Chapter 26
ஆடிவெள்ளியைப் பிரசவித்துக் கொண்டிருந்த வியாழனின் நடுநிசி....
இருளே ஆகாயமாக இருந்தபோதிலும், சட்டாம்பட்டி காளியம்மன் கரும்பட்டையான்களும், சுடலைமாடச் செம்பட்டையான்களும், ஏவிவிட்ட வாணங்கள், அந்த ஆகாயத்தின் எரி நட்சத்திரங்களாய் ஜொலித்தன... காளியம்மன் கோவில் கொண்டையில் தஞ்சை பெரிய கோவில் லிங்கம் அளவிற்கான லிங்க வடிவு மின்சார பல்புகள், சுடர்விட்டன...... சுடலைமாடன் கோயிலில் கோபுர வடிவிலான மின்விளக்குகள், எதிர்ச்சுடரை வெளியிட்டன... இரண்டு கோவில் களிலும், பந்தல்களிலும், பந்தல்களுக்கு அப்பால் கம்புகளில் கட்டப்பட்ட "வாழைத்தண்டு" விளக்குகள் நிலா வெளிச்ச இழப்பை ஈடுகட்டின... இத்தகைய இருட்டில் கள்ள நொங்கு' வெட்டுபவர்களும், கள்ளத் தேங்காய்ப் பறிப்பவர்களுமான சின்னச் சின்னச் திருடர்கள்... இந்த வெளிச்சத்தைப் பார்த்து "திரு திரு" என்று விழித்தார்களே தவிர திருட முடியவில்லை .....
சுடலைமாடன் கோவிலில் "மணமகளே மணமகளே வா” என்ற ரிக்கார்ட் பத்தாவது தடவையாக ஒலித்து, அங்கேயே கீறல் விழுந்த கிராம போனாகியது. காளியம்மன் கோயிலில், வெற்றிக்குமார் வில்லுப் பாட்டாளிக் குழுவினர், காளியம்மன் வரலாற்றை கையாட்டி, காலாட்டி குடந்தட்டி, சிங்கிதட்டி பாடினார்கள். அந்தக் குழுவின் குரல் ஒலி பெருக்கியில் ஏவி விடப்பட்டது... சுடலை மாடன் கோயிலில் ஒலி பெருக்கி பாட்டுச் சத்தத்துடன் "ஏய்.... ஆய்... ஊய்..." என்ற இடைச் செருகல் சத்தங்களும் ஒலித்தன..... அங்கே சுமார் பத்துப் பதினைந்து சாமியாடிகள் தார்பாய்ந்த வேட்டியோடு, சந்தனம் அப்பிய மேனியோடு தீப்பந்தங்களுடனும், வெட்டரிவாள்களுடனும், தங்தங்' என்று குதித்தார்கள்... அவர்களின் சிம்மக் கர்ஜனைகள், காளியம்மன் கோவிலில் எதிரொலித்தன. காளியம்மன் சாமியாடித் தாத்தா, வாயைத் திறந்து திறந்து மூடி சுடலை கோவிலில் பீறிட்ட பதினைந்து சிம்ம கர்ஜனைகளையும், தானே, ஒருவராய்த் தக்காரும் மிக்காரும் இன்றி உருமுவதாக அனுமானித்துக் கொண்டு ஆடினார்.
சட்டாம்பட்டி மண்டல சார்பற்ற மக்கள்' சுடலை கோயிலில் இருந்து காளி கோயிலுக்கும், காளி கோயிலில் இருந்து சுடலை கோயிலுக்குமாய், நடமாடினார்கள் என்றாலும் காளியம்மன் கோவிலி ல்தான் அதிகக் கூட்டம்... காத்துக் கருப்பன்களில் முக்கால்வாசி பேரும், காரைவீட்டான்களில் பாதிப்பேரும், கரும்பட்டையான்களுடன் கலந்து இருந்தார்கள்... திடீரென்று சுடலை கோயிலில் ஆறு முழு வேட்டி அளவிலான வெள்ளைப் படுதா தெரிந்தது....” “பெரியோர்களே.... தாய்மார்களே... எல்லாம் வல்ல சுடலை மாடன் திருவிளையாடலை முன்னிட்டு 'லைலாவும் அவள் காதலர்களும்' என்ற படம் காண்பிக்கப்படும்" என்று ஒரு முழக்கம் கேட்டது... இதனால், காளியாத்தா கோயிலில் கூடிய கூட்டத்தில், பாதிக்கு மேலானோர் சொக்கார, சொந்தக்கார பேதங்களைத் தாண்டி, லைலாவைப் பார்ப்பதற்காக, விழுந்தடித்து ஓடினார்கள். உடனே, கரும்பட்டையான் நாட்டு வக்கீல் நாராயணன், வயதான வில்லுப்பாட்டாளியைத் தெரியாத்தனமாக மல்லாக்கத் தள்ளிவிட்டு, "அண்ணன்மாரே , தம்பிமாரே.... அக்காமாரே, தங்கைமாரே" என்று மாரடிப்பது போல் கூவிவிட்டு, சினிமாப்புகழ் சிவராமன், நடிகர்கள் போலவும், நமது தலைவர்கள் போலவும் நடித்துக் காண்பிப்பார்' என்றான்.
