Chapter 27
அலங்காரி கீழே கிடந்தாள்....
அவள் வாயிலிருந்து பல்வேறு ஒலிகள் பீறிட்டன..... அந்தச் சத்தங்கள் ஓய்ந்து கொண்டே போய், இறுதியில் ஈன முனங்கலாய் முடிவு பெற்றன..... மல்லாக்கக் கிடந்தவள் ஒருச்சாய்த்து படுத்தபடியே "எய்யோ என் காலு போச்சே... எய்யோ என் காலு காலு” என்று கத்தியபடியே வலது காலை, வளைக்க முடியாமல் வளைத்து, இடது கைக்குள் திணித்தபடியே கத்தினாள் - அப்படியும் ஆத்திரம் அடங்காத திருமலை, அவள் இடுப்பைக் குறி வைத்து காலைத் தூக்கினான். உடனே அவள், "எய்யோ ... எய்யோ ..." என்று அங்குமிங்குமாய் புரண்டாள்.... இதற்குள், துளசிங்கத்தின் தங்கை புஷ்பம் ஒரு காலில் நின்ற திருமலையை, சித்தியை விட்டு அப்புறப்படுத்துவதற்காக, லேசாகத் தள்ளினாள்.... அவன் அப்படியே கீழே விழுந்ததில், அவன் முட்டிக்கை அலங்காரியின் வாயில் ஊன்றியது. இப்போது அலங்காரி, "அய்யோ என் பல்லுப் போச்சே" என்று அலறியபடியே ரத்தத்தைக் கொப்பளித்தாள். அவள் கழுத்தை ஆதாரமாக, பிடித்தபடியே எழுந்த திருமலை, அலங்காரியை விட்டு விட்டு, புஷ்பத்தின் கையைப் பிடித்து இழுத்தான். அவளோ, "எய்யோ ... எய்யோ ...” என்று கத்தியபடியே, அவன் இழுப்புக்கு எதிர் இழுப்பாய் இழுத்தாள் - ஒரு காலை, வேப்பமா வேரில், கொக்கிபோல் மாட்டிக் கொண்டே, கூப்பாடு போட்டாள்.... இதனால் அவளை ஒரு கையால் இழுக்க முடியாமல் போன திருமலை, இப்போது இரண்டு கைகளாலும் அவளைப் பிடித்திழுத்தான். கால் செத்தவள் போல் கிடந்த அவளை, தரதரவென்று இழுத்துக் கொண்டே வாயே தெறிக்கும்படி வைதான்.
"என் தங்கச்சிய ஒண்ணன் தேவடியா மவன்... இழுத்துட்டுப் போன பிறவு நான் மட்டும் எதுக்கு சும்மா இருக்கணும்...? நீ எப்படிக் கத்தினாலும் நான் விடப் போறதுல்ல... என்கூட வந்து இருழா..."
திருமலை, புஷ்பத்தை இழுத்துக்கொண்டே போனான்... கீழே கிடந்த அலங்காரி எழுந்திருக்க முயன்றும் முடியாமல், "அய்யய்யோ . அய்யய்யோ... இந்த அநியாயத்தைக் கேக்க ஆளில்லையா" என்று அந்த இழுவையை ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டிக் கத்தினாள்.... திடீரென்று புஷ்பத்தைப் பிடித்த திருமலையின் கை, துண்டித்து விழுந்ததுபோல், அவளிடம் இருந்து விடுபட்டு கீழே தொங்கியது. அவன் கன்னங்களில் மாறி மாறி அறை விழுந்தன...... அவன் தன்னைத் தாக்கிய தந்தையை அதிர்ச்சியோடு பார்த்த போது, இன்னும் ஆத்திரம் போகாத பழனிச்சாமி மகனின் பிடறியிலும் போட்டார். இதற்குள் இரண்டு பேர் அவரைப் பிடித்துக் கொண்டார்கள் - இன்னும் நான்கு பேர் திருமலையைப் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டிற்குள் போனார்கள்..... அவனை வீட்டுக்குள் போட்டு, கதவை அடைக்கும் சத்தம் கேட்டது.
