Chapter 4
இரண்டாவது கேள்விக்கும் வில்லங்கம் இல்லாமல் பதில் வாங்கிய திருப்தியோடு நீதிபதி மூன்றாவது கேள்விக்கு வந்தார்.
"உங்கள் கணவர் உங்களை ஒரு தடவை ஆசையோடு நெருங்கும் போது, நீங்கள் தாழிட்ட கதவை உடைக்காத குறையாய் திறந்து கீழ் தளத்திற்கு வந்ததாகவும். அப்படியும் அவர் கீழே இறங்கி வந்து உங்களை மேலே வரும்படி விடுத்த வேண்டுகோளை நிராகரித்து விட்டதாகவும், உங்கள் மாமனார் அருணாசலம் சாட்சி கூறி இருக்கிறார். உண்மையா? பொய்யா?"
சந்திரா. அந்த நீதிமன்றத்தின் ஒரு பகுதியை வீடாகவும் மறுபகுதியை மருத்துவமனையாவும் கற்பித்துக் கொண்டாள். அந்த மருத்துவமனையில் இருந்து ஆறாவது நாள் விடுவிக்கப்படுகிறாள். கணவனும், மாமியாரும் எஞ்சிய பணத்தைக் கட்டிவிட்டு அவளை மீட்டெடுக்கிறார்கள். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே. சந்திரா அவனிடம் சூடாகக் கேட்கப் போகிறாள். தாயாகிப் போன மாமியார் மனம் நோகக்கூடாது, என்பதற்காக மல்லாந்து தலை சாய்த்து கண்ணீரை பிடரி வழியாக விடுகிறாள்.
வீட்டுக்குத் திரும்பினால், இப்பொழுது வாயும் வயிருமாய் இருக்கும் இதே அனிதா ஒரு தடவை அபார்ஷன் வந்தால். அடுத்தடுத்து அதுதான் வருமாம். இதுக்குதான் ஜாதகம் பொருத்தம் பார்க்கிறது" என்று பெரியமனுஷி போல் குடி குடியாய் தலையாட்டும் தந்தையிடம் பேசுவது போல் ஏசினாள்.
கோபாலும், சந்திராவும். மாடி அறைக்கு வருகிறார்கள். அவன், அவள் வலது தோளில் கைபோட்டு, இடது தோளில் முகம் சாய்க்கிறான். "அனிதா ஒரு லூஸ் அவளைக் காதலிக்க ஆளில்லை என்கிற ஆத்திரத்தில் உன் மேல் பாய்கிறாள். அதோட அவள் இந்த வீட்டில் நிரந்தரமாக இருக்கப் போறவளும் இல்லை. அவளை பெரிசா எடுத்துக்காதே" என்கிறான்.
சந்திரா, அவன் பிடியில் இருந்து விடுபட்டு, இடைவெளியாய் விலகி நின்று, நேருக்கு நேராய் கேட்கிறாள். புலம்புகிறாள்.
"உங்களை நம்பி மோசம் போயிட்டேனே... நம்பவைத்து கழுத்தை அறுத்துட்டீங்களே... நீங்கள் ஒழுக்கமானவர், உண்மையானவர் என்று நம்பி மோசம் போயிட்டேனே...."
"ஏய் சந்திரா என்ன ஆச்சு உனக்கு? பிரசவத்தில்தான் பெண்களுக்கு தற்காலிகமா சித்தம் கலங்கும்.... அபார்ஷனிலுமா?"
"சும்மா பினாத்தாதீங்க. உங்களுக்கு எத்தனையோ பெண்களில் நானும் ஒருத்தி. எவள் எவள் கிட்டல்லாமோ இருந்து எல்லா நோயையும் வாங்கி எனக்கு தந்திட்டீங்க."
"சும்மா உளறாதே.?"
"உளறல... ஒங்க உடம்புக்குள் இருக்கிற சிபிலிஸ் கிருமிகள் உங்களோட சுயரூபத்தை என் உடல் வழியாய் காட்டிக் கொடுத்திருக்கு. ஒரு வேளை எய்ட்ஸ் கூட இருக்கலாமாம்... எல்லாம் என் தலைவிதி ."
"சும்மா புருடா விடாதே...... உனக்கு யார் சொன்னது?"
"காலேஜில் முதல் வருடம் எங்க கூட படிச்சாளே காய்த்திரி... இப்ப அவள் டாக்டர். எனக்கு சிகிச்சை அளித்தது அவள்தான்.