ஆனாலும், 'லைலாவுக்கே' மவுசு.... புறநானூற்று வீரர்களாய் வீராங்கனைகளாய்ப் புறப்பட்ட கூட்டம், முன் வைத்த காலைப் பின் வைக்கவில்லை.... குறிப்பிடத்தக்க எல்லாக் கரும்பட்டையான்களும், முனங்கிக் கொண்டிருந்த போது, பாவம் இந்தக் காளியம்மன் சாமியாடி தாத்தா, நைட்டி' மாதிரியான சிவப்பு கவுனைத் தோள் வழியாகக் கால்வரைக்கும் தொங்கப் போட்டுக் கொண்டு, இரண்டு கரங்களிலும் ரப்பர் வளையல்களை மாட்டிக் கொண்டு முட்கம்பி செருப்பைச் செருகிக் கொண்டு, நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் மீதிக்கூட்டத்தில் பாதிக் கூட்டத்தை துரத்தினார்.... திருமலையால் பொறுக்க முடியவில்லை ....
"இன்னைக்கு நீரு.... ஆடுறதோட சரி... நாளைக்கு ஒம்ம பேரன்தான் ஆடுவான்... சாவப் போற காலத்துல, ஒமக்கெல்லாம் எதுக்குய்யா.... சாமியாட்டம்... வாலிபனுக்கு வழிவிடும்..."
நாட்டு வக்கீல், குள்ளக் கத்தரிக்காய், பீடி ஏசெண்ட் வகையறாக்களுக்கு மத்தியில், ஒரு நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்திருந்த பழனிச்சாமி திருமலையைக் கைகாட்டி அமர்த்தினார். தொண்டையைக் கனைத்தார்... அவர் ஏதோ பேசப் போகிறார் என்று கைப் பையன் விகடத்துக்காக ஆயத்தம் செய்த 'சினிமாப் புகழ்' சிவராமன் முன்னால் இருந்த மைக்கை வெடுக்கென பிடுங்கி, பழனிச்சாமி முன்னால் வைத்தான்.....
"பேசுங்க அய்யா..."
"ஏய் மைக்க எடுப்பா.... எல்லாத்துக்கும் சொல்லுதேன்... நமக்கு கூட்டம் முக்கியமில்ல... கொள்கைதான் முக்கியம்... கோவில் கொடை.... வெறும் பொழுது போக்கில்ல.... நம்மோட மூதாதையர் நமக்கு விட்டுட்டுப் போன பழக்க வழக்கம். அதை மாற்ற முடியாது.... இஷ்டப்பட்டவங்க இருங்க... இல்லாட்டா... போங்க யோவ் அடிப்பா.. விகடம் கொஞ்சம் இரும்..."
காசு வாங்கியே தீருவது என்று கங்கணம் கட்டியது போல், மேளக்காரர்கள் டங்கு டங்கு' என்று அடித்தார்கள் ..... நாதஸ்வரக்காரர்கள் ஓசை உச்சக்குரலில் ஓங்கின.... ஊமைக்குழல் உறுமியது.... தவுல் மேளம் இழுப்புப் போட்டது.... பம்மை மேளம் பரபரத்தது... மேளம் அடித்தவர்கள், தத்தம் கழுத்தில் கிடக்கும் தங்கச் செயின்கள் துள்ளித் துள்ளி விழ, சதுராடினார்கள். ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் குதித்தபடியே, ஆடாமல் நின்ற சாமியாடித்தாத்தா முன்னால் வந்து, அடிஅடி என்று அடித்தார்கள் - தாத்தாவும் ஆடினார் லேசாய்... மெதுவாய்... மேளக்காரர்களுக்கு ஈடுகொடுத்து, அவரால் ஆடமுடியவில்லை . 'நாளைக்கு ஆடணும்.... இப்படி ஆடினால் சின்னப்பய மவனுவ ஆடவிடமாட்டானுவ... திருமலைப்பயல் அடிக்கவே வருவான். ஆனாலும் ஆடணும். மூச்ச இளைக்காம, உடம்பு நோகாம
ஆடணும்.... எப்படி...?"
