Chapter 2
சந்திரா, நீதிமன்ற எதிர்யார்ப்பிற்கு ஏற்ப ஒரே வார்த்தையில் பதில் அளிக்காமல் தன்னுள்ளே மூழ்கிப் போகிறாள்.
அந்த நீதிமன்றமே கல்லூரி வளாகமாகிறது. கல்லுரிக்காதலும் அதன் பின்விளைவுகளும், அவள் முன்னால் படக்காட்சிகளாய் தோற்றம் காட்டின. கோபால், அங்கே வந்து. அவளுடன் அரட்டை அடிக்கிறான். அவன் கண்களுக்குள் என்ன மாயமோ .... மந்திரமோ. இயல்பாய் வருவதோ.... இட்டுக்கட்டி வருவதோ.....
பலருடைய முன்னிலையிலும் அவளுக்கு மட்டுமே புலப்படும் படியான சுகமான திருட்டுப்பார்வை அதற்கேற்ற குழைவான முகம் - அந்த முகத்திற்கேற்ற கனிவான பேச்சு... நாயே, பேயே என்று வீட்டில் ஏசப்பட்ட இவளை, மேடம், மேடம் என்று கூப்பிடும் காந்தப்பேச்சு... அடுத்தவர் பேசும் போது, அதை அக்கறையாக கேட்பது போன்ற மெல்லிய தலையசைத்தல் - அவர்களின் வார்த்தைகளுக்கு ஏற்ற லாகவ அதிர்வுகள்... ஆக மொத்தத்தில், பெண்களை வழிபடவைக்கும் ஒரு நாகப்பாம்பு - ஆனாலும் அவனை இவளாகத் தேடிப்போகவில்லை. நீதிமன்ற குற்றச்சாட்டில் குறிப்பிட்டிருப்பதுபோல் அவனைக் கைபிடித்தது திட்டமிட்ட சதியும் இல்லை. ஆனால், சம்பவங்களோ சதிகாரத் தனமானவை.
சொந்த கிராமத்திலிருந்து. ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லூரிக்கு . சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தவள் இந்தச் சந்திரா இவளது வகுப்புத் தோழிகளான இதே இந்த அனிதாவும் இவள் வாழ்க்கையில் திருப்பு-முனையான டாக்டர் காயத்திரியும், நெருக்கமானவர்கள். ஒன்றாக படிப்பது, ஒன்றாக உறங்குவது, ஒன்றாக திரிவது ஆகிய அத்தனை செயல்களிலும் ஒன்றாக ஈடுபட்டவர்கள். இதனால் தான், கல்லூரி மாணவர்கள், இவள்களுக்கு திரி கேர்ல் மஸ்கட்டியர்ஸ்' என்று வக்கணை வைத்தார்கள்.
அப்போது பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கோபால், தங்கை அனிதாவை காலையில் கல்லுரியில் இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு, மாலையில் திரும்பும்போது ஏற்றிக் கொண்டு போவான். இந்தச் சந்திராவும் காயத்திரியோடு சேர்ந்து, தோழியை மோட்டார் பைக்கில் இருந்து வரவேற்பதையும், வழியனுப்புவதையும் வாடிக்கையாக கொண்டவர்கள். சில சமயம் ஆபாசமாகப் பேசும் பறட்டை தலை மாணவர்களுக்கிடையே, கோபால், ஜென்டில்மேனாக தோன்றினான். இவளுக்கு அவனைப் பிடித்துப் போய்விட்டது. அவனும் இவளை தனித்துவமாகப் பார்த்தான். சாதாரண பழக்கந்தான்.
