முன்னீடு
வம்ச விருத்தி, நண்பர் அ.முத்துலிங்கத்தின் மூன்றாவது கதைத் தொகுதி. முதலாவது தொகுதியான 'அக்கா முப்பது ஆண்டுகளக்க முன்னர் வெளிவந்தது. யாழ்ப்பாண வாழ்க்கையின் அழகிலும் சலனங்களிலும் தோய்ந்தவாறு அவர் எபதிய பதினொரு கதைகள் அதில் அமைந்தன. உலகளாவிய வாழ்க்கை அநுபவங்களிலே மூன்று தசாப்தங்கள் முதிர்ந்தவராக, அவர் எழுதிய பதினொரு கதைகளைக் கொண்ட தொகுதி இது. இடையில், 'திகடசக்கரம்' என்கிற கதைத் தொகுதியையும், இரண்டு நூல்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளார். ஆங்கில நூல்கள் தொழில் சார்ந்த நுட்பத்திலே அவர் பெற்ற ஞானப்பகிர்வின் ஆசை பற்றிய ஆக்கங்கள். இந்த 'முன்னீடு'வை எழுதும் பணியில் அமர்கையில், அவருடைய ஆங்கில நூலிலே (Getting to know visual basic procedures - an introduction to macro language) வரும் பகுதி ஒன்று மனசிலே மின்னல் சொடுக்கின்றது.
The king is seated on the golden throne. Shakuntala raises her eyes and sees her beloved. For a moment she forgets everything. The earth stands still. And then in a clear voice she says: `My son, make your obeisance to the king, your father'. They are direct simple and precise, without waste. A good macro should be like that.
விரயமற்ற, நேரான-எளிமையான-திட்டமான சொல்திறன்! கம்புயூட்டர் பயன்பாட்டிற்கு உதவும் MACRO மொழி பற்றிய தேடலிலேகூட, சகுந்தலாவின் ஆளுமை வீச்சுக்கு முத்துலிங்கம் மசிகிறார். படைப்பாளியின் உள்ளத்திலே வாழும் சுவைத்திறன் உறங்குவதே இல்லை. அவனுடைய தேடல்களுக்கு அந்தமும் இல்லை....
தேடல் அற்புதமான அநுபவமே! தொலைந்து போன இனத்துவ கௌரவம், சுயம்புவான சுயமரபு ஆகியன தேடல்களில் ஈடுபட்டிருக்கும் பரதேசி நான். தொலைந்துபோன நினைவுப் பொருளின் தேடலும் காவியமயமானது. அல்லையேன், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது சிருஷ்டி அற்புதத்தினால் உலக மஹாகவியாக உயர்ந்த காளிதாஸனின் 'அபிஞாத சகுந்தலா' உலக இலக்கியச் சுவைப்புக்கு வாய்த்திருக்குமா? அப்சரஸ் மகளான சகுந்தலா அழகுக் கொழுந்தாய்; இயற்கையின் செப்பம்; விண்ணையும் மண்ணையும் ஒருமைப்படுத்தும் தத்துவ விளக்கம்; மன அமைதி; வாழ்க்கையின் தலையாய இலட்சியம்; - எனப் பல சுருதிகளாய் இந்நாடகக் காவியம் நம் சுவைத் தாகங்களை அசத்தும். மனிதம் பற்றிய தேடலின் ஒரு சாயலாக, மனிதன் அடையக்கூடிய இன்பங்களுக்கு ஆதாரமாய் அமைவது இயற்கையுடன் கூடிய வாழ்க்கை என்று இயற்கையின் உறவை முழுமையான உவமைப் பொருத்தங்களுடன் நிறுவும் காளிதாஸனின் சிருஷ்டி நுட்பம் ஓர் ஆதர்ஷம். சேக்ஸ்பியரின் படைப்பு ஓர்மத்துக்குத் துதி பாடுதல் வஞ்சகமற்ற இலக்கிய நயப்பு என்று ஞானப் பகிர்வினை அகலித்துக் கொண், காளிதாஸனின் கலாமேதையை ஆரிய மாயை என்று நிந்தித்தல் ஞான அறத்துக்கு ஏற்றதா? அதனை இந்திய சிருஷ்டிப் பண்பாட்டின் அடையாளமாக இனங்கண்டு, அந்தத் தனித்துவமே அதற்கு சமஸ்தத்தினையும் அமரத்துவத்தினையும் அருளின எனப் பூரித்து என் வசப்படுத்துதல் என் அறத்துக்கும் என் தேடலுக்கம் உகந்தது; இலக்கியத்தின் பரமார்த்த பக்தனான பரதேசி என்கிற என் தளத்திற்கும் ஏற்றது. விஞ்ஞானம் பற்றிய புதுப் புனைவுகள் பற்றிய தேடல்கள் நமது ஞானத்தை அகலிப்பதுடன், வாழ்க்கையின் சௌகரியங்களைப் பெருக்கித் தரத்தை உயர்த்துவன உண்மை. இருப்பினும், நியூட்டன் இல்லாவிட்டால், இன்னொருவன். அவன் தத்துவத்தைத் திருத்திச் செப்பம் உரைப்பதற்கு ஐன்ஸ்டீன் இல்லாவிட்டால், இன்னொருவன். வான் பறப்பிலே ரைட் சகோதரர்கள் முந்திக் கொண்டார்கள். அவ்வளவுதான். ஆனால் காளிதாஸனின்றி, இலக்கியத்தினைச் சதா வளப்படுத்தும் அபிஞாத சகுந்தலா தோன்றியிருத்தல் சாத்தியமே அல்ல. இலக்கிய ஞானியின் படைப்பாற்றல், பல்வேறுபட்ட சமூகக் காரணிகளுக்கும் அநுபவங்களுக்கும் உட்பட்ட போதிலும், சில வேளைகளில் அவற்றின் வனைவிலேயே ஸ்தூல வடிவம் பெற்றாலுங்கூட, படைப்பாளியின் தனித்துவ ஆளுமை என்கிற ஓர்மை அவனுக்கே உரியது. அந்த ஓர்மத்தை வாலாயப்படுத்துதலும், அதன் உபாசகனாய உழைத்தலும் இந்தப் பரதேசிக்கும் உவப்பான மதமாய் அமையும். மதத்துக்கு அநுஷ்டானங்கள் மட்டுமல்ல, வெறியும் உண்டு.
'வம்ச விருத்தி' என்னும் இக்கதைத் தொகைக்கு முன்னீடு எழுதும் யோகத்திலே ஈடுபடும்பொழுது, என் மனசு இப்படியெல்லாம் குதியன் குத்துகிறது. அடுத்த நூற்றாண்டின் கதை முயற்சிகளுக்குக் கட்டியமாக அமையும் படைப்புகள் சிலவற்றை இதில் படிக்க நேர்ந்ததினாலும், இந்த அவதி. இக்கதைகளைத் தமிழ்ச் சுவைஞர்கள், உரிய முறையிலே தரிசித்தலைத் தடுக்கும் நந்திகள், புத்திஜ“விகள் போர்வையில், தமிழ்நாட்டிலும் உண்டு. ஈசுரார்ப்பண ஈடுபாடும், தமிழ்நாட்டிலும் உண்டு. ஈசுரார்ப்பண ஈடுபாடும், பரமார்த்த பக்தியும் ஜெயிக்கணும். நந்தன் கடைத்தேறவேண்டும்! அதைத் தடுக்கும் கொடுமையிலே நந்திகள் வெற்றி சுகித்தல் கூடாது. இந்த விநோதப் புத்திஜ“விகள் நாளையைச் சென்றடைய வேண்டி இலக்கியத் தரத்தினை நிர்ணயிக்க வல்ல ஏகபோகம் தங்கள் வசத்தே என்று சாமி ஆடுதல் மகா கொடுமை. '....பாரதியார் கருத்து முதல்வாதி; இருப்பினும் இயங்கியல் பார்வை இருந்தது; பாரதி மார்க்ஸை படித்திருப்பதாகக் கருதச் சான்றுகளில்லை....' என்று பாரதியாரின் கவிதா வீரியத்தினையே உரைத்துப் பார்க்கும் இவர்கள், பாவம் காளிதாஸனை எப்படி எல்லாம் மிதித்துத் தள்ளுவார்கள்? மார்க்ஸ’ய வேதம் பேட்டை ரௌடிகளின் நாட்டு வெடிகுண்டாக்கப்பட்ட அவலம் ஒருபுறம். ரொமன்டிஸம், நச்சுரலிஸம், ரியலிஸம், சோஷலிஸ்ட் ரியலிஸம், சோஷலிஸ்ட் ரியலிஸம் (இடது) ஸர்ரியலிஸம், மஜிக் ரியலிஸம், எக்ஸ’ஸ்டென்ஷ’யலிஸம், ஸ்ட்ரக்சுரலிஸம், போஸ்ட் மார்டனிஸம் என்று மேலைத் திசையிலே உருண்டோடிய பதங்களை வைத்துக்கொண்டு தமிழ் இலக்கிய விமர்சனத் துறையிலே சொக்கட்டான் ஆடும் கிலிசகேடு மறுபுறம். அந்த வார்த்தைகள் சுமக்கும் கருத்துவங்கள் பற்றிய ஞானம் வியர்த்தம் என்பதல்ல என் கட்சி. அறிவு சார்ந்த சேகரம் என்பதற்கு அப்பால், அவை