சாமிகிட்ட கொண்டு விடுறேன்.... அவன் என்ன சின்னம்மான்னு கூப்பிடும்போது அம்மான்னு இவன் கூப்புடப்படாதான்னு நினைச்சவள் நான்... அப்பேர்ப்பட்ட உத்தமன் அவன். நீயும் உத்தமி... பரசுராமன் அம்மா மாதிரி.... லேசா தடுமாறிட்ட அவ்வளவுதான்... எழுந்திரு... ஒன்னை வீட்டோட சேத்துடுறேன்... முகத்த துடைழா..."
"என் தலைவிதிப்படி நடக்கட்டும் பாட்டி... வந்ததே வந்துட்டேன்... நானாவது விசுவாசமா இருக்கேன்... அதோட எந்த முகத்தோட பாட்டி போவேன். எனக்கு முகமே இல்லாமச் போச்சே பாட்டி... இல்லாமப் போச்சே..."
கோலவடிவு, மீண்டும் கட்டிலில் முடங்கினாள். மல்லாந்து படுத்தாள். மஞ்சள் சூரியன் எட்டிப் பார்த்தது... அவளுக்கு இந்த வெளிச்சம் மட்டும் அல்ல, எந்த வெளிச்சமும் பிடிக்கவில்லை. கொடியில் தொங்கிய கம்பளியை எடுத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிக்கொண்டாள். உடம்பு முழுவதையும் தலையோடு சேர்த்து மறைத்துக் கொண்டாள்.... அவளுக்குத் தேவை வெளிச்சமல்ல. இருட்டு.... கும்மிருட்டு... மையிருட்டு.... எவரையும் பார்க்க முடியாத
எவரும் பார்க்காத இருட்டு....
பகவதி பாட்டிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. துளசிங்கத்தை உருட்டி மிரட்டி இவளை ஒப்படைக்க வேண்டிய முறையில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம்.
பாட்டி வெளியே வந்தாள்... அந்த அறைக் கதவைச் சாத்தினாள். திண்ணையில் தூணில் சாய்ந்தாள். வயதான உணர்வுகள்... சக்திக்கு மீறித் துடித்ததாலோ என்னவோ.... அவள் அப்படியே சாய்ந்தாள்..... எவ்வளவு நேரமோ... அந்த இருட்டு வீட்டுக்குள் நேரத்தை அளக்க முடியவில்லை. திடீரென்று சத்தம் கேட்டது. கரும்பட்டையான் தர்மராசா சத்தம்... சாமியாடி ரத்தினத்தின் குரல். எல்லாவற்றிற்கும் மேலாக
அலங்காரியின் சத்தம்.
"பெரியம்மா எழுந்திரு சாப்பிட்டியா... சாப்புடாமலே படுத்துட்டியா?
பகவதி பாட்டி முக்கி முனங்கி எழுந்தபோது, அலங்காரி எரியாமல் கிடந்த லாந்தர் விளக்கு சிம்னியைத் துடைத்தபடியே பேசினாள்.
"ஏன் பெரியம்மா வீட்ட இருட்டுல வச்சிருக்கே.... வெளிச்சம் மகாலட்சுமி... அவளை அணைய வைக்கப்படாது..."
"நீ இருக்கியே... பேச்சுல... வெளிச்சத்தையும், செய்கையில்.... இருட்டையும் வச்சிருக்கவளாச்சே..."
தர்மராசா, பாட்டிக்கு உபதேசித்தான். "பாட்டி யாரப் பேகனாலும் பேசு. எங்க அலங்காரி சித்திய மட்டும் அப்படிப் பேசாத .... ஆனானப்பட்ட கரும்பட்டையானையும் காத்துக்கருப்பனையும் ஒரே சமயத்துல தலகுனிய வச்சவள். கோலவடிவ திட்டம் போட்டே துளசிங்கத்துக்கிட்ட பிடிச்சுக் கொடுத்துக் கரும்பட்டையான் மானத்த கப்பலுல ஏத்துனவள். அடாவடித் திருமலப் பயலை இப்போ போலீஸ் ஸ்டேஷன்ல.... சுவர்ல.... கொக்கி போட்டு, அதுல... விலங்கும் கையுமாய் பூட்டி வச்சிருக்கு..... பழனிச்சாமிய... விசாரிக்க... ஊருக்கு போலீஸ் போயிருக்கு... பாக்கியம் படுத்த படுக்கையா கிடக்காள்... துளசிங்கம் செல்வாக்கில ஊரு முழுக்க போலீஸ் காவலு.... கரும்பட்டையானுவளுக்கும், காத்துக் கருப்பனுவளுக்கும் நல்ல அடி... இப்டி... நாங்க ஊருல தலை நிமிர்ந்து நிக்கறதுக்கு எங்க அலங்காரி சித்திதான் காரணம்."