என்றாலும் கல்லூரி படிப்பு நிறைவு பெற்ற போது இவனைப் பிரியப்போகிறோமே என்ற வேதனை; இவளுக்கு அழுகையானது. இவனும், தோழிகள் எங்கேயோ போயிருந்த சமயத்தில், இவளை நெருங்கி என்னை மறந்திடாதிங்க' நான் இப்போ முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் இருப்பதற்கு, நீங்களே காரணம் என்றான். அவள் புரியாமல் பார்த்தபோது. "நீங்கதான் என் அறிவை ஒப்பு கொண்டவங்க. என்னை கேம்பஸ் தேர்வுக்கு போகச் சொன்னவங்க... உங்களால் தான் நான் பெரிய வேலையில் இருக்கேன். எல்லாப் புகழும் உங்களுக்கே" என்று சொல்லிவிட்டு அக்கம் பக்கம் பார்த்தான். பிறகு ஒங்களால் முன்னேறிய எனக்கு கைக்கொடுக்கக் கூடாதா" என்று கண்சிமிட்டி கேட்டான். பிறகு அவளை நோக்கி தன் கைகளை நீட்டினான். அவளும் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, அவன் கைவிரல்களோடு தனது கை விரல்களை பிணைத்துக்கொண்டாள். கையை எடுக்க மனமில்லாமலே அவனை நாணத்தோடு பார்த்தாள்.
இதற்குப் பிறகு, டவுனில் சந்திப்பதும், அவனோடு சிற்றுண்டி விடுதிகளுக்கு செல்வதும், அவனது செல்லத்தனமான தீண்டலை செல்லமாக சிணுங்கியபடியே அனுபவிப்பதும், அனுபவிக்க விடுவதும் வாடிக்கையாகி விட்டது. ஒருநாள் இருவரும் வழக்கம் போல் ஒரு விடுதியை நோக்கி நடந்தபோது, சந்திராவின் அண்ணன் அவர்களை வழிமறித்தான். அசல் சாராய வியாபாரி... அந்தத் தொழிலுக்கு ஏற்ற தாதா.... அவன், அதுவரை இரண்டு கொலைகளை செய்திருப்பதாகவும் கிராமத்தில் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனாலும், தங்கையான இவளை உயிருக்கு மேலாக நேசித்தவன். அவ்வப்போது வீட்டிற்கு வருவான். அம்மாவை அடித்துப் போடுவான். மனைவியை உதைத்துப் போடுவான் ஆனால் இந்த சந்திரா என்றால் அவனது மறுப்பக்கமான பாசம் வெளிப்படும்.
இப்போது, இவள் இந்த கோபாலோடு வந்ததை, தனது சுயமரியாதைக்கு ஏற்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டான். குடும்ப மானத்தை விட்டுக் கொடுத்த தங்கைக்காரி, இனிமேல் வீட்டிற்குள் வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் சாராய அடுப்புக்குள் வைத்து எரிக்க போவதாகவும் சூளுரைத்தான். அதே சமயம், அந்த உலகமகா முரடனாய் அரிவாள் பக்கிரி' என்று அறியப்பட்ட மாரியப்பனுக்கு தான் ஆடாவிட்டாலும் ஒரே ஜீன்களைக் கொண்ட சதையாடியது.
இந்த கோபால் மட்டும், அப்பவே அந்தக் கணத்திலேயே, தனது தங்கையைத் திருமணம் செய்யவில்லை என்றால், இன்னொருத்திக்குத் தாலிகட்ட அவன் கையிருக்காது என்றான், மாரியப்பன். ஒரேயடியாக கொல்லாமல், ஒரு கையையோ, காலையோ எடுத்து, அவனை வாழ்நாள் முழுவதும் ஊனமாக்க போவதாகவும் மிரட்டினான். அண்ணன் சொன்னால் சொன்னதுதான் என்பதை அறிந்து வைத்திருந்த சந்திரா, தன் உயிருக்காக வாதாடாமல், காதலனுக்கு உயிர் பிச்சை கேட்டாள். அண்ணனின் யோசனைப்படி ஒரு கோவிலுக்குப் போனார்கள். அண்ணனே ஒரு ரெடிமேட் தங்கத் தாலியை வாங்கி வந்து, தங்கையின் கழுத்தில் கோபாலை, பிள்ளையார் கோவிலறிய, அதன் அர்ச்சகர் அறிய பக்தர்கள் அறிய, தாலிகட்ட வைத்தான். பின்னர் தம்பதியரை கூட்டிச் சென்று, மாப்பிள்ளை வீட்டில் விட்டான். ஏதாவது ஏடாகூடமாக நடந்தால், அந்த வீடே தரைமட்டமாகிவிடும் என்று மிரட்டி விட்டுப் போய்விட்டான்.
