Chapter 5

சந்திரா, அந்த சண்டைக்காட்சிகளில் முன்னாலும் பின்னாலுமாய் மனதை சுழலவிட்டபோது. மீண்டும் பெஞ்சு கிளார்க். முன்னதாக நீதிபதி கேட்ட கேள்வியை இப்போது வர்ணனையோடு திருப்பிக் கேட்டார்.

"இப்படி சும்மா நின்றால்..... என்னம்மா அர்த்தம்? உனக்கு அபார்ஷன் ஆனபிறகு நீ கணவனோடு தாம்பத்தியம் செய்ய மறுத்தியா மறுக்கலையான்னு ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டியதுதானே? ஒரு வார்த்த சொல்றதுக்கு இவ்வளவு நேரமா?"

நீதிமன்றப் பிரக்ஞைக்கு வந்த சந்திரா கட்டுமீறிப்போன வேகவேகமான வெடிக் குரலில், யந்திரம் போல் மறுத்தேன். மறுக்கத்தான் செய்தேன். இப்போ அதுக்கு என்ன என்று நீதிமன்றமே குலுங்குவதுபோல் கத்தினாள். போலீஸ்காரர்கள் நீதிபதிக்கு காவலாக இலைமறைவு காய்மறைவாக நின்று கொண்டார்கள். "சிறையில் இவளை செமத்தியாக கவனிக்கச் சொல்லவேண்டும்" என்று ஒரு பெண் சப்இன்ஸ்பெக்டர் நினைத்துக்கொண்டதுபோல் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.

சாய்ந்து உட்கார்ந்திருந்த நீதிபதி நிமிர்ந்தார். இப்போது கேட்கப் போகும் கேள்வி முக்கியமான கேள்வி. அதைச் சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்கனவே எழுதி வைத்த கேள்வியை மீண்டும் சரிபார்த்துக் கொண்டு கேட்டார்.

"உங்களுக்கும்... இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மார்த்தாண்டனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் கொலை நடந்த நாளில், உங்கள் இருவரையும் கையும் களவுமாய் கண்டுபிடித்த உங்கள் கணவர் கோபாலை, நீங்கள் இருவரும் சேர்ந்து கொன்று விட்டதாகவும் உங்கள் மாமனார் அருணாசலம். மாமியார் அன்னம்மா நாத்தினார் அனிதா பாண்டியன் சாட்சியம் அளித்து இருக்கிறார்கள் இது உண்மையா, பொய்யா?"

சந்திரா, கழுத்தில் மீண்டும் மடித்து போடப் போன தலையை பின்பக்கமாய் சாய்த்து பிடரி முனையில் சாய்த்து வைத்துக் கொண்டாள். அவளை சரி செய்யப் போன பெஞ்ச் கிளார்க்கை நீதிபதி கண்ணசைவு மூலம் சரிப்படுத்தினார். ஏற்கனவே வாய்தாக்களை வாங்கிக் கொண்ட சாராயக்காரர்களும் இதர வாதி, பிரதிவாதிகளும் அவளைப் பார்த்தபடியே நின்றார்கள். அவர்களில் சிலர் வெளியே போய் அங்கே நின்ற தங்களது நண்பர்களையும் இழுத்து வந்தார்கள்.

சந்திரா. தன் குரல்வளையை கைகளால் அழுத்தியபடியே கடந்த காலத்தை முன்னோக்கி இழுத்தும் நிகழ்காலத்தை பின்நோக்கி நகர்த்தியும் பொருத்திக் கொண்டாள். அதே சமயம் எதிர்காலத்தைப் பற்றி கவலையற்றவள் போல் மீண்டும் அந்த கொடூர நிகழ்ச்சியில் பங்காளியாகவும், பார்வையாளியாகவும் மூழ்கிப் போனாள்.

மாமியாரோடு படுத்துக் கொண்டிருந்த சந்திராவை மாடிக்கு அனுப்ப மாமியார் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால் அந்தக் குடும்பமே பேமிலி கோர்ட்டானது. இவள், மூன்று மாத காலம் அந்த வீட்டில் தங்கி இருக்கலாம் என்றும் அதற்குள் சமாதானம் ஏற்படாமல் போனால். அவள் வெளியேற வேண்டும் என்றும் தீர்மானம் ஆயிற்று.

