Chapter 5

கமலாவும் பாகீரதியும் கண்விழித்துப் பரமபதம் விளையாடி, சிறுபிராய நினைவுகளை அசைபோட்டு, தங்களோடு கண்ணாமூச்சி விளையாடிய சமகாலப் பெண்களின் வாழ்க்கையை அலசி, சமையல்கார அம்மாள் திடுதிப்பென்று கல்கத்தா பேரனிடம் போய் விட்டதை எண்ணிப் பார்த்து, அம்மாவின் அன்பையும் பாசத்தையும் நினைத்து நெகிழ்ந்து, (அடி சனியன்களா, தலை பின்னிக்க வாங்கடி!) எல்லாம் பேசித் தீர்த்தபோது தோட்டத்தில் காகங்கள் கரையவும் பொழுதுவிடிய இன்னும் சிறிது நேரமே உள்ளது என்பதை உணர்ந்தார்கள்!

"வேடிக்கைதான்! பொழுது விடிந்தது கூடத் தெரியாம இத்தனை நேரமா பேசியிருக்கோம்?" என்று இருவருமே சிரித்துக் கொண்டார்கள்.

தோட்டப்பக்கத் தெருவில் பஜனை கும்பல் ஒன்று அபஸ்வரமாய்ப் பாடிக்கொண்டு போயிற்று.

வாசலில், முனியம்மா தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். லேசாக பேச்சுக்குரல் கேட்க, பாகீரதி எட்டிப் பார்த்தாள். விடியற்கால இருட்டில் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவளுடைய எண்ணமெல்லாம் மூர்த்தியைப் பற்றியதாகவே இருந்ததால்,-éஒரு வேளை முர்த்திதான் வந்திருப்பானோ?’ என்ற ஆவலில் இருட்டில் உற்றுத் தேடினாள்.

நொண்டி கிட்டா தெரிந்தான்.

"இந்த நேரத்தில் இவன் எப்படி வந்து முளைத்தான்?" என்று வியந்தபடியே வாசலை கோக்கி விரைந்த பாகீரதி, "வாடா, தீபாவளிக்குப் போனவன் இப்பத்தான் வறயா? எங்கிருந்து வறே?"

"தஞ்சாவூர்லேந்து. நடுவழியில் பஸ் மக்கர். அதான்."

"பின் கட்டுக்கு வா, நிறையப் பேசணும்."

“கனபாடிகள் வந்தாச்சா?" ஒரு மரியாதையோடு ரகசியக் குரலில் கேட்டான் கிட்டா.

"உனக்கெப்படித் தெரியும் அவர் ஊரில் இல்லேன்னு."

"எப்படியோ.." என்றான்.

அவனிடமிருந்த கைப்பையை வெடுக்கென்று வாங்கிக் கொண்ட பாகீரதி,

"என்னடா கொண்டு வந்திருக்கே?" என்று கேட்டாள்.

"பாருங்க."

பச்சை திராட்சையும் சமித்துகளும் இருந்தன.

"ஏன் ஒரு மாதிரி இருக்கே, அக்கா?"

"உற்சாகமாத்தானே இருக்கேன். ஏன், உனக்கு அப்படித் தோண்றதோ?

"இல்லே: மூஞ்சி சொல்றதே!"

கொஞ்சம் தயங்கியவள் குரலைத் தாழ்த்தி, "மூர்த்தியைக் காணோம்டா, ரெண்டு நாளாச்சு, எனக்கு பயமாயிருக்குடா!" என்று சோகமாய்த் தழுதழுத்தாள்.

"தஞ்சாவூர்ல பார்த்தனே அவனை.

"பார்த்தியா என்னடா சொன்னான்?"

"இந்தப் பாடசாலைக்கு இனி வரப் போறதில்லையாம். வேதமும் படிக்கப் போறதில்லையாம்"

”ஏனாம்?”

"கேட்டனே? அதெல்லாம் சொல்ல முடியாதுன்னுட்டான். "இந்தா, இந்த திராட்சையையும் சமித்தையும் கனபாடிகளிடம் கொண்டுபோய்க் கொடுத்துடு. பச்சை திராட்சைன்னா அவருக்கு உயிர். வர வழிலே ஒரு பலாச மரத்தைப் பார்த்தேன், அதிலே நிறைய சமித்து கிடைச்சுது. என் வைதிக புத்தி கேட்கலே! அவ்வளவையும் பறிச்சுண்டு வந்துட்டேன். தஞ்சாவூர் கடைத் தெருவில் திராட்சையைப் பார்த்ததும் கனபாடிகளுக்குப் பிடிக்குமேன்னு வாங்கிட்டேன். வாங்கினப்புறம்தான் இதை எதுக்கு வாங்கினோம்னு நினைச்சேன். இப்ப பாரு, தெய்வமே உன்னை இங்கே கொண்டு விட்டது பார்த்தயா! நீ கொண்டு போய்க் கொடுத்துடு. இதைத்தான் மனசுங்கறது."