குச்சிக் காலும் குச்சி கையுமாய் தொடப்பத்திற்கு துணி கட்டின மாதிரி இருப்பாளே.... அந்தக் காய்த்திரியா? அவளுக்கு நான் அவளை சைட் அடிக்கலைன்னு அப்பவே கோபம். உன் மேல பொறாமை கோபால். அப்படிச் சொன்னாலும் ஆடிப் போய்விட்டான். ஒருவேளை தனக்கும் சிபிலிஸ் கிடக்கட்டும்... எய்ட்ஸ் வந்து இருக்கலாமோ என்று ஒரு பயம். என்ன பதில் அளிப்பது என்று புரியாமல் விழித்தான். அவன் உடம்பிற்குள் ஒவ்வொரு உறுப்புகளும் கசிந்து கொண்டு இருப்பது போன்ற அதிர்ச்சி. அந்த உறுப்புகளின் அணுக்கள் சிதறி அவன் பஞ்ச பூதங்களில் தனித்தனி மூலங்களாய் ஆகிப் போனது போன்ற பீதி.
இதற்குள், டாக்டர் காய்த்திரி மீது பழி போட்டதால். கணவன் மீது சந்திராவிற்கு வெறுப்பு கூடியது. கல்லூரி காலத்தில் ஏடாகூடமாக பழக வரும் மாணவர்களிடம் துணிச்சலோடு காலில் கிடக்கும் செருப்பை தூக்கிக் காட்டுகிறவள், காயத்திரி. இதனாலயே மாணவ மாணவிகள் அவளுக்கு மிஸ் செருப்புத் தூக்கி' என்ற பட்டம் வழங்கினார்கள். அவளைப் பழிக்கிற எவனும் பழிகாரனாகத்தான் இருக்க முடியும்.
என்றாலும் சந்திரா நான்கையும் யோசித்துப் பார்த்துவிட்டு அவனிடம் அழுத்தமான அமைதியோடு சாப விமோசனம் கொடுக்கப் போனாள்.
"இனிமேலாவது உங்களுக்கு நான் ஆயிரத்தில் ஒருத்தியாக ஆகாமல் இருந்தால் போதும். ஆனலும் இப்போ அது முடியாது. உங்களுக்கும் டெஸ்ட் முடிந்து ரிசல்ட் வந்த பிறகுதான் அதெல்லாம்.."
"டாக்டர் காய்த்திரிதானே போட்டுக் கொடுத்தாள்"
"இல்லை அவளோட புரொபஸர் டாக்டர் முத்துராஜ்'
"வேலிக்கு ஓணான் சாட்சியா?" "சரி வேற டாக்டரைப் பார்ப்போம்."
"பார்க்காட்டால்?"
"உங்களுக்கு சிபிலிஸ் பூர்ணமா குணமாயிட்டுன்னும்... எய்ட்ஸ் இல்லைன்னும் டாக்டர் சொன்ன பிறகுதான் நாம் உடலளவில் உறவாட முடியும்.'
"அப்புறம் நீதான் வருத்தப்படுவே."
"இப்போ மட்டும் என்னவாம்..."
பதினைந்து நாட்கள் ஆணாதிக்கமாகவும், பெண்மையின் சீறலாகவும் ஓடின. பதினாறாவது நாள் அவன் அவளை நம்பிக்கையோடு நெருங்கினான். தன்னம்பிக்கையாய் பேசினான்.
"டாக்டரிடம் டெஸ்ட் செய்தேன். எனக்கு சிபிலிஸ் கிடையாது. வேணுமின்னா டாக்டர் முத்துராஜிடம் கூட்டிட்டுப் போ."
சந்திராவிற்குப் புரிந்துவிட்டது. ஆசாமி நோயை குணப்படுத்திவிட்டு அதை ஒப்புக்கொள்ளும் நேர்மைத் திறனின்றி பேசுகிறான். புறக்காரணங்களினால் இவரோடுதான் வாழ்ந்தாக வேண்டும். அந்த வகையில் சிபிலிஸ் போனதில் மகிழ்ச்சி. அது... அந்த எய்ட்ஸ் எனக்கு இல்லைன்னு காய்த்திரி சொல்லிட்டாள். ஆனால் இவருக்கு எய்ட்ஸ் இருக்காது என்பது என்ன நிச்சயம்?"