தமிழ் மரபுகளுடனும் நிகழ் காலத் தமிழர்தம் அநுபவங்களுடனும் செமிபாடடைந்து படைப்பு வீரியமாக முகிழவில்லை என்பதுதான் என் வியாகூலம். அவை பிறந்த மண்ணிலேயே வலுவிழந்து நீர்த்துப்போன நிலையிலேயேஇ தமிழுக்குப் பெயர்க்கப்படுகின்றன. இலக்கியத்தின் சங்கதி-உள்ளீடு-உயிர்ப்பு இடையறாத தேடலின் விளைவு. அஃது நனுபவத்தினாலும், பக்குவத்தினாலும் வனையப்படுவது. நேர்த்தியான கலைப் படைப்பாகப் பட்டை தீட்டி எடுப்பதற்கு உபகாரமாய் அமையும் பாங்கத்திற்க-கோலத்திற்கு-உருவத்திற்கு அவை எவ்வாறு உதவலாம் என்கிற உசாவலும் முயற்சியுங்கூட இவர்களுக்குப் பூஜ்யம். menopause எய்திய கருப்பையிலே புதியனவற்றின் படைப்பு என்று வற்புறுத்துதல் வித்துவ வக்கிரஞ் சார்ந்தது என்கிற பிரக்ஞைகூட இந்தக் கோஷதாரிகளுக்குக் கிடையாது. இந்தப் புத்தி ஜ“விதத் தண்டால்களை ஒதுக்கி வைத்துவிட்டு. பெருவணிகச் சஞ்சிகைகளம் பத்திரிகைகளும் படைப்பிலக்கியத்தை அற்ப நுகர் பொருளாக்கி, எழுத்தாளர்களை 'லேபிள்' ஒட்டும் சிற்றூழியர்களாக மாற்றும் வணிகப் பணியில் ஈடுபட்டுள்ளன. அரசியலிலே லஞ்ச ஊழல்கள் கூட நியாயப்டுத்தப்படுவது போலவேஇ நலிந்து போன கோஷங்கள் இலக்கியத்திற்கான தொனிப் பொருள்களாக வற்புறுத்தப்படுகின்றன. இவற்றுக்கு 'அரோகரா' போடும் புழுக்களும் பெருகியுள்ளன. சினிமா வாய்ப்புகள் என்கிற அங்கலாய்ப்புகளும் அவர்களை அலைக்கழிக்கின்றன. உலகளாவியதாக முளைவிடும் தமிழ் இலக்கிய ஓர்மத்துக்குத் தலைமை தாங்கும் தத்துவத்தினைத் தமிழ்நாடு இவ்வாறு நிராகரிக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது மகா விசனத்துக்குரியது. இப்போக்குகளினால் பொதுவாகவே தமிழ் இலக்கியம் முட்டுப்படும் என்பதும் மெய்தான்!
'இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் சர்வதேச மயப்படும். அதற்குப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுடைய படைப்பாற்றல் தலைமை தாங்கும்' என்கிற சுவிசேஷத்தை இரண்டு ஆண்டுகளக்கு முன்னர் நான் மேற்கொண்ட இலக்கிய யாத்ராவின்போது பிரசித்தஞ் செய்தேன். இது மண்பற்றிலும் அதீத இனமான உள்ளுணர்வு என்று பொய் செப்ப ஒப்பேன். தமிழ் நாட்டு இலக்கியக் களத்திலே உருவாகியுள்ள அவலங்கள் என்கிற பின்னணியில், 'புதிய வானம், புதிய பூமி' என்று தினமும் புதிய அநுபவங்களின் தாக்கங்களுக்கு உட்பட்டு, ஆனாலும் புதிய சூழல்களின் அசுர வசதிகளுக்கு முற்றிலும் அடிபணியாது, தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களைத் தங்களுடனும், தங்கள் வம்ச வேர்களுடனும் தக்க வைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்கிற விடுதலை வெறியிலும், பக்திச் செறிவிலும் புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் ஈடுபட்டுள்ள இடையறாத தேடல்கள், இதனைச் சாத்தியப்படுத்தும் என்பதை மட்டிடுவதற்குப் புத்தி ஜ“வித மிடுக்குத் தேவையில்லை.
அந்த இலக்கிய யாத்ராவின்போது, இருபத்தியோராம் நூற்றாண்டின் புதிய கதைக் கலையின் சாங்கங்களைச் சுட்டும் வகையில், முப்பத்தொன்பது கதைகளைத் தொகுக்கும் பணியிலே ஈடுபட்டமை தற்செயலே. அந்தப் பணியிலே நண்பர் இந்திராபார்த்தசாரதியின் ஒத்துழைப்பும் துணை நின்றது. அத்தொகுதியில் இடம்பெற்ற ஆக்கங்கள் பலவற்றை வரவேற்று, மதிப்பீடு செய்து, அவற்றைப் பிரசித்தப்படுத்துவதிலே நண்பர் சுஜாதா முதன்மையான அக்கறை காட்டினார். 'பனியும் பனையும்' என்கிற அத்தொகுதியில் கதை படைத்த ஒரு சிலரேனும், இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்துக்கு வளமூட்டக்கூடியவர்களாகத் தேறுவார்கள் என்கிற நம்பிக்கை ஊட்டுபவர்கள். ஆனாலும், அத்தகையவர்களுடைய வகை சிறந்த ஆக்கங்கள் அதிலே இடம்பெற்றன என உரிமை பாராட்டுவதற்கில்லை. ஒரு காலக்கூறின் இடைவெளியிட்டு இப்பொழுது அதனை வாசிக்கும்பொழுது, பெரும்பாலான கதைகளிலே புகுந்துள்ள பலவீனங்கள் தெரிகின்றன. புதிய நாடுகளுக்குப் புலமபெயர்ந்து செல்லும் எத்தனங்களிலே குறுக்கிடும் இடர்கள்; புதிய நாடுகளிலே வதிவிட உரிமை கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பின் சஞ்சலங்கள்; சொந்த மண்ணிலே விட்டு வந்த கடன்கள்-கடமைகள்-உறவுகள் ஆகியன தொற்றிய சுமைகள்; புதிய தட்பவெட்பச் சூழல்களையும் தொழில் உறவுகளையும் எதிர்கொள்வதிலுள்ள சவால்கள்; இனப்படுகொலை மேலாதிக்கத்திலிருந்து எந்தத் தனித்துவத்தைப் பேணி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க முடியுமா என்கிற சந்தேகங்கள்; - இவை அனைத்துமே அவர்களுடைய நிகழ்கால எழுத்துக்களைப் பாதிக்கின்றன. அவலங்கள்-ஏக்கங்கள்-ஆசைகள்-இச்சாபங்கள்-இயலாமைகள் ஆகிய உணர்வுகளிலிருந்து விடுபட இயலாத ஆக்கினை! இதனால், துயர்-சோகம்-ஏலாமை ஆகிய சுருதிகளின் ஓங்காரம் மிகும். அகதி முகாம்களிலே வாழும் குறுக்கத்தின் புழுக்கம் வெளிப்படும். self-pity என்கிற பலவீனம், pessimistic பார்வையை மேலோங்கச் செய்து, நம்பிக்கை வரட்சியைத் தூலமாகத் தொனிக்கும். இந்தக் கோலங்கள் தவிர்க்க இயலாத passing phase மனித நேயத் தேடலிலே, வாழ்கையை நம்பிக்கையுடன் அணுகும் தரிசனமே ஆகுமானது. அந்த நம்பிக்கைதான் நாளையையும் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை என்பது கொதிக்கும் கொப்பரையிலிருந்து, எரி நெருப்புக்குள் வீழ்ந்து கருகுவதல்ல. புதிய நிர்ப்பந்தங்களின் அடிமையாவதல்ல. புதிய சூழலை வசப்படுத்துதல்! புதிய சூழலிலும் நாம் இழக்கத் தயாராக இல்லாத தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டே, புதிய சூழலிலே குதிரும் வாகான புதிய சுருதிகளை இனங்கண்டு, அவற்றைத் தமிழின் அனைத்து உயர்வுகளுக்கும் இசைவாக்கிப் புதிய நம்பிக்கைகளை வென்றெடுத்தல்! அவலங்களை-அக்கிரமங்களை-அட்டூழியங்களை-அவ நம்பிக்கைகளை நாணவைக்கும் தேடல்கள் நமது படைப்புகளிலே கதைப்பொருள்களாகக் கனிதல் வேண்டும். எனவே, 'பனியும் பனையும்' தொகையிலே இடம் பெற்ற கதைகள் பலவற்றை pilot-project ஆகத் தரிசித்தலே பொருந்தும். நடுங்க வைக்கும் குளிர் பணியைத் தொடர்ந்து, கோடைவெயில் எரிக்கவே செய்யும்!