சாமியாடி தாத்தா திடீரென்று, கையை ஆட்டி, மேளத்தை நிறுத்திவிட்டு உத்திரவு சொல்லப் போனார். மைக் இல்லாமல் அவரால் உத்தரவு சொல்ல வராது.... ஆகையால் மைக் மைக்' என்றார்கள். அது ஏதோ மந்திரச் சொல் என்று மைக்காரன் சும்மா தலையைச் சொறிந்தபோது, தாத்தாவே மைக் முன்னால் ஓடிப்போய் உத்தரவு சொன்னார்.
"கவலைப்படாதிங்கடா என் மவனுவளா கவலப்படாதிங்கடா... என் மவனுவளா.... நம்ம குடும்பத்துல நாலு கல்யாணத்த இந்த ஆவணில முடிச்சு வைக்கப் போறேண்டா... ஏற்கனவே ஒரு மவளுக்கு, அக்கினி ராசாவோட முடிச்சு போட்டுட்டேண்டா... ஆமாடா... நான் தாண்டா என் மகள் கோலவடிவுக்கு மாங்கல்ய பாக்கியம் தந்தது.... எங்கேடா இருக்கா என் மகள் கோலவடி... என் மகளே மகளே.... வா மகளே.... இந்தத் தாய் ஒன் நெத்தியில் குங்குமம் வைக்கணும்... என் மகள் கோலம் வாது வரைக்கும் அடிடா மேளம்.... அடிடா மேளம்..."
மேளச்சத்தம் மீண்டும் ஒலித்தது.... சாமியாடித் தாத்தா பழனிச்சாமியைப் பார்த்து அருள்பாலிப்பவர் போல் ஓரக்கண்ணால் நோட்டம் போட்டார். எந்தப்பய இனிமேல் என்னை சாமியாடப்படாதுன்னு சொல்லுதான்னு பாத்துப்புடலாம்.....
லைலாவையும், அவள் காதலர்களையும் இங்கிருந்தபடியே பார்த்துவிட்டு, இப்போது இருப்புக் கொள்ள முடியாமல், கடலை கோவிலுக்கு போவதற்காகத் தற்செயலாக எழப்போவதுபோல் எழுந்த கரும்பட்டையான் வயதுப் பெண்கள், எழுந்த வேகத்திலேயே உட்கார்ந்தார்கள்..... கிழட்டுப் பய... கோலவடிவு பேரச் சொல்லிக் கூப்பிட்டது மாதிரி... நம்மளையும் கூப்புடப் போவுது.... நாம சபையில இல்லாட்டா வேற எவன் கூடவோ பேசிக்கிட்டு இருக்கதா நெனைப்பாவ... ஆமா... கோலவடிவ எங்க காணோம்... விளங்காதவா.... வீட்டுக்குள்ள படுத்துக் கிடப்பாள்.....
சாமியாடித் தாத்தா உத்தரவு போட்டு , பதினைந்து நிமிடமாயிற்று.... கோலவடிவு அவர் முன்னால் தோன்றவில்லை. பாக்கியம் கூட்டத்தில் இருந்த ஒவ்வொரு பெண்ணாக உற்றுப் பார்த்தாள்.... பழனிச்சாமி லேசாக முகத்தைச் சுழித்தார். பிறகு ராமசுப்புவிடம் எதையோ சொன்னார்... அவன், அவர் வீட்டைப் பார்த்து நடந்தான்... பாக்கியமும் நடந்தாள்... சாமியாடித் தாத்தா , மீண்டும் மேளத்தைக் கையாட்டி நிறுத்திவிட்டு 'மவளே கோல வடிவு... இந்தத் தாயி துடிக்கிற துடிப்பு தெரியலியா - ஒனக்கு குங்குமம் வச்சு அழகு பாக்க ஆசைப்படுகிறாள் இந்த தாயி... வாம்மா.... என் மவளே... வா... அடிடா மேளத்த' என்றார்.