இந்தப் பின்னணியில், அதோ அந்த மறுமுனை கூண்டில் இருக்கும் மார்த்தாண்டன், வீட்டிற்கு வருகிறான். பிளாஸ்டிக் காகிதத்தில் முத்து முத்தான எழுத்துக்கள், வெளியே தெரியும்படி தூக்கி பிடித்து கொண்டு வருகிறான். இவளிடம் அதை நீட்டியபடியே, அவளது கணவன் அவற்றை வீட்டில் கொடுத்து விடும்படி சொன்னதாகச் சொல்கிறான். அவை டி.டி.பி. அலங்கரித்த காகிதங்கள் என்பதை கண்டு கொண்ட சந்திரா, அவனிடம் விவரம் கேட்கிறாள். உடனே இவன், மூன்று பணக்கார நண்பர்களோடு இரண்டு கிரவுண்டு இடத்தில் ஒரு கிரவுண்டு கட்டிட வளாகத்திற்குள் நகலகம், மின்னச்சு , ஃபாக்ஸ், பி.சி.ஓ. எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி., கம்ப்யூட்டர் இன்டர்நெட் பயிற்சி போன்றவற்றை நடத்துவதாகச் சொல்கிறான். உடனே, அவள், தான், டி.டி.பி. பயிற்சியில் சேர முடியுமா என்கிறாள். மாமியார் அவளுக்கு பணம் கொடுக்க முன்வருவதையும் நினைத்துக் கொள்கிறாள். மார்த்தாண்டமும் மூன்று மாதம் மூவாயிரம் ரூபாய்' என்று கூறுகிறான்.

இந்த கட்டியங்கார நிகழ்ச்சியை அடுத்து அந்த கொலைக் காட்சி" நினைவுக்கு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மேகத்திரள். நண்பகலை இரவாக்கிய வேளை... கணிப்பொறிப் பயிற்சி பெற்று அந்த நிறுவனத்திலேயே வேலையில் சேர்ந்த சந்திரா உழைக்கும் மகளிர் விடுதியில் சேர்வதற்காக மாடிக்கு வந்து மர பீரோவுக்குள் இருந்த புடவை வகையறாக்களை அடுக்கி விட்டு, தனது கல்லூரி சான்றிதழ்களை உள்ளடக்கிய கோப்பைத் தேடுகிறாள். கீழே மாமியார் வாய்விட்டு அழுவதை அவளால் தாங்க முடியவில்லை. தாயினும் இனிய அவளோடு இருப்பதற்காக கணவனோடு ஏதாவது ஒரு வகையில் இணைந்து கொள்ளலாமா என்றும் தடுமாறுகிறாள். கீழே நாத்தினார் அம்மாவைத் திட்டுவது அவளுக்குக் கேட்கிறது. "உன் மருமகள் இந்த வீட்டை விட்டுப் போவதை நீ தடுத்தால் உன் மகள் போய்விடுவாள்" என்று கத்துவது காதை அடைக்கிறது. சந்திராவின் மனம் இறுகிப் போகிறது. சான்றிதழ் கோப்பு கைவசப்படுகிறது.

அப்போது பார்த்து, அறைக்கதவின் மின்சார மணி ஒலிக்கிறது. அதற்கு தாள நயமாய் வாசற்கதவும் தட்டப்படுகிறது. அவள் திரும்பிப் பார்த்தாள். இந்த மார்த்தாண்டன் அவசர அவசரமாக உள்ளே வருகிறான்.

"தலை போகிற அவசரம் அதனாலதான் வந்தேம்மா... விமலா அதான் அடிக்கடி வருமே அந்தப் பெண் டாக்டரேட் பட்டத்திற்குக் கொடுத்த பிராஜக்ட் ரிப்போர்ட்டை நீங்கதானே கம்ப்யூட்டரில் போட்டது?"

"ஆமாம். அதுக்கென்ன?"