அக்கம் பக்கத்தில் இருந்து ஆட்கள் ஓடி வந்தார்கள். தெற்குப் பக்கம் வைக்கப்படப்பு வேலையில் ஈடுபட்ட நான்கைந்து பேர், அருவி போல் கீழே குதித்து, ஆறுபோல் ஓடி வந்தார்கள். மாடு மேய்க்கப் போன சிறுவர்கள் மாடுகள் போல் பாய்ந்து வந்தார்கள். புளியந்தோப்பு பக்கம் போன பெண்கள், தோட்டம் தொறவுக்குப் போய் கொண்டிருந்த விவசாயத் கூலித் தொழிலாளர்கள், அப்படி இப்படியாய் கூட்டம் குவிந்தது. கால்மணி நேரத்தில் ஊரே அங்குக் கூடிற்று.... புதிதாக வந்தவர்கள் ஏற்கனவே வந்தவர்களிடம் என்ன விஷயம் என்று கண்களாலும், வாயாலும் கேட்டதுதான் மிச்சம். எவருக்கும் என்ன நடந்தது என்று சொல்லத் தெரியவில்லை... அப்படிச் சொல்லத் தெரிந்தவர்களுக்கு அந்த சொற்களில் தாங்கள் இரு பக்கத்தில் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பது தெரிந்துவிடாமல் இருக்க, வாய்களைப் பூட்டிக் கொண்டார்கள்.
புஷ்பம் உடைந்த வளையல்களை, ஒவ்வொன்றாய் எடுத்துப் போட்டபடியே விம்மினாள். அவள் முன்னங்கைகள் ரத்தச் சிவப்பாய் தோன்றின. ஜாக்கெட்டில் ஒரு கைப்பகுதி இரண்டாகத் தொங்கி,
அவள் தோள்பட்டையைத் தனியாகக் காட்டியது.
பழனிச்சாமி, புஷ்பத்தின் அழுகைச் சத்தம் கேட்டுத் திரும்பினார். அவளை நோக்கி நடந்து, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார். கழுத்தில் கயிறுபோல் முறுக்கிக் கிடந்த அவள் முந்தானையை எதேச்சையாய் விசாலப்படுத்தி, வெறுமனே கிடந்த தோள்பகுதியை மூடியபடியே, அவள் தலையைத் தடவிக் கொடுத்தார். இன்னும் எழுந்திருக்காத அலங்காரியோ, “ஏழா... தோள்ல கிடந்த முந்தானைய தூரத் தூக்குழா... என்ன நடந்ததுன்னு எல்லோருக்கும் தெரியட்டும்" என்று கத்தினான்... பிறகு தானே அந்தத் துணியை அவள் தோளில் இருந்து எடுக்கப் போவதுபோல் எழுந்தாள்.
இதற்குள் எங்கிருந்தோ ஓடிவந்த பேச்சியம்மா , கீழே குனிந்து, இரண்டு கை நிறைய மண்ணயள்ளியபடியே, எழுந்தாள். அலங்காரியின் தலைக்கு மேல், தன் கையைத் தூக்கி, அதை வெறுங்கையாக்கினாள்... அலங்காரியின் தலையில் மண்ணும், மண் கட்டிகளும் சரளமாக விழுந்தன. அலங்காரி, பேச்சியம்மாளின் கையைத் தட்டி விடாமலே ஒப்பாரியிட்டாள்.
"என் தலையில் விழுந்த ஒவ்வொரு மண்ணுக்கும் நீ பதில் சொல்லித் தீரணுண்டி.... மண்ணாந்த..."