புலம் பெயர்ந்த ஈழத் தமிழருடைய இருபத்தியோராம் நூற்றாண்டின் கதைக் கோலங்களுக்கு வெள்ளோட்டமாக அமையும் கதைத் தொகுதியைத் தேடுகிறீர்களா? கவலையைவிடுங்கள். இதோ, அ.முத்துலிங்கத்தின் வம்ச விருத்தி இருக்கிறது. நான் கருவியாய் அமைந்து பரம்பிய சுவிசேஷத்தின் சத்தியத்தை எண்பிக்கும் வகையில் பல கதைகளை இத்தொகுதியிலே படைத்துத் தந்து, வெள்ளோட்டத்தினை அவர் வெற்றியாக நடத்தியிருத்தல் மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகின்றது. மகிழ்ச்சியைப் பகிர்தலும் மனிதம்!
நான் தசாப்தங்களுக்கு முன்னர், 'ஊர்வலம்' என்ற சிறுகதை மூலம் 'தினகரம்' பண்ணையிலே முத்துலிங்கம் கதைஞராய் அறிமுகமானார். 1960இல் 'பக்குவம்' கதைக்கு முதல் பரிசு பெற்றார். தமிழ் விழா மலருக்கு அவருடைய 'அக்கா' மணமூட்டியது, இவ்வாறு, ஈழத்துக் கதைஞர் வரிசையிலே கௌரவம் பெற்ற அவருடைய பதினொரு கதைகள் அடங்கிய 'அக்கா' தொகுதி அறுபதுகளின் நடுப்பகுதியில் வெளிவந்தது. 'நான் கண்ட, கேட்ட, அநுபவித்த சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்' எனத் தம்மைச் சாமானியனாக அறிமுகப்படுத்திக் கொண்டாலும், 'அக்கா' மூலம் தமிழ்ச் சுவைஞர்களுடைய அபிமானத்தை மட்டுமன்றி, கைலாசபதி போன்ற விமர்சகர்களுடைய பாராட்டையும் சம்பாதித்தார். பிறகு, அவர் எழுத்தூழியத்திலே ஒதுக்கம் காட்டிய காலத்தில். அவருடைய முகவரியைத் தொலைத்து விட்டேன். விசாரித்ததில், ஆபிரிக்க நாடொன்றில், உயர் உத்தியோகம் பெற்றுச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது. ஆபிரிக்கா எங்கே? மட்டக்களப்பு எங்கே? ஊழ் என்னையும் துரத்தியது. ஆபிரிக்க இலக்கியம் கற்பிக்கும் ஆசானாய் நான் ஆபிரிக்க நாடொன்றுக்குச் செல்ல நேர்ந்தது. பக்கத்து வீட்டுக்குக் குடியேறிய மனோ நிலையில் மீண்டும் முகவரியைத் தேடினேன். அவர் உலகவங்கி உத்தியோகத்திலே சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்ததும் என் தேடுதல் ஓய்ந்தது.
கடைசியாக 'பனியும் பனையும்' தொகுதி மூலம் எங்களுடைய இலக்கிய உறவு மீளுயிர்ப்புப் பெற்றது! தேடி ஓய்ந்தது, தேடாத வேளையிலே கிட்டும் அஃது ஒரு வகையில் பொசிப்பு!
தொலைபேசி, Fax போன்ற நவீன தொடர்புச் சாதனங்கள் மூலம், பாகிஸ்தானுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடைப்பட்ட தூரம் குறுகியது. இடைக்காலத்தில் அவர் வெளியிட்ட 'திகட சக்கரம்' என்ற கதைத் தொகுதியை என் சுவைப்பிற்கு அனுப்பி வைத்தார். கைவசமிருந்த என் நூல்களை அவருக்கு அனுப்பினேன். 'பனியும் பனையும்' தொகுதியிலுள்ள குறை நிறைகளைப் பற்றிப் பேசினோம். மூன்று தசாப்த இடைவெளியில் நடந்த இலக்கிய சமாசாரங்களிலே சல்லாபித்தோம். புதிய படைப்புகள் பற்றிய கனவுகளிலே ஈடுபட்டோம். அடுத்த நூற்றாண்டின் கதைக் கலையின் கோலங்கள் பற்றி உரத்துச் சிந்தித்தோம். யாழ்ப்பாண வாழ்க்கையிலும், ஆபிரிக்க அநுபவங்களிலும் நனவுகளிலும் தோய்ந்தோம். ஆபிரிக்க வாழ்க்கை அநுபவங்களைத் தமிழ் இலக்கிய மாக்குவதிலுள்ள பயன் குறித்துப் பேசினோம். தொலைந்தன கிட்டுதல் காளிதாஸனின் சகுந்தலாவுக்கு மட்டுமல்ல, மனிதனுக்குமே இனிமை தரும்.
முதலில் ஆபிரிக்கப் பின்னணியில் எழுதப்பட்ட கதைகளை என் சுவைப்புக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து ஏனையன, என் 'முன்னீடு'வுடன் இணைத்து, இவ்வாறு வெளியிடுதல், நாளைய இலக்கியப் பணிகளிலே இருவரும் இணைந்து பணியாற்றும்வோம் என்கிற சங்கையின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம்.
இனி, வம்ச விருத்தியில் இடம்பெறும் கதைகளுக்குள் நுழைவோம்.
முத்துலிங்கம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நான்கு கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளிலே வாழ்ந்து தமது அநுபவங்களைப் பெருக்கிக் கொண்டவர். இந்நாடுகள் பலவற்றைக் கதைக் களங்களாகக் கொண்டு, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வாழக் கூடிய தமிழ்க் கதை மாந்தர் சிலரை அறிமுகப்படுத்தி அவர்களுடைய கதைகளை இங்கு சொல்லியுள்ளார். serious writing என்பது விளக்கெண்ணெய் சாப்பிடும் முகத்தையும் உணர்வையும் எழுத்திலே ஏற்படுத்துவதல்ல. வாழ்க்கையின் எந்த நிலையிலும் வாழ்க்கையை Positive ஆக நோக்கும் Optimism முத்துலிங்கத்தின் கதைப் பாணியிலே மிளிர்கின்றது. இடுக்கண் கண்டு நகும் ஓர் உறுதி; மனித நேய நட்புணர்வுகளை அணைக்கும் அட்டகாசமில்லாத நகைச்சுவை; கதைக் களங்களின் யதார்த்தம்; கதை நிகழ்வுகளுடன் ஒட்டிப் பயணிக்கும் அக்கறை ஆகியன அவருடைய கதை சித்தரிக்கும் உபாயத்திற்குக் கை தருகின்றன.
'துரி', 'ஒரு சாதம்' ஆகிய இரண்டும் அமேரிக்காவையும் கனடாவையும் பின்னணியாகக் கொண்டு, அந்நாடுகளின் வாழ்க்கை அநுபவங்களை இணைத்துக் கொள்ளுகின்றன. 'விழுக்காடு', 'முழுவிலக்கு', 'ஞானம்' ஆகிய மூன்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் வாழ்க்கைக் கோலங்களுள் நம்மை அழைத்துச் செல்கின்றன. 'கிரகணம்', 'வம்ச விருத்தி' ஆகிய இரண்டு கதைகளும் பாகிஸ்தான் நாட்டின் முஸ்லிம் பின்னணியைக் கொண்டன. 'பருத்திப் பூ' வட ஆபிரிக்க சுடான் நாட்டின், பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் அயலுக்கு அழைத்துச் செல்கின்றது. 'பீஃனிக்ஸ் பறவை' சுவீடன் நாட்டினைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட போதிலும், சுற்றுச் சூழலை இயற்கை நிலையில் வைத்திருக்கும் பக்குவத்தினை வசப்படுத்தும் இருபத்தோராம் நூற்றாண்டின் மிக முன்னேறிய மனித சமூகத்திலே ஏற்படக்கூடிய புதிய பிரச்சினைகளே கதைக் களமோ என்கிற நிறப்பிரிகை ஜாலமும் காட்டுகிறது.
மனிதம் பற்றிய இறையறாத தேடலாகவும் இலக்கியத்தினைச் சம்பாவனை செய்தல் என் சுபாவம். மனிதனின் விடுதலை அல்லது விமுக்தி ஆநந்த. அதுவே வீடு! அறம்-பொருள்-இன்பம் ஆகியன அந்த வீட்டினை அடைவதற்கான செம்மைகள் என்கிற நம்பிக்கை நமது மரபின் முதுசொம். பழையன கழிந்து புதியன புனைதலும் மரபு. மாறாத சீர்மையும் மரபு. சுழலும் சக்கரத்தின் அசையாப் புள்ளி! பிறிது பிறிதாகி விடாது, வாழ்க்கைத் தொடர்ச்சியையும் முன்னோர் அளித்த அருஞ்செல்வங்களுக்கு நம்மையும் உரிமைக்காரராய் நியமிப்பதற்கான தகுதியையும் மரபு நமக்கு அளிக்கின்றது. இதனை ஒதுக்கும் புதுமைகள் வெறும் Fads! பித்தங்கொண்டு சந்நதமாடும் வேகத்திலே மறைந்துவிடும் போலிகள். இந்த அவதானம் இருபத்தியோராம் நூற்றாண்டின் இலக்கியப் படைப்பாளிக்கு அவசியம். இந்த அவதானம் இத்தொகுதியின் கதைகள் பலவற்றிலும் பற்றிப்படர்கின்றது. இந்தப் படர்வே ஒரு நிறைவும்.