"நான் என்னப்பா செய்தேன். எல்லாம் சுடலைமாடன் அருள். இப்போ அவங்க குடுமியே நம்ம கைக்குள்ள என்கிறது மாதிரி ஆயிட்டு."
"இந்த தள்ளாத வயசுல என்னத்தயெல்லாம் கேட்க வேண்டியதாயிப் போச்சு. மெள்ளப் பேசு பய மவளே.... பாவம் கோலவடிவு கேட்டா துடிச்சுப் போவாள்.."
"சும்மா கிட பாட்டி..."
"ஏய் அலங்காரி! தள்ளாத வயதுக்காரி நான். இருக்க முடியல... வந்த விஷயத்தை சட்டுப்புட்டுன்னு சொல்லிட்டுப் போங்க..."
"பின்ன ஒன் வீட்ல குலாவுறதுக்கா வந்தோம்...? என்ன பேச்சு பேசிட்டே... பெரியம்மா.... இந்த ரஞ்சிதம் பய மவள், ஒரு போலீஸ் அதிகாரிகிட்ட கோலவடிவைக் காணல்..... கடத்திட்டுப் போன துளசிங்கம் மட்டும் திரியுறான். அவள் எங்க இருக்கான்னு தெரியணு முன்னு ஒரு மனு எழுதி கொடுத்துட்டாளாம். போலீஸ் பாடு கொஞ்சம் திண்டாட்டம்... அவங்க நம்ம கோழியத்தான் சாப்புடுறாக..... ஆனாலும் கொஞ்சம் பயப்படுறானுவ. அதனால கோலவடிவ கூட்டிட்டுப் போயி சுடலமாடன் கோவிலுலயே துளசிங்கத்திற்குக் கட்டி வைக்கப் போறோம். தாலிகூட வாங்கியாச்சு..."
"எங்க சித்தி லேசுப்பட்டவள் இல்ல பாட்டி... பகையாளி மகள் கோலவடிவு... எங்க கோவிலுல துளசிங்கம் தாலிகட்ட, தலை குனிஞ்சு இருக்கும்போது, கரும்பட்டையான் கூட்டம் எப்படித் துடிப்பாங்கன்னு கண்ணால் பார்க்கப் போறோம்..."
"கோலவடிவு கழுத்துல தாலி ஏறுறது, பெரிய மனுஷன்னு தன்னை நினைச்சுட்டு இருக்கிற பழனிச்சாமிய... செருப்பால
அடிக்கறது மாதிரி. சரி.... சரி.... கோலவடிவக் கூப்பிடு பாட்டி..."
“உடமஸ்த்த ன எங்கேடா?"
"துளசிங்கத்தைக் கேட்கியா...? இந்த ஊருக்குள்ள போலீஸோட வராண்டாமுன்னு... இந்த வெட்டாம்பட்டி எல்லையில் போலீஸோட நிக்கான்..... கார் காத்து நிற்குது... கோலவடிவும் அவனும் கார்ல பருத்திக்காடு பக்கம் போவாங்க.... அங்க மேளதாளம் தயாராய் இருக்கும்... அப்புறம் கரும்பட்டையான் பயலுவ தூக்குப் போடும்படி மேளதாளத்தோட சுடலைமாடனை சந்திப்பாங்க... கோலத்த கூப்பிடு பாட்டி." |
"கூப்புடவும் மாட்டேன். அவள் அனுப்பவும் மாட்டேன் - துளசிங்கம் அவன் அய்யா.... பழனிச்சாமி வீட்ல இருந்து யாராவது ஒருத்தன்... எல்லாருமா இங்க வரணும். இந்த வீட்லயே தாலி கட்டணும். அது வரைக்கும் அவள் இங்கதான் இருப்பாள்."
"பெரியம்மா கிட்ட என்னடா பேச்சு.... நாம உள்ள போயி கோலவடிப் பார்த்து ஒரு சொடக்கு விட்டால் அவள் வந்துட்டுப் போறாள்."
அலங்காரி, பகவதி பாட்டியைப் பற்றி கவலைப்படாமல், மச்சான் மகன் தர்மராசாவுடனும், கொழுந்தன் ரத்தினத்துடனும் பெரிய வீட்டுக்குள் போனாள். லாந்தர் விளக்கைத் தூக்கிப் பிடித்துப் பார்த்தாள். கோலவடிவைக் காணோம். பின் கதவு திறந்திருந்தது. அதன் வழியாக கொல்லைப்புறம் போனால் அங்கேயும் காணோம்.
அந்த வீட்டின் கோட்டைச்சுவர் பக்கம் உள்ள பப்பாளி மரம் பாதி ஒடிந்து தொங்கிக் கொண்டிருந்தது.