"இப்பவே அந்த ரிப்போர்ட் வேணுமுன்னு அவள் கேட்கிறாள். கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அது கரப்ட் ஆகிட்டு. இருந்த ரிப்போர்ட்டும் போய்ட்டு. அந்தப் பெண் விவரம் தெரிந்ததும் அழுது அடம் பிடிக்காள். நுகர்வோர் நீதிமன்றத்திற்குப் போகப்போவதாக மிரட்டுறாள். நீங்கதான் வந்து அவளைச் சமாளிக்கணும்".

"சமாளிக்க வேண்டியதில்லை. நான் ஃபிளாப்பி டிஸ்கில் பதிவு செய்திருக்கேன்."

"அப்பாடா இப்பதான் எனக்கு உயிரே வந்தது." "திரும்பி வந்த உயிரை போக வைக்கிறேண்டா."

அந்த அறையின் வாசலில் பற்கடியும், சொற்கடியுமாய் நின்ற கோபால், மார்த்தாண்டனை மல்லாக்கத் தள்ளி, அவன் வயிற்றில் ஏறி உட்காருகிறான். நிலை குலைந்து கிடந்தவனின் தலையை முடியோடு பற்றித் தரையில் மோதுகிறான். மார்த்தாண்டனின் விழிகள் பிதுங்குகின்றன. நடப்பதை நம்பாமல் பார்த்துக் கொண்டு இருந்த சந்திரா, விநோதமான குரல்களை எழுப்பியபடியே, கணவனின் கைகளை பிடிக்கப் போகிறாள். உடனே, அவன், இவள் கழுத்தை வலது கையால் நெறித்தபடியே இடது கையால் மார்த்தாண்டனின் தலையை அழுத்துகிறான். சந்திராவின் துள்ளித் துடித்த இடது கை தற்காப்பாகவோ அல்லது எதேச்சையாகவோ கணவனின் கழுத்தில் பதிகிறது. அவ்வளவுதான் அவளுக்குத் தெரியும். கோபால், வாசற் படிக்கட்டில் மல்லாக்க விழுகிறான். படிக்கட்டு ரத்த வெள்ளத்தில் மறைகிறது.

அப்புறம் மாமியாரின் கத்தல், தாய்மையின் இன்னொரு பக்கம்.... பாவி, வஞ்சகி என் பிள்ளையை கொன்னுட்டியே, கொன்னுட்டியே" என்று ஒப்பாரி வைக்கிறது. முன்னாள் தோழி அனிதா கொடுக்கும் பலமான அடிகள், இவளுக்கு மரத்துப் போகின்றன. பின்னர் போலீஸ், காவல் நிலையம் அதன் வழியாக சிறைச்சாலை... நீதிமன்றம்...

இப்போது பெஞ்ச் கிளார்க், சந்திராவை உசுப்பி விடவேண்டிய அவசியமில்லை . சந்திரா கூண்டின் குமிழ்களில் உடல் குவித்து, தலை மோதினாள். திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் வைப்பார்களே அப்படிப்பட்ட ரத்தக் குங்குமம். அதுவும் வேர்வைத் துளிகளில் கரைந்து கண்ணீர் துளிகளில் மறைந்தது. அதுவரை வாய் திறக்காத அரசாங்க வக்கீல் "தி இஸ் ஹிஸ்டிானிக் இது ஒரு நாடகம்" என்கிறார்.

சந்திரா ஒப்பாரியாய் சொன்னாள். போலீஸ் பெண்கள் பிடித்து வைத்த இரண்டு கைகளையும் தூக்கித் தூக்கி ராட்டிணம் போல அவர்களை சுழலச் செய்தாள். பின்னர் மாறி மாறி ஒப்பித்தாள்.

நானா செய்யல்லையே. தானா நடந்துட்டே.... எனக்கு எதுவும் தெரியலையே... தெரியலையே.

நீதிபதியின் மெல்லிய வார்த்தைகளை பெஞ்ச் கிளார்க் உரத்த குரலாக்கினார்.

"சரியாக மூன்று மணிக்கு கோர்ட் கூடும்".