அதே சமயம், இத்தொகுதியிலுள்ள சில கதைகளேனும் மனித நேயத்துக்குப் புதிய பரிமாணந் தேடுகின்றன. தொகுதியின் முகப்புக் கதை 'துரி' அமேரிக்க வாழ்க்கையின் கோலங்களைத் தரிசிப்பதற்கு துரி என்றழைக்கப்படும் நாய் நாயக பாத்திரமாக உயர்வு பெறுகின்றது. அமேரிக்க நாய்க்கும், மகாபாரதத்தில் வரும் துரியோதனன் பாத்திரத்திற்கம் அபூர்வ முடிச்சொன்று போடப்படுகின்றது. உயிர் நேசிப்பிலே நட்புக்கும் தோழமைக்கம் உள்ள உறவுகள் ஆராவாரமின்றி இக்கதையில் பிரஸ்தாபம் பெறுகின்றன. நாயை நண்பனாய்-தோழனாய்ப் பாராட்டுதல் எத்தகைய மானிட நேசிப்பு! 'ஞானம்'கதையிலே, Ph.D. பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிகளை நடத்துவதற்கான அமேரிக்கப் பல்கலைக் கழக மாணாக்கர் இருவர் ஆபிரிக்க நாடொன்றுக்கு வருகிறார்கள். அங்கு வாழும் கொலபஸ் குரங்குகளைப் பிடித்து ஆராய்ச்சி நடத்த வந்தவர்கள், ஆபிரிக்க மக்களுடைய மூட நம்பிக்கையினால் சாகப் போகும் ஆந்தையையும் குஞ்சுகளையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த ஆந்தைகள் ஆபிரிக்க உணவு உற்பத்திப் பெருக்கத்துக்கு உதவுகின்றன. அவை வாழவேண்டும். அவற்றை வாழவைப்பதற்காக ஏற்படும் பின்னடைவுகள் ஒரு பொருட்டல்ல. 'உயிர் நேயம்' என்கிற சங்கதி இக்கதையிலே எத்தகைய விஸ்வரூபம் பெறுகின்றது. மானிட நேசிப்பு உயிர் நேசிப்பாகவும் பிரபஞ்ச நேசிப்பாகவும் விரிவடைதல் வேண்டும் என்ற அக்கறைகளைப் பிரசாரத் தொனியின்றிச் சில கதைகள் ஏற்படுத்துகின்றன. 'வம்ச விருத்தி'யிலே பாகிஸ்தானின் வடமலைப் பிரதேசத்தில் பயணிக்கிறோம். இக்கதையில் இஸ்லாமிய மக்களுடைய ஆசாராங்களும் அநுட்டானங்களும் விரவிக்கிடக்கின்றன. இவை அனைத்துமே கதையின் பின்னணியாகப் பின் தள்ளப்பட்டு, இடருற்ற உயிரினத்தின் Endangered species) பாதுகாப்பு கதையின் இறுதியிலே ஓங்காரம் பெறுகின்றது. பிரபஞ்ச நேசிப்பின் இன்னொரு வடிவமாக இந்த அக்கறையை நாம் தரிசித்தல் தகும். மனிதனைப் பலிவாங்கும் லீ என்ஃபீல்டு துப்பாக்கி, 'ரத்தப் பணம்' என்கிற கொலை நாகரிகத்தின் உடாக அழைத்துச் சென்று, மலை ஆட்டின் மரணம் மகா அநியாயமானது என்கிற உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்துதல் சீர்மை நிறைந்த கலைத்திறன். 'இலங்கையில் தமிழன் ஓர் (Endangeed Species) என்கிற ஓர் எண்ணம் என்பிடரியைக் கடித்தது. சுவைஞனின் கற்பனை விகசிப்பு இன்னொரு பரிமாணம். ஆக்கியோனின் தயாளம் இத்தகைய சிலிர்ப்பினை அனுமதிக்கும். பாகிஸ்தானைக் களமாகக் கொண்ட இன்னொரு கதை 'கிரகணம்' இந்தக் கதையிலே வரும் பஸ்மினாவின் பாத்திர வார்ப்பு கதை முழுவதையும் அப்புகிறது. அவள் எழுப்பும் மதிநுட்பக் கேள்விகள் மலைக்க வைக்கின்றன. சாதாரண sentiments மண்டிய கதையோ என்று ஏறபடக்கூடிய ஓர் உணர்வை பஸ்மினாவின் பாத்திர வார்ப்பு விழுங்கி ஏப்பமிட்டு விடுகின்றது! இதன் வாகு இது.
'விழுக்காடு' சியரா லியோனைப் பின்னணியாகக் கொண்ட கதை. சுபீட்ச நிலையில் அடிமட்ட நாடான அங்கே, ஐக்கிய நாடுகள் நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் வியர்த்தமாகும் பின்னணியிலே, அந்நாட்டின் வாழ்க்கை அவலங்களைப் பிரசாரத் தொனியின்றிச் சித்தரித்து, அந்த அவலங்களின் மத்தியிலே, ஆண்-பெண் உறவாகக் கனியுங் காதல்கூட மனித நேசிப்பின் இன்னொரு ஸ்திதியாக இக்கதை கோலங் காட்டுகிறது. மேற்கு ஆபிரிக்க அநுபவங்களின் மிகுதியால், உருவாகியுள்ள இன்னொரு கதை 'முழுவிலக்கு'. 'பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு' இது பழமொழி ஆபிரிக்க நாடொன்றை புலம் பெயரும் நாடாக வரித்துக் கொண்டால், உணவுப் பழக்கம் எவ்வாறு அமையும் என்பது நயமான நகைச்சுவை. தொகுக்கப்படும் மலர்கள் நளினமான சிரிப்பை எழுப்புபவை. அவற்றைத் தொடுக்கும் நாரிலே சோகச் சுருதி மண்டிக் கிடக்கிறது. இஃது அசாதாரண உபாயம். Menopause ஏற்படுத்தும் உள-உடல் பாதிப்புகளை இது விசாரணை செய்கிறது. சங்கீதாவைச் சுற்றி எழும் சோக அலைகள்கூட ஒரு positive note சிலேயே முற்றுப்பெறுகின்றது. மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக சிறப்பிப்பது இந்த அழுங்குப்பிடியான நம்பிக்கைதானே? குடியேறிய நாட்டின் நன்மைக்கும் தேவைக்கும் ஏற்ப இசைவாக்கம்' பெறுவதை நுட்பமாகச் சித்தரிக்கின்றது 'ஒரு சாதம்' food clothing and shelter ஆகிய மூன்றிலும் ஏற்படும் இசைவாக்கம்! இந்த இசைவாக்கம் வாழ்க்கையை வசதிப்படுத்தும்; அதுவே வாழ்க்கையின் வெற்றியல்ல. அறிவாற்றலைப் பிரயோகித்து, முன்னேறும் முயற்சியில் சதா நடத்தும் தேடலே வெற்றியைச் சம்பாதித்துத் தரும் என்கிற நம்பிக்கையை இக்கதை பிரசித்தஞ் செய்கின்றது. Oru Satham என்பது ஒரு சாதமா அல்லது ஒரு சத்மா? நல்ல பசுடி!
'பருத்திப் பூ'வின் நாயக பாத்திரம் குணசிங்கம் யாழ்ப்பாணத்து உரும்பிராய் மண்ணிலே விளைந்த அசல் 'கிழங்கு'! ஆயிரம் கன்று வாழைத் தோட்டத்துக்கு பாத்தி கோலிய காலத்திலேயே, தண்ரின் செட்டான உபயோகத்திற்கும் உயிர் வாழ்தலுக்குமுள்ள ஆத்மார்த்த தொடர்பிலே ஞானம் பெற்ற சம்பந்தரும் இன்று என்ஜினியர், நீர்வள நிபுணர், கண்டிப்பு-கடின உழைப்பு, நேர்மை-சிக்கனம் ஆகியன அவருடைய வாழ்க்கையை ஒழுங்கு செய்பவை. ஆனால், தெற்கிலிருந்து அகதியாக வடக்கே புலம் பெயர்ந்து வந்த அந்தக் குடியானவக் கிழவியை 'எஃத்திராம்' என வாஞ்சை பாராட்டி அழைக்க வைத்தது எது? அக்கிழவியின் வாழ்க்கை உயர்வுக்காக, தமது வேலையையும் கௌரவத்தையும் இழக்கத் தயாராக இருக்கும் அவருடைய செயல், மானிட நேசிப்பின் உந்நதம் அல்லவா? கதையை வாசித்து முடித்த பிறகும், குணசிங்கம் நமது நெஞ்சத்திலே உறைந்து கொள்ளுகிறார். அவரைப் பற்றிய உலகமொன்று நமது பிரக்ஞையை வசீகரித்துக் கொள்ளுகிறது. 'ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஒருவன் இறங்கிய பின்னும் ரயிலுடன் சிறிது நேரம் ஓடுகிறான் அல்லவா! அதுபோல, ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓட வேண்டும்....இது என்னுடைய சித்தாந்தம்' என்று 'திகடசக்கரம்' என்ற தமது சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் முத்துலிங்கம் குறிப்பிடுகின்றார். இந்தக்கதையில் அவருடைய சித்தாந்தம் முழு வெற்றி பெறுகின்றது. நல்லதொரு கதையை வாசித்த திருப்தி பல நாள்களாக என் மனசை மகிழ்வித்தது.