”நீ ஏண்டா வந்துட்டே? அப்படி என்ன நடந்துட்டுது” என்று திரும்பத் திரும்பக் கேட்டேன்."

"அதுக்கு என்ன பதில் சொன்னான்?" என்று கேட்டாள் பாகீரதி.

“ஸுகார்த்தீ சேச் த்யஜேத்வித்யாம்"னு ஒரு சம்ஸ்கிருத சுலோகம் சொல்லி,

"வித்தியார்த்தி என்பவன் சகம் நாடுபவனாயிருக்கக் கூடாது. சுகம் நாடுகிறவன் வித்தியார்த்தியா யிருக்கக் கூடாதுன்னு அதுக்கு அர்த்தமும் சொன்னான்.

"நான் இப்ப சுகம் நாடும் வித்யார்த்தியாயிட்டேன். அதனால எனக்கு இனிமே படிப்பு ஓடாது. இதை குருவிடம் சொல்லுகிற அளவுக்கு தைரியம் வரலை. அதனாலதான் சொல்லாம வந்துட்டேன். என்னை மன்னிச்சுடச் சொல்லு என்றான். உனக்கெப்படிடா இந்த சுலோகமெல்லாம் தெரிஞ்சுதுன்னு கேட்டேன். கனபாடிகளே சொல்லிக் கொடுத்ததுதான் என்றான்."

"என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா?" ஒரு ஏக்கத்தோடு, குற்ற உணர்வோடு, ஆவல் நிறைந்த பார்வையோடு கேட்டாள் பாகீரதி.

"ஊஹூம்; ஒண்ணுமே சொல்லலை."

கமலா இதையெல்லாம் சற்று தூரத்தில் மறைவாக நின்று ஒட்டுக் கேட்டாள்.

"என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா? அதுக்கு என்ன அர்த்தம்? அவனிடம் இவளுக்கென்ன அத்தனை அக்கறை? இந்த மாதிரி எதுக்கு ஒரு கேள்வி? கமலா அந்த ’அவலை’ மென்று பார்த்தாள். ஒன்றும் கிடைக்கவில்லை.

”அவன் எங்கடா போயிருப்பான்?"

”சொல்ல மாட்டேன்னுட்டானே! என்னமோ ஒரு விரக்தியோடு பேசறானே. உலகமே அஸ்தமிச்சுட்டாப்ல ஒரு மூஞ்சி"

"ஏதாவது சாப்பிட்டானா? கையிலே காசு வெச்சிருக்கானா? கழுத்திலே சங்கிலி இருந்ததா?" (’வழவழ’ன்னு எத்தனை அழகான கழுத்து, தந்தத்தால் செய்தாப்பல! அவன் பொன்மேனிக்கும் அந்த செயினுக்கும் எத்தனை பொருத்தம் நான் கூட கொஞ்சம் நிறம் மட்டுதான்!)

"அவனும் நானும்தான் ஆனந்தா லாட்ஜ்ல சாப்பிட்டோம். ரொம்ப வைதிகமான ஓட்டல். பின் கட்டிலே ஆசாரமா மணை போட்டு, வாழை இலை போட்டு பரிமாறினா"

”என்ன சாப்டீங்க?"

"காசி அல்வா, ரவாதோசை, தோசைக்கு கொத்சு, டிகிரி காப்பி."

"வித்தியார்த்திகள் சுகம் நாடக் கூடாதுன்னு சொல்லிட்டு காசி அல்வா மட்டும் சாப்பிடலாமா? அது சுகம் இல்லையோ?"

"அதென்னவோ, நீ அவனையே கேளு, வந்தால்."

"வருவான்னு நினைக்கிறயா கிட்டா நீ?"

"தெரியலையே; ஒடிப் போனவனைப் பத்தி உனக்கென்ன இத்தனை கரிசனம் ! போனாப் போறான்!"

"மனசு கேக்கலைடா! அப்பா வந்தா என்ன பதில் சொல்வேன்? மூர்த்தி ஏன் போனான், எதுக்குப் போனான்? இங்கே என்ன நடந்ததுன்னு ஆயிரம் கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துடுவாரே! குதிகுதின்னு குதிப்பாரே!" என்று பயந்து நடுங்கினாள் பாகீரதி.