இந்த அரிவாள் பக்கிரியைப் பற்றி அறிந்திருந்த மாமனார் அருணாசலம், வாய் மூடிக்கொண்டார். அந்த தானைத் தலைவன் சென்றதும். மகனை ஒப்புக்குத் திட்டினார். பிறகு வீட்டிற்கு வந்திருக்கும் புதிய வரவால், மகன், தனக்கு கொடுக்கும் மாமூல் நின்றுபோய், குடிக்க காசில்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தில், "பிடித்தாலும் பிடித்தே புளியங் கொம்பாய்தான் பிடிச்சிருக்கே. குடும்ப பாங்கான பெண்தாண்டா!" என்றார். மாமியார் அன்னம்மாவும் நடந்ததை மாற்ற முடியாது என்பதால். நடந்ததற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டாள்.
ஆனால், ஏழாண்டு காலத் தோழியான கோபாலின் தங்கை அனிதாதான் இவளை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். அப்போது திருமணம் ஆகாத இவள், தனது முன்னாள் தோழியைப் பார்த்து காறித் துப்பினாள். சிந்தித்துப் பார்த்த சந்திராவுக்கு அவள் எதிர்ப்பு பெரியதாக தோன்றவில்லை. அதற்கு சமாதானம் கற்பித்தாள். ஒருவேளை இந்த அனிதா, தன்னை இவள் கள்ளத்தனமாய் பயன்படுத்திக் கொண்டதாக நியாயமாகவே நினைத்திருக்கலாம். அல்லது, உடம்பில் ஒரு முள் குத்துவதைக் கூட தன்னிடம் சொல்லும் தோழியான இவள், இந்தக் காதல் விவகாரத்தை சொல்லாமல் போனதில் ஆத்திரம் அடைந்திருக்கலாம். ஒருவர். இன்னொருவர் மீது வைக்கும் பாசமும், நேசமும் வஞ்சகமாய் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகம் வந்தால், பாசம் வைத்தவர் அந்தப் பாசத்தையே, அதே எதிர் விகிதாச்சாரத்தில் பகையாக மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்த இந்த சந்திரா, அவளை விட்டுப் பிடிக்க நினைத்தாள். ஆனால் அனிதா, சமாதானப்பட விரும்பாமல், இவளுடன் அடிக்கடி வம்புச் சண்டைகளுக்குத்தான் போனாள்.
இப்போது நீதிமன்ற சாட்சிக் கூண்டுக்குள் கிடந்த சந்திரா. பழைய வடுக்களை குடைந்து கொண்டிருந்தபோது ஒரு அதட்டல் கேட்டது. நீதிபதியின் பொறுமையின்மையைக் காட்டும் பெஞ்ச் கிளார்க்கின் அதட்டல்.
"உனக்காக எவ்வளவு நேரம் காதத்திருக்கது? உன் நாத்தினார் திருமதி. அனிதா பாண்டியன் சாட்சி சொன்னதுமாதிரி, நீ உன் கணவரை திட்டம் போட்டுத்தான் கைப்பற்றினியா? ஒரே வார்த்தையில் சொல் சும்மா தலையாட்டினால் எப்படி? வார்த்தையால் சொல்லு"
சந்திரா, 'இல்லை' என்று ஒற்றை வார்த்தையை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாதவள் போல் தட்டுத் தடுமாறிப் பதிலாக்கி விட்டு முகத்தை மூடிக்கொள்கிறாள். மீண்டும் அதட்டல். "இது கோர்ட்டும்மா.... உன் வீடில்ல.... கையை, சட்டத்தில் இருந்து எடும்மா... அய்யாவுடைய அடுத்த கேள்வியை கவனமாய் கேட்டு உண்டு, இல்லை என்று மட்டும் பதில் சொல்".