"தன்னை மெச்சிக்கிடாம் தவுடுக் கொளுக்கட்டை... சாபமா போடுற... சண்டாள்.... முண்ட... வீட்டுக்கு வெளில தெரியாம இருந்த என் மச்சான் மவள மயக்கிப் பிட்டியளா பாவி... நீ விளங்குவியாழா பாவி... ஏழா... சந்திரா... நீயும் ரெண்டு கையி மண்ண அள்ளி இந்த மூளியலங்காரி மூதேவி சண்டாளி தலையில் தட்டுழா..."
சந்திரா, கீழே குனிந்து மண்ணை அள்ளாமல், மேலே நிமிர்ந்து அம்மா மேல் அப்பிக் கொண்டாள்.... தாயின் கையில் இருந்த மண்ணை தரையில் கொட்ட வைத்தாள்... இதற்குள் காளியம்மன் கோயில் பக்கமாய் படுத்துக் கிடந்த மேளக்காரர்களும், வில்லுப் பாட்டாளிகளும் ஓடி வந்தார்கள்... ஒரே கூட்டம். எல்லோரும் ஒரே சமயத்தில் பேசியதால் சந்தை சத்தமாகக் கேட்டது.
இதற்குள் சுடலைமாடன் கோவிலும் விழித்துக் கொண்டது. கோவிலுக்கு முன்னால், தென்னந்தட்டி விரிப்புகளில் தூங்கிக் கொண்டிருந்த செம்பட்டையான்களும் லைலாவையும், அவள் காதலர்களையும் கொண்டு வந்தவர்களும் எழுந்தார்கள். ஆரம்பத்தில் கரும்பட்டையான்களும் ஏதா தங்களுக்குள் விவகாரம் நடத்துவ-தாகத்தான், செம்பட்டையான்கள் நினைத்தார்கள். ஆனால், பேச்சியம்மா , அலங்காரி மேல் மண்ணைப் போட்ட போது, செம்பட்டையான்கள் உஷாரானார்கள். போதாக் குறைக்கு, அலங்காரி, செம்மண் கோலத்தோடு, வாயிலும் வயிற்றிலும் அடிப்பதை நன்றாக கேட்க முடியவில்லையானாலும், பார்க்க முடிந்தது.... செம்பட்டையான்களுக்கும், ஆக்ரோஷம் ஏற்பட்டது. அந்தக் கோவிலில் இருந்து, கரும்பட்டையான்களை நோக்கி ஓடி வந்தார்கள்... பாதி வழி வந்த பிறகுதான், துரோணர் மாதிரி ஆயுத மேந்தாமல் போவது தெரிந்தது. உடனே கோவிலுக்குள் இருக்கும் சூலாயுதம், வேலாயுதம் ஆகியவற்றை எடுப்பதற்காக அவர்கள் திரும்பியபோது, கரும்பட்டையான்கள் வீசிய கற்கள் அவர்களின் முன் பக்கமும், பின்பக்கமும் விழுந்தன.
அவ்வளவுதான்... கற்காலம் துவங்கிற்று....