மேளம் மீண்டும் முழங்கியது.... தாத்தா, தலையை விரித்துப் போட்டு ஆடினார். 'குலவ குலவ' என்றார். இந்த மாதிரி வேண்டுதலின் போது குலவையிடும் பெண்களில் பாதிப்பேரே ஒப்புக்குக் குலவையிட்டார்கள்... எப்போ கோலவடிவு வந்து உத்தரவு வாங்கி எப்போ நம்மள கூப்பிட்டு உத்தரவு வாங்கி... அதுக்குள்ள லைலாவும் அவள் காதலர்களும் மறஞ்சுடுவாங்க.... இந்த கோலவடிவு இன்னுமா.... தூங்குறாள்...
இதற்குள் பாக்கியமும், ராமசுப்புவும் வெறுங்கையோடு திரும்பி வந்தார்கள். பழனிச்சாமியை பட்டும் படாமலும் கையாட்டி பக்கத்தில் வரும்படி கூப்பிட்டார்கள்.... அவரும் அதைக் கவனியாததுபோல் கவனித்துவிட்டு அந்தப் பக்கமாக வந்தார்... பாக்கியம் சொல்வதற்கு முன்பே பழனிச்சாமி கேட்டார்.
"அவள் கையோட கூட்டிட்டி வரவேண்டியதுதானே... சாமியாடி சின்னய்யா அறிவில்லாம கூப்புட்டுட்டாரு.... இன்னும் என்ன
செய்யுறாள்..."
"அவளைக் காணல்... கண்டுபிடிக்க முடியல..." “என்ன உளறுற..."
"வீட்ல எல்லா இடத்துலயும் பாத்துட்டேன்.... கட்டிலுக்கு அடில்... பாத்துட்டேன்..... முற்றத்துல பாத்துட்டேன்.... மாட்டுத் தொழுவத்துல பாத்துட்டேன்... இந்தத் தெரு முழுசும் பாத்துட்டேன்..."
"ஒரு வேள் ஒதுங்க கிதுங்க..." "அரைமணி நேரமாவா..." "எனக்கு என்னமோ பயமா இருக்கு... பெத்த மனசு துடிக்குது.."
“என்ன பாக்கியம் சின்னப் பிள்ள மாதிரி... ஏணிப் படிக்கட்டு கீழ பாத்தியா...'
"பாத்துட்டேன்... குவியலாய் கிடந்த போர்வையைக்கூட உதறி பார்த்துட்டேன்.. மாடியக்கூட பார்த்துட்டேன்.. எங்க போயிருப்பா..."
"சரி... கத்தாத... இந்தாப்பா ராமசுப்பு... சாமியாடி சின்னய்யாவ அவளையோ எவளையோ கூப்புடாம சும்மா ஆடச் சொல்லு... சரி வா... வீட்டுக்கு போவோம்..."
பழனிச்சாமி, மனைவி கையைப் பிடித்தபடி நடந்தார். பொதுவாக இரண்டடி இடைவெளியில் நடக்கும் இருவரும் அப்படி நடப்பதில் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதைப் புரிந்து கொண்ட நாட்டு வக்கீல் நாராயணனும் எழுந்தான். உடனே, இதரக் கரும்பட்டையான் பிரமுகர்களும் எழுந்து பழனிச்சாமியின் பின்னால் நடந்தார்கள். திருமலை, தாவிக் குதித்து, கூட்டத்தின் கவனத்தைக் கவர்ந்தான்.
வீட்டுக்கு வந்த பழனிச்சாமி, தேக்குக் கட்டிலில் உட்காராமல், திண்ணைப் படிக்கட்டில் உட்கார்ந்தார்.... அங்கே வந்த சொக்காரப் பிரமுகர்களிடம் சாதாரணமாகச் சொல்லுவது போல் சொன்னார்.
"நம்ம கோலவடிவக் காணல..." "ஒருவேளை செம்பட்டையான் போடுற சினிமாவுல..."
"சீ... செத்தாலும் சாவாளே தவிர அங்க போகமாட்டாள். கரும்பட்டையான் வைராக்கியம் நம்ம பொட்டப் பிள்ளியளுக்கும் உண்டுப்பா... ஆளுக்கு ஒரு பக்கமா தேடுங்க.. எங்கேயாவது செடி செத்த கடிச்சு மயங்கி கியங்கி.... அழாத பாக்கியம்... நாம் யாருக்கும் எந்த கெடுதியும் செய்யல... நம்ம மவளுக்கு எதுவும் வராது... சரி.... தேடப் போயிருக்காங்கல்லா... பொறும்மா.... பொறு...."