'பீஃனிக்ஸ் பறவை' நாளைய இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் கழிந்த ஒரு நாளைய உலகத்திற்குள் நம்மை லாகவமாக அழைத்துச் செல்கின்றது. சுற்றாடலை மாசுபடுத்தாச் செம்மையிலே வெற்றி காணும் அந்த உலகத்திலேகூட, நிறைவேறாத மனித ஆசைகள் புதிய பரிமாணங்களையும் தேடல்களையும் கொண்டிருக்கும் என்கிற தொனிப் பொருளை இந்தக் கதை சாமர்த்தியமாகச் சித்திரிக்கின்றது. நாளைய உலகின் சித்திரிப்பிலே விஞ்ஞான ஞானம் விஸ்வரூபத்திற்குள் இந்த விஞ்ஞானம் ஞான ஒடுக்கமும் பெறுகிறது.
இவற்றிலிருந்து வேறுபட்ட களங்களை மற்றைய இரண்டு கதைகளும் கொண்டுள்ளன. கிரேக்க புராணங்களிலே பிரஸ்தாபிக்கப்படும் கோர்டியன் முடிச்சிலே துவங்கி, இடையில் 'நொடிகள்' போல, கந்தையா வாத்தியார், ஹென்றி மொஸ்லே, நமது 'தொந்தி' விநாயகர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பல முடிச்சுகளின் அறிமுகத்துடனேயே 'முடிச்சு' ஆரம்பிக்கின்றது. இந்த ஆரவாரங்களுக்குப் பிறகுதான் கதை. முடிச்சுகள் என்கிற குகையின் ஊடாக, ஒளியை நாடிய தேடல் திருவண்ணாமலை வரை நீளுகின்றது. அங்கே விசித்திரமான யோகியார். அவரிடமிருந்து அறிவுரையோ, ஆசியோ கிட்டாது. சம்பந்தா சம்பந்தம் இல்லாததுபோல பேசி, அறிவைத் தூண்டி விடுதல் யோகியாரின் speciality! இந்துதர்ம சிந்தனைகள் தீர்வுகள் அல்ல. மன ஒடுக்கத்துக்கம் ஞான விடிவுக்கும் தொடர்பு இருக்கலாம். தேடும்பொழுது ஞானம் எத்தகைய அற்பங்களிலிருந்து வெளிப்படுகின்றது! முடிச்சுகளை அவிழ்க்க நடத்தும் தேடல் ஞானமுமாம். 'சிலம்பு செல்லப்பா' 'இலங்கை மண்ணின் வாழ்க்கைக் கோலங்களுக்குள் ஆசிரியர் மீள்பிரவேசம் செய்யும் எத்தனம். பழைய சம்பவங்களை அசைபோடும் கோலமும் புகுந்து கொள்ளுகிறது. சமாந்திரமாகவே சிலப்பதிகாரம் பற்றிய உசாவல்களும். ஆனால், சுழல் பாவிப்புப் பற்றிய awarenessஐ, தயிர்ச் சட்டியுடன் தொடர்புபடுத்தி சுழல் பாவிப்புக்கு மாதவி எழுதிய ஓலையின் சுழல் பாவிப்புக்கும் அபூர்வ முடிச்சுப் போட்டு, நம்மை குலுக்கி எடுக்கிறார். சிரிப்பிலா? சிந்தனையிலா? என் பிடிமானத்துக்குள் சிக்கவில்லை. உங்களுக்கு?
அனைத்துக் கதைகளிலும், கதை நிகழ் களங்களின் வாழ்க்கை அழகுகளிலே, பிராசாரத் தொனி இல்லாமல் படைப்பாளியின் சுய விருப்பு-வெறுப்புகளைத் திணிக்காமல், நம்மையும் பயணிக்கச் செய்து, புதிய அனுபவங்களிலே தோய்த்து எடுப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம், தமது மனசுக்கு உவப்பான வாழ்க்கையையும் விழுமியங்களையும் அழுத்திச் சொல்வதற்கும் அவர் தயங்கவில்லை. அதிலே நழுவல் கிடையாது. சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு, சுழல் பாவிப்பு, மானிட நேயம், பிரபஞ்ச நேயம் ஆகியன பற்றிய ஆசிரியரின் அக்கறை சத்தியமானது என்கிற உணர்வை அவர் பதிக்கின்றார். இதனை, 'ஒரு காகிதத்தைக் கசக்கி எறியும்போது எங்கோ ஒரு மரத்தின் இலை கண்ர் வடிக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறவன் நான்' என்று தமது 'என்னுரை'யிலே மீள வலியுறுத்தவும் அவர் வெட்கப்பவில்லை.
இந்தக் கதைகள் அனைத்தும் சிறுகதை இலக்கண விதிகளுக்குள் அமையுமா என்பது குறித்து விவாதிக்கும் அரிப்பு சிலருக்கு ஏற்படலாம். அரை நூற்றாண்டுக்கு முன்னரே, 1940-ஆம் ஆண்டில், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவந்தது. அதற்கு ரா.ஸ்ரீ.தேசிகன் அவர்கள் காத்திரமான முன்னுரை ஒன்று எழுதியிருந்தார். 'இலக்கியம் ஓர் அகண்ட நந்தவனம்' எனத் துவங்கி, 'ஜனங்கள் சிறுகதை மலர்களின் மனத்தை அதிகமாய் விரும்பவே, இலக்கிய நந்தவனத்திலே அந்தப் பூக்கள் அதிகமாகப் பயிரிடப்பட்டன' எனக்கூறி, சிறுகதை இலக்கிய வடிவத்தின் உலகளாவிய தோற்றம் என்னும் படுதாவிலே, 'முகம்' அறியாத புதுமைப்பித்தனின் தமிழ்ச் சாதனையை அவர் சிலாகித்தார். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிக் கட்டத்திலே அதற்கு ஒரு தனிக் கௌரவம் சம்பாதிப்பதிலும், மேலை நாட்டிலே பயின்ற உருவ அமைதிக்குத் தமிழ் முழுமம் வடிப்பதிலும் புதுமைப்பித்தன் அடைந்த வெற்றி, அரிய இலக்கியச் சாதனையே. சந்தேகமில்லை. ஆனால்இ அன்று சிறுகதை உருவத்துக்கு உலக அங்கீகாரம் பெற உழைத்தவர்கள் (மாபஸான் உட்பட) வாழ்ந்த நாடுகளிலேயே சிறுகதை இலக்கிய வடிவம் தனது மவுசினை இழந்துவிட்டது. 'அவசர யுகத்திலே சிறுகதை இலக்கியமே நின்று வாழும்' என முன் வைக்கப்பட்ட கருதுகோள்கூடப் பொய்த்துவிட்டது. அவசரத்திலும் அவசரயுகம் இது. இருப்பினும், நீள் கதைகளுக்கும் நாவல்களுக்குத்தான் வரவேற்பு. விஷயம் இதுதான். காளிதாஸனுக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கதை சொல்லலும் கேட்டலும் மனித ரஸனைக்கு ஏற்றதாகவே இருந்து வந்தது. கதை சொல்லும் முனைப்பும் கதை கேட்கும் (அல்லது வாசிக்கும் அல்லது பார்க்கும்) ஆர்வமும் தொடரும். வித்துவ-தத்துவக் கடைசல்களுக்கு 'டோக்கா' கொடுக்கும் என்றுமுளதான மனித ரஸனை இது.
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். புதுமைப்பித்தனின் தோள்களிலே நின்று கதைக் கோலங்களைப் பார்க்கும் வசதி நமக்கிருக்கிறது. புதிய கதைக் கோலங்களை உருவாக்கும் நிர்ப்பந்தமும் தேவையும் இருபத்தியோராம் நூற்றாண்டின் கதைஞனுக்கும் நிச்சயம் ஏற்படும். புதிய தேவைகள் இலக்கிய சமாசார சல்லாபம் மட்டுமல்ல. வாழ்க்கையின் புதிய அநுபவ ஞானப் பகிர்வினைப் பகிர்ந்து கொள்ளும் அவதியும். கதைக் கலையிலே புதிய வடிவங்கள் உருவாக வேண்டும். உருவாகும். அவற்றை ஏற்கும் சுவை விசாலம் தமிழ்ச்சுவைஞர்களுக்குத் தேவை. 'புதுமைப் பித்தனை விட்டால் ஆளில்லை' என்று பழசிலே தொங்கிக் கொண்டு பொச்சடித்தல்கூட, தமிழ் நாட்டின் புத்திஜ“வித வித்துவ வக்கிரமாகக் கொச்சைப்படுத்தலும் சாலும். இத்தகைய வைதீக வயிற்று வலிக்கு, புதிய ஆக்கங்கள் பலியாகிவிடக்கூடாது. இந்தத் தொகுதியிலே புதிய வடிவங்கள் அறிமுகமாகவில்லை. உண்மை ஆனால், மரபு ரீதியான சிறுகதை இலக்கணம் பல இடங்களிலே நெகிழ்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நெகிழ்த்தலே, புதிய வடிவங்களுக்கு வழி சமைக்கும் என்கிற சேதநை முத்துலிங்கத்திற்கு இருக்கலாம். உருவம்-உள்ளீடு-பாணி-பாங்கம்-சித்திரிப்பு-கலைத்துவம் ஆகியன எழுத்தாளனின் சுதர்மத்திற்கும் சுயாதீனத்துக்கும் உரியன என்பது என் கட்சி. என் அறத்தைப் பறிப்பதற்கு எந்த இலக்கியக் கொம்பனும், விமர்சன வித்துவானக்கும் உரிமை இல்லை என்பதும் என் இலக்கிய மதம். இத்தகைய மதமூர்க்கம், என்னிலும் பார்க்க, அடுத்த நூற்றாண்டின் படைப்பாளிகளுக்கு அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்போமாக!
புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளுடைய இலக்கிய ஊழியத்தை உரிய முறையிலே தரிசிப்பதற்கு உதவும் இன்னொன்றையும் இங்கு பிரஸ்தாபித்தல் அவசியம்.
தொலைந்துபோன நினைவுப் பொருளின் தேடல், சகுந்தலா, படைப்புக்கு முன்னரே இருந்து வந்துள்ள ஒன்றுதான். ஆனால், இந்த நூற்றாண்டின் இறுதி கந்தாயத்திலே, தொலைத்தலும் தேடலும் ஈழத் தமிழர்களுடைய வாழ்க்கையில் புதிய அர்த்தமும் சுருதியும் கொண்டுள்ளன. இலங்கையின் புத்த ஹாமுத்ருக்கள் புத்த பகவான் போதித்த அகிம்ஸை-தயை-காருண்யம் தர்மம்-சீலம் அனைத்தையும் தொலைத்துவிட்டார்கள். ஆட்சியாளர்கள் இறைமாட்சி அறத்தையும் ஜனநாயக நாகரிகத்தையும் தொலைத்துவிட்டார்கள். சமதர்மம் பேசிய இடதுசாரிகள் மார்க்ஸ’ய வேகத்தைத் தொலைத்துவிட்டார்கள். இந்த அனைவரும் மேலாதிக்க உன்மத்தத்தில், மானிடத்தின் அடிப்படை உரிமைகள் பற்றிய நினைவையே தொலைத்துவிட்டார்கள். இவற்றால், ஈழத் தமிழர்கள் தர்ம நியாயம்-மனநிம்மதி-தாயக மண்-தமிழ்மொழி-சுய கௌரவம்-மனித வாழ்க்கை.... என நிரல்படுத்தக்கூடிய அனைத்தையும் தொலைக்க நேர்ந்தது. தொலைக்கவில்லை. கொள்ளையடிக்கப்பட்டன! சொந்த மண்ணிலும் அகதிகள்; புகுந்த நாடுகளிலும் அகதிகள். தனித்துவ அடையாளங்களை மட்டுமல்ல, முகத்தையும் இழந்த மனிதர்கள். தொலைத்தவற்றைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தேடலோ நெடியது; கொடியது. இத்தேடல் தொற்றிய சோகங்கள்-இழப்புகள்-சமர்கள்-அநுபவங்கள்-யாகங்கள்-தவங்கள் அனைத்துமே இன்றைய தமிழுக்குப் புதிது. இந்தப் புதிதும் இணைந்ததுதான் இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம்.
ஒரு விஷயத்தில், செந்தமிழ் நாட்டினர் பாக்கியவான்களும்! 'நீலத் திரைக்கடல் ஓரத்தில் நின்று தவஞ் செய்குமரி; வடமாலவன் குன்றம்' என்று தமது தாயக மண்ணின் எல்லைகளைக் கவித்துவமாக நினைத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண்ணிலே, நிலவினில்றமுதூட்டித் தழுவிய மண்ணிலே, ரா.ஸ்ரீ.தேசிகன் ஆற்றுப்படுத்தியவாறு, அகண்ட நந்தவனங்கள் அமைப்பதற்கும், அதன் பாங்கரிலே சிறுகதைத் தோட்டங்கள் அமைத்துப் பராமரிப்பதற்கும் தோதும் வசதியும் அவர்களுக்கு வந்து பொருந்தலாம். பெண்ணியத்திற்கு ஒரு புதிய பாய்ச்சல்; தலித் இலக்கியத்துக்கு ஒரு புதிய பரிமாணம் என்று 'கதை அளப்பத'ற்கும் ஓய்வு உண்டு. சினிமா நாயக-நாயகியரை இரட்சகர்களாயும் கடவுளர்களாயும் உயர்த்துவதற்கு 'விசில்' அடித்துக்கொண்டே, 'ஜூனியர் விகடன்' 'நக்கீரன்' ஆகியன தரும் investigative கதைகளை விழுந்து விழுந்து வாசித்துக் கொண்டே, மாதவியா-கண்ணகியா-கோப்பெருந்தேவியா கற்பிற் சிறந்தவள் என்ற மிகு ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டே, serious இலக்கியம் பற்றி ஒரு changeற்காகப் பேசுவதற்கும் அவர்களுக்கு வசதிகளும் உள. இத்தகைய சுகபோகங்கள் அவர்களுக்குக் கொள்ளையாகக் கிடைப்பதுபற்றி அழுக்காறு கொள்ளத் தானும் ஈழத் தமிழருக்கு நேரமில்லை. பாவம், அவர்கள் சபிக்கப்பட்டவர்களும்! இருப்பினும், தாங்கள் மேற்கொண்டுள்ள இரட்சண்ய யாத்திரையையும், தங்களுடைய தேடல்களையும் மனித நேயத்துடன் புரிந்துகொள்ளும் பக்குவம் or at leat அநுதாப மனோநிலை, பேசும் மொழியால் உடன்பிறப்புகளான செந்தமிழ் நாட்டினருக்கு ஏற்படுதல் வேண்டுமென்று பிரார்த்திக்கும் உரிமையாவது ஈழத் தமிழருக்குக் கிடையாதா?
'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று மக்கள் voteற்குத் தூண்டில்போடும் மேடைகளிலே ஒலிப்பதுடன் தமிழ்ப்பற்று ஓய்ந்துவிடலாகாது, ஓய்தல் செய்யும் சௌகரியம் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. 'விலங்குகளாய் அடிமைகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப் பான்மை கேட்டு வாழமாட்டோம்' என்று சினந்தெழுந்தவர்கள், ஈழத்தமிழர்கள்! போரே தர்மமாக அவர்கள்மீது திணிக்கப்பட்ட பொழுது, அதனை ஏற்றார்கள். தர்ம ஆவேசத்துடன் ஏற்றார்கள். விடுதலை அவர்கள் வெறியாகியது. தமிழின் சேவிப்பே அவர்களது மதமும் பக்தியுமாகியது. இந்த நூற்றாண்டிலே, மொழியின் நிமித்தம் இத்தகைய ஆக்கினைகளை எந்த மனித இனம் எதிர் கொண்டது? இந்த ஆக்கினைகளுக்கு அவர்கள் பணியவில்லை. பகர்களாகவில்லை. ரட்சிப்புக்காக முள்முடிதரித்து, சிலுவை சுமந்து திரிகிறார்கள். முள்முடியும் சிலுவையும் குறியீடுகளே. குறியீடுகளின் அர்த்தங்கள் பக்குவத்து ககும் ஞானத்துக்கம் ஏற்ப விரியும். ஆக்கினைகளின் சங்காரத்திலே விடுதலை வெறியானவனவன் எதற்கும் அஞ்சான். மானிடத்தின் விமுக்தி அவன் வாழ்க்கை ஊரியமாய்க் கனியும். இந்நிலையில் அவனுடைய படைப்பின் சரஸ் பிரவகிக்கும். இலக்குப் புதிது' பார்வை புதிது. இந்நிலையை ல், 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல்வேண்டும்' என்பது கோஷமல்ல; வாழ்க்கையின்-எழுத்தின்-தமிழின் பிரிக்க ஒண்ணா அம்ஸம்!
இத்தகைய எண்ணங்கள் என்னைப் பரவசப்படுத்தும் நிலையிலே, 'வம்ச விருத்தி' கதைத் தொகுதியை இன்னொரு தடவை புரட்டுகின்றேன். 'லொட்டோ' எண்ணைப் போன்று வந்த பக்கத்தில், முத்துலிங்கம் என்ன எழுதுகின்றார்? அதனை உங்களுடன் சேர்ந்து வாசிக்க ஆசை:
'அடுத்த நாள் அதிகாலையிலே சத்தம் கேட்டு விழித்துக் கொண்டோம். ஆரவாரம் காதைப் பிளக்க வெளியே வந்து பார்த்தோம். தலைக்குடி மகனை கயிற்றுப் பல்லக்கில் தூக்கியபடி பல்லக்குக் காவிகள் ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தார்கள். மலையைப் போன்ற உடம்பை நிமிர்த்தி வைத்து இடமும் வலமும் பார்த்தபடி போனார் தலைக்குடி மகன்.