இருபக்கங்களில் இருந்தும், கற்கள் ஏவுகணைகளாயின.... சின்னச் சின்னக் கற்கள் வேகவேகமாகவும், பெரிய பெரிய கற்கள் பயங்கர பயங்கரமாகவும் விழுந்தன... அலங்காரியை நோக்கி கல் வந்தபோது, அவள் "அய்யோ.... போனனே" என்று அங்குமிங்குமாய் ஓடினாள். சில கற்கள் மரங்களில் பட்டு பின்வாங்கின. பல கற்கள் மரங்கள் வழியாக முன்வாங்கின. இருபக்கமும் மேலோங்கிய கற்கள், வில் வளைவாய் வளைந்து கீழோங்கின... " வேண்டாம்பா.... வேண்டாம்பா..." என்ற ஊர்ச்சத்தங்கள்.... "எறில... வேகமா எறில்" என்ற ஊக்குவிப்புச் சத்தங்கள்..... சம்பந்தமில்லாதவர்கள் அங்குமிங்குமாய் ஓடிப்போய் மரங்களின் பின்னாலும், சுவர்களின் பின்னாலும் பதுங்கிக் கொண்டார்கள். சம்பந்தப்பட்டவர்களோ, சடுகுடு ஆடுவதுபோல் முன்னாலும் பின்னாலும் நகர்ந்து எதிரிகள் குறிபோடும் கற்களுக்கு அப்பால் நகர்ந்து நகர்ந்து கற்களை எடுத்து வீசினார்கள். சில சின்னப் பயல்களும், கல்வீச்சில் கலந்து கொண்டார்கள். பெண்கள் தத்தம் ஆட்களுக்கு கற்களை எடுத்துக் கொடுத்தார்கள்... அலங்காரி, ஓடிப்போய், ஒரு சுவரின் பக்கம் நின்று கொண்டாள்.
கரும்பட்டையான்களான நாட்டு வக்கீல், மாயாண்டி, ராமசுப்பு, அருணாசலம் முதலியோர் கைவீசுவது போல் கல் வீசினார்கள்... செம்பட்டையான்களான தர்மராசா, தனராசா, ஐவராசா முதலியோர் செம்பட்டையான்களுக்கு தலைமை வகித்தார்கள். அதாவது கல்லெறியும் சொக்காரர்களுக்கு பின்னால் நின்றபடியே, விடாதே.... பிடி" என்று ஊளையிட்டார்கள். "எறிங்கடா.... எறிங்கடா" என்று எரிந்து விழுந்து பேசினார்கள்.
விச்விச் என்ற கல்லெறிச் சத்தம்.... ஏய்... ஏய்' என்ற எக்காளச் சத்தம்... 'எம்மோ எய்யோ' என்ற பெண்களின் ஒப்பாரிச் சத்தம்... தத்தம் பெண்டு பிள்ளைகள் கல்லெறியில் மாட்டிவிடக் கூடாதே என்று அவர்களை இழுத்துப் பிடிக்க அங்குமிங்குமாக ஒடும் பெரியவர்களின் காலடிச் சத்தம்... இருதரப்பிலும் கல்லெறியில் விழுந்து கொண்டிருந்தவர்களின் அவலச் சத்தம்.... எங்கெல்லாமோ ஓடிக் கொண்டிருந்த நாய்களின் ஊளைச் சத்தம்... அங்குமிங்கும் அலைந்த பூனைகளின் மியாவ் மியாவ் சத்தம்... எங்குமே ஓட முடியாமல் தவித்த கட்டிப்போட்ட ஆடுகளின் மே... மே' சத்தம்... இங்கே நாட்டு வக்கீல்
குப்புற விழுந்தான். அங்கே காஞ்சான் மல்லாந்து கிடந்தார். விழுந்தவர்களைச் சுற்றி எம்மாடி... எம்மாடி' என்ற அவசரச் சத்தம்.
இறுதியில் ஆட்கள் அற்றுப்போய், கற்கள் சுயமாக எழுந்து ஒன்றுடன் ஒன்று மோதுவது போன்ற நிலைமை. கல்லெறிக்காரர்கள் குழிகளில் பதுங்கி, சுவர்களில் மறைந்து, மரங்களில் சாய்ந்து கற்களை மட்டுமே வீசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கல், பித்துப் பிடித்துப் போய் நின்ற பழனிச்சாமியின் தலைக்கு மேல் ஒரு அங்குல இடைவெளியில் பறந்தது. இன்னொரு கல், சொக்காரன்களை சமாதானப்படுத்திய எலி டாக்டர் முதுகைப் பிய்த்து அவரை வீழ்த்தியது. காத்துக் கருப்பன்களில் முக்கால்வாசிப் பேர் கரும் பட்டையான்களுக்கு கைகொடுப்பது போல் கல் தொடுத்தார்கள்.
