முதற்பதிப்பின் முன்னுரை
எனது முதற் புதினமாகிய 'பிரதாப முதலியார் சரித்திரத்திற்கு அளிக்கப்பட்ட நல்வரவேற்பே எனது இவ் இரண்டாவது புனிதத்தை எழுதுவதற்கும் என்னை ஊக்குகின்றது. இது முந்திய தவ்வளவு நீண்ட நூலன்றாயினும், இதிலும் மனித வாழ்க்கைப் பண்பின் பல்வேறு கோணங்களும் பல்வகைப்பட்ட நிகழ்ச்சிகளும் சூழல்களும் இடம் பெறுவதுடன், பல்வேறுபட்ட வாழ்க்கைத் தத்துவங்களையும் இது விளக்குவதாயுள்ளது. மேலும் உடல்நல நூலடிப்படையிலேயே குழந்தை மணம் முதலிய சில பல சமூகப் பழக்க வழக்கங்களின் தீமைகளையும் பிறவற்றையும் இதில் நான் விளக்கியுள்ளேன். இந்து இளைஞர்களுக்கு வாழ்க்கை ஒழுங்கு பற்றிய கல்விப் பயிற்சியளிப்பது மிகவும் இன்றியமையாத தென்பதனை எங்கும் யாவரும் வற்புறுத்தி வரும். இந்நாட்களில், இந் நூலும் இதனுடன் இணைக்கப் பட்டிருக்கும் பிற்சேர்க்கையும் மிகவும் பயனுடையதா- யிருக்குமென்று நம்புகிறோம்.
'மோனமே பொன்னான ஞானம்' என்ற மேற்கோளுரையை மனத்துட்கொண்டு இம் முன்னுரையில் இதனினும் விளக்கமாக எதனையும் விளக்காது விடுக்கின்றேன். இத் தத்துவத்தை நான் பின்பற்றுகையில் துருக்கிய சமய உரையாளர் காட்டிய முறை எனக்கு ஒரு முன்மாதிரியாய் அமைய வல்லது. திருப்பள்ளியின் மேடையேறி அடியார் குழுவை நோக்கி அவர், "மெய்ம்மையிலூன்றிய மெய்யன்பர்களே! நான் உங்களிடம் என்ன கூறப்போகிறேன் என்பதனை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டாராம். அனைவரும் "அறியோம்" என்று கூறியதுமே அவர் "சரி, அப்படியானால் உங்களிடம் கூறுவதில் பயனிருக்க மாட்டாது" என்று கூறிவாளா இறங்கிவிட்டாராம். மற்றொரு நாள் இதே மாதிரி அவர் "மெய்யன்பர்களே, நான் என்ன கூற இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர் களா?" என்று கேட்டதும், கேட்போர் "ஆம், அறிவோம்" என்றனர். அப்போது அவர் "சரி, அப்படியானால் அறிந்தவரிடம் எதுவும் கூறத் தேவையில்லை," என்று கூறி முன் போல் இறங்கிவிட்டார். அடுத்த தடவை எப்படியாவது அவரைத் தம் திறமையால் பேசவைத்து விட வேண்டும் என்று திருக் கூட்டத்தார் உறுதி செய்து கொண்டனர். ஆகவே மறு தடவை அவர் பேருரையாற்ற முன்வந்து வழக்கமான அவர் கேள்வியைக் கேட்டபோது அவர்கள், "எங்களில் சிலருக்குத் தெரியும். சிலருக்குத் தெரியாது," என்றார்கள். அப்போது அவர் "சரி, தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொள்ளுங்கள்," என்று கூறினாராம்.
(ஒப்பம்) S. வேதநாயகம்.