"எப்படிப் பொறுப்பேன். எப்படித்தான் பொறுக்க முடியும்... நான் பாவியிலும் மோசமான பாவி... என் காலப் பிடிச்சு தடவி விட்ட என் ராசாத்திய விரட்டிட்டேனே... விரட்..."
பாக்கியம் விசும்பினாள்... விம்மினாள். பருத்த உடலைத் துடிக்க வைத்தாள். முந்தானையை எடுத்து முகத்தில் படிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டாள்.... வீசிக் கொண்டாள்.... கணவனை ஆறுதலாகப் பார்த்துக் கொண்டாள் - மகளைத் தேடிப் போய்த் திரும்பி வந்த ஒவ்வொருவர் பின்னாலும் கோலவடிவு திரும்பி வருவது போல் முகந்தூக்கிப் பார்த்து, பின்னர் அவள் இல்லாத, ஏமாற்றத்தில் தலைதாழ்த்தி அழுதாள்.... மாந்தோப்பு, புளியந்தோப்பு, பஸ்நிலையம் என்று பல்வேறு இடங்களுக்கு சென்ற ராமசுப்பு, திருமலை, மாயாண்டி போன்றவர்கள், உதடுகளைப் பிதுக்கியபடியே வந்தார்கள்... பாக்கியத்தின் அழுகை கூடிக் கொண்டே இருந்தது. பேச்சியம்மா ஓடிவந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கூட்டத்தை வரவழைக்கப் போனாள்... நல்ல வேளையாக சந்திரா அவளைப் பிடித்துக் கொண்டாள். அப்படியும் அந்த அடிச் சத்தம் கேட்டு, வாடாப்பூ உட்பட பல பெண்கள் வந்துவிட்டார்கள்.
திடீரென்று ஒருவர் தோளில் துண்டில்லாமல் வந்தார். அங்கிருந்த சூழலைப் புரிந்து கொண்டு ரகசியமாகக் கேட்க நினைத்ததை, பகிரங்கமாகவே கேட்டார்... வெட்டாம்பட்டிக்காரர்... பழனிச்சாமியின் அம்மா கூடப் பிறந்த சித்தி மகன்... சிவனுப் பாண்டியன்.
"கோலவடிவு இங்க இருக்காளா...?" "என்னப்பா சொல்லுதே.... சத்தமா சொல்லுதே..." "கோலவடிவு இருக்காளா....?" "இல்ல.. இல்ல.... சொல்ல வேண்டியதச் சொல்லு..."
"என் வீடு பகவதி வீட்டுக்குப் பக்கத்து வீடா... அதான் எலி டாக்டர் மாமியாரு வீடு. செம்பாதி வேளையில் தூக்கம் கலைஞ்சது.... தெரிஞ்ச குரல் மாதிரி சத்தம் கேட்டுது... அந்த வீட்டுப் பக்கமா எட்டிப் பார்த்தால் கோலவடிவு.. மாதிரி.... மாதிரிதான்... அவள்கூட ஒங்க ஊரு உரக்கடப் பயல்...”
"என்ன மனுசம்பா நீ... அப்பவே அங்கே போயி..."
"வேற பொண்ணு மாதிரி தெரிஞ்சிருந்தா போயிருப்பேன்... கோலவடிவு மேல யாருக்காவது சந்தேகம் வருமா - ? அதோட... இந்த மாதிரி விவகாரத்துல நாலுபேரக் கலக்காமல் செய்யப்படாதே..."
ஊம் ஊரைக் கெடுக்குமாம்... பெருச்சாளி வீட்டக் கெடுக்குமாம்... ஏய் பாவி மொட்ட கெடுத்துட்டாளே..."
"பேச்சி மயினி சும்மாக் கெட ஏல அரிவாள எடுங்கடா.... துளசிங்கம் பய... நம்ம பிள்ளய கடத்திக்கிட்டு போயிருக்கான்... அவளா போயிருக்க மாட்டாள்... வேல்கம்ப எடுங்கல ஒண்ணு துளசிங்கம் பிணமா விழணும்... இல்லன்னா நாம்..."
பழனிச்சாமி அங்கீகாரத்துடன், கரும்பட்டையான் இளைஞர்கள் கத்தி கம்புகளை எடுத்துக்கொண்டு நடக்கப் போன போது -
வாடாப்பூ, பழனிச்சாமியின் கால் மாட்டில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தாள்... அவர் காலை, கண்ணீ ரால் அலம்பியபடியே கதறினாள்.....