இதற்குள் ஊர் கூட்டம் கும்பலாகியது. கல்லெறிந்த கரும்பட்டையான் செம்பட்டையான் கைகளை வளைத்துப் பிடித்து, கற்களைக் கீழே போடச் செய்தது. இன்னும் கல் வீசிக் கொண்டிருந்த செம்பட்டையான்களை நோக்கி படையெடுத்தது. பிடிங்கடா... தேவடியா மவனுவள்' என்று சொன்னபடியே அவர்களை நோக்கி ஓடியது.
கீழே கிடந்தபடியே இந்த விபரீதத்தைக் கண்ட எலி டாக்டர், பாம்புபோல் சுருட்டி வைத்த உடம்பை நெடுஞ்சாண் கிடையில் நீட்டி, ஓடிவந்த கூட்டத்திற்கு முன்னால் படுத்தார். இரு கைகளையும் தலைக்கு செங்குத்தாய் நீட்டி கும்பிட்டார். இதுதான் சாக்கு என்று, அக்கினி ராசா குடும்பத்தைப் பிடிக்காத அதே காத்துக்கருப்பன் வகையறாக்களில் சிலர், முன்னால் ஓடியவர்களைப் பின்னால் பிடித்து இழுத்தார்கள்.
எப்படியோ கல்லெறி ஓய்ந்தது. ஆங்காங்கே விழுந்து கிடந்தவர்களை அவர்களின் பங்காளிகள் சுடலை கோவிலுக்குள்ளும், பழனிச்சாமி வீட்டுக்குள்ளும் தூக்கிப் போனார்கள். எஞ்சியவர்கள்,
இப்போது சொல்லெறியில் ஈடுபட்டார்கள்.
"ஒங்க பொண்ணு கிடக்க முடியாமல் போனால், நாங்க என்னல பண்ணுவோம்..."
"நாங்களும் ஒங்க பொண்ணுல ஒருத்தியக்கூட விட்டு வைக்கப் போறதில்ல..."
"நீங்க இங்க வந்து பேசுங்க பார்க்கோம்.." "நீங்க ஆம்புளைன்னா இங்க வாங்கல..."
"நாங்க ஆம்புளதான்.... இல்லாட்டா ஒங்க குடும்பத்து பெண்ண எங்க குடும்பத்து பய கூட்டிட்டுப் போவானா...”
"தேவடியா மவனை..... சில்லி சில்லியாய் வெட்டுறோம் பாரு..."
இந்த அமளியில் ஊர்க்காரர்கள் அனைவரும், கூட்டங் கூட்டமாய் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, பழனிச்சாமி வீட்டையும், மௌனமாகப் பார்த்தார்கள்.... கோலவடிவா... பழனிச்சாமி மகள் கோலவடிவா இப்டிப் பண்ணிட்டாள்? இந்தத் திருமல, புஷ்பத்த என்ன பண்ணுனானாம். ஏதோ பண்ணிபுட்டானாம்... ஏடாகோடமாய்... வெளில சொல்ல முடியாதபடி... கோலவடிவு, தானா போயிருக்க மாட்டாள். இந்த அலங்காரி பய மவள் மருந்து மாத்திரை போட்டு அந்தச் சின்னஞ்சிறிச, மயக்கி அனுப்பி இருப்பாள். இல்லாட்டா கோலவடிவா போறவள். சும்மாகிட ஊமை ஊரைக் கெடுக்கும்.... பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