'சூரன்போர் திருவிழாவில் சூரன், சிங்கமுகன், பானுகோபன் என்று மாறி மாறி வரும். உடம்பு ஒன்று; தலை மாத்திரம் மாறும். சகடையில் வைத்துத் தள்ளி வரும் போது புன்னாலைக் கட்டுவன் தச்சனார் பின்னாலிருந்து சூரனுடைய காதுகளை இறுக்கிப் பிடித்து இடமும் வலமும் ஆட்டியபடியே இருப்பார். அதற்கேற்றபடி கைவாளும் மேலும் கீழும் ஆடும். நாங்கள் சூப்புத்தடியை நக்கியவாறு பயத்துடன் இந்த வைபவத்தைப் பார்த்துக்கொண்டு இருப்போம். அப்ப 'பானுகோபன், பானுகோபன்' என்று சத்தம் கேட்கும். என்று சத்தம் கேட்கும். சூரனுடைய மகன், பதுமகோமளைக்குப் பிறந்தவன், சிறுபிள்ளையாக இருந்தபோது கோபத்தில் சூரியனையே பிடித்து தொட்டில் காலுடன் கட்டியவன், தலையை இரண்டு பக்கமும் ஆட்டியபடி வருவான். நாங்கள் பயத்துடன் பெரியவர்களுடைய கையைப் பிடித்துக் கொள்ளுவோம்.
'அது போலத்தான் தலைக்குடிமகன் வந்து கொண்டிருந்தார்....'
புலம் பெயர்ந்து, அமேரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டே, ஆபிரிக்கக் காட்டிலே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஈழத் தமிழன் 'ஞானம்' என்ற கதையிலே தன் அநுபவத்தை மேற்கண்டவாறு சொல்லுகிறான். இன்றைய அநுபவத்தைச் சித்தரிக்கும் பொழுது, பிறந்த மண்ணின் நினைவுகள் இயல்பாகவே, குறுக்கிழையில் ஓட, கோலச் சித்திரம் நெசவாகின்றது. அந்த இடத்தில் கொக்குவிலானான முத்துலிங்கம் மறுஜனனம் எடுத்து விட்டான்! சூப்புத்தடி நக்கும், பொய்மை அறியாப் பாலகன். சூரன்போர், சகடை, தச்சனார் என்று காவிய மயமான ஓவிய சுகம் அவன் நெஞ்சை நிறைக்கின்றது! அந்த நேரத்தில், அவன் எழுத்து சத்தியக் கனலிலே புனிதம் கண்டு, அழகியல் காயகல்பத்தில் இளமை பூண்டு...அஃது எழுத்தின் அமரநிலை. இந்த அமர நிலை, பிறந்த மண்ணின் நினைவுகள். தாயின் மடியிலும், மண்ணின் புழுதியிலும் பயின்ற தமிழிலேதான் சாத்தியப்படும். மண்ணும், அதன் நினைவும், அந்த நினைவுகள் கூத்தாடும் மொழியும் புலம் பெயர்ந்தவனின் நித்திய தியானத்தில் மண்டிக் கிடப்பவை. அவை இன்றி அவன் வெறுமை; வெறும் பூஜ்யம். எனவே, இவ்வாறு சித்திரிப்பதே இயல்பு; அழகு; உண்மை. 'எந்த இடத்தில் அழகும் உண்மையும் தாண்டவமாடுகின்றவோ, அவ்விடத்தைக் கை கூப்பித்தொழு வேண்டும்; அதுதான் கோயில்' என்று ரா.ஸ்ரீ.தேசிகன் அரை நூற்றாண்டுக்கு முன்னரே மகிழ்ந்தார். எத்தகைய ரஸனைப் பக்குவம்! இதனை விடுத்து, புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர்களிடம் தங்கள் வட்டார வழக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும் பிடிவாதம் இருக்கிறது என்றும்; இதனால், சில சமயங்களில் கதைகள் மற்ற நாட்டுத் தமிழர்களுக்குப் புரிவதில் சிரமமிருந்து அவைகளின் சர்வதேசத் தன்மையை இழந்து விடுகின்றன என்றும் முறையீடு செய்வது வடிவில்லை.
`கோவைத் தமிழ் கரும்பு. கல்லுப் போலிருந்தாலும் அத்தனையும் இனிப்பு. திட்டும்போது கூடத் தித்திப்பை விட்டுவிடாதவர்கள் அவர்கள். நடுராத்திரியில் அவித்துக் கொடுக்கும் இட்லியைப்போல மதுரைத் தமிழ் மென்மையானது. ஆனால், அவர்களது விமர்சனமோ மிளகாய்ப்பொடி. என்ன இருந்தாலும் நக்கீரன் நடமாடிய தலம் அல்லவா? நெல்லைத் தமிழ் கவிதைத் தமிழ். ஒலிநயமும் உவமையும் ஊடும் பாவுமாய் ஓடும் தமிழ். திட்டவே தெரியாது திருநெல்வேலிக்காரர்களக்கு' என்று வட்டார வழக்குச் சிலவற்றுக்குச் 'குமுத'மான பாராட்டு உண்டு. சென்னைத் தமிழ், அக்ரகாரத் தமிழ், கரிசல் காட்டுத் தமிழ், நாஞ்சில் தமிழ், தலித் தமிழ்....இவை அனைத்தும் தனித்தும், இணைந்தும் செந்தமிழ் நாட்டின் இன்றைய படைப்பிலக்கியத்தின் கருவிகளாய் உயர்ந்துள்ளன. இந்த வட்டார வழக்கினால் தேசியம் சங்கை கெட்டது என்று சொல்வாரும் உளரோ? ஈழத் தமிழை உரிய முறையிலே அங்கீகரிப்பதிலே, கலைமகள் கி.வா.ஜ.காலத்திலிருந்தே ஒருவித பஞ்சி தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் பலருக்கு இருக்கிறது. இதற்கான ஏது என் பிடிமானத்திற்குள் சிக்குப்படுவதாகவும் இல்லை. தாம்பூலந் தரித்து நாநோகாத் தமிழ் சல்லாபம் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சுகிக்க முடியாத ஒன்று. எதுகை மோனை செய்து, பட்டிமன்றங்களிலே வித்தும் ஊன்றும் 'பேறு' அவர்களுக்கு இல்லை. இலக்கியமும் அதன் படைப்பும் அவர்களுக்க சௌந்தர்ய உபாசனையல்ல. கலை ஆராதனையுமல்ல. எழுத்துக் கலை அவர்களுக்குக் கிளர்ச்சியின் வெளிப்பாடு. ஞானத்தின் பகிர்வு. சத்தியத்தின் பதிவு. சுயமானத்தை இழந்து விடாத அக்கறை. மானிட மேன்மையின் தேடல். விடுதலையின் உள்ளொளி. இவையே அவர்களுடைய எழுத்து ஊழியத்திற்கான உந்து விசைகள். பணமும் புகழும் விடுதலைக்கு ஈடு அல்ல. படைப்பு முனைப்புக்கூட விடுதலையின் இன்னொரு ஸ்திதி என்கிற சம்பாவனையே! தொழிலிலும் புறவாழ்விலும் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றவர்கள். வீட்டு மொழியாக மட்டுமே தமிழை வசப்படுத்தும் நிர்பந்தம். ஆனால், தமிழை மறப்பதினால் தமது ஆன்மாவையே இழந்து விடலாம் என்கிற அச்சத்துடன் வாழ்கிறார்கள். தாயிடம் பாலமுது அருந்திய காலத்திலே பயின்ற தமிழ், குஞ்சுப் பருவத்திலே பார்த்த காட்சிகளிலும், அநுபவித்த கோலங்களிலும் உறைந்து நின்ற மொழிதான் அவர்கள் வாலாயப்படுத்தும் தமிழ். அது வித்துவத்தினால் பழுதுபடாது. வேறு தமிழில் எழுத முனைந்தால் உண்மையின் அழகையும், சத்தியத்தின் ஒர்மையையும், ஆன்மாவின் உள்ளொளியையும் அவர்களுடைய படைப்பு இழந்துவிடும் அபாயம் உண்டு. 'பெரியவர்கள்' இதனைப் புரிந்து கொள்ள ஏன் பஞ்சிப்பட வேண்டும்?