இவ்வளவையும் காதைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்த கமலா ’இதில் என்னமோ மர்மம் இருக்கு’ என்று தனக்குத்தானே தலையசைத்து ஆமோதித்துக் கொண்டாள்.

மறு நாள் காலை. கனபாடிகள் வரும்போது கூடத்து அழுக்கு கடிகாரத்தில் மணி ஒன்பதுக்கு மேல் ஆகியிருந்தது. புதுசாக சிவப்பு காஷ்மீர் சால்வை போர்த்தியிருந்தார். காதில் கடுக்கனும், கழுத்தில் ருத்திராட்சமும், பட்டை பட்டையாக விபூதியும் அணிந்து ஆசாரசீலராய்க் காட்சியளித்தார்.

வாசல் திண்ணையில் அவர் வரவை எதிர்நோக்கி யார் யாரோ காத்திருந்தார்கள்.

கனபாடிகள் வந்து விட்டார் என்று தெரிந்ததும் பாடசாலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டது! .

"அதோ அப்பா வந்துட்டாரே!" என்று கமலா சொன்னதும் பாகீரதியின் வயிற்றில் தீக்குழம்பு கலங்கியது.

மற்றவர்கள் மரியாதையாக எழுந்து நிற்க, கனபாடிகள் திண்ணையில் காலைத் தொங்கப் போட்டு அமர்ந்தார்.

"நீங்கள்ளாம் எங்கிருந்து வரேள்?" என்று காத்திருந்தவர்களைப் பார்த்து விசாரித்துக் கொண்டிருந்தபோது "தேள் கொட்டிட்டுது சாமி!" என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான் ஒருவன்.

"அதோ அந்தக் குட்டிச் சுவரிலிருந்து கொஞ்சம் மண்ணாங்கட்டி எடுத்துண்டு வா, போ" என்று கனபாடிகள் அவனையே ஏவ, அவன் ஓடிப் போய் சில மண்கட்டிகளைப் பிய்த்து வந்தான்.

”தேள் கொட்டின இடத்தைக் காட்டு!" என்றார். அவன் வலது கையை நீட்டினான்.

மண்ணாங்கட்டியைச் சன்னமாகத் தூளாக்கி, கல்நீக்கி, மந்திரம் முணுமுணுத்து மூன்று முறை கொட்டின வாயில் வீசி ஊதினார். மூன்றாவது முறை விஷம் முழுவதுமாக இறங்கி கொட்டின வாய்க்கு வந்து எட்டிப் பார்த்தது.

"உன் பேர் என்னப்பா?" என்று கேட்டார் கனபாடிகள்,

”மண்ணாங்கட்டி"

"உன் பேரும் மண்ணாங்கட்டியா" சிரித்தார், மற்றவர்களோடு அவனும் சிரித்தான் . "வலி போயிட்டுதா?"

"பறந்துட்டுது சாமி!" என்று சந்தோஷமாக அவர் காலில் விழுந்தான்.

சுற்றி நின்றவர்கள் கனபாடிகளின் மந்திர சக்தி கண்டு பிரமித்துப் போனார்கள்.

”ஆகாசத்திலிருந்து வரும் வேத ஒலிகளை மகரிஷிகள் கிரகித்து மனப்பாடம் செய்து, கடுமையான விரதங்களைக் கட்டுப்பாடாக அனுஷ்டித்து, வழி வழியாக சீடர்களுக்கும் போதித்ததுதான் இந்தப் புனிதமான வேத மந்திரங்கள். விரத பங்கமின்றி இதை யார் கற்றுத் தேர்ந்தாலும் அவர்கள் வாக்கு பலிக்கும். ஆகவேதான் ரிஷிகளின் சாபத்துக்கு ஆளாகிக் கூடாது என்று சொல்வார்கள். மந்திரசித்தி பெற்றவர்களை வேதம் காப்பாற்றும். வேதவித்துக்களால் உலகமும் காப்பாற்றப்படும்” என்றார் கனபாடிகள்.

”கமலா மாமி! உக்கிராண அறையிலே பாகீரதி மயக்கமா விழுந்துட்டா, ஒடியாங்க!" என்றான் கொண்டி கிட்டா. அடுத்த கணம் பாடசாலைப் பிள்ளைகள் அத்தனை பேரும் ஓடிச்சென்று பாகீரதியைச் சூழ்ந்துகொண்டார்கள்.