நன்றி உரை
நதி நாணலைத்தான் முன்னுரை கேட்க முடியும். புயல் வீசினால் நதிக்கரையிலுள்ள அத்தனை மரங்களும் சாய்ந்து விடுகின்றபோது நாணல் மட்டும்தானே வளைந்து கொடுத்து நிமிர்ந்து நிற்கிறது !
கவியரசு வைரமுத்து நாணல் போல் என்றென்றும் நிலைத்து நிற்பார்.
காஞ்சிப் பெரியவர்கள் குங்குமப் பிரசாதம் தருவது ஒரு சாதாரண மரத் தட்டில் வைத்துதான், அந்த மரத் தட்டு "என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று கேட்பதில்லை.
அந்த பிரசாதத் தட்டுக்குள்ள தகுதியும் புனிதமும் பெருமையும் கவியரசு வைரமுத்து அவர்களுக்கும் உண்டு.
அவர் எழுதியுள்ள முன்னுரையைப் படித்ததும் ஒரு நிமிடம் கண்களை தியானம் போல் மூடிக்கொண்டு யோசித்துப் பார்த்தேன்.
‘இந்தக் கதையை இவரல்லவா எழுதியிருக்கவேண்டும்? அதற்குரிய ஆற்றலும் சொல்லாட்சியும் இவரிடமல்லவா இருக்கின்றன?’ என்று எண்ணி வியந்தேன். இந்தக் கதையை அவரே எழுதியிருந்தால் அது கவிதை அழகோடு கூடிய ஒர் அமரகாவியமாக அமைந்திருக்கும். வார்த்தைகள் வேதம் போலவும் கீதம்போலவும் ஒலித்திருக்கும்.
இவர் என்னுடைய எழுத்தை அணு அணுவாய்ச் சுவைத்து அசை போட்டிருக்கிறார்.
புத்தகம் முழுதும் வரி வரியாகப் படித்து- வரிகளுக்கிடையேயும் படித்து, -- ஆபரணத்திலுள்ள நவரத்தினக் கற்களைப் போல் வார்த்தைகளைப் பொருத்தி முன்னுரை எழுதியிருக்கிறார்.
கவியரசின் பாராட்டுரைதான் நான் இந்தக் கதைக்குப் பெற்றுள்ள சன்மானம், பொன்னாடை எல்லாம். அவருக்கு என் இதயபூர்வமான நன்றி.
---சாவி