அந்த நிச்சயமில்லாத நிச்சயத்தை தோலுரித்துப் பார்பதற்காக ஒரு கேள்வி கேட்டாள்.
"எய்ட்ஸ் கிருமிக்கும் டெஸ்ட் செய்தீர்களா?"
கோபாலுக்கு முகம் அந்த கிருமி போலவே புதிய வேடம் போட்டது. நரம்புகள் புடைத்தன. கண்கள் கோணல்மாணலாக போயின. எய்ட்ஸ் டெஸ்ட் செய்ய அவனுக்குப் பயம். அந்தப் பயம் சந்திராவை பயமுறுத்துவதாய் உருமாறியது.
"என்ன நீ ... விட்டால் ரொம்பத்தான் போறே? இந்த நோயும் அந்த நோயும் உன்கிட்ட இருந்து எனக்கு ஏன் வந்திருக்கக்கூடாது?"
"அப்படி இல்லைன்னு உங்களுக்கே தெரியும்.. சும்மா வீம்புக்குக் கேக்குறீங்க. நானும் வீம்புக்கு பதிலளிக்கேன். தகாத உறவுகளால் சன்மான்கள் வாங்குன உங்களை நான் ஏற்றுக்கொள்வது மாதிரி, நான் கள்ள உறவு வைத்திருந்தாலும் என்னையும் நீங்க ஏத்துக்கலாமே. எனக்கு எய்ட்ஸ் டெஸ்ட்டுல அந்தக் கிருமி இல்லன்னு தெரிஞ்சிட்டுது.... உங்களுக்கும் இல்லன்னா உங்களவிட நான்தான் அதிகமா சந்தோஷப்படுவேன். அப்போ குழந்தை பெத்துக்கலாம். இல்லாட்டி காண்டம் இருக்கவே இருக்குது.... என் பாவத்தின் சம்பளமாக இந்த காண்டம் சலுகையை மட்டுமே உங்களுக்கு வழங்க முடியும்... அதுவும் டெஸ்ட் முடிஞ்ச பிறகுதான். ஒரு ஆண் எப்படி இருந்தாலும், அவன் மனைவி அவனுக்கு உடலாலும் கட்டுப்படணும் என்று நினைக்கிறது இந்தக் காலத்தில் எடுபடாது."
'அப்போ நீ இந்த வீட்டவிட்டு வெளியேற வேண்டியது இருக்கும்.'
அதுக்கும் நான் தயார்... ஆனாலும் வெளியில் போய் நான் கெட்டுச் சீரழிந்தால் உத்தமபுத்திரனான உங்களுக்குத்தான் கெட்ட பெயர். அதனால நாலு மாதம் டைம் கொடுங்க. கம்ப்யூடர்ல டிடிபி கத்துக்குறதுக்கு 5000 ரூபாய் கொடுங்க. இந்தப் பணத்திற்குப் பிறகு உங்ககிட்ட இருந்து ஜீவனாம்சம் கேட்கமாட்டேன்.'
"எனக்கு வருகிற கோபத்திற்கு..."
"கணவனின் கோபத்தை தணிக்கிறது மனைவியோட கடமைதான். அதுக்காக ஒரே செல்வமான உடல் ஆரோக்கியத்தை அவளால காவு கொடுக்க முடியாது ஸார்."
கோபால் ஆள்காட்டி விரலால் தனது கன்னத்தை அடித்தபடி அவளையே வெறித்துப் பார்த்தான். அது, அவளை நிரடலாக்கியது. "என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை" என்பது மாதிரி அவனுடன் தோழமையாக பேசப்போனாள். அதற்காக கட்டிலில் இருந்து கூட எழப்போனாள்.