பழனிச்சாமி, இன்னும் பித்தம் தெளியாமலே நின்றார். அவரருகே, அவரது கையைப் பிடித்தபடி நின்ற பாக்கியம், கண்கள் சுருங்க கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கி, அவர் மார்பு வழியாக தலையைக் கீழே இறக்கி, அப்படியே குப்புற விழுந்தாள். பழனிச்சாமியோ, அப்படிப் பார்த்தும், பார்த்தது புரியாத மனோநிலையில் ஆகாயத்தை வெறித்துப் பார்த்தபடியே நின்றார். மாயாண்டியும், காத்துக் கருப்பன் பற்குணமும், பீடி ஏசெண்ட்டும், பாக்கியத்தைச் சுற்றிய கூட்டத்தை விலக்கியபடியே "காத்து வரட்டும்... காத்து வரட்டும்..." என்றார்கள். பேச்சியம்மா, நாலு பேரைக் கீழே தள்ளிப் போட்டுவிட்டு முந்தானையால் பாக்கியத்திற்கு விசிறினாள். பிறகு, இவ்வளவுக்கும் காரணமான அந்த அலங்காரி, பலபட்ரயை... சும்மா விட்டுட்டு நிக்கியளே... நிக்கியளே'ன்னு புலம்பி, அலங்காரி பதுங்கி, பதுங்கி நின்ற திசையைக் காட்டிக் கொடுப்பதுபோல் பார்த்தாள். உடனே, ஒரு. சுவரில் உடம்பைப் போட்டு, அங்குமிங்குமாய் தலையை உருட்டிய அலங்காரியை நோக்கி, மாயாண்டியும், குள்ளக் கத்தரிக்காய் ராமசாமியும் ஓடினார்கள். அதற்குள், பீடி ஏசெண்டு பால்பாண்டி சிற்சில சமயங்களில் அலங்காரியின் சேலையைப் பிடிப்பதுபோல், இவர்களின் வேட்டிகளைப் பற்றிக் கொண்டான்... இனிமேல், அவர்கள் ஓடுவதாக இருந்தால்,
அம்மணமாகத்தான் ஓடவேண்டும்.
பாக்கியத்தின் கைகால்கள் வெட்டின. கண்கள் நிலை குத்தின. வாயில் நுரை வருவது மாதிரி இருந்தது. பழனிச்சாமி கீழே குனிந்து, அவள் தோளைத் தொட்டுத் தூக்கப் போனார். தூக்கப் போனவரும், கீழே விழுந்தார். அவள் தோளில் ஏதேச்சையாய் கைபோட்டபடியே விழுந்தார். ராமசாமி, அவரைத் தூக்கி நிறுத்தினார்..... மாயாண்டியும், இன்னும் சிலரும் பாக்கியத்தைக் கைத்தாங்கலாக வீட்டுக்குள் கொண்டு போனார்கள். "சுக்கு வச்சு ஊதுங்கடா... சுக்கு வச்சு ஊதுங்கடா...'' என்று சாமியாடித் தாத்தா தனக்கே கேட்காத
குரலில் பேசிவிட்டு, பிறகு பழனிச்சாமியின் வீட்டுக்குள் ஓடினார். ஏதோ ஒரு அசரீரி போல முடிவில்லாக் குரல் ஒன்று கர்ஜித்தது.
"இதுக்குல்லாம் காரணம் அலங்காரிதான்... செறுக்கி மவள் கொண்டையை சிறச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, தலையில் மண் மூட்டய ஏத்தி உண்டு இல்லன்னு பாக்கணும்..."
இந்தப் பேச்சு ஊர்க்காதுக்கு கேட்டதோ இல்லையோ, அலங்காரிக்குக் கேட்டது. திடீரென்று, அவள் இன்னும் குன்றிப்போய் நின்ற புஷ்பத்தை நோக்கி ஓடினாள். அவள் கையைப் பிடித்து, திருமலையை விட வேகமாக இழுத்தாள்.... வடமேற்குப் பக்கமாக இழுத்துக் கொண்டே ஓடினாள்.
"என் பின்னால வாழா... ஒன்னை கற்பழிச்ச திருமலை கையில விலங்கு மாட்டி அவன நாயி மாதிரி இழுக்க வைக்கன்னா இல்லியான்னு பாரு....”