"இப்டி வருமுன்னு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே சொல்லியிருப்பேன் பெரியப்பா. மோசம் போயிட்டோமே பெரியப்பா.... மோசம் போயிட்டோமே.. நம்ம கோலவடிவும், துளசிங்கமும் அலங்காரி ஒத்தாசையில் பருத்திக் காட்டுல சந்திச்சுப் பேசுனதா ரஞ்சிதம் சொன்னாள்... ஒரு தடவ கோலம் அலங்காரி வீட்டுக்குப் போனாளாம்... இன்னைக்குத்தான் என்கிட்ட சொன்னாள்... காலையிலதான்...''
மாயாண்டி, பழனிச்சாமியின் கால்மாட்டில் கிடந்த தன் மகளின் தலைமுடியைப் பிடித்திழுத்து தூக்கி நிறுத்தினார்... வாயிலும் வயிற்றிலும் குத்தினார்.
"செறுக்கி மவளே... நீ எனக்குப் பிறந்திருக்க மாட்டே... அப்படி இருந்தால், காலையில தெரிஞ்சத பெரியப்பா கிட்டயாவது, பெரியம்மா கிட்டயாவது உடனேயே சொல்லியிருப்பே..."
"கோலவடிவ நானே திருத்திடலாமுன்னு நெனச்சேன். பெரியப்பா மனசு, தெரிஞ்சா என்ன பாடுபடுமுன்னு எனக்குத் தெரியும்... கோலவடிவுகிட்ட கேட்டுட்டு... அவள் திருந்தாட்டால் அப்புறம் பெரியப்பாகிட்ட சொல்லணுமுன்னு நெனச்சேன்... அய்யோ நானே அவள் ஓடிப் போவக் காரணமாயிட்டேனே...'
"நீயும் ஓடிப் போழா..."
மாயாண்டி மகளை மீண்டும் அடிக்கப் போனார். பழனிச்சாமி பிடித்துக் கொண்டார். அவளை தன் பக்கமாக இழுத்து வைத்துக் கொண்டு தழுதழுத்த குரலில் கேட்டார்.
"அப்போ அவள் இஷ்டப்பட்டுத்தான் போயிருப்பா என்கிறியா...?"
வாடாப்பூ பதிலளிக்கப் போன போது, வெட்டாம்பட்டி சிவனுப்பாண்டி பதிலளித்தார்...
"கோலவடிவும் உரக்கடைப் பயலும் நின்ன தோரணையை பார்த்தால் அப்படித் தான் தெரிஞ்சுது..."
பழனிச்சாமி, வேல் கம்புகளோடும், வெட்டரிவாள்களோடும் தயாராய் நின்றவர்களைக் கையாட்டி உட்காரச் சொன்னார். பிறகு, அங்கே எழுந்த ஒவ்வொருவரையும் தோளைத் தொட்டு உட்கார வைத்தார். அப்போது வெளியே அலங்காரி, துளசிங்கம் தங்கை புஷ்பத்துடன் பேசிக் கொண்டு போவது கேட்டது. சுடலைமாடன் கோயிலில் இருந்து வீட்டுக்குப் போய்க் கொண்டு இருந்தார்கள். பொழுது விடிந்தது தெரியாமல் விடிந்து, பகல் வருவது தெரியாமல் வந்துவிட்டது.
"ஏய் புஷ்பம்... மணமகளே மணமகளே பாட்டு நல்லா இருந்ததுல்லா... இன்னைக்கு இப்படிப்பட்ட பாட்டாத்தான் போடணுமுன்னு ஸ்பீக்கர்காரன் கிட்ட நானே சொல்லிட்டேன்... துள்ளாத துள்ளாத ஆட்டுக்குட்டி... என்கிட்ட இருக்குது சூரிக்குத்தி... நல்ல பாட்டுல்லா புஷ்பம்..."
பழனிச்சாமியின் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும், அலங்காரியின் பேச்சின் தாத்பரியத்தை உள்வாங்கியபோது, திருமலை யாரும் எதிர்பாராத வகையில் வெறிபிடித்தவன் போல் வெளியே ஓடினான்.... அவன் காலடிச் சத்தம் நின்றபோது அலங்காரியும், புஷ்பமும் “எம்மோ - எய்யோ " என்று ஊரே அதிரும்படி அலறினார்கள்.