இதற்குள், அவன், அவள் மீது பாய்ந்தான். கட்டில் மெத்தையில் ஏறி நின்று அவள் மேல் தொபென்று விழுந்தான். "என்னடி நினைச்சுக்கிட்ட? சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை ஆண்பிள்ளைதான்" என்று வார்த்தைகளை சிதறடித்தான். அவளது இரண்டு கைகளையும் நீட்டி தனது கைமுட்டிகளால் அழுத்திக்கொண்டான். கால்களாலேயே அவளது ஆடைகளைக் களையப்போனான். இதனை சிறிதும் எதிர்பாராத அவள், அவனுள் சிக்கித் தவித்து "வேண்டாம் வேண்டாம்" என்று குரலிட்டாள். இந்தப் போராட்டத்தில், தான் தோல்வியுற்றால், ஒரு எய்ட்ஸ் நோயாளியாகி அல்லது சிலிபிஸ் நோயில் மாட்டி, உடலெல்லாம் இந்திரமயமாகி தொழுநோயாளியைவிடக் கேவலமாக மாறவேண்டியது இருக்கும் என்ற எண்ணம் அந்த வேளையிலும் அவள் மனதில் உடனடியாய் உட்புகுந்தது. மேலே படர்ந்தவன் ஒரு எய்ட்ஸ் அரக்கன் போலவும், அவனே பூதாகரமான எய்ட்ஸ் கிருமியாகி தன்னை அழுத்துவதாகவும் தோன்றியது.
கோபால் முதுகை மேல்நோக்கி வளைத்தபோது அதில் கிடைத்த இடைவெளியில் அவள் கால்களால் அவன் மார்பை தள்ளிவிட்டாள். அவன் படுக்கையின் பின்பக்கம் மல்லாக்க சாய்ந்த போது. அவள் கட்டிலில் இருந்து துள்ளிக்குதித்து தாழிட்ட கதவை அவசர அசரமாக விலக்கி மாடிப்படிகளில் கீழ் நோக்கி ஓடினாள்.
படியோரம் விக்கித்து நின்றவளைப் பார்த்து மாமியார் ஓடோடி வந்தாள். ஒரு நாவலை படித்துக்கொண்டிருந்த அனிதா அதிலிருந்து கண்களை நிமிர்த்திப் பார்த்தாள் அவள் தந்தை அருணாசலமோ குடிபோதையில் ஆம்பள ஆம்பளதான். பொம்பள பொம்பளதான் என்று மார் தட்டினார். இந்தச் செய்தி மருமகளுக்காக மட்டுமல்லாது மனைவிக்கும் என்பதுபோல் அவளையும் முறைத்தார்.
இதற்குள் கோபால் கீழ்நோக்கி ஓடிவந்தான். சந்திராவின் தலைமுடியை பிடித்திழுத்து "வாடி.... வாடி..' என்று கத்தியபடியே படிமேல் கொண்டுவந்து அவளை மேல்நோக்கி இழுத்தான். உடனே, அத்தனை குடிவெறியிலும் அவன் தகப்பன் "டேய் அவள் அரிவாள் பக்கிரியோட தங்கைடா" என்று உளறிப் பேசிய போது, கோபால் பெட்டிப்பாம்பாய் ஆனது போல் அவளை விட்டுவிட்டு படியில் நெடுஞ்சாண் கிடையாய் படிந்தான். "உன் அண்ணன் கிட்ட சொல்லிடாதே" என்பது மாதிரி அவளைப் பரிதாபமாக முகங்காட்டிப் பார்த்துக் கொண்டான்...
சந்திரா மாமியார் தோளில் சாய்ந்தாள். உடனே அவள், மருமகள் முதுகைத் தட்டிக்கொடுத்தாள். முகத்தைத் துடைத்து கையை ஈரப்படுத்தினாள். "நான் மாட்டியது மாதிரி நீயும் மாட்டிட்டியேம்மா" என்று அவளுக்கு மட்டும் கேட்பது போல் கிசுகிசுத்தாள். சந்திரா, திட்டவட்டமாகத் தெரிவித்தாள்.
"அத்தை இனிமேல் உங்க கூடத்தான் படுப்பேன்... மாடிக்குப் போகமாட்டேன்."
அதுக்கென்னம்மா.... அதுக்கென்னம்மா... உன் இஷ்டம்."
நாவலுக்குள் இன்னும் கண்களை புதைக்காமல் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த அனிதா "எப்பா! முதல்ல உங்க பொண்டாட்டிய வீட்ட விட்டு துரத்துங்க.... ஏன் அண்ணா உனக்கு வேற பொண்ணே கிடைக்காதா.... பிடிக்காட்டி துரத்த வேண்டியதுதானே" என்று நாவலை வீசிப்போட்டு விட்டுக் கத்தினாள். அவளுக்கு மறைமுகமாக பதிலளிப்பதுபோல், சந்திரா பதிலளித்தாள்.
"நாலுமாதம் டைம் கொடுங்க அத்தே நானே போய்டுவேன்...."