இலக்கியத்துக்கு சுத்த சுயம்புவான சர்வதேசத்தன்மை எதுவும் கிடையாது. சர்வதேச இலக்கிய அளவுகோல்கள் வைத்துக் கொண்டா காளிதாஸன் 'அபிஞந சகுந்தலா'வைப் படைத்தான்? தாகூரின் கீதாஞ்சலி, வங்காள மொழியின் ஆள் பயிற்சிக்காகவா உலக இலக்கிய அங்கீகாரத்தைச் சம்பாதித்தது? மொழியின் செம்மையான பயன்பாட்டினால் மட்டும் சர்வதேசத் தன்மையை இலக்கியத்துக்கச் சம்பாதித்தது? மொழியின் செம்மையான பயன்பாட்டினால் மட்டும் சர்வதேசத் தன்மையை இலக்கியத்துக்குச் சம்பாதிக்கலாம் என்பது பிரமை. உலகத்தின் மிகக் குறுகலான ஒரு மூலையிலே ஒளிந்து கிடக்கும் மானிடத்தை ஒளிரச் செய்யும் இலக்கியப் படைப்பு, அது மிகச் சிறிய மக்கள் கூட்டத்திலே பயிலப்படும் மொழியிலேதான் படைக்கப்பட்டது என்றாலும், அஃது உலக இலக்கியமாக உயரும். மொழியின் வல்லபமல்ல; படைப்பின் வல்லபம், மானிடத்தின் வல்லபம்! ஒரு காலத்தில், மாட்சிமை பொருந்திய பெரிய பிரித்தானிய மன்னர் முன்னிலைப்படுத்திய ஆங்கிலமே சர்வதேச இலக்கியம் தோன்றுவதற்கான மொழி என்று நினைத்திருந்தார்கள். அந்தக் காலத்தில், அமெரிக்கக் குடியேற்றவாசிகளும் அவ்வாறே நினைத்தார்கள். பெரிய பிரித்தானியாவின் மாட்சிமை பெற்ற ஆங்கிலத்தின் இலக்கிய ஆதிக்கம் நீண்ட காலத்துக்கு நின்று பிடிக்கவில்லை. 'புதிய வானம் புதிய பூமி' என முகிழ்ந்த தமது புதிய அநுபவங்களை, அங்கு வழக்கில் முகிழ்ந்த மொழியில், தேசிய இலக்கியமாகப் படைத்தார்கள். ஒரு விதத்தில், அந்த மொழி வட்டார வழக்கே! வட்டார வழக்கில் அவர்கள் ஊன்றிய பிடிவாதத்தினாலும் அமேரிக்கத் தேசிய இலக்கியம் உருவாயிற்று. அடிப்படையில் தேசியத் தன்மைகளை நிறைவாக உறிஞ்சிக் கொள்ளும் இலக்கியமே, கால ஓட்டத்தில் சர்வதேச இலக்கியமாக அங்கீகாரம் பெறுகின்றது! எனவே, இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பரப்பு உலகளாவியதாக அகலிக்கும் பொழுது, ஈழத் தமிழையும் இணைத்துத்தான் அதன் மொழிவளம் வீறுகொள்ளும். இதுவே நியதி. இது சமத்காரமான நியாயப்படுத்துதல் அல்ல; சத்தியம்!
மேலும், இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் கதைகளின் களங்கள் பனை வளராப் பனி பெய்யும் நாடுகளிலும், முத்துலிங்கம் போன்றவர்களுக்கு sub-sahara நாடுகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் மனித நேயமும் ஒளிரும். மொழி-கலாசாரம்-பண்பாடு-மதம்-நிறம் ஆகிய அனைத்து வேறுபாடுகளும் இற்று, எல்லோரும் கேளிர் - KIN - சுற்றத்தார் என முகிழ்ந்திடும் மானிடம்! யாரவன்? புலவனா? சான்றோனா? யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றல்லவா பாடினான்? ஒமோம். கணியன் பூங்குன்றன்! அந்த அற்புத DYLLஇன் கிளர்ச்சியை, உலகத் தமிழ் ஆராய்வுகளுக்கான ஒரு கோஷமாக எல்லோர் வாயிலும் மனசிலும் ஒலிக்கச் செய்தவர் தனிநாயகம் அடிகளார். புத்திஜ“வித வக்கிரங்களினால் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்ட ஈழத்தமிழர் அவர். அவர் தேடலிலே, பூங்குன்றன், புதிய உயிர்ப்பும் வீரியமும் சுகித்தான். கேளிரைக் கேளீராக்கி, ஆராய்வுகளை அரசியற் சிறு தெய்வங்களில் பாதசேவைக் கேளிக்கைகளாக்கும் பேதையருக்கு அந்தப் பாடலின் ஆன்மா சிக்கமாட்டாது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்தம் இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ்ப் படைப்பு ஊழியம், அந்தப் பாடலின் இறுதி வரிகளையும் ஆதார சுருதிகளாக இணைத்துக் கொள்ளும்.
'..................... காட்சியில் தெளிந்தனம்; ஆகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!'
இது எத்தகைய vision-தரிசனம்' '....அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே, உன் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே' என்று ஒப்பாசாரத்துக்காக, எழுந்து நின்று, தமிழணங்கை வாழ்த்துவதோடு தமிழ் பற்றிய அக்கரை சம்பூர்ணம் பெற்றதா? தமிழணங்கின் சீரிளமைத் திறனை வளர்ப்பதிலும் வளப்படுத்துவதிலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இணைந்துள்ளார்கள் என்பதை மதித்து, செந்தமிழ் நாட்டினரும் அவர்களைக் கேளிராக அணைத்தல் எத்தகைய ஆனந்த நிலை!
அடுத்த நூற்றாண்டின் கதைக் களங்களும், பொருள்களும் இவற்றை இசைக்கும் பாணிகளிலும் உபாயங்களும் உத்திகளும் மாறும். மாற்றமே வளர்ச்சியுமாம். இவை பற்றிய தேடல்களின் கோலங்களை 'வம்ச விருத்தி'யிலே தரிசிக்கின்றேன். நாளைய நூற்றாண்டின், நாளைய கதைகளின் சாங்கங்களைப் பதிவுசெய்வதினாலும், 'வம்சவிருத்தி'யை வெள்ளோட்டம்-lanch எனக் குறித்தேன். நண்பர் முத்துலிங்கம் ஒரு சாமான்யனாகவே வசப்படுத்தியுள்ள சாமான்யத் தமிழிலே, கடந்த சில தசாப்தங்களா மேற்கொண்ட ஒரு வகை நாடோடி வாழ்கையிலே திரட்டிக் கொண்ட அநுபவங்களிலே காலூன்றி, இந்தத் தொகுதிக்கான கதைகளைப் படைத்துள்ளார் என்கிற சங்கதி சட்டென்று வாசகனின் பிடிமானத்திற்குள் சிக்கிக் கொள்ளும். இவற்றின் மத்தியிலே தாம் ஒரு யுகசந்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கும் பிரக்ஞையை அவர் துறக்கவில்லை. 'இருபது வயசிலே அறிந்த உண்மைகளின் பேர்பாதி நாற்பது வயசிலே உண்€த் தன்மையை இழந்து விடுகின்றான்; நாற்பது வயசிலே அறிந்து கொள்ளும் உண்மைகள் இருபது வயசிலே அறியப்படாதவையாக இருந்தன' என்கிற ஞான உதைப்பு கதைகள் பலவற்றிலே பூடகமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் 'சாமான்யன்' என்பதிலே அவர் பூண்டிருக்கும் தோரணை, அன்று கொக்குவில் அயலிலே சேகரஞ் செய்த அந்த இனிமைகளை இழக்காத ஓர் இயல்பையும் இணைக்கின்றது. இது யுகசந்திப் பிரக்ஞையே! இந்தப் பிரக்ஞையுடைய ஓர் எழுத்தாளனாலேதான், அடுத்த நூற்றாண்டின் கதைக்கலை உலகினை வரவேற்கும் நுழைவாயிலிலே தோரணங்கள் கட்டுதல் ஏலும். ஏலும் மட்டுமல்ல, தகுதியும் முத்துலிங்கத்திற்கு நிறைவாகவே இருக்கின்றது. எனவே, அவருடைய தமிழ் ஊழியத்தை நெஞ்சம் மண்ககப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.
நாடு-நிறம்-இனம்-மதம் ஆகிய குறுக்கங்களை எகிறிய ஒரு தேடலாய் அமைந்துள்ள 'வம்ச விருத்தி' நாம் ஊன்றவேண்டிய அக்கறைகள் சிலவற்றைச் சுட்டுகின்றது. புதிய அநுபவங்களையும் கற்பிதங்களையும் இணைக்கின்றது. புலம் பெயர்ந்த நாடுகளின் நாளைய தமிழ் எழுத்தாளர்களடைய சிரத்தைகளை நெறிப்படுத்துகின்றது. இவற்றை நாம் உரிய முறையில் தரிசித்தல் வேண்டும் என்ற ஆசியினாலும், மூன்று தலைமுறைக்கு மேலாகவும் எழுத்து ஊழியத்தைச் சேவிக்கும் தமிழ்த்தவனம் மறக்காத பரதேசி என்ற ஹேதாவிதலும், இந்த முன்னீடு இவ்வாறு சமைந்தது. தலைக்கேறிவிட்ட என் தமிழ்ப் பித்து எனக் கொண்டு, இதன் நீளத்தைப் பொறுத்தருள்க.
'ஓ மரங்களே, என்னை மன்னிப்பீர்களாக!' என்று முத்துலிங்கம் பாவமன்னிப்புக் கோரவேண்டிய அவசியமே இல்லை. அவருடைய தமிழ் ஊழியம், நாளைய நமது எழுத்தாளர்களுக்கும் பயன்படும். அவருடைய தமிழ் ஊழியம் தொடரவும், நின்று நிலவவும் என் ஆசிகள்.
எஸ்.பொ
அவுஸ்ரேலியா 16.4.1996

